Guru poosai: ஆவணி - ஆயில்யம்
"விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" - திருத்தொண்டத் தொகை
இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். நெடுநாட்கள் ஒற்றை மீனே பிடிபட அதனையும் சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து வறுமையால் வாடினார். ரத்தினங்கள் பதிந்த தங்க மீனொன்று வலையில் சிக்கியபொழுதும் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியினால் அதனை சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தமையால் நாயன்மார்களுள் ஒருவராகப் போற்றப்படுகிறார்,
சொல்லிலக்கணம்
அதிபக்தர் என்றால் சிறந்த பக்தர் என்று பொருளாகும்.
வாழ்க்கைப் புராணம்
அதிபத்த நாயனார் தங்க மீனை இறைவனுக்கு அர்ப்பணிக்கும் காட்சி
சோழ நாட்டின் துறைமுக நகராக நாகபட்டினம் விளங்கிய காலத்தில் அங்கு பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர். அவர்களுக்கு தலைவராக அதிபக்தர் இருந்தார். அவர் சிவபக்தி மிகுந்தவர் என்பதால் தனக்கு கிடைக்கும் மீன்களில் சிறந்ததொன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தனக்கு ஒரு மீன் மட்டுமே கிடைக்கும் காலங்களிலும் இந்த வழமை தவறாது வந்தார்.
ஒரு சமயம் தொடர்ந்து ஒரு நாளுக்கு ஒரு மீன் என்றவாறே கிடைத்து வந்தது. அப்போதும் அந்தவொரு மீனை இறைவனுக்கு அர்ப்பணித்துவிட்டு அதிபக்தர் பசியொடு இருந்தார். அவரைப் போலவே சுற்றத்தாரும் உணவின்றி வருந்தினர்.
தொடர்ந்து நாளெல்லாம் நிகழ் அவரும் பசியால் தளர்ந்தார். ஆயினும் தமது தலைமீன் அளிக்கும் சீலத்தில் தவறாதிருந்தார். இத்தகைய அதிபத்தரின் தலையாய அன்பெனும் ஆரமுதம் அருந்தத் திருவுளம் பற்றினர் ஆலமுண்ட பெருமான்.
ஒரு நாள் ஒரு மீனுக்குப் பதிலாக மீனுறுப்பெல்லாம் அமைந்த அற்புதப் படைப்பொன்று பிடிபட்டது. அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட்டார். பொருளை முதலெனக் கொள்ளும் இவ்வுலகிலே பொருட்பற்றை முற்றும் துறந்த அதிபத்தரின் முன் இறைவன் ஆகாயத்திலே தோன்றினார். அதிபத்தர் சிரங்குவித்து வணங்கி நின்றார். அவரைச் சிவலோகத்திற் சிறப்புற்றிருக்கும் வண்ணம் தளைளித்தாண்டார் சிவபெருமான்.
தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா
அதிபக்த நாயனார் சிவபெருமானுக்கு தங்க மீனை அர்ப்பணித்த நிகழ்வினை நினைவு கூறுவதற்காக தங்க மீன் அர்ப்பணிக்கும் விழா நடைபெறுகிறது. இவ்விழாவானது நாகப்பட்டினம் காயாரோகண சாமி கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் கொண்டாடப்படுகிறது.