- முனைவர் ந. இரா. சென்னியப்பனார்
திருக்கோயிலின் அமைப்பு
திருக்கோயில் அமைப்பில் முன்கோபுரங்கள், பிரகாரங்கள், கொடிமரம், வாகனம், விமானம் முதலியன முக்கியமானவை. இவை அனைத்தும் தத்துவ அடிப்படையில் அமைந்தவை ஆகும். மனிதன் இயல்பை அறிவுறுத்துவதே ஆலய அமைப்பாகும்.
கோ+இல் = கோயில், தலைமையான இல்லம் என்பது பொருள். ஆ+லயம் = ஆலயம்; ஆன்மா அதாவது உயிர் இலயிக்கும் – இறைவனோடு ஒன்றுபடும் – இடம் என்பது பொருள். மனிதர் யார்? என்பதனை விளக்குவதே ஆலய வழிபாட்டு நிலையாகும். மனிதன் உடம்பாக மாட்டான், குணமாக மாட்டான், அறிவு ஆக மாட்டான் இவற்றிக்கும் எல்லாம் அப்பாற்பட்டவன். அந்த நிலையே ஆன்மா ஆகும்.
ஆன்மாவின் பல்வேறு நிலைகளைச் சர்வ ஞானோத்தரம் என்னும் ஆகமம் சிறப்பாக விளக்குகின்றது. மனிதன் தன் உடம்பையே, தூல தேகத்தையே, பரு உடலையே தானாகக் கருதும்போது தேகான்மா எனப்படுகின்றான்.
சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி ஆகிய வாக்குகள், அடிப்படையான இச்சைகள் ஆகியவற்றைத் தானாகக் கருதும்போது அந்தரான்மா எனப்படுகின்றான்1.
தத்துவங்களையும் அவற்றை அறியும் கருவியாகிய மனத்தையும் தானாகக் கருதும் போது தத்துவ ஆன்மா எனப்படுகின்றான்2.
முற்கூறிய அனைத்தையும் அடக்கியாளும் உணர்வு தோன்றி, அதனால் நான் பிரமம் என்ற முனைப்பு ஏற்படும்போது, சீவான்மா எனப்படுவான்.
பின், நல்லறிவு தோன்றி வாக்கு, தத்துவம், யான் எனது என்ற செருக்கு நீங்கிப் பேரின்பத்தை அடைய மந்திரம் செபிக்கும்போது மந்திரான்மா எனப்படுவான்.
இறுதியாக இறைவனோடு இரண்டறக் கலக்கும் நிலையில் பரமான்மா எனப்படுவான். இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டே கோயில் அமைப்புகள் உள்ளன.
முன் கோபுரம், உயர்ந்து காணப்படும். அதுவே தேகான்மா அல்லது தூய லிங்கம் எனப்படும். பலி பீடம் அந்தரான்மா அல்லது பத்திர லிங்கம் எனப்படும். கொடிமரம் தத்துவ ஆன்மா அல்லது துவசலிங்கம் எனப்படும். கருவறையில் உள்ள லிங்கம் சீவான்மா அல்லது சதாசிவ லிங்கம் எனப்படும்.
திருக்கோயில் பூசை செய்யும் அர்ச்சகர் மந்திரான்மா அல்லது ஆன்ம லிங்கம் எனப்படுவார். பரந்த பெரு வெளி பரமான்மா அல்லது அகண்ட லிங்கம் எனப்படும்.
திருக்கோயில் அமைப்பு முறையில் முறைகளைத் தெளிவாகப் பாடியுள்ளார் திருமூலர். கோயில் அமைப்பு முறைகளை நன்கு ஆராய்ந்து அறிவோர், கருவறையின் மேல் உள்ள விமானம் தூல லிங்கம் என்றும், கருவறையில் உள்ளே உள்ளது சதாசிவ லிங்கம் அல்லது சூக்கும லிங்கம் என்றும், முன் பகுதியில் விரிந்து காணப்படும் பலிபீடம் பத்திரலிங்கம் என்றும் கொள்வர்.
தூய விமானமும் தூலமது ஆகுமால்
ஆய சதாசிவம் ஆகும் நற் சூக்குமம்
பாய பலிபீடம் பத்திர லிங்கமாம்
ஆய அரன்நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே.
என்பது திருமந்திரப் பாடல் ஆகும்.
திருக்கோயில் வழிபாட்டிற்குச் செல்லும் மக்கள் திருக்கோயில் அமைப்பையும், திருக்கோயிலில் நடக்கும் தீப ஆராதனைகளையும், திருவிழாக்களையும் அவை உணர்த்தும் பொருளையும் நன்கு புரிந்து கொண்டு வழிபாடு செய்தால் மிகப் பெரும் பயன்கள் கிடைக்கும்.
பலிபீடம் – வாகனம் – இலிங்கம்
திருக்கோயிலில் பலி பீடம் என்பது பாசத்தின் அறிகுறி. வாகனம் பசுவை அதாவது உயிரைக் காட்டும் அறிகுறி, கருவறையில் அருவுருவமான சிவலிங்கம் பதியைக் காட்டும் அறிகுறி, ஆன்மா பாசத்தை விட்டுப் பதியை அடைய வேண்டும் என்பதை நாம் உணர்வதற்காகவே இந்த அமைப்பாகும்.
ஆய பதிதான் அருட் சிவ லிங்கமாம்
ஆய பசுவும் அடல் ஏறு என நிற்கும்
ஆய பலிபீடம் ஆகும் நற்பாசம் ஆம்
ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே
என்பது திருமந்திரம்.
பலி எது?
பலி பீடம் என்றதும் பலி கொடுப்பது – உயிர் பலி இடுவது என்று தவறாகக் கருதி கொண்டுள்ளார்கள் பலர்.
“கொடுமணி இயக்குமின், குறிஞ்சி பாடுமின்,
நறும்புகை எடுமின், பூப்பலி செய்ம்மின்,
காப்புக் கடை நிறுமின்”
என்று இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளார். “பூசை செய்யும் போது மணியடிக்க வேண்டும், தோத்திரம் பாட வேண்டும், வாசனைப்புகை எடுக்க வேண்டும், பூவை பலியாகத் தூவ வேண்டும். பூசை செய்வோர் காப்புக் கட்ட வேண்டும்” என்னும் வழிபாட்டு முறை பண்டுதொட்டு இருந்து வந்ததை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். தற்காலத்தில் புஷ்பாஞ்சலி என்று கூறுவதையே இளங்கோவடிகள் பூப்பலி செய்தல் என்று தமிழில் குறிப்பிட்டுள்ளார். கோயில்களில் உள்ள பலிபீடம் தத்துவ அமைப்பு உடையது; உயிர்ப் பலி இடுவது ஆகாது.
கருவறையில் உள்ள சிவலிங்கம், சிவபெருமானின் அருவுருவ நிலையை குறிக்கும்.
“காணாத அருவினுக்கும் உருவினுக்குங் காரணமாய்
நீள் நாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்”
என்பார் சேக்கிழார் பெருமான்.
சிவத்துக்கு இலிங்கம் அதாவது அடையாளமாய் குறியாய் அமைந்திருப்பது சிவலிங்கம் ஆகும். நடராசர், தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர் முதலிய உருவ நிலை வடிவங்கள் மகேசுவர மூர்த்தங்கள் எனப்படும். உருவம் இல்லாதது அருவ நிலை; இதுவே ஞானியர்கள் வழிபடும் நிலையாகும்.
அருவத்திருமேனி, அருவுருவத்திருமேனி, உருவத் திருமேனியாகிய இம்மூன்று நிலைகளும் ஆன்மாக்கள் உய்ய வேண்டும் என்பதற்காக இறைவன் கொண்ட நிலை என்று அருணந்தி சிவாச்சாரியார் விளக்குகிறார்.
உருமேனி தரித்துக் கொண்டது என்றலும், உருவு இறந்த
அருமேனி அதுவும் கண்டோம்; அருவுருவான போது
திருமேனி உபயம் பெற்றோம்; செப்பிய மூன்றும் நம்தம்
கருமேனி கழிக்க வந்த கருணையின் வடிவு தானே.
-சிவஞான சித்தியார்
கருவறை இருட்டு
திருக்கோயிலில் அருவுருவமான சிவலிங்கம் அமைந்திருக்கும் கருவறை இருண்டேயிருக்கும். இதற்கு என்ன காரணம்? திருமூலர் விளக்குகிறார்.
இருட்டறை மூலை இருந்த குமரி
குருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்
குருட்டினை நீக்கி குணம் பல காட்டி
மருட்டி அவனை மணம் புரிந்தாளே.
இருட்டறை மூலை - கருவறையில்
இருந்த குமரி - மறைந்திருந்த திருவருட்சத்தி
குருட்டுக் கிழவன் - அறியாமையில் மூழ்கியிருக்கும் ஆன்மாவோடு சேர்ந்து
கூடல் குறித்து - அவ் ஆன்மாவிற்கு அருள்புரிய எண்ணி
குருட்டினை நீக்கி - ஆன்மாவின் அறியாமையை போக்கி
குணம் பல காட்டி - இறைவன் ஆன்மாக்கள் பொருட்டு இரங்கி, இறங்கி
வந்து அருள் புரியும் பெருமையை உணர்த்தி
மருட்டி அவனை
மணம் புரிந்தாளே - திருவருளிடத்தில் அன்பு கொள்ளுமாறு மயக்கிச்
சிவமணம் கமழுமாறு செய்தாள்.
எனவே அநாதி காலந்தொட்டு அறியாமையில் மூழ்கியிருக்கும் உயிர்களைத் திருவருட்சத்தியால் அறியாமையை நீக்கிச் சிவப்பேற்றைத் தருவதற்காகவே, கருவறையை நம் முன்னோர் இருட்டறை ஆக்கித் திருவருள் புரியும் திருவுருவங்களைக் கருவறையினுள் வைத்தனர் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.
--திருச்சிற்றம்பலம்--