திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 98                   பெருமை
971. ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை: இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.

மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.

972. பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.

973. மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்: கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழஅல் லவர்.

மு.வ உரை:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர் மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம் இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.

974. ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.

மு.வ உரை:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும் ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.

975. பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.

மு.வ உரை:
பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச் செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.

976. சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.

மு.வ உரை:
பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம், அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.

977. இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான்
சீரல் லவர்கண் படின்.

மு.வ உரை:
சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம் ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.

978. பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.

மு.வ உரை:
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால் சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.

979. பெருமை பெருமிதம் இன்மை: சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.

மு.வ உரை:
பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்: சிறுமையோ செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.

980. அற்றம் மறைக்கும் பெருமை: சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.

மு.வ உரை:
பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்; சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.

------


Back to Top