மூலம்:
971 . ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை: இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு ஒளி உள்ள வெறுக்கை - ஒருவனுக்கு
ஒளியாவது பிறராற் செயற்கரிய செய்வேம் என்று
கருதும் ஊக்கமிகுதி; ஒருவற்கு இனி அஃது இறந்து
வாழ்தும் எனல் - ஒருவனுக்கு மாசாவது அச்செயலை
யொழிந்து உயிர் வாழக்கடவேம் என்று கருதுதல்.
(ஒளி - தான் உளனாய காலத்து மிக்குத்
தோன்றுதலுடைமை. "ஒளிநிறான் ஓங்குபுகழ்
செய்வான்" [நாலடி. செல்வம் நிலையாமை. 9]
என்றார் பிறரும், மேலும் 'செயற்கரிய செய்வார்
பெரியர்' [குறள். 26] என்றாராயினும், ஈண்டு அவை
அளவிறந்த ஒப்புரவு ஈகை முதலியவாம்.
அவற்றினானாய பெருமையை அதன் காரணத்தின்
மேலிட்டு, "உள்ள வெறுக்கை" என்றும்,
அதுதன்னையே அதன் காரியமாகிய ஒளி ஆக்கியும்
கூறினார். இவ்வாறு அதன் எதிர்மறைக்கண்ணும்
ஒக்கும். இதனால் பெருமையின் சிறப்புக்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுக்கு ஒளி ஊக்கமிகுதியே ஆகும்; ஒருவனுக்கு இழிவு
அந்த ஊக்கம் இல்லாமலே உயிர் வாழலாம் என்று எண்ணுதலாம்.
G.U.Pope:
The light of life is mental energy; disgrace is his
Who says, 'I 'ill lead a happy life devoid of this.'
Explanation
One's light is the abundance of one's courage; one's darkness is the desire to live destitute of such (a state of mind.)
மூலம்:
972 . பிறப்புஒக்கும் எல்லா உயிர்க்கும்: சிறப்புஒவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.
பரிமேழலகர் உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒக்கும் - எல்லா
மக்களுயிர்க்கும் பொதுவாகிய பிறப்பியல்பு ஒக்குமே
யெனினும்; சிறப்பு ஒவ்வா செய்தொழில்
வேற்றுமையான் - பெருமை சிறுமை எனப்பட்ட
சிறப்பியல்புகள் ஒவ்வா அவை செய்யும் தொழில்களது
வேறுபாட்டான்.
(வேறுபாடு - நல்லனவும், தீயனவும்,
இரண்டுமாயினவும், இரண்டுமல்லவாயினவுமாய்
அளவிறந்த பாகுபாடுகள். வினைவயத்தாற் பஞ்சபூத
பரிணாமமாகிய யாக்கையைப் பொருந்தி நின்று அதன்
பயன் அனுபவித்தல் எல்லா வருணத்தார்க்கும்
ஒத்தலின் 'பிறப்பு ஒக்கும்' என்றும், பெருமை
சிறுமைகட்குக் கட்டளைக் கல்லாகிய
தொழிற்பாகுபாடுகள் வருணந்தோறும் யாக்கைதோறும்
வேறுபடுதலின், 'சிறப்பு ஒவ்வா' என்றும் கூறினார்.) -
--
மு.வ உரை:
எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒரு தன்மையானதே; ஆயினும்
செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால்
சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை.
G.U.Pope:
All men that live are one in circumstances of birth;
Diversities of works give each his special worth.
Explanation
All human beings agree as regards their birth but differ as regards their characteristics, because of the different qualities of their actions.
மூலம்:
973 . மேல்இருந்தும் மேல்அல்லார் மேல்அல்லர்: கீழ்இருந்தும்
கீழ்அல்லார் கீழஅல் லவர்.
பரிமேழலகர் உரை:
மேல் அல்லார் மேல் இருந்தும் மேல் அல்லர் -
செயற்கரிய செய்கலாது சிறியராயினார் உயர்ந்த அமளி
முதலியவற்றின் மிசை இருந்தாராயினும் பெரியராகார்;
கீழல்லவர் கீழ் இருந்தும் கீழ் அல்லர் - அவை செய்து
பெரியராயினார், தாழ்ந்த வறுநிலத்திருந்தாராயினும்
சிறியராகார்.
(மேலிருத்தல் கீழிருத்தல்களால் செல்வ
நல்குரவுகளும், மேல் கீழ்களால் பெருமை
சிறுமைகளும் கருதப்பட்டன. இவை இரண்டு
பாட்டானும் முறையே குடிமைமாத்திரத்தானும்
செல்வமாத்திரத்தானும் அஃது உளதாகாமை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மேல்நிலையில் இருந்தாலும் மேன்மைப் பண்பு இல்லாதவர்
மேலானவர் அல்லர்; கீழ்நிலையில் இருந்தாலும் இழிகுணம்
இல்லாதவர் கீழ்மக்கள் அல்லர்.
G.U.Pope:
The men of lofty line, whose souls are mean, are never great
The men of lowly birth, when high of soul, are not of low estate.
Explanation
Though (raised) above, the base cannot become great; though (brought) low, the great cannot become base.
மூலம்:
974 . ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டுஒழுகின் உண்டு.
பரிமேழலகர் உரை:
ஒருமை மகளிரே போல - கவராத மனத்தினையுடைய
மகளிர் நிறையின் வழுவாமல் தம்மைத்தாம்
காத்துக்கொண்டொழுகுமாறு போல; பெருமையும்
தன்னைத்தான் கொண்டு ஒழுகின் உண்டு -
பெருமைக்குணனும் ஒருவன் நிறையின் வழுவாமல்
தன்னைத்தான் காத்துக்கொண்டு ஒழுகுவானாயின்
அவன்கண் உண்டாம்.
(பொருளின் தொழில், உவமையினும் வந்தது.
கற்புண்டாதல் தோன்ற நின்றமையின், உம்மை எச்ச
உம்மை. ஒழுகுதல் - மனம் மொழி மெய்களை
ஒடுக்கி, ஒப்புரவு முதலிய செய்து போதல். இதனால்,
அஃது உளதாமாறு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒரு தன்மையான கற்புடைய மகளிரைப் போல், பெருமைப் பண்பும்
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொண்டு நடந்தால் உளதாகும்.
G.U.Pope:
Like single-hearted women, greatness too,
Exists while to itself is true.
Explanation
Even greatness, like a woman's chastity, belongs only to him who guards himself.
மூலம்:
975 . பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்.
பரிமேழலகர் உரை:
பெருமை உடையவர் - அவ்வாற்றால்
பெருமையுடையராயினார்; அருமை உடைய செயல்
ஆற்றின் ஆற்றுவார் - தாம் வறியராய வழியும் பிறரால்
செய்தற்கு அரியவாய தம் செயல்களை விடாது அவை
செய்யும் நெறியால் கடைபோகச் செய்தலை
வல்லராவர்.
('வறியராய வழியும்' என்பது முன் செய்து
போந்தமை தோன்றப் 'பெருமை' உடையவர்
என்றதனானும், 'ஆற்றுவார்' என்றதனானும் பெற்றாம்.
இதனால் அதனை உடையார் செய்தி கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பெருமைப்பண்பு உடையவர் செய்வதற்கு அருமையான செயலைச்
செய்வதற்கு உரிய நெறியில் செய்து முடிக்க வல்லவர் ஆவர்.
G.U.Pope:
The man endowed with greatness true,
Rare deeds in perfect wise will do.
Explanation
(Though reduced) the great will be able to perform, in the proper way, deeds difficult (for others to do).
மூலம்:
976 . சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக்கொள் வேம்என்னும் நோக்கு.
பரிமேழலகர் உரை:
பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு -
அப் பெற்றியராய பெரியாரை வழிபட்டு அவர்
இயல்பினையாம் கோடும் என்னும் கரத்து; சிறியார்
உணர்ச்சியுள் இல்லை - மற்றைச் சிறியராயினார்
மனத்தின்கண் உளதாகாது.
(குடிமை, செல்வம், கல்வி என்று இவற்றது உண்மை
மாத்திரத்தால் தம்மை வியந்திருப்பார்க்கு, அவை
தமக்கு இயல்பு என்று அமைந்திருப்பாரை வழிபட்டு,
அஃது உடையராதல் கூடாது என்பதாம்.) ---
மு.வ உரை:
பெரியோரை விரும்பிப் போற்றுவோம் என்னும் உயர்ந்த நோக்கம்,
அவருடைய சிறப்பை உணராத சிறியோரின் உணர்ச்சியில் இல்லை.
G.U.Pope:
'As votaries of the truly great we will ourselves enroll,'
Is thought that enters not the mind of men of little soul.
Explanation
It is never in the nature of the base to seek the society of the great and partake of their nature.
மூலம்:
977 . இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்பும்தான்
சீரல் லவர்கண் படின்.
பரிமேழலகர் உரை:
சிறப்புத் தானும் - தனக்கு ஒக்கும் பெரியாரிடத்து
அமைந்திருத்தலைச் செய்வதாய சிறப்புத்தானும்; சீர்
அல்லவர்கண் படின் - தனக்கு ஒவ்வாத சிறியாரிடத்துப்
படுமாயின். இறப்பே புரிந்த தொழிற்றாம் - அதனை
ஒழிந்து தருக்கின் கண்ணே மிக்க செயலை
உடைத்தாம்.
(தருக்கினை மிகச் செய்யும் என்பதாயிற்று. சிறப்பு -
குடிமை, செல்வம், கல்விகளினாய மிகுதி. இவை
இரண்டு பாட்டானும் அஃதிலார் செய்தி கூறப்பட்டது.) -
--
மு.வ உரை:
சிறப்பு நிலையும் தனக்குப் பொருந்தாத சீரற்ற கீழ் மக்களிடம்
ஏற்பட்டால், வரம்புமீறிய செயலை உடையதாகும்.
G.U.Pope:
Whene'er distinction lights on some unworthy head,
Then deeds of haughty insolence are bred.
Explanation
Even nobility of birth, wealth and learning, if in (the possession of) the base, will (only) produce everincreasing pride.
மூலம்:
978 . பணியுமாம் என்றும் பெருமை: சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
பரிமேழலகர் உரை:
பெருமை என்றும் பணியும் - பெருமையுடையார்
அச்சிறப்பு உண்டாய ஞான்றும் தருக்கின்றி
அமைந்தொழுகுவர்; சிறுமை
(என்றும்) தன்னை வியந்து அணியும்-மற்றைச்
சிறுமையுடையார் அஃதில்லாத ஞான்றும் தம்மை
வியந்து புனையா நிற்பர்.
(பொருளின் தொழில்கள் பண்பின்மேல் ஏற்றப்படடன.
இஃது 'அற்றம் மறைக்கும் பெருமை' (குறள். 980)
என்புழியும் ஒக்கும். 'என்றும்' என்பது பின்னும் வந்து
இயைந்தது. 'ஆம்' என்பன இரண்டும் அசை. புனைதல்
- பிறரின் தமக்கு ஓர் மிகுதியை ஏற்றுக் கோடல்.
இதற்கு, 'உயர்ந்தார் தாழ்வார்; தாழ்ந்தார் உயர்வார்,
இஃதொரு விரோதம் இருந்தவாறு என்?' என
உலகியலை வியந்து கூறிற்று ஆக்குவாரும் உளர்.) ---
மு.வ உரை:
பெருமைப் பண்பு எக்காலத்திலும் பணிந்து நடக்கும்; ஆனால்
சிறுமையோ தன்னைத்தானே வியந்து பாராட்டிக் கொள்ளும்.
G.U.Pope:
Greatness humbly bends, but littleness always
Spreads out its plumes, and loads itself with praise.
Explanation
The great will always humble himself; but the mean will exalt himself in self-admiration.
மூலம்:
979 . பெருமை பெருமிதம் இன்மை: சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல்.
பரிமேழலகர் உரை:
பெருமை பெருமிதம இன்மை - பெருமைக்குணமாவது
காரணமுண்டாய வழியும் அஃது இயல்பாதல் நோக்கித்
தருக்கின்றியிருத்தல்; சிறுமை பெருமிதம் ஊர்ந்துவிடல்
- சிறுமைக் குணமாவது அஃது இல்வழியும் அதனை
ஏற்றுக் கொண்டு தருக்கின் முடிவின்கண்ணே
நின்றுவிடுதல்,
('அளவறத் தருக்குதல்' என்பதாயிற்று. 'விடும்'
என்று பாடம் ஓதுவாரும் உளர்; முற்றுத்தொடரும்
எழுவாய்த் தொடரும் தம்முள் இயையாமையின், அது
பாடமன்மை உணர்க.) ---
மு.வ உரை:
பெருமைப் பண்பாவது செருக்கு இல்லாமல் வாழ்தல்: சிறுமையோ
செருக்கே மிகுந்து அதன் எல்லையில் நின்று விடுவதாகும்.
G.U.Pope:
Greatness is absence of conceit; meanness, we deem,
Riding on car of vanity supreme.
Explanation
Freedom from conceit is (the nature of true) greatness; (while) obstinacy therein is (that of) meanness.
மூலம்:
980 . அற்றம் மறைக்கும் பெருமை: சிறுமைதான்
குற்றமே கூறி விடும்.
பரிமேழலகர் உரை:
பெருமை அற்றம் மறைக்கும் - பெருமையுடையார்
பிறர் மானத்தையே கூறி அவமானத்தை
மறையாநிற்பர்; சிறுமை குற்றமே கூறிவிடும -
மற்றைச் சிறுமையுடையார் பிறர் குணத்தை மறைத்துக்
குற்றத்தையே கூறிவிடுவார்.
(மறைத்தலும் கூறலும ஏனையிடத்தும் இயைந்தன.
அற்றம் - ஆகு பெயர். தான் என்பது அசை. இவை
மூன்று பாட்டானும் இருவர் செயலும் ஒருங்கு
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை மறைக்கும்;
சிறுமையோ பிறருடைய குற்றத்தையே எடுத்துச் சொல்லிவிடும்.
G.U.Pope:
Greatness will hide a neighbour's shame;
Meanness his faults to all the world proclaim.
Explanation
The great hide the faults of others; the base only divulge them.