திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       குடியியல்

              அதிகாரம்: 97                   மானம்
961. இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல்.

மு.வ உரை:
இன்றியமையாத சிறப்பை உடைய செயல்களே ஆயினும், குடிப்பெருமை தாழுமாறு வரும் செயல்களை ஒருவன் செய்யாமல் விடவேண்டும்.

962. சீரினும் சீர்அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

மு.வ உரை:
புகழோடு பெரிய ஆண்மையும் விரும்புகின்றவர், புகழ் தேடும் வழியிலும் குடிப்பெருமைக்கு ஒவ்வாத செயல்களைச் செய்யமாட்டார்.

963. பெருக்கத்து வேண்டும் பணிதல்: சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

மு.வ உரை:
செல்வம் பெருகியுள்ள காலத்தில் ஒருவனுக்குப் பணிவு வேண்டும். செல்வம் குறைந்து சுருங்கும் வறுமையுள்ள காலத்தில் பணியாத உயர்வு வேண்டும்.

964. தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

மு.வ உரை:
மக்கள் தம் உயர்வுக்கு உரிய நிலையிலிருந்து தாழ்ந்த போது, தலையிலிருந்து விழுந்து தாழ்வுற்ற மயிரினைப் போன்றவர் ஆவர்.

965. குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்.

மு.வ உரை:
மலைபோல் உயர்ந்த நிலையில் உள்ளவரும், தாழ்வுக்குக் காரணமான செயல்களை ஒரு குன்றிமணி அளவு செய்தாலும் தாழ்ந்து போய்விடுவர்.

966. புகழ்இன்றால்: புத்தேள்நாட்டு உய்யாதால்: என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை?

மு.வ உரை:
மதியாமல் இகழ்கின்றவரின் பின்சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்குப் புகழும் தாராது; தேவருலகிலும் செலுத்தாது; வேறு பயன் என்ன?

967. ஒட்டார்பின் சென்றுஒருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

மு.வ உரை:
மதியாதவரின் பின்சென்று ஒருவன் உயிர் வாழ்வதை விட, அவ்வாறு செய்யாத நிலையில் நின்று அழிந்தான் என்று சொல்லப்படுதல் நல்லது

968. மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து?

மு.வ உரை:
ஒருவனுடைய பெருந்தகைமை தன் சிறப்புக்கெட நேர்ந்த போது, அவன் உடம்பை மட்டும் காத்து வாழும் வாழ்க்கை சாவாமைக்கு மருந்தோ?

969. மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

மு.வ உரை:
தன் உடம்பிலிருந்து மயிர் நீங்கினால் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர் மானம் அழிய நேர்ந்தால் உயிரை விட்டுவிடுவர்.

970. இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

மு.வ உரை:
தமக்கு யாதேனும் இழிவு நேர்ந்தால் உயிர் வாழாத மானம் உடையவரின் புகழை உலகத்தார் தொழுது ஏத்தி நிற்பார்கள்.

------


Back to Top