மூலம்:
931 . வேண்டற்க வென்றிடினும் சூதினை: வென்றதூஉம்
தூண்டில்பொன் மீன்விழுங்கி யற்று.
பரிமேழலகர் உரை:
வென்றிடினும் சூதினை வேண்டற்க - தான் வெல்லும்
ஆற்றல் உடையனாயினும் சூதாடலை
விரும்பாதொழிக; வென்றதூஉம் தூண்டிற் பொன் மீன்
விழுங்கியற்று - வென்று பொருளெய்துவார் உளரால்
எனின், அவ் வென்ற பொருள் தானும் இரையான்
மறைந்த தூண்டிலிரும்பினை இரை எனக் கருதி மீன்
விழுங்கினாற் போலும்.
(வேறல் ஒருதலையன்மையின் 'வென்றிடினும்'
என்றும், கருமங்கள் பலவும் கெடுதலின், 'வேண்டற்க'
என்றும் கூறினார். எய்தியபொருள் சூதாடுவார்
நீங்காமைக்கு இட்டதோர் தளை என்பதூஉம், அதனால்
பின் துயருழத்தலும் உவமையால் பெற்றாம்.) ---
மு.வ உரை:
வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது.
வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன்
விழுங்கினாற் போன்றது.
G.U.Pope:
Seek not the gamester's play; though you should win,
Your gain is as the baited hook the fish takes in.
Explanation
Though able to win, let not one desire gambling; (for) even what is won is like a fish swallowing the iron in fish-hook.
மூலம்:
932 . ஒன்றுஎய்தி நூறுஇழக்கும் சூதர்க்கும் உண்டாம்கொல்
நன்றுஎய்தி வாழ்வதோர் ஆறு.
பரிமேழலகர் உரை:
ஒன்று உய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் - அத்தூண்டிற்
பொன் போன்ற ஒன்றனை முன்பெற்று இன்னும்
பெறுதும் என்னும் கருத்தால் நூற்றினை இழந்து
வறியராம் சூதர்க்கும்; நன்று எய்தி வாழ்வது ஓராறு
உண்டாங்கொல்-பொருளால் அறனும் இன்பமும் எய்தி
வாழ்வதொரு நெறியுண்டாமோ? ஆகாது.
(அவ்வாற்றால் பொருளிழந்தே வருதலான் அதனால்
எய்தும் பயனும் அவர்க்கு இல்லை என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒரு பொருள்பெற்று நூறுமடங்கு பொருளை இழந்துவிடும்
சூதாடிகளுக்கும், நன்மை பெற்று வாழும் ஒரு வழி உண்டோ?
G.U.Pope:
Is there for gamblers, too, that gaining one a hundred lose, some way
That they may good obtain, and see a prosperous day?
Explanation
Is there indeed a means of livelihood that can bestow happiness on gamblers who gain one and lose a hundred ?
மூலம்:
933 . உருள்ஆயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும்.
பரிமேழலகர் உரை:
உருள் ஆயம் ஓவாது கூறின் - உருளும் கவற்றின்கண்
பட்ட ஆயத்தை இடைவிடாது கூறிச் சூதாடுமாயின்;
பொருள் ஆயம் போஒய்ப் புறமே படும் - அரசன் ஈட்டிய
பொருளும் அவன் பொருள் வருவாயும் அவனை
விட்டுப் போய்ப் பகைவர் கண்ணே தங்கும்.
(கவற்றினது உருட்சியை அதனினாய ஆயத்தின்மேல்
ஏற்றியும், சூதாடலை அது கூறலாகிய
காரணத்தின்மேலிட்டும் கூறினார். பொருளாயம் என்பது
உம்மைத் தொகை. ஆயம்-வடமொழித் திரிசொல்.
காத்தற்கண்ணும் இயற்றற் கண்ணும்
கருத்திலனாகலின், அவை இரண்டும் பகைவர்பாற்
செல்லும் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவன் உருளுகின்ற கருவியால் வரும் பொருளை இடைவிடாமல்
கூறிச் சூதாடினால், பொருள் வருவாய் அவனைவிட்டு நீங்கிப்
பகைவரிடத்தில் சேரும்
G.U.Pope:
If prince unceasing speak of nought but play,
Treasure and revenue will pass from him away.
Explanation
If the king is incessantly addicted to the rolling dice in the hope of gain, his wealth and the resources thereof will take their departure and fall into other's hands.
மூலம்:
934 . சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதுஒன்று இல்.
பரிமேழலகர் உரை:
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின் - தன்னை
விழைந்தார்க்கு முன்இல்லாத துன்பங்கள்
பலவற்றையும் விளைத்து உள்ள புகழையும் கெடுக்கும்
சூதுபோல; வறுமை தருவது ஒன்று இல் -
நல்குரவினைக் கொடுக்க வல்லது பிறிதொன்று
இல்லை.
(அத்துன்பங்கள் முன்னர்க் கூறுப. நல்வினைகளையும
நல்லினத்தையும் நீக்கித் தீவினைகளையும்
தீயினத்தையும் கூட்டுதலால், 'சீர் அழிக்கும்' என்றார்.
வறுமைக்கு எல்லையாவர் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய
புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும்
இல்லை.
G.U.Pope:
Gaming brings many woes, and ruins fair renown;
Nothing to want brings men so surely down.
Explanation
There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.
மூலம்:
935 . கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார்.
பரிமேழலகர் உரை:
இல்லாகியார்-முற்காலத்துத் தாம் உளராகியே இலராகி
ஒழுகினார்; கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார்-கவற்றினையும் அஃது ஆடுங் களத்தினையும்
அவ்வாடற்கு வேண்டும் கைத்தொழிலைனையும்
மேற்கொணடு கைவிடாத வேந்தர்.
(கைத்தொழில் - வெல்லும் ஆயம்படப் பிடித்தெறிதல்.
அவ்விவறுதலால் பாண்டவர் தம் அரசுவிட்டு
வனத்திடைப்போய் ஆண்டு மறைந்தொழுகினார் என
அனுபவம் காட்டியவாறு. இவை ஐந்து பாட்டானும்
அதனது வறுமை பயத்தற் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக்
கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்)
இல்லாதவர் ஆய்விடுவார்.
G.U.Pope:
The dice, and gaming-hall, and gamester's art, they eager sought,
Thirsting for gain- the men in other days who came to nought.
Explanation
Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).
மூலம்:
936 . அகடுஆரார் அல்லல் உழப்பர் சூதுஎன்னும்
முகடியால் மூடப்பட் டார்.
பரிமேழலகர் உரை:
சூது என்னும் முகடியான் மூடப்பட்டார்-தன் பெயர்
சொல்லல் மங்கலம் அன்மையின் சூது என்று
சொல்லப்படும் முகடியான் விழுங்கப்பட்டார்; அகடு
ஆரார் அல்லல் உழப்பர் - இம்மைக்கண் வயிறாரப்
பெறார்; மறுமைக்கண் நிரயத் துன்பம் உழப்பர்.
(செல்வங்கெடுத்து நல்வுகுர கொடுத்தல் தொழில்
வேறுபடாமையின் 'சூது என்னும் முகடி' என்றும்,
வெற்றி தோல்விகள் நோக்கி ஒரு பொழுதும்
விடாராகலின், ஈண்டு 'அகடு ஆரார்' என்றும்,
பொய்யும் களவும் முதலிய பாவங்கள் ஈட்டலின்
ஆண்டு 'அல்லல் உழப்பர்' என்றும் கூறினார்.
வயிறாராமை சொல்லவே, ஏனைப் புலன்கள் நுகரப்
பெறாமை சொல்ல வேண்டாவாயிற்று. உழப்பர் என்பது
எதிர்கால வினைச்சொல்.) ---
மு.வ உரை:
சூது என்று சொல்லப்படும் மூதேவியால் விழுங்கப் பட்டவர், வயிறு
நிறைய உணவும் உண்ணாதவராகிப் பல துன்பப்பட்டு வருந்துவார்.
G.U.Pope:
Gambling's Misfortune's other name: o'er whom she casts her veil,
They suffer grievous want, and sorrows sore bewail.
Explanation
Those who are swallowed by the goddess called "gambling" will never have their hunger satisfied, but suffer the pangs of hell in the next world.
மூலம்:
937 . பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின்.
பரிமேழலகர் உரை:
காலை கழகத்துப் புகின் - அறம் பொருள் இன்பங்கட்கு
அடைத்த காலம் அரசனுக்குச் சூதாடு களத்தின்கண்
கழியுமாயின்; பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் -
அக்கழிவு தொன்றுதொட்டு வந்த அவன்
செல்வத்தினையும் நற்குணங்களையும் போக்கும்.
('பழகிய' என்பது பண்புடனும் இயையும். தான்
செய்து கொள்ளும் அறம் முதலியவேயன்றி
முன்னோரைத் தொடங்கிவருகின்ற செல்வமும்
முன்செய்த நல்வினையின் பயனாய பண்பும் இலவாம்
என்பதாம்.) ---
மு.வ உரை:
சூதாடுமிடத்தில் ஒருவனுடைய காலம் கழியுமானால், அது
அவனுடைய பழைமையாய் வந்த செல்வத்தையும் இயல்பான
நற்பண்பையும் கெடுக்கும்.
G.U.Pope:
Ancestral wealth and noble fame to ruin haste,
If men in gambler's halls their precious moments waste.
Explanation
To waste time at the place of gambling will destroy inherited wealth and goodness of character.
மூலம்:
938 . பொருள்கெடுத்துப் பொய்மேல் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது.
பரிமேழலகர் உரை:
சூது-சூது; பொருள் கெடுத்து-தன்னைப் பயின்றவன்
பொருளைக் கெடுத்து; பொய்மேற்கொளீஇ-பொய்யை
மேற்கொள்ளப் பண்ணி; அருள் கெடுத்து - மனத்து
எழும் அருளைக் கெடுத்து; அல்லல் உழப்பிக்கும் .
இவ்வாற்றான் அவனை இருமையினும் துன்பம்
உறுவிக்கும்.
(இத்தொழில்கள் மூன்றற்கும் சூது
வினைமுதலாகவும்; தோல்வி, வெற்றி, செற்றம்
என்பன முறையே கருவிகளாகவும் கொள்க.
முன்னதனான் இம்மையினும், ஏனையவற்றான்
மறுமையினும் ஆம். 'பொருள் கொடுத்து' என்பது
பாடமாயின், அவ்வெச்சத்திற்கு முடிவு 'மேற்கொளீஇ'
என்புழி, மேற்கோடலாகிய வினை முதல்வினை.) ---
மு.வ உரை:
சூது, உள்ள பொருளை அழித்துப் பொய்யை மேற்கொள்ளச் செய்து
அருளையும் கெடுத்துப் பலவகையிலும் துன்பமுற்று வருந்தச்
செய்யும்.
G.U.Pope:
Gambling wastes wealth, to falsehood bends the soul: it drives away
All grace, and leaves the man to utter misery a prey.
Explanation
Gambling destroys property, teaches falsehood, puts an end to benevolence, and brings in misery (here and hereafter).
மூலம்:
939 . உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்.
பரிமேழலகர் உரை:
ஆயம் கொளின்-அரசன் சூதினைத் தனக்கு வினோதத்
தொழிலாக விரும்புமாயின்; ஒளி கல்வி செல்வம்
ஊண் உடை என்று ஐந்தும்; அடையாவாம்-அவனை
ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும்
என்று இவ்வைந்தும் சாராவாம்.
(ஆயம்: ஆகுபெயர். இச்சிறப்புமுறை செய்யுள்
நோக்கிப் பிறழ நின்றது. செல்வம்-அறுவகை
உறுப்புக்கள். ஊண் உடை என்பனவற்றால்
துப்புரவுகளெல்லாம் கொள்ளப்படும். காலமும் கருத்தும்
பெறாமையின், இவை உளவாகா என்பதாம். இவை
நான்கு பாட்டானும் சிறுமை பல செய்து அவற்றான்
இருமையும் கெடுதல் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம்,
உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
G.U.Pope:
Clothes, wealth, food, praise, and learning, all depart
From him on gambler's gain who sets his heart.
Explanation
The habit of gambling prevents the attainment of these five: clothing, wealth, food, fame and learning.
மூலம்:
940 . இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர்.
பரிமேழலகர் உரை:
இழத்தொறூஉம் காதலிக்கும் சூதே போல்-சூதாடலான்
இருமைப் பயன்களையும் இழக்குந்தோறும் அதன்மேற்
காதல் செய்யும் சூதன் போல; துன்பம் உழத்தொறூஉம்
காதற்று உயிர் - உடம்பான் மூவகைத் துன்பங்களையும்
அனுபவிக்குந் தோறும் அதன்மேற் காதலை உடைத்து
உயிர்.
(சூது - ஆகுபெயர். உயிரினது அறியாமை கூறுவார்
போன்று சூதனது அறியாமை கூறுதல் கருத்தாகலின்,
அதனை யாப்புறுத்தற் பொருட்டு உவம மாக்கிக்
கூறினார். இதன் எதிர்மறை முகத்தால், சூதினை
வெறுத்து ஒழிவானை யொக்கும் உடம்பினை
வெறுத்தொழியும் உயிர் எனவும் கொள்க. இதனான்
இஃது ஒழிதற்கு அருமையும், ஒழிந்தாரது பெருமையும
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
பொருள் வைத்து இழக்க இழக்க மேன்மேலும் விருப்பத்தை
வளர்க்கும் சூதாட்டம்போல், உடல் துன்பப்பட்டு வருந்த வருந்த
உயிர் மேன்மேலும் காதல் உடையதாகும்.
G.U.Pope:
Howe'er he lose, the gambler's heart is ever in the play;
E'en so the soul, despite its griefs, would live on earth alway.
Explanation
As the gambler loves (his vice) the more he loses by it, so does the soul love (the body) the more it suffers through it.