மூலம்:
901 . மனைவிழைவார் மாண்பயன் எய்தார்: வினைவிழைவார்
வேண்டாப் பொருளும் அது.
பரிமேழலகர் உரை:
மனை விழைவார் மாண் பயன் எய்தார் - இன்பம்
காரணமாகத் தம் மனையாளை விழைந்து அவள்
தன்மையராய் ஒழுகுவார்; தமக்கு இன்துணையாய
அறத்தினை எய்தார்; வினை விழைவார் வேண்டாப்
பொருளும் அது - இனிப் பொருள் செய்தலை
முயல்வார் அதற்கு இடையீடென்று இகழும் பொருளும்
அவ்வின்பம்.
(மனையும், விழைதலும், பயனும் ஆகுபெயர்.
அவ்வின்பம் - அவள் தன்மையராதற்கு ஏதுவாய
இன்பம்: அஃது அவளாற் பயனாய அறத்தினும்,
அவ்வறத்திற்கும் தனக்கும் ஏதுவாய பொருளினும்
செல்லவிடாமையின், விடற்பாற்று என்பதாம்.) ---
மு.வ உரை:
மனைவியை விரும்பி அவள் சொன்னபடி நடப்பவர் சிறந்த பயனை
அடையமாட்டார்; கடமையைச் செய்தலை விரும்புகின்றவர்
வேண்டாத பொருளும் அதுவே.
G.U.Pope:
Who give their soul to love of wife acquire not nobler gain;
Who give their soul to strenuous deeds such meaner joys disdain.
Explanation
Those who lust after their wives will not attain the excellence of virtue; and it is just this that is not desired by those who are bent on acquiring wealth.
மூலம்:
902 . பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
பரிமேழலகர் உரை:
பேணாது பெண் விழைவான் ஆக்கம் - தன்
ஆண்மையை விட்டு மனையாளது பெண்மையை
விழைவான் எய்தி நின்ற செல்வம்; பெரியது ஓர் நாண்
ஆக நாணுத் தரும் - இவ்வுலகத்து ஆண்பாலார்க்
கெல்லாம் பெரியதோர் நாண் உண்டாகத் தனக்கும்
நாணுதலைக் கொடுக்கும்.
(எய்தி நின்றதாயிற்று, படைக்கும் ஆற்றல்
இலனாகலின். அச்செல்வத்தால் ஈதலும் துய்த்தலம்
முதலிய பயன் கொள்வாள் அவள் ஆகலின்,
அவ்வாண்மைச் செய்கை அவள் கண்ணதாயிற்று என்று
ஆண்பாலார் யாவரும் நாண, அதனால் தன்
ஆண்மையின்மை அறிந்து, பின் தானும் நாணும்
என்பது நோக்கி, 'பெரியதோர் நாணாக நாணுத்தரும்'
என்றார். இவை இரண்டு பாட்டானும் மனை விழைதற்
குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கடமையை விரும்பாமல் மனைவியின் பெண்மையை
விரும்புகின்றவனுடைய ஆக்கம், பெரியதொரு நாணத்தக்க
செயலாக நாணத்தைக் கொடுக்கும்.
G.U.Pope:
Who gives himself to love of wife, careless of noble name
His wealth will clothe him with o'erwhelming shame.
Explanation
The wealth of him who, regardless (of his manliness), devotes himself to his wife's feminine nature will cause great shame (to ali men) and to himself;
மூலம்:
903 . இல்லாள்கண் தாழ்ந்த இயல்புஇன்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்.
பரிமேழலகர் உரை:
இல்லாள் கண் தாழ்ந்த இயல்பு இன்மை - ஒருவன்
இல்லாள் மாட்டுத் தாழ்தற்கு ஏதுவாய அச்சம்;
நல்லாருள் நாணு எஞ்ஞான்றும் தரும் - அஃது இலராய
நல்லாரிடைச் செல்லுங்கால் நாணுதலை அவனுக்கு
எக்காலத்தும் கொடுக்கும்.
(அவள் தான் அஞ்சி ஒழுகுதல் இயல்பாகலின்,
அவளை அஞ்சுதல் இயல்பின்மையாயிற்று. அங்ஙனம்
அஞ்சி யொழுகுதலின், அவளை நியமிப்பார்
இல்லையாம்; ஆகவே, எல்லாக் குற்றமும் விளையும்
என்பது நோக்கி, 'எஞ்ஞான்றும் நாணுத் தரும்'
என்றார்.) ---
மு.வ உரை:
மனைவியிடத்தில் தாழ்ந்து நடக்கும் இழிந்த தன்மை ஒருவனுக்கு
எப்போதும் நல்லவரிடையே இருக்கும்போது நாணத்தைத் தரும்.
G.U.Pope:
Who to his wife submits, his strange, unmanly mood
Will daily bring him shame among the good.
Explanation
The frailty that stoops to a wife will always make (her husband) feel ashamed among the good.
மூலம்:
904 . மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறுஎய்தல் இன்று.
பரிமேழலகர் உரை:
மனையாளை அஞ்சும் மறுமை இலாளன் - தன்
மனையாளை அஞ்சி ஒழுகுகின்ற மறுமைப்பயன்
இல்லாதானுக்கு; வினை ஆண்மை வீறு எய்தல் இன்று
- வினையை ஆளுந்தன்மை உண்டாய வழியும்
நல்லோரால் கொண்டாடப்படாது.
('உண்டாய வழியும்' என்பது அவாய் நிலையான்
வந்தது. இல்லறம் செய்தற்குரிய நன்மை இன்மையின்,
'மறுமையிலாளன்' என்றும், வினையையாளும்
தன்மை தன் தன்மையில்லாத அவனால் முடிவு
போகாமையின், 'வீறு எய்தல் இன்று' என்றும்
கூறினார்.) ---
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி நடக்கின்ற மறுமைப் பயன் இல்லாத ஒருவன்,
செயல் ஆற்றுந்தன்மை பெருமை பெற்று விளங்க முடிவதில்லை.
G.U.Pope:
No glory crowns e'en manly actions wrought
By him who dreads his wife, nor gives the other world a thought.
Explanation
The undertaking of one, who fears his wife and is therefore destitute of (bliss), will never be applauded.
மூலம்:
905 . இல்லாளை அஞ்சுவான் அஞ்சும்மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்.
பரிமேழலகர் உரை:
இல்லாளை அஞ்சுவான் - தன் மனையாளை
அஞ்சுவான்; நல்லார்க்கு நல்ல செயல் எஞ்ஞான்றும்
அஞ்சும்-தான் தேடிய பொருளே யாயினும் அதனால்
நல்லார்க்கு நல்லன செய்தலை எஞ்ஞான்றும்
அஞ்சாநிற்கும்.
(நல்லார் - தேவர், அருந்தவர், சான்றோர்,
இருமுதுகுரவர் முதலாயினாரும் நல்விருந்தினரும்.
நல்லன செய்தல்: அவர் விரும்புவன கொடுத்தல். அது
செய்ய வேண்டும் நாள்களினும் என்பார்,
'எஞ்ஞான்றும்' என்றார். "இல்லாளை அஞ்சி
விருந்தின் முகங்கொன்ற நெஞ்சின், புல்லாளனாக"
(சீவக. மண்மகள். 217) என்றார் பிறரும்.) ---
மு.வ உரை:
மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு
நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான்.
G.U.Pope:
Who quakes before his wife will ever tremble too,
Good deeds to men of good deserts to do.
Explanation
He that fears his wife will always be afraid of doing good deeds (even) to the good.
மூலம்:
906 . இமையாரின் வாழினும் பாடுஇலரே இல்லாள்
அமைஆர்தோள் அஞ்சு பவர்.
பரிமேழலகர் உரை:
இல்லாள் அமை ஆர் தோள் அஞ்சுபவர் - தம்
இல்லாளுடைய வேய் போலும் தோளினை அஞ்சுவார்;
இமையாரின் வாழினும் பாடு இலர் - வீரத்தால்
துறக்கம் எய்திய அமரர் போல இவ்வுலகத்து
வாழ்ந்தாராயினும்; ஆண்மையிலர்.
(அமரர்போல வாழ்தலாவது, பகைத்து வீரர்
தோள்களை எல்லாம் வேறலான் நன்கு மதிக்கப்பட்டு
வாழ்தல். அது, கூடாமையின் 'வாழினும்' என்றார்.
'அமை ஆர் தோள்' எனவே, அஞ்சுதற் காரணத்தது
எண்மை கூறியவாறு. வீரர் தோள்களை வென்றார்
ஆயினும், இல்லாள் தோள்களை அஞ்சுவார்
ஆண்மையிலார் என்பதாம். இவை நான்கு பாட்டானும்
அவளை அஞ்சுதற்கு குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மனைவியின் தோளுக்கு அஞ்சி வாழ்கின்றவர் தேவரைப் போல்
இவ்வுலகத்தில் சிறப்பான நிலையில் வாழ்ந்த போதிலும் பெருமை
இல்லாதவரே ஆவர்.
G.U.Pope:
Though, like the demi-gods, in bliss they dwell secure from harm,
Those have no dignity who fear the housewife's slender arm.
Explanation
They that fear the bamboo-like shoulders of their wives will be destitute of manliness though they may flourish like the Gods.
மூலம்:
907 . பெண்ஏவல் செய்துஒழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
பரிமேழலகர் உரை:
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் - நாண்
இன்றித் தன் இல்லாளது ஏவல் தொழிலைச் செய்து
திரிகின்றவனது ஆண் தன்மையின்; நாண் உடைப்
பெண்ணே பெருமை உடைத்து - நாணினையுடைய
அவள் பெண் தன்மையே மேம்பாடு உடைத்து.
('நாணுடைப் பெண்' என வேண்டாது கூறியது, அவள்
ஏவல் செய்வஈனது நாணின்மை முடித்தற் காதலின்,
அம்மறுதலைத் தொழில் வருவிக்கப்பட்டது. ஏவல் -
ஆகுபெயர். இறுதிக்கண் 'பெண்' என்பதூஉம் அது.
ஏவல் செய்வித்துககோடற் சிறப்புத் தோன்றப்
'பெண்ணே' எனப் பிரித்தார்.) ---
மு.வ உரை:
மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய
ஆண்மையைவிட, நாணத்தைத் தன் இயல்பாக உடையவளின்
பெண்மையே பெருமை உடையது.
G.U.Pope:
The dignity of modest womanhood excels
His manliness, obedient to a woman's law who dwells.
Explanation
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs the behests of a wife.
மூலம்:
908 . நட்டார் குறைமுடியார் நன்றுஆற்றார் நன்னுதலாள்
பெட்டாங்கு ஒழுகு பவர்.
பரிமேழலகர் உரை:
நல்நுதலாள் பெட்டாங்கு ஒழுகுபவர் - தாம்
வேண்டியவாறன்றித் தம் மனையாள் வேண்டியவாறு
ஒழுகுவார்; நட்டார் குறை முடியார் - தம்மொடு நட்புச்
செய்தார் உற்ற குறை முடிக்கமாட்டார்; நன்று ஆற்றார்
- அதுவேயன்றி மறுமைக்குத் துணையாய
அறஞ்செய்யவும் மாட்டார்.
('நல்நுதலாள்' என்பதனை, "அமை ஆர் தோள்"
(குறள். 906) என்புழிப் போலக் கொள்க. அவள் தானே
அறிந்த ஏவலும், பொருள் கொடுத்தலும் கூடாமையின்,
இருமைக்கும் வேண்டுவன செய்யமாட்டார் என்பதாம்.)
---
மு.வ உரை:
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர், தம்முடைய நண்பர்க்கு
உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும்
செய்யமாட்டார்.
G.U.Pope:
Who to the will of her with beauteous brow their lives conform,
Aid not their friends in need, nor acts of charity perform.
Explanation
Those who yield to the wishes of their wives will neither relieve the wants of (their) friends nor perform virtuous deeds.
மூலம்:
909 . அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல்.
பரிமேழலகர் உரை:
அறவினையும் - அறச்செயலும்; ஆன்ற பொருளும் -
அது முடித்தற்கு ஏதுவாகிய பொருட்செயலும்;
பிறவினையும் - இவ்விரண்டின் வேறாய இன்பச்
செயல்களும்; பெண் ஏவல் செய்வார்கண் இல் - தம்
மனையாள் ஏவல் செய்வார்மாட்டு உளவாக.
(புலன்கள் ஐந்து ஆகலின், 'பிற வினை'
எனப்பன்மையாயிற்று. அவை நோக்கி அறச்செயல்
பொருட் செயல்கள் முன்னே ஒழிந்தார்க்குத் தலைமை
அவள் கண்ணதாகலின், பின் அவைதாமும் இலவாயின
என்பது தோன்ற அவற்றைப் பிரித்துக் கூறினார். இவை
மூன்றுபாட்டானும் அவள் ஏவல் செய்தற் குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அறச் செயலும் அதற்குக் காரணமாக அமைந்த பொருள் முயற்சியும்
மற்றக் கடமைகளும் மனைவியின் ஏவலைச் செய்வோரிடத்தில்
இல்லை.
G.U.Pope:
No virtuous deed, no seemly wealth, no pleasure, rests
With them who live obedient to their wives' behests.
Explanation
From those who obey the commands of their wives are to be expected neither deeds of virtue, nor those of wealth nor (even) those of pleasure.
மூலம்:
910 . எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்துஆம் பேதைமை இல்.
பரிமேழலகர் உரை:
எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு - கருமச்
சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சத்தினையும், அதனினாய
செல்வத்தினையும் உடையராய வேந்தர்க்கு; பெண்
சேர்ந்து ஆம் பேதைமை எஞ்ஞான்றும் இல் -
மனையாளைச் சேர்தலான் விளையும் பேதைமை
எக்காலத்தும் உண்டாகாது.
("இடன் இல் பருவத்தும்" [குறள் 218] எனவும்,
"இடன் இன்றி இரந்தோர்க்கு" [கலித். பாலை.1]
எனவும் வந்தமையான், 'இடன்' என்பது
அப்பொருட்டாதல் அறிக. இளமைக் காலத்தும் என்பார்,
'எஞ்ஞான்றும்' என்றார். அப் பேதைமையாவது,
மேற்சொல்லிய விழைதல், அஞ்சல், ஏவல் செய்தல்
என்னும் மூன்றற்கும் காரணமாயது. எதிர்மறை
முகத்தான் அம் மூன்றும் இதனால் தொகுத்துக்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
நன்றாக எண்ணுதல் பொருந்திய நெஞ்சத்தோடு தக்க நிலையும்
உடையார்க்கு எக்காலத்திலும் மனைவியின் ஏவலுக்கு இணங்கும்
அறியாமை இல்லை.
G.U.Pope:
Where pleasures of the mind, that dwell in realms of thought, abound,
Folly, that springs from overweening woman's love, is never found.
Explanation
The foolishness that results from devotion to a wife will never be found in those who possess a reflecting mind and a prosperity (flowing) therefrom.