மூலம்:
881 . நிழல்நீரும் இன்னாத இன்னா: தமர்நீரும்
இன்னாஆம் இன்னா செயின்.
பரிமேழலகர் உரை:
நிழல் நீரும் இன்னாத இன்னா ஒருவனுக்கு அனுபவிக்க
வேண்டுவனவாய நிழலும் நீரும் முன் இனியவேனும்
பின் நோய் செய்வன இன்னாவாம்; தமர் நீரும் இன்னா
செயின் இன்னாவாம் - அது போலத்
தழுவவேண்டுவனவாய தமரியல் புகளும் முன்
இனியவேனும் பின் இன்னா செய்வன இன்னாவாம்.
(நோய் - பெருங்கால், பெருவயிறு முதலாயின.
'தமர்' என்றதனால் உட்பகை யாதற்குரியராய ஞாதியர்
என்பது அறிக. இன்னா செயல் - முன் வெளிப்படாமை
நின்று துணை பெற்றவழிக் கெடுதல்.) ---
மு.வ உரை:
இன்பம் தரும் நிழலும் நீரும் நோய் செய்வனவாக இருந்தால்
தீயனவே ஆகும்; அதுபோலவே, சுற்றத்தாரின் தன்மைகளும்
துன்பம் தருமானால் தீயனவே ஆகும்.
G.U.Pope:
Water and shade, if they unwholesome prove, will bring you pain.
And qualities of friends who treacherous act, will be your bane.
Explanation
Shade and water are not pleasant, (if) they cause disease; so are the qualities of (one's) relations not agreeable, (if) they cause pain.
மூலம்:
882 . வாள்போல் பகைவரை அஞ்சற்க: அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.
பரிமேழலகர் உரை:
வாள் போல் பகைவரை அஞ்சற்க - வாள்போல எறிதும்
என்று வெளிப்பட்டு நிற்கும் பகைவர் பகையினை
அஞ்சாதொழிக; கேள் போல் பகைவர் தொடர்பு அஞ்சுக
- அங்ஙனம் நில்லாது கேள்போல மறைந்து நிற்கும்
பகைவர் நட்பினை அஞ்சுக.
(பகைவர்: ஆகுபெயர். முன்னே அறிந்து
காக்கப்படுதலான், 'அஞ்சற்க' என்றும், அங்ஙனம்
அறியவும் காக்கவும் படாமையின் கெடுதல் ஒருதலை
என்பது பற்றி 'அஞ்சுக' என்றும் கூறினார். பின்
செய்யும் பகையினும் கொடிதாகலானும் காக்கலாகாது
ஆகலானும், அஞ்சப்படுவது முன் செய்த அவர்
தொடர்பாயிற்று. இவை இரண்டு பாட்டானும் உட்பகை
ஆகாது என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச
வேண்டியதில்லை; ஆனால் உறவினரைப்போல இருந்து உட்பகை
கொண்டவரின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.
G.U.Pope:
Dread not the foes that as drawn swords appear;
Friendship of foes, who seem like kinsmen, fear!
Explanation
Fear not foes (who say they would cut) like a sword; (but) fear the friendship of foes (who seemingly act) like relations.
மூலம்:
883 . உட்பகை அஞ்சித்தற் காக்க: உலைவுஇடத்து
மண்பகையின் மாணத் தெறும்.
பரிமேழலகர் உரை:
உட்பகை அஞ்சித் தற்காக்க - உட்பகையாயினாரை
அஞ்சித் தன்னைக் காத்துக்கொண் டொழுகுக;
உலைவிடத்து மட்பகையின் மாணத்தெறும் - அங்ஙனம்
ஒழுகாதவழித் தனக்கோர் தளர்ச்சி வந்தவிடத்துக்
குயவன் மட்கலத்தை அறுக்கும் கருவி போல, அவர்
தப்பாமற் கெடுப்பர்.
('காத்தல்' அவர் அணையாமலும் அவர்க்கு
உடம்படாமலும் பரிகரித்தல். மண்ணைப் பகுக்கும்
கருவி 'மட்பகை' எனப்பட்டது. பகைமை தோன்றாமல்
உள்ளாயிருந்தே கீழறுத்தலின், கெடுதல் தப்பாது
என்பதாம்.) ---
மு.வ உரை:
உட்பகைக்கு அஞ்சி ஒருவன் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்;
தளர்ச்சி வந்தபோது மட்கலத்தை அறுக்கும் கருவிபோல் அந்த
உட்பகை தவறாமல் அழிவு செய்யும்.
G.U.Pope:
Of hidden hate beware, and guard thy life;
In troublous time 'twill deeper wound than potter's knife.
Explanation
Fear internal enmity and guard yourself; (if not) it will destroy (you) in an evil hour, as surely as the tool which cuts the potter's clay.
மூலம்:
884 . மனம்மாணா உட்பகை தோன்றின் இனம்மாணா
ஏதம் பலவுந் தரும்.
பரிமேழலகர் உரை:
மனம் மாணா உட்பகை தோன்றின் - புறம் திருந்தியது
போன்று அகந்திருந்தாத உட்பகை அரசனுக்கு
உண்டாவதாயின்; இனம் மாணா ஏதம் பலவும் தரும் -
அஃது அவனுக்குச் சுற்றம் வயமாகாமைக்கு ஏதுவாகிய
குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
(அவை, சுற்றத்தாரை உள்ளாய் நின்று
வேறுபடுத்தலும், அதனால் அவர் வேறுபட்டவழித் தான்
தேறாமையும், பின் அவற்றான் விளைவனவும் ஆம்.)
---
மு.வ உரை:
மனம் திருந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது
அவனுக்குச் சுற்றம் சீர்ப்படாமைக்குக் காரணமான குற்றம்
பலவற்றையும் தரும்.
G.U.Pope:
If secret enmities arise that minds pervert,
Then even kin unkind will work thee grievous hurt.
Explanation
The secret enmity of a person whose mind in unreformed will lead to many evils causing disaffection among (one's) relations.
மூலம்:
885 . உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவுந் தரும்.
பரிமேழலகர் உரை:
உறல் முறையான் உட்பகை தோன்றின் - புறத்து உறவு
முறைத் தன்மையோடு கூடிய உட்பகை அரசனுக்கு
உண்டாவதாயின்; இறல் முறையான் ஏதம் பலவும்
தரும் - அஃது அவனுக்கு இறத்தல் முறையோடு கூடிய
குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
(அவை, புறப்பகைத் துணையாய் நின்றே அது
தோன்றாமல் கோறல் முதலிய வஞ்சனை செய்தலும்,
அமைச்சர் முதலிய உறுப்புகளைத் தேய்த்தலும்
முதலாயின.) ---
மு.வ உரை:
உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு
இறக்கும் வகையான குற்றம் பலவற்றையும் கொடுக்கும்.
G.U.Pope:
Amid one's relatives if hidden hath arise,
'Twill hurt inflict in deadly wise.
Explanation
If there appears internal hatred in a (king's) family; it will lead to many a fatal crime.
மூலம்:
886 . ஒன்றாமை ஒன்றியார் கண்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது.
பரிமேழலகர் உரை:
ஒன்றாமை ஒன்றியார்கண் படின் - பகைமை, தனக்கு
உள்ளாயினார் மாட்டே பிறக்குமாயின்; பொன்றாமை
ஒன்றல் எஞ்ஞான்றும் அரிது - அரசனுக்கு இறவாமை
கூடுதல் எஞ்ஞான்றும் அரிது.
(பொருள் படை முதலிய உறுப்புகளாற் பெரியனாய
காலத்தும் என்பார், 'எஞ்ஞான்றும்' என்றார். இவை
நான்கு பாட்டானும், அதனால் தனக்கு வரும் தீங்கு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுடைய உற்றாரிடத்தில் பகைமை ஏற்படுமானால், அந்த
உட்பகையால் அவன் அழியாமலிருத்தல் எப்போதும் அரிது.
G.U.Pope:
If discord finds a place midst those who dwelt at one before,
'Tis ever hard to keep destruction from the door.
Explanation
If hatred arises among (one's) own people, it will be hardly possible (for one) to escape death.
மூலம்:
887 . செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி.
பரிமேழலகர் உரை:
செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் - செப்பினது புணர்ச்சி
போலப் புறத்து வேற்றுமை தெரியாமற்
கூடினாராயினும்; உட்பகை உற்ற குடி கூடாது -
உட்பகை உண்டாகிய குடியிலுள்ளோர் அகத்துத்
தம்முள் கூடார்.
(செப்பின் புணர்ச்சி - செப்பு மூடியோடு புணர்ந்த
புணர்ச்சி. உட்பகையான் மனம் வேறுபட்டமையின்,
புறப்பகை பெற்றுழி வீற்றுவீற்றாவர் என்பதாம். குடி
கூடாது என்பதனை, நாடுவந்தது என்பது போலக்
கொள்க. உட்பகை தான் உற்ற குடியோடு கூடாது
என்றும் உட்பகை உண்டாய குடி அப்பகையோடு
கூடாது என்றும் உரைபாரும் உளர்.) ---
மு.வ உரை:
செப்பின் இணைப்பைப்போல் புறத்தே பொருந்தி இருந்தாலும்,
உட்பகை உண்டான குடியில் உள்ளவர் அகத்தே பொருந்தி
இருக்கமாட்டார்.
G.U.Pope:
As casket with its cover, though in one they live alway,
No union to th e house where hate concealed hath sway.
Explanation
Never indeed will a family subject to internal hatred unite (really) though it may present an apparent union like that of a casket and its lid.
மூலம்:
888 . அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி.
பரிமேழலகர் உரை:
உட்பகை உற்ற குடி-முன் வளர்ந்து வந்ததாயினும்
உட்பகையுண்டாய குடி; அரம் பொருத பொன்போலப்
பொருது உரம் தேயும் - அரத்தாற் பொரப்பட்ட இரும்பு
போல அதனால் பொரப்பட்டு வலி தேயும்.
('பொருது' என்னும் செயப்பாட்டு வினையெச்சம்
'தேயும்' என்னும் வினை கொண்டது. அஃது, உரத்தின்
தொழிலாயினும் குடிமேல் ஏற்றுதலின், வினை
முதல்வினை ஆயிற்று. காரியஞ்செய்வது போன்று
பொருந்தி மெல்லமெல்லப் பிரிவித்தலான், வலி
தேய்ந்துவிடும் என்பதாம். இவை இரண்டு பாட்டானும்,
அவன் குடிக்கு வரும் தீங்கு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
உட்பகை உண்டான குடி, அரத்தினால் தேய்க்கப் பட்ட இரும்புபோல்
வலிமை குறைக்கப்பட்டுத் தேய்ந்து போகும்.
G.U.Pope:
As gold with which the file contends is worn away,
So strength of house declines where hate concealed hath sway.
Explanation
A family subject to internal hatred will wear out and lose its strength like iron that has been filed away.
மூலம்:
889 . எள்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாம் கேடு.
பரிமேழலகர் உரை:
உட்பகை எட்பகவு அன்ன சிறுமைத்தே ஆயினும் -
அரசனது உட்பகை அவன் பெருமையை நோக்க
எள்ளின் பிளவை ஒத்த சிறுமை உடைத்தேயாயினும்;
கேடு உள்ளதாம் - பெருமையெல்லாம் அழிய வரும்
கேடு அதன் அகத்ததாம்.
(எத்துணையும் பெரிதாய கேடு, தனக்கு எல்லை
வருந்துணையும் எத்துணையும் சிறிதாய
உட்பகையுள்ளே அடங்கியிருந்து, வந்தால் வெளிப்பட்டு
நிற்கும் என்பதாம். இதனான் அது, சிறிது என்று
இகழப்படாது என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
எள்ளின் பிளவைப் போன்ற சிறிய அளவு உடையதே ஆனாலும்,
ஒரு குடியை அழிக்கவல்ல கேடு உட்பகையில் உள்ளதாகும்.
G.U.Pope:
Though slight as shred of 'seasame' seed it be,
Destruction lurks in hidden enmity.
Explanation
Although internal hatred be as small as the fragment of the sesamum (seed), still does destruction dwell in it.
மூலம்:
890 . உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடன்உறைந் தற்று.
பரிமேழலகர் உரை:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை-மனப் பொருத்தம்
இல்லாதாரோடு கூட ஒருவன் வாழும் வாழ்க்கை;
குடங்கருள் பாம்பொடு உடன் உறைந்தற்று - ஒரு
குடிலுள்ளே பாம்போடு கூட உறைந்தாற் போலும்.
('குடங்கம்' என்னும் வடசொல் திரிந்து நின்றது.
இடச்சிறுமையானும் பயிற்சியானும் பாம்பாற்
கோட்படல் ஒருதலையாம்; ஆகவே, அவ்வுவமையால்
அவ்வுயிர்க்கு இறுதி வருதல் ஒருதலை என்பது
பெற்றாம். [இதனான், கண்ணோடாதவரைக் கடிக
என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அகத்தின் உடன்பாடு இல்லாதவருடன் கூடி வாழும் வாழ்க்கை, ஒரு
குடிசையிற் பாம்போடு உடன்வாழ்ந்தாற் போன்றது.
G.U.Pope:
Domestic life with those who don't agree,
Is dwelling in a shed with snake for company.
Explanation
Living with those who do not agree (with one) is like dwelling with a cobra (in the same) hut.