மூலம்:
871 . பகைஎன்னும் பண்பு இலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று.
பரிமேழலகர் உரை:
பகை என்னும் பண்பு இலதனை - பகை என்று
சொல்லப்படும் தீமை பயப்பதனை; ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று - ஒருவன்
விளையாட்டின் கண்ணேயாயினும் விரும்புதல்
இயற்கைத்தன்று.
(மாணாத பகையை ஆக்கிக் கோடல் எவ்வாற்றானும்
தீமையே பயத்தலின், 'பண்பிலது' என்றும், அதனை
விளையாட்டின்கண் வேண்டினும் செற்றமே விளைந்து
மெய்யாம் ஆகலின், 'நகையேயும்' என்றும்,
வேண்டாமை தொல்லையோரது துணிவு என்பார் நீதி
நூல் மேல் வைத்தும் கூறினார். அப்பெயர் அவாய்
நிலையான் வந்தது.) ---
மு.வ உரை:
பகை என்று சொல்லப்படும் பண்பு இல்லாத தீமையை ஒருவன்
சிரித்துப் பொழுதுபோக்கும் விளையாட்டாகவும் விரும்புதலாகாது.
G.U.Pope:
For Hate, that ill-conditioned thing not e'en in jest.
Let any evil lon ging rule your breast.
Explanation
The evil of hatred is not of a nature to be desired by one even in sport.
மூலம்:
872 . வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்ஏர் உழவர் பகை.
பரிமேழலகர் உரை:
வில் ஏர் உழவர் பகை கொளினும் - ஒருவன் வில்லை
ஏராகவுடைய உழவரோடு பகை கொண்டானாயினும்;
சொல் ஏர் உழவர் பகை கொள்ளற்க - சொல்லை
ஏராகவுடைய உழவரோடு பகை கொள்ளாதொழிக.
('சொல்' ஆகுபெயரான் நீதி நூல்மேல் நின்றது. வீரம்
சூழ்ச்சி என்னும் ஆற்றல்களுள் வீரமே உடையாரோடு
பகை கொண்டால் கேடு வருதல் ஒருதலையன்று.
வந்ததாகினும், தனக்கேயாம். ஏனைச் சூழ்ச்சி
உடையாரோடாயின் தன் வழியினுள்ளார்க்கும் தப்பாது
வருதலின், அது கொள்ளினும் இது கொள்ளற்க
என்றார். உம்மையான் அதுவும் ஆகாமை பெறுதும்,
இரண்டும் உடையாரோடு கொள்ளலாகாமை சொல்ல
வேண்டாவாயிற்று. உருவக விசேடம்.) ---
மு.வ உரை:
வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட
போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன்
பகைகொள்ளக்கூடாது.
G.U.Pope:
Although you hate incur of those whose ploughs are bows,
Make not the men whose ploughs are words your foes!
Explanation
Though you may incur the hatred of warriors whose ploughs are bows, incur not that of ministers whose ploughs are words.
மூலம்:
873 . ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன்.
பரிமேழலகர் உரை:
தமியனாய்ப் பல்லார் பகை கொள்பவன் - தான்
தனியனாய் வைத்துப் பலரோடு பகை கொள்வான்;
ஏமுற்றவரினும் ஏழை - பித்துற்றாரினும் அறிவிலன்.
(தனிமை - சுற்றம், நட்பு, படை முதலிய இன்மை.
மயக்கத்தால் ஒப்பாராயினும் ஏமுற்றவர் அதனால்
தீங்கு எய்தாமையின் தீங்கெய்துதலுமுடைய இவனை
'அவரினும் ஏழை' என்றார். தீங்காவது துணையுள்
வழியும் வேறல் ஐயமாயிருக்க, அஃது இன்றியும்
பலரோடு பகைகொண்டு அவரால் வேறுவேறு பொருதற்
கண்ணும் அழிந்தே விடுதல். இவை மூன்று
பாட்டானும் பகை போடற் குற்றம் பொதுவினுஞ்
சிறப்பினும் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தான் தனியாக இருந்து பலருடைய பகையைத் தேடிக் கொள்பவன்,
பித்துப் பிடித்தவரைவிட அறிவில்லாதவனாகக் கருதப்படுவான்.
G.U.Pope:
Than men of mind diseased, a wretch more utterly forlorn,
Is he who stands alone, object of many foeman's scorn.
Explanation
He who being alone, incurs the hatred of many is more infatuated than even mad men.
மூலம்:
874 . பகைநட்பாக் கொண்டுஒழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு.
பரிமேழலகர் உரை:
பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்கண் - வேண்டியவழிப் பகையை
வேறுபடுத்துத் தனக்கு நட்பாகச் செய்து
கொண்டொழுகும் இயல்பினையுடைய அரசனது;
பெருமையுள்ளே தங்கிற்று உலகு - அடங்கிற்று
இவ்வுலகு.
(வேண்டியவழி என்பது ஆக்கத்தான் வந்தது
வேறுபடுத்தல் - பகை நிலைமையின் நீங்குதல்.
ஒழுகல்: நீதி வழியொழுகல். பெருமை - பொருள்,
படை என இருவகைத்தாய ஆற்றல்: அதன்
வழித்தாதற்கு எஞ்ஞான்றும் திரிபின்மையின்,
அத்துணிவு பற்றித் 'தங்கிற்று' என்றார்.) -.---
மு.வ உரை:
பகையையும் நட்பாகச் செய்துகொண்டு நடக்கும் பண்புடையவனது
பெருந்தன்மையில் உலகம் தங்கியிருப்பதாகும்.
G.U.Pope:
The world secure on his dexterity depends,
Whose worthy rule can change his foes to friends.
Explanation
The world abides in the greatness of that good-natured man who behaves so as to turn hatred into friendship.
மூலம்:
875 . தன்துணை இன்றால் பகைஇரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று.
பரிமேழலகர் உரை:
தன்துணை இன்று - தனக்கு உதவும் துணையோ எனில்
இல்லை; பகை இரண்டு - நலிவு செய்யும் பகையோ
எனின் இரண்டு; ஒருவன் தான் அவற்றின் ஒன்று
இன்துணையாக் கொள்க - அங்ஙனமாய் நின்றவழி,
ஒருவனாகிய தான் அப்பகை இரண்டனுள் பொருந்தியது
ஒன்றை அப்பொழுதைக்கு இனிய துணையாகச் செய்து
கொள்க.
(பொருந்தியது - ஏனையதனை வேறதற்கு ஏற்றது:
அப்பொழுது அவ்வெல்லும் பொழுது. திரிபின்றாகச்
செய்து கொள்க என்பார், 'இன்துணையா' என்றார்.
ஆல்கள்: அசை. இவை இரண்டு பாட்டானும்
நட்பாக்கற்பாலது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தனக்கு உதவியான துணையோ இல்லை; தனக்குப் பகையோ
இரண்டு; தானோ ஒருவன்; இந்நிலையில் அப்பகைகளுள் ஒன்றை
இனிய துணையாகக் கொள்ள வேண்டும்
G.U.Pope:
Without ally, who fights with twofold enemy o'ermatched,
Must render one of these a friend attached.
Explanation
He who is alone and helpless while his foes are two should secure one of them as an agreeable help (to himself).
மூலம்:
876 . தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல்.
பரிமேழலகர் உரை:
தேறினும் தேறாவிடினும் - பகைவனை முன்
தெளிந்தானாயினும் தெளிந்திலனாயினும்;
அழிவின்கண் தேறான் பகான் விடல் - தனக்குப்
புறத்தொரு வினையால் தாழ்வு வந்துழிக் கூடாது
நீக்காது இடையே விட்டு வைக்க.
('முன் தெளிந்தான் ஆயினும், அப்பொழுது
கூடாதொழிக' என்றது, உள்ளாய் நின்று கெடுத்தல்
நோக்கி. 'தெளிந்திலனாயினும் அப்பொழுது நீக்கா
தொழிக' என்றது, அவ்வழிவிற்குத் துணையாதல்
நோக்கி. இதனான் நொதுமலாக்கற்பாலது கூறப்பட்டது)
---
மு.வ உரை:
இதற்குமுன் ஒருவனைப்பற்றி ஆராய்ந்து தெளிந்திருந்தாலும்,
தெளியாவிட்டாலும், அழிவு வந்தகாலத்தில் அவனைத்
தெரியாமலும் நீங்காமலும் வாளா விடவேண்டும்.
G.U.Pope:
Whether you trust or not, in time of sore distress,
Questions of diff'rence or agreement cease to press.
Explanation
Though (one's foe is) aware or not of one's misfortune one should act so as neither to join nor separate (from him).
மூலம்:
877 . நோவற்க நொந்தது அறியார்க்கு: மேவற்க
மென்மை பகைவர் அகத்து.
பரிமேழலகர் உரை:
நொந்தது அறியார்க்கு நோவற்க - நொந்தனைத் தாமாக
அறியாத நட்டார்க்குத் தன் நோவு சொல்லற்க:
மென்மை பகைவர் அகத்து மேவற்க - வலியின்மை
பார்த்திருக்கும் பகைவர் மாட்டு அவ்வலியின்மையை
மேலிட்டுக் கொள்ளற்க.
('நோவு' என்னும் முதனிலைத் தொழிற் பெயர்,
ஈண்டு அது சொல்லுதற்கண் ஆயிற்று. பகைவர்கண்
தவிர்வது கூறுவார் நட்டார்கண் தவிர்வதும் உடன்
கூறினார். இதனான் அவ்விரு பகுதிக்கண்ணும்
செய்வது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
துன்புற்றதைத் தாமாகவே அறியாத நண்பர்க்குத் துன்பத்தைச்
சொல்லக் கூடாது; பகைவரிடத்தில் மென்மை
மேற்கொள்ளக்கூடாது.
G.U.Pope:
To those who know them not, complain not of your woes;
Nor to your foeman's eyes infirmities disclose.
Explanation
Relate not your suffering even to friends who are ignorant of it, nor refer to your weakness in the presence of your foes.
மூலம்:
878 . வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு.
பரிமேழலகர் உரை:
வகை அறிந்து தற் செய்து தற் காப்ப - தான் வினை
செய்யும் வகையை அறிந்து அது முடித்தற்கு ஏற்பத்
தன்னைப் பெருக்கி மறவி புகாமல் தன்னைக் காக்கவே;
பகைவர்கண் பட்ட செருக்கு மாயும் - தன் பகைவர்
மாட்டு உளதாய களிப்புக் கெடும்.
(வகை - வலியனாய்த் தான் எதிரே பொருமாறும்,
மெலியனாய் அளவில் போல் விலக்குமாறும்
முதலாயின. பெருக்கல் - பொருள் படைகளாற் பெருகச்
செய்தல். களிப்பு - 'இவற்றான் வேறும்' என்று
எண்ணி மகிழ்ந்திருத்தல். இவ்விறுகுதல் அறிந்து தாமே
அடங்குவர் என்பதாம். இதனால் களைதற்பால தன்கண்
செய்வன கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
செய்யும் வகையை அறிந்து தன்னை வலிமைப்படுத்திக் கொண்டு
தற்காப்புத் தேடிக்கொண்டால், பகைவரிடத்தில் ஏற்பட்ட செருக்குத்
தானாகவே அழியும்,
G.U.Pope:
Know thou the way, then do thy part, thyself defend;
Thus shall the pride of those that hate thee have an end.
Explanation
The joy of one's foes will be destroyed if one guards oneself by knowing the way (of acting) and securing assistance.
மூலம்:
879 . இளைதுஆக முள்மரம் கொல்க: களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து.
பரிமேழலகர் உரை:
முள் மரம் இளைதாகக் கொல்க - களைய
வேண்டுவதாய முள் மரத்தை இளைதாய
நிலைமைக்கண் களைக; காழ்த்த இடத்துக் களையுநர்
கை கொல்லும் - அன்றியே முதிர்ந்த நிலைமைக்கண்
களையலுறின் களைவார் கையினை அதுதான்
களையும்.
('களையப்படுவதாய தம் பகையை அது மெலிதாய
காலத்தே களைக; அன்றியே, வலிதாய காலத்துக்
களையலுறின், தம்மை அதுதான் களையும்' என்பது
தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல்.
இதனான் களையும் பருவம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
முள்மரத்தை இளையதாக இருக்கும்போதே வெட்ட வேண்டும்;
காழ்ப்பு ஏறி முதிர்ந்தபோது வெட்டுகின்றவரின் கையையே அது
வருத்தும்.
G.U.Pope:
Destroy the thorn, while tender point can work thee no offence;
Matured by time, 'twill pierce the hand that plucks it thence.
Explanation
A thorny tree should be felled while young, (for) when it is grown it will destroy the hand of the feller.
மூலம்:
880 . உயிர்ப்ப உளர்அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார்.
பரிமேழலகர் உரை:
செயிர்ப்பவர் செம்மல் சிதைக்கலாதார் - தம்மொடு
பகைப்பாரது தருக்கினைக் கெடுக்கலாய் இருக்க
இகழ்ச்சியான் அது செய்யாத அரசர்; உயிர்ப்ப
உளரல்லர் மன்ற - பின் உயிர்க்கும் மாத்திரத்திற்கும்
உளரல்லர் ஒருதலையாக.
(அவர் வலியராய்த் தம்மைக் களைதல்
ஒருதலையாகலின், இறந்தாரேயாவர் என்பதாம். அவர்
உயிர்த்த துணையானே தாம் இறப்பர் எனினும்
அமையும். இதனான் களையா வழிப்படும் இழுக்குக்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பகைத்தவருடைய தலைமையைக் கெடுக்க முடியாதவர் திண்ணமாக
மூச்சுவிடும் அளவிற்கு உயிரோடு வாழ்கின்றவர் அல்லர்.
G.U.Pope:
But breathe upon them, and they surely die,
Who fail to tame the pride of angry enemy.
Explanation
Those who do not destroy the pride of those who hate (them) will certainly not exist even to breathe.