மூலம்:
821 . சீர்இடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.
பரிமேழலகர் உரை:
நேரா நிரந்தவர் நட்பு - கூடாதிருந்தே தமக்கு வாய்க்கும் இடம்
பெறுந்துணையும் கூடியொழுகுவார் நட்பு; சீர் இடம் காணின்
எறிதற்குப் பட்டடை - அது பெற்றால் அற எறிதற்குத்
துணையாய பட்டடையாம்.
(எறியும் எல்லை வாராமுன் எல்லாம் தாங்குவது போன்றிருந்து
வந்துழி அற எறிவிப்பதாய பட்டடைக்கும் அத்தன்மைத்தாய
நட்பிற்கும் தொழிலொப்புமை உண்மையான், அதுபற்றி
அந்நட்பினைப் பட்டடையாக உபசரித்தார். 'தீர்விடம்' என்று
பாடம் ஓதி, 'முடிவிடம்' என்று உரைப்பாரும் உளர். ---
மு.வ உரை:
அகத்தே பொருந்தாமல் புறத்தில் பொருந்தி நடப்பவரின் நட்பு, தக்க
இடம் கண்டபோது எறிவதற்கு உரிய பட்டடையாகும்.
G.U.Pope:
Anvil where thou shalt smitten be, when men occasion find,
Is friendship's form without consenting mind.
Explanation
The friendship of those who behave like friends without inward affection is a weapon that may be thrown when a favourable opportunity presents itself.
மூலம்:
822 . இனம்போன்று இனம்அல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.
பரிமேழலகர் உரை:
இனம்போன்று இனமல்லார் கேண்மை - தமக்கு உற்றார்
போன்று உறாதாரோடு உளதாய நட்பு; மகளிர் மனம்போல
வேறுபடும் - இடம் பெற்றால் பெண்பாலார் மனம் போல
வேறுபடும். (அவர் மனம் வேறுபடுதல் ''பெண் மனம் பேதின்று
ஒருப்படுப்பேன் என்னும் எண்ணில் ஒருவன்''
(வளையாபதி புறத்திரட்டு - பேதைமை, 18) என்பதனானுமறிக.
நட்பு வேறுபடுதலாவது பழைய பகையேயாதல் இவை இரண்டு
பாட்டானும் கூடா நட்பினது குற்றம் கூறப்பட்டது.) --
மு.வ உரை:
இனம் போலவே இருந்து உண்மையில் இனம் அல்லாதவரின் நட்பு,
பொதுமகளிரின் மனம்போல உள்ளொன்று புறமொன்றாக வேறுபட்டு
நிற்கும்.
G.U.Pope:
Friendship of those who seem our kin, but are not really kind.
Will change from hour to hour like woman's mind.
Explanation
The friendship of those who seem to be friends while they are not, will change like the love of women.
மூலம்:
823 . பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது.
பரிமேழலகர் உரை:
நல்ல பல கற்றக் கடைத்தும் - நல்லன பல நூல்களைக்
கற்றவிடத்தும், மனம் நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது -
அதனான் மனம் திருந்தி நட்பாதல் பகைவர்க்கு இல்லை
(நல்லன - மனக் குற்றம் கெடுப்பன. 'மனம் நல்லர் எனச்
சினைவினை முதன்மேல் நின்றது. நல்லர் ஆகுதல் செற்றம்
விடுதல். 'உள்ளே செற்றமுடையாரைக் கல்வியுடைமை பற்றி
நட்பு என்று கருதற்க' என்பதாம்.) ---
மு.வ உரை:
பல நல்ல நூல்களைக் கற்றுத் தேர்ந்தபோதிலும், அவற்றின் பயனாக
நல்ல மனம் உடையவராகப் பழகுதல், (உள்ளன்பினால்)
மாட்சியடையாதவர்க்கு இல்லை.
G.U.Pope:
To heartfelt goodness men ignoble hardly may attain,
Although abundant stores of goodly lore they gain.
Explanation
Though (one's) enemies may have mastered many good books, it will be impossible for them to become truly loving at heart.
மூலம்:
824 . முகத்தின் இனிய நகாஅ அகத்துஇன்னா
வஞ்சரை அஞ்சப் படும்.
பரிமேழலகர் உரை:
முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா வஞ்சரை - கண்ட
பொழுது முகத்தால் இனியவாகச் சிரித்து எப்பொழுதும்
மனத்தால் இன்னாராய வஞ்சரை; அஞ்சப்படும் - அஞ்சல்
வேண்டும்.
(நகையது வகை பற்றி 'இனிய' என்றும் அகத்துச் செற்றம்
நிகழவும் அதற்கு மறுதலையாய நகையைப் புறத்து
விளைத்தலின் 'வஞ்சர்' என்றும், அச்செற்றம் குறிப்பறிதற்
கருவியாய முகத்தானும் தோன்றாமையின் 'அஞ்சுதல்
செய்யப்படும்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும்
குற்றத்திற்கு ஏதுவாய் அவர் கொடுமை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை
கொண்டுள்ள வஞ்சகருடன் நட்புக் கொள்வதற்கு அஞ்சவேண்டும்.
G.U.Pope:
'Tis fitting you should dread dissemblers' guile,
Whose hearts are bitter while their faces smile.
Explanation
One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.
மூலம்:
825 . மனத்தின் அமையா தவரை எனைத்துஒன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று.
பரிமேழலகர் உரை:
மனத்தின் அமையாதவரை - மனத்தால் தம்மொடு மேவாதாரை;
எனைத்து ஒன்றும் சொல்லினால் தேறல் பாற்று அன்று -
யாதொரு கருமத்தினும் சொல்லால் தௌ¢தல்
முறைமைத்தன்று, நீதி நூல்.
('நீதி நூல்' என்பது அவாய் நிலையான் வந்தது. பகைமை
மறைத்தற்பொருட்டுச் சொல்லுகின்ற வஞ்சனைச் சொல்லைச்
செவ்விய சொல் எனக் கருதி, அவரைக் கருமங்களில் தௌ¢தல்
நீதிநூல் முறைமை அன்று என்பதாம்.) ---
மு.வ உரை:
மனத்தால் தம்மொடு பொருந்தாமல் பழகுகின்றவரை அவர்
கூறுகின்ற சொல்லைக் கொண்டு எத்தகைய ஒரு செயலிலும் நம்பித்
தெளியக்கூடாது.
G.U.Pope:
When minds are not in unison, 'its never; just,
In any words men speak to put your trust.
Explanation
In nothing whatever is it proper to rely on the words of those who do not love with their heart.
மூலம்:
826 . நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும்.
பரிமேழலகர் உரை:
நட்டார்போல் நல்லவை சொல்லினும் - நட்டார் போன்று
நன்மை பயக்கும் சொற்களைச் சொன்னாராயினும்; ஒட்டார்
சொல் ஒல்லை உணரப்படும் - பகைவர் சொற்கள் அது
பயவாமை அச்சொல்லிய பொழுதே அறியப்படும்.
('சொல்லினும்' எனவே, சொல்லாமையே பெற்றாம்.
ஒட்டாராதலால் தீமை பயத்தல் ஒருதலை என்பார். 'ஒல்லை
உணரப்படும் என்றார்.) ---
மு.வ உரை:
நண்பர்போல் நன்மையானவற்றைச் சொன்ன போதிலும் பகைமை
கொண்டவர் சொல்லும் சொற்களின் உண்மைத் தன்மை விரையில்
உணரப்படும்.
G.U.Pope:
Though many goodly words they speak in friendly tone,
The words of foes will speedily be known.
Explanation
Though (one's) foes may utter good things as though they were friends, once will at once understand (their evil, import).
மூலம்:
827 . சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.
பரிமேழலகர் உரை:
வில்வணக்கம் தீங்கு குறித்தமையான் - வில்லினது வணக்கம்
ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால்; ஒன்னார்
கண் சொல் வணக்கம் கொள்ளற்க-பகைவர் மாட்டுப் பிறக்கும்
சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக்
குறித்தது என்று கருதற்க.
(தம் வணக்கம் அன்று என்பது தோன்ற 'சொல் வணக்கம்'
என்றும், வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல்
ஒப்புமைபற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார்.
வில்லியது குறிப்பு அவனினாய வில்வணக்கத்தின்மேல்
நிற்றலான், ஒன்னாரது குறிப்பும் அவரினானாய
சொல்வணக்கத்தின் மேலதாயிற்று. இதுவும் தீங்கு குறித்த
வணக்கம் என்றே கொண்டு அஞ்சிக் காக்க என்பதாம். இவை
மூன்று பாட்டானும் 'அவரைச் சொல்லால் தௌ¢யற்க', என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக்
குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின்
வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக்கூடாது.
G.U.Pope:
To pliant speech from hostile lips give thou no ear;
'Tis pliant bow that show the deadly peril near!
Explanation
Since the bending of the bow bespeaks evil, one should not accept (as good) the humiliating speeches of one's foes.
மூலம்:
828 . தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து.
பரிமேழலகர் உரை:
ஒன்னார் தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் - ஒன்னார்
குறிப்பை உணர வல்லார்க்கு அவர் தொழுத கையகத்தும்
படைக்கலம் மறைந்திருக்கும்; அழுத கண்ணீரும் அனைத்து -
அவர் அழுத கண்ணீரும் அவ்வாறே அது மறைந்திருத்தற்கு
இடனாம்.
(தாம் நட்பு என்பதனைத் தம் கையானும் கண்ணானும் தேற்றிப்
பின் கோறற்கு வாங்க இருக்கின்ற படைக்கலம் உய்த்துணர்வுழித்
தேற்றுகின்ற பொழுதே அவற்றுள்ளே தோன்றும் என்பார்,
'ஒடுங்கும்' என்பார். பவைர் தம் மென்மை காட்டித் தொழினும்,
அழினும் அவர் குறிப்பையே நோக்கிக் காக்க என்பதாம்.
இதனான் 'அவரைச் செயலால் தௌ¢யற்க' என்பது
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பகைவர் வணங்கித் தொழுத கையினுள்ளும் கொலைக் கருவி
மறைந்திருக்கும்; பகைவர் அழுது சொரிந்த கண்ணீரும்
அத்தன்மையானதே.
G.U.Pope:
In hands that worship weapon ten hidden lies;
Such are the tears that fall from foeman's eyes.
Explanation
A weapon may be hid in the very hands with which (one's) foes adore (him) (and) the tears they shed are of the same nature.
மூலம்:
829 . மிகச்செய்து தம்எள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லல் பாற்று.
பரிமேழலகர் உரை:
மிகச் செய்து தம் எள்ளுவாரை - பகைமை தோன்றாமல்
புறத்தின்கண் நட்பினை மிகச் செய்து அகத்தின்கண் தம்மை
இகழும் பகைவரை; நட்பினுள் நகச்செய்து சாப்புல்லற்பாற்று -
தாமும் அந்நட்பின் கண்ணே நின்று புறத்தின்கண் அவர் மகிழும்
வண்ணம் செய்து அகத்தின்கண் அது சாம் வண்ணம்
பொருந்தற்பான்மை உடைத்து, அரச நீதி
('நின்று' என்பதூஉம், 'அரச நீதி' என்பதூஉம் அவாய்
நிலையான் வந்தன. அகனொன்று புறனொன்றாதல் ஒருவர்க்குத்
தகாது எனினும், பகைவர் மாட்டாயின் தகும் என்பது நீதிநூல்
துணிபு என்பார், அதன்மேல் வைத்துக் கூறினார் 'சாவ'
என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது ''கோட்டின்வாய்ச்
சாக்குத்தி'' (கலித்: முல்லை. 5) என்புழிப்போல.
'எள்ளுவாரைப் புல்லல்' எனக் கூட்டுக.) ---
மு.வ உரை:
புறத்தே மிகுதியாக நட்புத் தோன்றச் செய்து அகத்தில்
இகழ்கின்றவரைத், தாமும் அந் நட்பில் நகைத்து மகிழுமாறு செய்து
அத்தொடர்பு சாகுமாறு நடக்கவேண்டும்.
G.U.Pope:
'Tis just, when men make much of you, and then despise,
To make them smile, and slap in friendship's guise.
Explanation
It is the duty of kings to affect great love but make it die (inwardly); as regard those foes who shew them great friendship but despise them (in their heart).
மூலம்:
830 . பகைநட்பாம் காலம் வருங்கால் முகம்நட்டு
அகம்நட்பு ஒரீஇ விடல்.
பரிமேழலகர் உரை:
பகை நட்பாம் காலம் வருங்கால் - தம் பகைவர் தமக்கு நட்டாரா
யொழுகுங்காலம் வந்தால்; முகம் நட்டு அகம் ஒரீஇ விடல் -
தாமும் அவரோடு முகத்தால் நட்புச் செய்து அகத்தால்
அதனைவிட்டுப் பின் அதுவும் தவிர்க.
(அக்காலமாவது, தம்மானும் பகையென்று வௌ¢ப்பட
நீக்கலாகாத அளவு. இதனானே, 'ஆமளவெல்லாம் நீக்குக'
என்பது பெற்றாம்.) ---
மு.வ உரை:
பகைவர் நண்பராகும் காலம் வரும்போது முகத்தளவில்
நட்புக்கொண்டு அகத்தில் நட்பு நீங்கி வாய்ப்புக் கிடைத்தபோது
அதையும் விடவேண்டும்.
G.U.Pope:
When time shall come that foes as friends appear,
Then thou, to hide a hostile heart, a smiling face may'st wear.
Explanation
When one's foes begin to affect friendship, one should love them with one's looks, and, cherishing no love in the heart, give up (even the former).