மூலம்:
811 . பருகுவார் போலினும் பண்புஇலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது.
பரிமேழலகர் உரை:
பருகுவார் போலினும் பண்பு இலார் கேண்மை - காதல்
மிகுதியால் பருகுவார் போன்றாராயினும் தீக்குணமுடையார்
நட்பு; பெருகலின் குன்றல் இனிது - வளர்தலின் தேய்தல் நன்று.
('பருகு வன்ன அருகா நோக்கமொடு' (பொருநர் 78) என்றார்
பிறரும். நற்குணமில்லார் எனவே, தீக்குணமுடையார் என்பது
அருத்தாபத்தியான் வந்தது. பெருகினால் வரும் கேடு
குன்றினால் வாராமையின், 'குன்றல் இனிது' என்றார்.
இதனால், தீ நட்பினது ஆகாமை பொதுவகையால் கூறப்பட்டது.
இனிச் சிறப்பு வகையால் கூறுப.) --
மு.வ உரை:
அன்பு மிகுதியால் பருகுவார்போல் தோன்றினாலும் நற்பண்பு
இல்லாதவரின் நட்பு, வளர்ந்து பெருகுவதைவிடத் தேய்ந்து
குறைவது நல்லது.
G.U.Pope:
Though evil men should all-absorbing friendship show,
Their love had better die away than grow.
Explanation
The decrease of friendship with those who look as if they would eat you up (through excess of love) while they are really destitute of goodness is far better than its increase.
மூலம்:
812 . உறின்நட்டு அறின்ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்?
பரிமேழலகர் உரை:
உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பு இலார் கேண்மை - தமக்குப்
பயனுள்வழி நட்புச் செய்து அஃது இல்வழி ஒழியும் ஒப்பிலாரது
நட்பினை; பெறினும் இழப்பினும் என் - பெற்றால் ஆக்கம்
யாது? இழந்தால் கேடு யாது?
(தமக்கு உற்றன பார்ப்பார் பிறரோடு பொருத்தமிலராகலின்,
அவரை 'ஒப்பிலார்' என்றார். அவர் மாட்டு நொதுமல்
தன்மையே அமையும் என்பதாம்.) ---
மு.வ உரை:
தமக்குப் பயன் உள்ளபோது நட்புச் செய்து, பயன் இல்லாதபோது
நீங்கிவிடும் தகுதியில்லாதவரின் நட்பைப் பெற்றாலும் என்ன?
இழந்தாலும் என்ன?
G.U.Pope:
What though you gain or lose friendship of men of alien heart,
Who when you thrive are friends, and when you fail depart?
Explanation
Of what avail is it to get or lose the friendship of those who love when there is gain and leave when there is none ?
மூலம்:
813 . உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்.
பரிமேழலகர் உரை:
உறுவது சீர் தூக்கும் நட்பும் - நட்பு அளவு பாராது அதனால்
வரும் பயனளவு பார்க்கும் நட்டாரும்; பெறுவது கொள்வாரும் -
கொடுப்பாரைக் கொள்ளாது விலையைக் கொள்ளும், பொது
மகளிரும்; கள்வரும் - பிறர்கேடு நோக்காது அவர் சோர்வு
நோக்கும் கள்வரும்; நேர் - தம்முள் ஒப்பர்.
(நட்பு-ஆகுபெயர். பொருளையே குறித்து வஞ்சித்து ஒழுகலின்
கணிகையர் கள்வர் என்றிவரோடு ஒப்பர் என்பதாயிற்று. இவை
இரண்டு பாட்டானும் தமக்கு உறுவது பார்ப்பார் நட்பின் தீமை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கிடைக்கும் பயனை அளந்து பார்க்கும் நண்பரும், அன்பைக்
கொள்ளாமல் பெறுகின்ற பொருளைக் கொள்ளும் விலைமகளிரும்,
கள்வரும் ஒரு நிகரானவர்.
G.U.Pope:
These are alike: the friends who ponder friendship's gain
Those who accept whate'er you give, and all the plundering train.
Explanation
Friendship who calculate the profits (of their friendship), prostitutes who are bent on obtaining their gains, and thieves are (all) of the same character.
மூலம்:
814 . அமரகத்து ஆற்றுஅறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை.
பரிமேழலகர் உரை:
அமரகத்து ஆற்று அறுக்கும் கல்லா மா அன்னார் தமரின் -
அமர்வாராத முன்னெல்லாம் தாங்குவது போன்று வந்துழிக்
களத்திடை வீழ்த்துப்போம் கல்வி இல்லாத புரவி போல் வாரது
தமர்மையில்; தனிமை தலை - தனிமை சிறப்பு உடைத்து.
(கல்லாமை - கதி ஐந்தும், சாரி பதினெட்டும்,
பொருமுரணாற்றலும் அறியாமை. துன்பம் வாராத
முன்னெல்லாந் துணையாவார் போன்று, வந்துழி விட்டு
நீங்குவர் என்பது உவமையாற் பெற்றாம். அவர் தமரானால்
வரும் இறுதி தனியானால் வாராமையின், தனிமையைத்
'தலை' என்றார். எனவே, அதுவும் தீதாதல் பெறும்..) ---
மு.வ உரை:
போர் வந்தபோது களத்தில் தள்ளிவிட்டு ஓடும் அறிவில்லாத குதிரை
போன்றவரின் உறவைவிட, ஒரு நட்பும் இல்லாமல்
தனித்திருத்தலே சிறந்தது.
G.U.Pope:
A steed untrained will leave you in the tug of war;
Than friends like that to dwell alone is better far.
Explanation
Solitude is more to be desired than the society of those who resemble the untrained horses which throw down (their riders) in the fields of battle.
மூலம்:
815 . செய்துஏமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று.
பரிமேழலகர் உரை:
செய்து ஏமம் சாராச் சிறியவர் புன்கேண்மை - செய்து
வைத்தாலும் அரணாகாத கீழ் மக்களது தீ நட்பு; எய்தலின்
எய்தாமை நன்று - ஒருவர்க்கு உண்டாதலின் இல்லையாதல்
நன்று.
(சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. அரணாகாமை -
தொலைவின்கண் விட்டு நீங்குதல். 'எய்தலின் எய்தாமை
நன்று' என்பதற்கு மேல் உரைத்தாங்கு உரைக்க. 'சாராத'
என்னும் பெயரெச்சம் 'கேண்மை' என்னும் பெயர் கொண்டது;
'சிறியவர்' என்பதனைக் கொள்ளின், 'செய்து' என்பது நின்று
வற்றும். இவை இரண்டு பாட்டானும் தொலைவில்
துணையாகாத நட்பின் தீமை கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
காவல் செய்து வைத்தாலும் காவல் ஆகாத கீழ்மக்களின் தீய நட்பு,
ஒருவனுக்கு ஏற்படுவதைவிட ஏற்படாமலிருப்பதே நன்மையாகும்.
G.U.Pope:
'Tis better not to gain than gain the friendship profitless
Of men of little minds, who succour fails when dangers press.
Explanation
It is far better to avoid that to contract the evil friendship of the base who cannot protect (their friends) even when appointed to do so.
மூலம்:
816 . பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுஉடையார்
ஏதின்மை கோடி உறும்.
பரிமேழலகர் உரை:
பேதை பெருங்கெழிஇ நட்பின் - அறிவிலானது மிகச் சிறந்த
நட்பின்; அறிவுடையார் ஏதின்மை கோடி உறும்-
அறிவுடையானது பகைமை கோடி மடங்கு நன்று.
('கெழீஇய' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.
பன்மை உயர்த்தற்கண் வந்தது. அறிவுடையான் பகைமை ஒரு
தீங்கும் பயவாமையானும், பேதை நட்பு எல்லாத் தீங்கும்
பயத்தலானும், 'கோடி உறும்' என்றார். 'பெருங்கழி நட்பு'
என்று பாடம் ஓதுவாரும் உளர்..) ---
மு.வ உரை:
அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பைவிட
அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை
தருவதாகும்.
G.U.Pope:
Better ten million times incur the wise man's hate,
Than form with foolish men a friendship intimate.
Explanation
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool.
மூலம்:
817 . நகைவகையர் ஆகிய நட்பின் பகைவரால்
பத்துஅடுத்த கோடி உறும்.
பரிமேழலகர் உரை:
நகை வகையர் ஆகிய நட்பின் - தாம் அறிதல் வகையாகாது
நகுதல் வகையராதற்கு ஏதுவாகிய நட்பான் வருவனவற்றின்;
பகைவரான் பத்து அடுத்த கோடி உறும் - பகைவரான் வருவன
பத்துக் கோடி மடங்கு நல்ல.
(நட்பு: ஆகு பெயர். அந்நட்பாவது விடமரும், தூர்த்தரும்,
வேழம்பரும் போன்று பலவகையான் நகுவித்துத் தாம் பயன்
கொண்டு ஒழிவாரோடு உளதாயது. 'பகைவரான்' என்பது
அவாய் நிற்றலின், 'வருவன' என்பது வருவிக்கப்பட்டது. பத்து
அடுத்த கோடி: பத்தாகத் தொகுத்த கோடி. அந்நட்பான் வரும்
இன்பங்களின் அப்பகைவரான் வரும் துன்பங்கள் இறப்ப நல்ல
என்பதாம். இதற்குப் பிறரெல்லாம் சொல்லிலக்கணத்தோடு
மாறுகொள உரைத்தார்..) ---
மு.வ உரை:
(அகத்தில் அன்பு இல்லாமல் புறத்தில்) நகைக்கும் தன்மை
உடையவரின் நட்பைவிட, பகைவரால் வருவன பத்துக்கோடி
மடங்கு நன்மையாகும்.
G.U.Pope:
From foes ten million fold a greater good you gain,
Than friendship yields that's formed with laughers vain.
Explanation
What comes from enemies is a hundred million times more profitable than what comes from the friendship of those who cause only laughter.
மூலம்:
818 . ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்ஆடார் சோர விடல்.
பரிமேழலகர் உரை:
ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை - தம்மான் முடியும்
கருமத்தை முடியாதாகச் செய்யாதாரோடு கொண்ட நட்பினை;
சொல்லாடார் சோர விடல் - அது கண்டால் அவரறியச்
சொல்லாதே சோர விடுக.
(முடியாதாகுதல்: முடியாதாக நடித்தல். சோரவிடல்:
விடுகின்றவாறு தோன்றாமல் ஒரு காலைக்கு ஒரு கால் ஓய
விடுதல். அறியச் சொல்லினும் விடுகின்றவாறு தோன்றினும்
அதுபொழுது பரிகரித்துப் பின்னும் நட்பாயொழுகக் கருதுவர்
ஆகலின், 'சொல்லாடார்' என்றும், 'சோரவிடல்' என்றும்
கூறினார். இவை மூன்று பாட்டானும் முறையே பேதையார்.
நகுவிப்பார், இயல்வது செய்யாதார் என்பவர்கள் நட்பின் தீமை
கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
முடியும் செயலையும் முடியாதபடி செய்து கெடுப்பவரின் உறவை,
அவர் அறியுமாறு ஒன்றும் சொல்லாமலே தளரச் செய்து கைவிட
வேண்டும்.
G.U.Pope:
Those men who make a grievous toil of what they do
On your behalf, their friendship silently eschew.
Explanation
Gradually abandon without revealing (beforehand) the friendship of those who pretend inability to carry out what they (really) could do.
மூலம்:
819 . கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.
பரிமேழலகர் உரை:
வினை வேறு சொல் வேறு பட்டார் தொடர்பு - வினையும்
சொல்லும் ஒவ்வாது வேறு வேறாயிருப்பார் நட்பு; கனவினும்
இன்னாது - நனவின் கண்ணே அன்றிக் கனவின் கண்ணும்
இன்னாது.
(வினை சொற்களது ஒவ்வாமை முதல்மேல் ஏற்றப்பட்டது.
அஃதாவது, வினையிற் பகைவராய்ச் சொல்லின்
நட்டாராயிருத்தல். நிகழ்வின்கண் உளதாயிருத்தலால்
'கனவினும் இன்னாது' என்றார். உம்மை எச்ச உம்மை; இழிவு
சிறப்பு உம்மையும் ஆம். மன்னும் ஓவும் அசை நிலை..) ---
மு.வ உரை:
செய்யும் செயல் வேறாகவும் சொல்லும் சொல் வேறாகவும்
உள்ளவரின் நட்பு, ஒருவனுக்குக் கனவிலும் துன்பம் தருவதாகும்.
G.U.Pope:
E'en in a dream the intercourse is bitterness
With men whose deeds are other than their words profess.
Explanation
The friendship of those whose actions do not agree with their words will distress (one) even in (one's) dreams.
மூலம்:
820 . எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு.
பரிமேழலகர் உரை:
மனைக்கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - தனியே
மனைக்கண் இருந்துழி நட்பாடிப் பலரோடு மன்றின் கண் இருந்து
பழி கூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் -
சிறிதாயினும் தம்மை நணுகுதலைப் பரிகரிக்க
(மனைக்கண் கெழுமலும் மன்றின்கண் பழித்தலும் தீது
ஆகலின், அவர் ஒருகாலும் தம்மை நணுகா வகை
குறிக்கொண்டு காக்க என்பார், அவர் நட்பின்மேல் வைத்துக்
கூறினார். இவை இரண்டு பாட்டானும் வஞ்சர் நட்பின் தீமை
கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
தனியே வீட்டில் உள்ளபோது பொருந்தியிருந்து, பலர் கூடிய
மன்றத்தில் பழித்துப் பேசுவோரின் நட்பை எவ்வளவு சிறிய
அளவிலும் அணுகாமல் விடவேண்டும்.
G.U.Pope:
In anywise maintain not intercourse with those,
Who in the house are friends, in hall are slandering foes.
Explanation
Avoid even the least approach to a contraction of friendship with those who would love you in private but ridicule you in public.