மூலம்:
801 . பழைமை எனப்படுவது யாதுஎனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு.
பரிமேழலகர் உரை:
பழைமை எனப்படுவது யாது எனின் - பழைமை என்று
சொல்லப்படுவது யாது என்று வினவின்; கிழமையை யாதும்
கீழ்ந்திடா நட்பு - அது பழைமையோர் உரிமையால்
செய்வனவற்றைச் சிறிதும் சிதையாது அவற்றிற்கு உடம்படும்
நட்பு.
('கிழமை' ஆகுபெயர். 'கெழுதகைமை' என வருவனவும்
அது. உரிமையால் செய்வனவாவன, கருமமாயின செய்யுங்கால்
கேளாது செய்தல், கெடும்வகை செய்தல், தமக்கு வேண்டியன
தாமே கோடல், பணிவு அச்சங்கள் இன்மை என்றிவை
முதலாயின, சிதைத்தல் - விலக்கல், இதனான்,
'பழைமையாவது காலஞ்சென்றதன்று, இப்பெற்றித்தாய நட்பு,'
என்பது கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
பழைமை என்று சொல்லப்படுவது எது என்று வினவினால் அது
பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைக் கீழ்ப்படுத்தாமல்
ஏற்கும் நட்பாகும்.
G.U.Pope:
Familiarity is friendship's silent pact,
That puts restraint on no familiar act.
Explanation
Imtimate friendship is that which cannot in the least be injured by (things done through the) right (of longstanding intimacy).
மூலம்:
802 . நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்றுஅதற்கு
உப்புஆதல் சான்றோர் கடன்.
பரிமேழலகர் உரை:
நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை - நட்பிற்கு அவயவமாவன
நட்டார் உரிமையால் செய்வன; அதற்கு உப்பாதல் சான்றோர்
கடன் - அதனால் அவ்வுரிமைக்கு இனியராதல் அமைந்தார்க்கு
முறைமை.
(வேறன்மை தோன்ற 'உறுப்பு' என்றார். உறுப்பு என்பது ஈண்டு
இலக்கணையடியாக வந்த குறிப்புச் சொல். அவயவமாதல்
அறிந்தே இனியவராவர் என்பது தோன்றச் சான்றோர்மேல்
வைத்தார்..) ---
மு.வ உரை:
நட்பிற்கு உறுப்பாவது நண்பருடைய உரிமைச் செயலாகும்; அந்த
உரிமைச் செயலுக்கு உடன்பட்டவராதல் சான்றோரின்
கடமையாகும்.
G.U.Pope:
Familiar freedom friendship's very frame supplies;
To be its savour sweet is duty of the wise.
Explanation
The constituents of friendship are (things done through) the right of intimacy; to be pleased with such a right is the duty of the wise.
மூலம்:
803 . பழகிய நட்புஎவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை?
பரிமேழலகர் உரை:
கெழுதகைமை செய்தாங்கு அமையாக்கடை - தாம்
உடம்படாதனவேனும் நட்டார் உரிமையாற் செய்தனவற்றிக்குத்
தாம் செய்தாற் போல உடம்படாராயின்; பழகிய நட்பு எவன்
செய்யும் - அவரோடு பழையதாய் வந்த நட்பு என்ன பயனைச்
செய்யும்?
(செய்தார் போல உடம்படுதலாவது, தாமும் அவரிடத்து
உரிமையால் உடம்படுதல். இவை இரண்டு பாட்டானும்
பழைமையான் வரும் உரிமையது சிறப்புக் கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
பழகியவர் உரிமைபற்றிச் செய்யும் செயலைத் தாம் செய்தது
போலவே கருதி உடன்படாவிட்டால் அவரோடு தாம் பழகிய நட்பு
என்ன பயன் தரும்?
G.U.Pope:
When to familiar acts men kind response refuse,
What fruit from ancient friendship's use?
Explanation
Of what avail is long-standing friendship, if friends do not admit as their own actions done through the right of intimacy ?
மூலம்:
804 . விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையால்
கேளாது நட்டார் செயின்.
பரிமேழலகர் உரை:
நட்டார் கெழுதகையான் கேளாது செயின் - தம் கருமத்தை
நட்டார் உரிமையாற் கேளாது செய்தாராயின்; விழைதகையான்
வேண்டி இருப்பர் - அச் செயலது விழையப்படுந்தன்மை பற்றி
அதனை விரும்புவர் அறிவுடையார்.
(ஒருவர்க்குத் தம் கருமம் தாம் அறியாமல் முடிந்திருத்தலின்
ஊங்கு நன்மை யின்மையின், அச்செயல்
விழையத்தக்கதாயிற்று. அதனை அவ்வாறு அறிந்து விரும்புதல்
அறிவுடையார்க்கல்லது இன்மையின், அவர்மேல் வைத்துக்
கூறினார். 'வேண்டியிருப்பார்' என்பது எழுந்திருப்பார் என்பது
போல ஒரு சொல் நீர்மைத்து. இதனான் கேளாது செய்துழி
அதனை விரும்புக என்பது கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
உரிமையால் கேளாமலே நண்பர் ஒன்றைச் செய்தால், அந்த
உரிமையைப் போற்றி விரும்பும் தன்மையோடு அச்செயலையும்
விரும்பி உடன்பட்டிருப்பர் அறிஞர்.
G.U.Pope:
When friends unbidden do familiar acts with loving heart,
Friends take the kindly deed in friendly part.
Explanation
If friends, through the right of friendship, do (anything) without being asked, the wise will be pleased with them on account of its desirability.
மூலம்:
805 . பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுஉணர்க
நோதக்க நட்டார் செயின்.
பரிமேழலகர் உரை:
நோதக்க நட்டார் செயின் - தாம் வெறுக்கத் தக்கவனற்றை
நட்டார் செய்தாராயின்; பேதைமை ஒன்றோ பெருங்கிழமை
என்று உணர்க - அதற்குக் காரணம் ஒன்றில் பேதைமை
என்றாதல் ஒன்றின் மிக்க உரிமை என்றாதல் கொள்க.
('ஒன்றோ' என்பது எண்ணிடைச்சொல். 'செயின்' எனவே,
தம் இயல்பால் செய்யாமை பெற்றாம். இது
வருகின்றவற்றுள்ளும் ஒக்கும் இழவூழான் வரும் பேதைமை
யாவர்க்கும் உண்மையின் தமக்கு ஏதங்கொண்டாரென்றாதல்,
ஊழ்வகையான் எம்மின் வரற்பாலது ஒற்றுமை மிகுதி பற்றி
அவரின் வந்ததென்றாதல் கொள்வதல்லது, அன்பின்மையென்று
கொள்ளப்படாது என்பதாம். கெடும் வகை செய்யின் அதற்குக்
காரணம் இதனான் கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
வருந்தத்தக்க செயல்களை நண்பர் செய்தால் அதற்குக் காரணம்,
அறியாமை என்றாவது மிகுந்த உரிமை என்றாவது உணரவேண்டும்.
G.U.Pope:
Not folly merely, but familiar carelessness,
Esteem it, when your friends cause you distress.
Explanation
If friends should perform what is painful, understand that it is owing not only to ignorance, but also to the strong claims of intimacy.
மூலம்:
806 . எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு.
பரிமேழலகர் உரை:
எல்லைக்கண் நின்றார் - நட்பு வரம்பு இகவாது அதன்கண்ணே
நின்றவர்; தொல்லைக்கண் நின்றார்தொடர்பு தொலைவிடத்தும்
துறவார் - தம்மொடு பழைமையின் திரியாது நின்றாரது
நட்பினை அவரால் தொலைவு வந்தவிடத்தும் விடார்.
(பழைமையின் திரியாமை - உரிமையொழியாமை. தொலைவு
- பொருட்கேடும் போர்க்கேடும். ---
மு.வ உரை:
உரிமைவாழ்வின் எல்லையில் நின்றவர், தமக்கு அழிவு
நேர்ந்தவிடத்திலும் பழைமையாய் உறவுகொண்டு நின்றவரின்
தொடர்பைக் கைவிடமாட்டார்.
G.U.Pope:
Who stand within the bounds quit not, though loss impends,
Association with the old familiar friends.
Explanation
Those who stand within the limits (of true friendship) will not even in adversity give up the intimacy of long-standing friends.
மூலம்:
807 . அழிவந்த செய்யினும் அன்புஅறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர்.
பரிமேழலகர் உரை:
அழிவந்த செய்யினும் அன்பு அறார் - நட்டார் தமக்கு அழிவு
வந்தவற்றைச் செய்தாராயினும் அவர் மாட்டு அன்பு ஒழியார்;
அன்பின் வழிவந்த கேண்மையவர் - அன்புடனே பழையதாய்
வந்த நட்பினை உடையார்.
('அழி' என்பது முதனிலைத் தொழிற்பெயர். அழிவு -
மேற்சொல்லிய கேடுகள். இவை இரண்டு பாட்டானும் கேடு
செய்தக்கண்ணும் நட்பு விடற்பாற்றன்று என்பது கூறப்பட்டது..)
---
மு.வ உரை:
அன்புடன் தொன்றுதொட்டு வந்த உறவை உடையவர், அழிவு தரும்
செயல்களைப் பழகியவர் செய்த போதிலும் தம் அன்பு
நீங்காமலிருப்பார்.
G.U.Pope:
True friends, well versed in loving ways,
Cease not to love, when friend their love betrays.
Explanation
Those who have (long) stood in the path of affection will not give it up even if their friends cause (them) their ruin.
மூலம்:
808 . கேள்இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாள்இழுக்கம் நட்டார் செயின்.
பரிமேழலகர் உரை:
கேள் இழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நட்டார்
செய்த பிழையைத் தாமாகவே யன்றிப் பிறர் சொன்னாலும்
கொள்ளாத உரிமை அறியவல்லார்க்கு, நட்டார் இழுக்கம்
செயின் நாள் - அவர் பிழை செய்வாராயின் அது பயன்பட்ட
நாளாம்.
(பிழையாவன: சொல்லாது நற்பொகுள் வௌவல்,
பணியாமை, அஞ்சாமை முதலாயின. கேட்டல் - உட்கோடல்.
'கெழுதகைமை வல்லார்' என்பது ஒரு பெயராய், 'கேளாத'
என்னும் எச்சத்திற்கு முடிபாயிற்று. செய்து போந்துழியல்லது
அவ்வுரிமை வெளிப்படாமையின், செய்யாதன நாளல்லவாயின.
இதனான் பிழை பொறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
பழகிய நண்பர் செய்த தவறு பற்றிப் பிறர் சொன்னாலும்
கேளாமலிருக்கும் உரிமை வல்லவர்க்கு, அந் நண்பர் தவறு
செய்வாரானால் அது பயனுள்ள நாளாகும்.
G.U.Pope:
In strength of friendship rare of friend's disgrace who will not hear,
The day his friend offends will day of grace to him appear.
Explanation
To those who understand that by which they should not listen to (tales about) the faults of their friends, that is a (profitable) day on which the latter may commit a fault.
மூலம்:
809 . கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு.
பரிமேழலகர் உரை:
கெடா வழிவந்த கேண்மையார் கேண்மை - உரிமை அறாது
பழையதாய் வந்த நட்பினை உடையாரது நட்பினை, விடார்
உலகு விழையும் - அவர் பிழை நோக்கி விடுதல் செய்யாதாரை
உலகம் நட்புக் குறித்து விரும்பும்.
('கெடாது' என்பதன் இறுதிநிலை விகாரத்தால் தொக்கது.
விடாதாரை எனவே, விடுதற்காரணம் கூறப்பட்டது.
'நம்மாட்டும் இவர் இத்தன்மையராவர்' என்று யாவரும் தாமே
வந்து நட்பாவர் என்பதாம். 'கெடார்' என்று பாடம் ஓதி, 'நட்புத்
தன்மையில் கெடாராகி' என்று உரைப்பாரும் உளர்..) ---
மு.வ உரை:
உரிமை கெடாமல் தொன்றுதொட்டு வந்த உறவு உடையவரின்
தொடர்பைக் கைவிடாதவரை உலகம் விரும்பிப் போற்றும்.
G.U.Pope:
Friendship of old and faithful friends,
Who ne'er for sake, the world commends.
Explanation
They will be loved by the world, who have not forsaken the friendship of those with whom they have kept up an unbroken long-standing intimacy.
மூலம்:
810 . விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார்.
பரிமேழலகர் உரை:
பழையார்கண் பண்பின் தலைப்பிரியாதார் - பழைய நட்டார்
பிழை செய்தாராயினும் அவர்மாட்டுத் தம் பண்பின் நீங்காதார்;
விழையார் விழையப்படுப - பகைவரானும் விரும்பப்படுவர்.
(தம் பண்பாவது செய்யாத முன்போல அன்புடையராதல்.
மூன்றன் உருபும் சிறப்பு உம்மையம் விகாரத்தால் தொக்கன.
அத் திரிபின்மை நோக்கிப் பகைவரும் நட்டாராவர் என்பதாம்.
இவை இரண்டு பாட்டானும் பழைமையறிவார் எய்தும் பயன்
கூறப்பட்டது..) ---
மு.வ உரை:
(தவறு செய்தபோதிலும்) பழகிய நண்பரிடத்தில் தம் உரிமைப்
பண்பிலிருந்து மாறாதவர், தம் பகைவராலும் விரும்பப்படுதற்குரிய
சிறப்பை அடைவர்.
G.U.Pope:
Ill-wishers even wish them well, who guard.
For ancient friends, their wonted kind regard.
Explanation
Even enemies will love those who have never changed in their affection to their long-standingfriends.