மூலம்:
71 . அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்? ஆர்வலர்
புன்கண்நீர் பூசல் தரும்.
பரிமேழலகர் உரை:
அன்பிற்கும் அடைக்கும் தாழ் உண்டோ - அன்பிற்கும்
பிறர் அறியாமல் அடைத்து வைக்கும் தாழ் உளதோ?;
ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும் -தம்மால் அன்பு
செய்யப்பட்டாரது துன்பம் கண்டுழி அன்புடையார்
கண்பொழிகின்ற புல்லிய கண்ணீரே உள்நின்ற
அன்பினை எல்லாரும் அறியத்தூற்றும் ஆதலான்.
(உம்மை சிறப்பின்கண் வந்தது. ஆர்வலரது புன்மை.
கண்ணீர்மேல் ஏற்றப்பட்டது. காட்சியளவைக்கு
எய்தாதாயினும் அனுமான அளவையான் வெளிப்படும்
என்பதாம். இதனால் அன்பினது உண்மை
கூறப்பட்டது.).
மு.வ உரை:
அன்புக்கும் அடைத்துவைக்கும் தாழ் உண்டோ? அன்புடையவரின்
சிறு கண்ணீரே (உள்ளே இருக்கும் அன்பைப்) பலரும் அறிய
வெளிப்படுத்திவிடும்.
G.U.Pope:
And is there bar that can even love restrain?
The tiny tear shall make the lover's secret plain.
Explanation
Is there any fastening that can shut in love ? Tears of the affectionate will publish the love that is within.
மூலம்:
72 . அன்பிலார் எல்லாம் தமக்குரியர்: அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
பரிமேழலகர் உரை:
அன்பிலார் எல்லாம் தமக்கு உரியர் - அன்பிலாதார்
பிறர்க்குப் பயன்படாமையின் எல்லாப் பொருளானும்
தமக்கே உரியர்; அன்புடையார் என்பும் பிறர்க்கு உரியர்
- அன்புடையார் அவற்றானே அன்றித் தம் உடம்பானும்
பிறர்க்கு உரியர். (ஆன் உருபுகளும் பிரிநிலை
ஏகாரமும் விகாரத்தால் தொக்கன. 'என்பு' ஆகு பெயர்.
என்பும் உரியராதல் 'தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி அஞ்சிச் சீரை புக்கோன்' (புறநா.43)
முதலாயினார் கண்காண்க.).
மு.வ உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப் பொருளையும் தமக்கே உரிமையாகக்
கொண்டு வாழ்வர்; அன்பு உடையவர் தம் உடம்பையும் பிறர்க்கு
உரிமையாக்கி வாழ்வர்.
G.U.Pope:
The loveless to themselves belong alone;
The loving men are others' to the very bone.
Explanation
Those who are destitute of love appropriate all they have to themselves; but those who possess love cons ider even their bones to belong to others.
மூலம்:
73 . அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு.
பரிமேழலகர் உரை:
ஆர் உயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு -
பெறுதற்கு அரிய மக்கள் உயிர்க்கு உடம்போடு
உண்டாகிய தொடர்ச்சியினை; அன்போடு இயைந்த
வழக்கு என்ப - அன்போடு பொருந்துதற்கு வந்த
நெறியின் பயன் என்று சொல்லுவர் அறிந்தோர்.
(பிறப்பினது அருமை பிறந்த உயிர்மேல் ஏற்றப்பட்டது.
'இயைந்த' என்பது உபசார வழக்கு; வழக்கு:
ஆகுபெயர். உடம்போடு இயைந்தல்லது அன்பு
செய்யலாகாமையின், அது செய்தற் பொருட்டு
இத்தொடர்ச்சி உளதாயிற்று என்பதாம். ஆகவே
இத்தொடர்ச்சிக்குப் பயன் அன்புடைமை என்றாயிற்று.).
மு.வ உரை:
அருமையான உயிர்க்கு உடம்போடு பொருந்தி இருக்கின்ற உறவு,
அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று கூறுவர்.
G.U.Pope:
Of precious soul with body's flesh and bone,
The union yields one fruit, the life of love alone.
Explanation
They say that the union of soul and body in man is the fruit of the union of love and virtue (in a former birth).
மூலம்:
74 . அன்புஈனும் ஆர்வம் உடமை: அதுஈனும்
நண்புஎன்னும் நாடாச் சிறப்பு.
பரிமேழலகர் உரை:
அன்பு ஆர்வமுடைமை ஈனும் - ஒருவனுக்குத்
தொடர்புடையார் மாட்டுச் செய்த அன்பு
அத்தன்மையால் பிறர் மாட்டும் விருப்பமுடைமையைத்
தரும்; அது நண்பு என்னும் நாடாச்சிறப்பு ஈனும் -
அவ்விருப்பமுடைமைதான்.அவற்குப் பகையும்
நொதுமலும் இல்லையாய் யாவரும் நண்பு என்று
சொல்லப்படும் அளவறந்த சிறப்பினைத் தரும்.
(உடைமை, உடையனாம் தன்மை. யாவரும்
நண்பாதல் எல்லாப் பொருளும் எய்துதற்கு
ஏதுவாகலின், அதனை 'நாடாச்சிறப்பு' என்றார்.).
மு.வ உரை:
அன்பு, பிறரிடம் விருப்பம் உடையவராக வாழும் தன்மையைத்
தரும்; அஃது எல்லோரிடத்திலும் நட்பு என்று சொல்லப்படும்
அளவற்ற சிறப்பைத் தரும்.
G.U.Pope:
From love fond yearning springs for union sweet of minds;
And that the bond of rare excelling friendship binds.
Explanation
Love begets desire: and that (desire) begets the immeasureable excellence of friendship.
மூலம்:
75 . அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
பரிமேழலகர் உரை:
அன்பு உற்று அமர்ந்த வழக்கு என்ப - அன்புடையராய்
இல்லறத்தோடு பொருந்திய நெறியின் பயன் என்று
சொல்லுவர் அறிந்தோர்; வையகத்து இன்பு உற்றார்
எய்தும் சிறப்பு - இவ்வுலகத்து இல்வாழ்க்கைக்கண்
நின்று, இன்பம் நுகர்ந்து, அதன்மேல் துறக்கத்துச்
சென்று எய்தும் பேரின்பத்தினை. ('வழக்கு'
ஆகுபெயர். இல்வாழ்க்கைக்கண் நின்று
மனைவியோடும் மக்களோடும் ஒக்கலோடும் கூடி
இன்புற்றார் தாம் செய்த வேள்வித்தொழிலால் தேவராய்
ஆண்டும் இன்புறுவர் ஆகலின் இன்புற்றார் எய்தும்
சிறப்பு என்றார்.தவத்தால் துன்புற்று எய்தும் துறக்க
இன்பத்தினை ஈண்டு இன்புற்று எய்துதல் அன்பானன்றி
இல்லை என்பதாம்.).
மு.வ உரை:
உலகத்தில் இன்பம் உற்று வாழ்கின்றவர் அடையும் சிறப்பு, அன்பு
உடையவராகிப் பொருந்தி வாழும் வாழ்க்கையின் பயன் என்று
கூறுவர்.
G.U.Pope:
Sweetness on earth and rarest bliss above,
These are the fruits of tranquil life of love.
Explanation
They say that the felicity which those who, after enjoying the pleasure (of the conjugal state) in this world, obtain in heaven is the result of their domestic state imbued with love.
மூலம்:
76 . அறத்திற்கே அன்புசார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
பரிமேழலகர் உரை:
அன்பு சார்பு அறத்திற்கே என்ப அறியார் - அன்பு
துணையாவது அறத்திற்கே என்று சொல்லுவர் சிலர்
அறியார்; மறத்திற்கும் அஃதே துணை - ஏனை
மறத்திற்கும் அவ்வன்பே துணையாவது. (ஒருவன்
செய்த பகைமைபற்றி உள்ளத்து மறம் நிகழ்ந்துழி,
அவனை நட்பாகக் கருதி அவன் மேல் அன்புசெய்ய அது
நீங்குமாகலின்,மறத்தை நீக்குதற்கும் துணையாம்
என்பார், 'மறத்திற்கும் அஃதே துணை' என்றார்.
துன்பத்திற்கு யாரே துணையாவார் (குறள்
1299)என்புழிப்போல. இவை ஐந்து பாட்டானும்
அன்பினது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று
கூறுவர்; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக
நிற்கின்றது.
G.U.Pope:
The unwise deem love virtue only can sustain,
It also helps the man who evil would restrain.
Explanation
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
மூலம்:
77 . என்பு இலதனை வெயில்போலக் காயுமே
அன்பு இலதனை அறம்.
பரிமேழலகர் உரை:
என்பு இலதனை வெயில் போலக் காயும் - என்பு
இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக்காயும்;
அன்பு இலதனை அறம் - அன்பில்லாத உயிரை
அறக்கடவுள். ('என்பிலது' என்றதனான் உடம்பு
என்பதூஉம் 'அன்பிலது' என்றதனான் உயிர்
என்பதூஉம் பெற்றாம். வெறுப்பு இன்றி எங்கும்
ஒருதன்மைத்து ஆகிய வெயிலின்முன் என்பில்லது தன்
இயல்பாற் சென்று கெடுமாறுபோல, அத்தன்மைத்து
ஆகிய அறத்தின்முன் அன்பில்லது தன் இயல்பால்
கெடும் என்பதாம்.அதனைக் காயும் என வெயில்
அறங்களின் மேல் ஏற்றினார், அவற்றிற்கும்
அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு 'அல்லவை
செய்வார்க்கு அறம் கூற்றம்' (நான்மணி.83) எனப்
பிறரும் கூறினார்.).
மு.வ உரை:
எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து
வருத்துவதுபோல், அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.
G.U.Pope:
As sun's fierce ray dries up the boneless things,
So loveless beings virtue's power to nothing brings.
Explanation
Virtue will burn up the soul which is without love, even as the sun burns up the creature which is without bone, i.e. worms.
மூலம்:
78 . அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம்தளிர்த் தற்று.
பரிமேழலகர் உரை:
அகத்து அன்பு இல்லா உயிர் வாழ்க்கை - மனத்தின்கண்
அன்பு இல்லாத உயிர் இல்லறத்தோடு கூடி வாழ்தல்;
வன்பாற்கண் வற்றல் மரம் தளிர்த்தற்று -
வன்பாலின்கண்வற்றல் ஆகிய மரம் தளிர்த்தாற்
போலும். ( கூடாது என்பதாம். வன்பால் - வல்நிலம்.
வற்றல் என்பது பால் விளங்கா அஃறிணைப் படர்க்கைப்
பெயர்.).
மு.வ உரை:
அகத்தில் அன்பு இல்லாமல் வாழும் உயிர்வாழ்க்கை வளமற்ற
பாலைநிலத்தில் பட்டமரம் தளிர்த்தாற் போன்றது.
G.U.Pope:
The loveless soul, the very joys of life may know,
When flowers, in barren soil, on sapless trees, shall blow.
Explanation
The domestic state of that man whose mind is without love is like the flourishing of a withered tree upon the parched desert.
மூலம்:
79 . புறத்துறுப்பு எல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு?
பரிமேழலகர் உரை:
யாக்கை அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - யாக்கை
அகத்தின்கண் நின்று (இல்லறத்திற்கு) உறுப்பாகிய
அன்புடையர் அல்லாதார்க்கு; புறத்து உறுப்பு எல்லாம்
எவன் செய்யும் - ஏனைப் புறத்தின்கண் நின்று
உறுப்பாவன எல்லாம் அவ்வறஞ்செய்தற்கண் என்ன
உதவியைச் செய்யும்.? (புறத்து உறுப்பாவன: இடனும்,
பொருளும், ஏவல் செய்வாரும் முதலாயின.
துணையொடு கூடாதவழி அவற்றால் பயன்
இன்மையின் 'எவன் செய்யும்' என்றார். உறுப்புப்
போறலின் 'உறுப்பு' எனப்பட்டன 'யாக்கையின் கண்
முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச்
செய்யும், மனத்தின்கண் உறுப்பு ஆகிய அன்பு
இல்லாதார்க்கு' என்று உரைப்பாரும்
உளர்.அதற்குஇல்லறத்தோடு யாதும் இயைபு
இல்லாமை அறிக.
மு.வ உரை:
உடம்பின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவர்க்கு உடம்பின்
புறத்து உறுப்புக்கள் எல்லாம் என்ன பயன் செய்யும்?
G.U.Pope:
Though every outward part complete, the body's fitly framed;
What good, when soul within, of love devoid, lies halt and maimed?
Explanation
Of what avail are all the external members (of the body) to those who are destitute of love, the internal member.
மூலம்:
80 . அன்பின் வழியது உயிர்நிலை அஃதுஇலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு.
பரிமேழலகர் உரை:
அன்பின் வழியது உயிர்நிலை - அன்பு முதலாக அதன்
வழிநின்ற உடம்பே உயிர்நின்ற உடம்பாவது; அஃது
இலார்க்கு உடம்பு என்பு தோல் போர்த்த - அவ்வன்பு
இல்லாதார்க்கு உளவான உடம்புகள் என்பினைத்
தோலால் போர்த்தன ஆம்; உயிர் நின்றன ஆகா.
(இல்லறம் பயவாமையின், அன்ன ஆயின. இவை
நான்கு பாட்டானும் அன்பில்வழிப்படும் குற்றம்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
அன்பின் வழியில் இயங்கும் உடம்பே உயிர்நின்ற உடம்பாகும்;
அன்பு இல்லாதவர்க்கு உள்ள உடம்பு எலும்பைத் தோல் போர்த்த
வெற்றுடம்பே ஆகும்.
G.U.Pope:
Bodies of loveless men are bony framework clad with skin;
Then is the body seat of life, when love resides within.
Explanation
That body alone which is inspired with love contains a living soul: if void of it, (the body) is bone overlaid with skin.