மூலம்:
781 . செயற்குஅரிய யாவுள நட்பின்? அதுபோல்
வினைக்குஅரிய யாவுள காப்பு?
பரிமேழலகர் உரை:
நட்பின் செயற்கு அரிய யா உள: நட்புப்போலச் செய்து கோடற்கு
அரிய பொருள்கள் யாவை உள? அதுபோல் வினைக்கு அரிய
காப்பு யா உள - செய்து கொண்டால் அது போலப் பகைவர்
செய்யும் வினைக்குப் புகற்கு அரிய காவலாவன யாவை உள?
நட்புச் செய்தற்கு ஆவாரைப் பெறுதலும், பெற்றால் செய்யும்
உபாயமும், செய்தால் திரிபின்றி நிற்றலும் முதலிய அரிய
ஆகலின், 'நட்பிற் செயற்கு அரியன இல்லை' என்றும்,
செய்தால் பகைவரஞ்சி வினை தொடங்காராகலின், 'அதுபோல
வினை வாராமைக்கு அரிய காவல் இல்லை' என்றும் கூறினார்.
(நட்புத்தான் இயற்கை செயற்கை என இருவகைப்படும்:
அவற்றுள் இயற்கை, பிறப்பு முறையானாயதூஉம், தேய
முறையானாயதூஉம் என இரு வகைப்படும். அவற்றுள்
முன்னையது சுற்றமாகலின், அது 'சுற்றந்தழா'லின்
அடங்கிற்று. ஏனையது பகையிடையிட்ட தேயத்ததாகலின், அது
துணைவலி என 'வலியறிதலுள்' உதவி பற்றி வருஞ்
செயற்கையே யாகலின், அதன் சிறப்பு இதனாற் கூறப்பட்டது.) -
--
மு.வ உரை:
நட்பைப்போல் செய்துகொள்வதற்கு அருமையானவை எவை
உள்ளன? அதுபோல் தொழிலுக்கு அரிய காவலாக இருப்பவை
எவை உள்ளன?
G.U.Pope:
What so hard for men to gain as friendship true?
What so sure defence 'gainst all that foe can do?
Explanation
What things are there so difficult to acquire as friendship ? What guards are there so difficult to break through by the efforts (of one's foes) ?
மூலம்:
782 . நிறைநீர நீரவர் கேண்மை பிறை:மதிப்
பின்நீர பேதையார் நட்பு.
பரிமேழலகர் உரை:
நீரவர் கேண்மை பிறை நிறை நீர-அறிவுடையார் நட்புக்கள்
பிறை நிறையும் தன்மைபோல நாள்தோறும் நிறையுந்
தன்மையவாம்; பேதையார் நட்பு மதிப் பின் நீர-மற்றைப்
பேதைமையுடையார் நட்புக்கள் நிறைந்த மதி பின் குறையுந்
தன்மை போல நாள்தோறும் குறையுந்தன்மையவாம்.
('நீரவர்' என்றார், இனிமை பற்றி, கேண்மை, நட்பு என்பன
ஒரு பொருட்கிளவி செய்தாரது பன்மையான் நட்பும் பலவாயின.
அறிவுடையாரும் அறிவுடையாரும் செய்தன முன் சுருங்கிப் பின்
பெருகற்கும், பேதையாரும் பேதையாரும் செய்தன முன்
பெருகிப் பின் சுருங்கற்கும் காரணம் தம்முள் முன்
அறியாமையும் பின் அறிதலும் ஆம்.) ---
மு.வ உரை:
அறிவுடையவரின் நட்பு பிறை நிறைந்துவருதல் போன்ற
தன்மையுடையன; அறிவில்லாதவரின் நட்பு முழுமதி தேய்ந்து
பின்செல்லுதல் போன்ற தன்மையுடையன.
G.U.Pope:
Friendship with men fulfilled of good Waxes like the crescent moon;
Friendship with men of foolish mood, Like the full orb, waneth soon.
Explanation
The friendship of the wise waxes like the new moon; (but) that of fools wanes like the full moon.
மூலம்:
783 . நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.
பரிமேழலகர் உரை:
பண்பு உடையாளர் தொடர்பு பயில்தொறும் - நற்குணமுடைய
மக்கள் தம்முள் செய்த நட்புப் பயிலுந்தோறும் அவர்க்கு இன்பஞ்
செய்தல்; நூல் நவில்தொறும் நயம் போலும்-நூற் பொருள்
கற்குந்தோறும் கற்றார்க்கு இன்பஞ் செய்தலை ஒக்கும்.
(நயத்தினைச் செய்தலான் 'நயம்' எனப்பட்டது. இருமையினும்
ஒருகாலைக் கொருகால் மிகும் என்பதாகும். இவை இரண்டு
பாட்டானும் அச்சிறப்பிற்கு ஏது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பழகப் பழக நற்பண்பு உடையவரின் நட்பு இன்பம் தருதல், நூலின்
நற்பொருள் கற்கக் கற்க மேன்மேலும் இன்பம் தருதலைப்
போன்றதாகும்.
G.U.Pope:
Learned scroll the more you ponder, Sweeter grows the mental food;
So the heart by use grows fonder, Bound in friendship with the good.
Explanation
Like learning, the friendship of the noble, the more it is cultivated, the more delightful does it become.
மூலம்:
784 . நகுதல் பொருட்டன்று நட்டல்: மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு.
பரிமேழலகர் உரை:
நட்டல் நகுதற் பொருட்டன்று= ஒருவனோடு ஒருவன்
நட்புச்செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி
நகையாடல் பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல்
பொருட்டு= அவர்க்கு வேண்டாதன செய்கை உளதாயவழி
முற்பட்டுக் கழறுதற் பொருட்டு.
பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான்,
வேண்டப்படுவது அன்மையின், அதனை 'மிகுதி' என்றும், அது
செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின் 'மேற்சென்று'
என்றும். இன்சொற்கு மீளாமையின் 'இடித்தற்பொருட்டு'
என்றும் கூறினார். :இதனால் நட்பின் பயன் கூறப்பட்டது.
மு.வ உரை:
நட்புச் செய்தல் ஒருவரோடு ஒருவர் சிரித்து மகிழும் பொருட்டு
அன்று; நண்பர் நெறி கடந்து சொல்லும்போது முற்பட்டுச் சென்று
இடித்துரைப்பதற்காகும்.
G.U.Pope:
Nor for laughter only friendship all the pleasant day,
But for strokes of sharp reproving, when from right you stray.
Explanation
Friendship is to be practised not for the purpose of laughing but for that of being beforehand in giving one another sharp rebukes in case of transgression.
மூலம்:
785 . புணர்ச்சி பழகுதல் வேண்டா: உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும்.
பரிமேழலகர் உரை:
நட்டல் நகுதற்பொருட்டன்று-ஒருவனோடு, ஒருவன் நட்புச்
செய்தல் தம்முள் நகுதற்கு இயைந்தன சொல்லி நகையாடற்
பொருட்டன்று; மிகுதிக்கண் மேற்சென்று இடித்தற் பொருட்டு-
அவர்க்கு வேண்டாத செய்கை உளதாயவழி முற்பட்டுக் கழறுதற்
பொருட்டு.
(பழியும் பாவமும் தரும் செய்கை துன்பமே பயத்தலான்
வேண்டப்படுவதன்மையின் அதனை 'மிகுதி' என்றும், அது
செய்தற்கு முன்னே மீட்டல் வேண்டுதலின், 'மேற்சென்று'
என்றும், இன்சொற்கு மீளாமையின், 'இடித்தற்பொருட்டு'
என்றும் கூறினார். இதனான் நட்பின் பயன் கூறப்பட்டது.)
புணர்ச்சி பழகுதல் வேண்டா-ஒருவனோடு ஒருவன் நட்பாதற்குப்
புணர்ச்சியும் பழகுதலுமாகிய காரணங்கள் வேண்டுவதில்லை;
உணர்ச்சிதான் நட்பாம் கிழமை தரும்-இருவர்க்கும் ஒத்த
உணர்ச்சி தானே நட்பாம் உரிமையைக் கொடுக்கும்.) புணர்ச்சி:
ஒரு தேயத்தராதல். "இன்றே போலக நும் புணர்ச்சி" [புறம். 58]
என்றதும் அதனை. பழகுதல்-பலகால் கண்டும் சொல்லாடியும்
மருவுதல். இவ்விரண்டும் இன்றிக் கோப்பெருஞ்சோழனுக்கும்
பிசிராந்தையார்க்கும் போல உணர்ச்சி யொப்பின், அதுவே உடன்
உயிர் நீங்கும் உரிமைத்தாய நட்பினைப் பயக்கும் என்பதாம்
[புறநா. 217]. நட்பிற்குப் புணர்ச்சி, பழகுதல், உணர்ச்சி
யொத்தல் என்னும் காரணம் மூன்றனுள்ளும் பின்னது
சிறப்புடைத்து என்பது இதனான் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நட்புச் செய்வதற்குத் தொடர்பும் பழக்கமும் வேண்டியதில்லை; ஒத்த
உணர்ச்சியே நட்பு ஏற்படுவதற்கு வேண்டிய உரிமையைக்
கொடுக்கும்.
G.U.Pope:
Not association constant, not affection's token bind;
'Tis the unison of feeling friends unites of kindred mind.
Explanation
Living together and holding frequent intercourse are not necessary (for friendship); (mutual) understanding can alone create a claim for it.
மூலம்:
786 . முகம்நக நட்பது நட்பன்று: நெஞ்சத்து
அகம்நக நட்பது நட்பு.
பரிமேழலகர் உரை:
முகம் நக நட்பது நட்பு அன்று - கண்டவழி அகமொழிய
முகமாத்திரமே மலரும் வகை நட்குமது நட்பாகாது; நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு - அன்பால் அகமும் அலர நட்குமதே
நட்பாவது,
(நெஞ்சின்கண் நிகழ்வதனை 'நெஞ்சு' என்றார். இறந்தது
தழீஇய எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. இதனான்
இரண்டும் ஒருங்கே மலர வேண்டும் என்பது பெற்றாம்.) ---
மு.வ உரை:
முகம் மட்டும் மலரும்படியாக நட்புச் செய்வது நட்பு அன்று;
நெஞ்சமும் மலரும்படியாக உள்ளன்புகொண்டு நட்புச் செய்வதே நட்பு
ஆகும்.
G.U.Pope:
Not the face's smile of welcome shows the friend sincere,
But the heart's rejoicing gladness when the friend is near.
Explanation
The love that dwells (merely in the smiles of the face is not friendship; (but) that which dwells deep in the smiles of the heart is true friendship.
மூலம்:
787 . அழிவின் அவைநீக்கி ஆறுஉய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.
பரிமேழலகர் உரை:
அழிவினவை நீக்கி ஆறு உய்த்து - கேட்டினைத்தரும்
தீநெறிகளைச் செல்லுங்கால் விலக்கி, ஏனை நன்னெறிகளைச்
செல்லாக்காற் செலுத்தி; அழிவின்கண் அல்லல் உழப்பது
நட்பாம் - தெய்வத்தால் கேடு வந்துழி அது
விலக்கப்படாமையின், அத்துன்பத்தை உடன் அனுபவிப்பதே,
ஒருவனுக்கு நட்பாவது.
('ஆறு' என வருகின்றமையின், 'அழிவினைத் தருமவை'
என்றொழிந்தார். 'தெருண்ட அறிவினவர்'
(நாலடி. 301) என்புழிப்போல இன்சாரியை நிற்க இரண்டனுருபு
தொக்கது. இனி, 'நவை' என்று பாடம் ஓதி, அதற்குப் போர்
அழிவினும் செல்வ அழிவினும் வந்த துன்பங்கள் என்றும்,
'அழிவின்கண்' என்பதற்கு 'யாக்கை அழிவின்கண்' என்றும்
உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
அழிவைத் தரும் தீமைகளிலிருந்து நீக்கி, நல்ல வழியில் நடக்கச்
செய்து, அழிவு வந்த காலத்தில் உடனிருந்து துன்பப்படுவதே
நட்பாகும்.
G.U.Pope:
Friendship from ruin saves, in way of virtue keeps;
In troublous time, it weeps with him who weeps.
Explanation
(True) friendship turns aside from evil (ways) makes (him) walk in the (good) way, and, in case of loss if shares his sorrow (with him).
மூலம்:
788 . உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதுஆம் நட்பு.
பரிமேழலகர் உரை:
உடுக்கை இழந்தவன் கைபோல - அவையிடை ஆடை
குலைந்தவனுக்கு அப்பொழுதே கை சென்று உதவி
அவ்விளிவரல் களையுமாறு போல; ஆங்கே இடுக்கண்
களைவது நட்பாம் - நட்டவனுக்கு இடுக்கண் வந்துழி
அப்பொழுதே சென்று உதவி அதனைக் களைவதே நட்பாவது.
(அற்றம் காத்தற்கண் கை தன் மனத்தினும் முற்படுதலின்,
அவ்விரைவு இடுக்கண் களைவுழியும் அதற்கு ஒத்த தொழில்
உவமையினும் வருவிக்க. உடையவன் தொழில் நட்பின்மேல்
ஏற்பட்டது.) ---
மு.வ உரை:
உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல்,
(நண்பனுக்குத் துன்பம் வந்தால்) அப்பொழுதே சென்று துன்பத்தைக்
களைவது நட்பு.
G.U.Pope:
As hand of him whose vesture slips away,
Friendship at once the coming grief will stay.
Explanation
(True) friendship hastens to the rescue of the afflicted (as readily) as the hand of one whose garment is loosened (before an assembly).
மூலம்:
789 . நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை.
பரிமேழலகர் உரை:
நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின்-நட்பினுக்கு அரசிருக்கை
யாதெனின்; கோட்பு இன்றி ஒல்லும் வாய் ஊன்றும் நிலை-
அஃது எஞ்ஞான்றும் திரிபின்றி இயலும் எல்லையெல்லாம் அறம்
பொருள்களில் தளராமைத் தாங்கும் திண்மை.
(ஒரு ஞான்றும் வேறுபடாது மறுமை இம்மைகட்கு உறுதியாய
அறம்பொருள்களில் தளர்ந்துழி அத்தளர்ச்சி நீக்கி அவற்றின் கண்
நிறுத்துவதற்குமேல் ஒரு செயலும் இன்மையின், அதனை
நட்பிற்கு முடிந்த எல்லை என்றார்.) ---
மு.வ உரை:
நட்புக்குச் சிறந்த நிலை எது என்றால், எப்போதும் வேறுபடுதல்
இல்லாமல், முடியும்போதெல்லாம் உதவி செய்து தாங்கும்
நிலையாகும்.
G.U.Pope:
And where is friendship's royal seat? In stable mind,
Where friend in every time of need support may find.
Explanation
Friendship may be said to be on its throne when it possesses the power of supporting one at all times and under all circumstances, (in the practice or virtue and wealth).
மூலம்:
790 . இனையர் இவர்எமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.
பரிமேழலகர் உரை:
இவர் எமக்கு இனையர் யாம் இன்னம் என்று புனையினும் -
'இவர் நமக்கு இத்துணை யன்பினர்; யாம் இவர்க்கு
இத்தன்மையம்' என்று ஒருவரையொருவர் புனைந்து
சொல்லினும்; நட்புப் புல்லென்னும் - நட்புப் புல்லிதாய்த்
தோன்றும்.
('இவர்க்கு' என்பது வருவிக்கப்பட்டது. தாம் அவர் என்னும்
வேற்றுமையின்றி வைத்துப் புனைந்துரைப்பினும்
வேற்றுமையுண்டாம் ஆகலின், 'நட்புப் புல்லென்னும்' என்றார்.
இவை ஐந்து பாட்டானும் நட்பினது இலக்கணம் கூறப்பட்டது.)
மு.வ உரை:
இவர், எமக்கு இத்தன்மையானவர், யாம் இவர்க்கு
இத்தன்மையுடையேம்` என்று புனைந்துரைத்தாலும் நட்புச்
சிறப்பிழந்துவிடும்.
G.U.Pope:
Mean is the friendship that men blazon forth,
'He's thus to me' and 'such to him my worth'.
Explanation
Though friends may praise one another saying, "He is so intimate with us, and we so much (with him)"; (still) such friendship will appear mean.