மூலம்:
761 . உறுப்புஅமைந்து ஊறுஅஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை.
பரிமேழலகர் உரை:
உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல்படை-யானை முதலிய
நான்கு உறுப்பானும் நிறைந்து போரின்கண் ஊறுபடுதற்கு
அஞ்சாது நின்று பகையை வெல்வதாய படை; வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை-அரசன் செல்வங்கள்
எல்லாவற்றுள்ளும் தலையாய செல்வம்.
(ஈண்டுப் 'படை' என்றது, அந்நான்கண் தொகுதியை, ஊறு
அஞ்சியவழி வேறல் கூடாமையின், 'ஊறு அஞ்சா' என்றும்,
ஒழிந்த அங்கங்கட்கும் அரசன் தனக்கும் காவலாகலின்
'வெறுக்கையுள் தலை' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
எல்லா உறுப்புக்களும் நிறைந்ததாய் இடையூறுகளுக்கு அஞ்சாததாய்
உள்ள வெற்றி தரும் படை அரசனுடைய செல்வங்கள்
எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.
G.U.Pope:
A conquering host, complete in all its limbs, that fears no wound,
Mid treasures of the king is chiefest found.
Explanation
The army which is complete in (its) parts and conquers without fear of wounds is the chief wealth of the king.
மூலம்:
762 . உலைவுஇடத்து ஊறுஅஞ்சா வன்கண் தொலைவுஇடத்துத்
தொல்படைக்கு அல்லால் அரிது.
பரிமேழலகர் உரை:
தொலைவிடத்து உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண்-தான்
சிறியதாய வழியும் அரசற்குப் போரின்கண் உலைவுவந்தால் தன்
மேலுறுவதற்கஞ்சாது நின்று தாங்கும் வன்கண்மை,
தொல்படைக் கல்லால் அரிது-அவன் முன்னோரைத்
தொடங்கிவரும் படைக்கல்லது உளதாகாது.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. மூலப்படை,
கூலிப்படை, நாட்டுப்படை, காட்டுப்படை, துணைப்படை,
பகைப்படை என்னும் அறுவகைப்படையுள்ளும் சிறப்புடையது
மூலப்படை யாகலான், அதனை அரசன் 'வெல்பொறியும் நாடும்
விழுப்பொருளும் தண்ணடையும்-கொல்களிறும் மாவும்
கொடுத்தளிக்க' [பு.வெ.மா.தும்பை.-2] என்பது குறிப்பெச்சம்.
இப்படையை வடநூலார் 'மௌலம்' என்ப.) ---
மு.வ உரை:
போரில் அழிவு வந்தவிடத்தில் வலிமை குன்றினாலும்
இடையூறுகளுக்கு அஞ்சாத அஞ்சாமை தொன்றுதொட்டுப் பெருமை
உடைய படைக்கு அல்லாமல் முடியாது.
G.U.Pope:
In adverse hour, to face undaunted might of conquering foe,
Is bravery that only veteran host can show.
Explanation
Ancient army can alone have the valour which makes it stand by its king at the time of defeat, fearless of wounds and unmindful of its reduced strength.
மூலம்:
763 . ஒலித்தக்கால் என்ஆம் உவரி எலிப்பகை?
நாகம் உயிர்ப்பக் கெடும்.
பரிமேழலகர் உரை:
எலிப்பகை உவரி ஒலித்தக்கால் என்னாம்-எலியாய பகை
திரண்டு கடல் போல ஒலித்தால் நாகத்திற்கு என்ன ஏதம் வரும்?
நாகம் உயிர்ப்பக் கெடும்-அந்நாகம் உயிர்த்த துணையானே அது
தானே கெடும்.
(உவமைச்சொல் தொக்கு நின்றது. இத்தொழில் உவமத்தால்
திரட்சி பெற்றாம். வீரரல்லாதார் பலர் திரண்டு ஆர்த்தால்
அவற்கு வீரன் அஞ்சான்: அவன் கிளர்ந்த துணையானே
அவர்தாம் கெடுவர் என்பது தோன்ற நின்றமையின், இது பிறிது
மொழிதல் என்னும் அலங்காரம். வீரரல்லாதார் பலரினும்
வீரனொருவனை ஆள்தல் நன்று என்பதாம். இவை மூன்று
பாட்டானும் முறையே அரசனுக்குப் படை ஏனையங்கங்களுள்
சிறந்தது என்பதூஉம், அதுதன்னுள்ளும் மூலப்படை சிறந்தது
என்பதூஉம், அது தன்னுள்ளும் வீரன் சிறந்தான் என்பதூஉம்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
எலியாகிய பகை கூடிக் கடல்போல் ஒலித்தாலும் என்ன தீங்கு
ஏற்படும்? பாம்பு மூச்சு விட்ட அளவில் அவை கெட்டழியும்.
G.U.Pope:
Though, like the sea, the angry mice send forth their battle cry;
What then? The dragon breathes upon them, and they die!
Explanation
What if (a host of) hostile rats roar like the sea ? They will perish at the mere breath of the cobra.
மூலம்:
764 . அழிவுஇன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்க ணதுவே படை.
பரிமேழலகர் உரை:
அழிவு இன்றி-போரின்கண் கெடுதல் இன்றி; அறை போகாதாகி-
பகைவரால் கீழறுக்கப்படாததாய்; வழிவந்த வன்கணதுவே
படை-தொன்று தொட்டு வந்த தறுகண்மையை உடையதே
அரசனுக்குப் படையாவது.
(அழிவின்மையான் மற மானங்கள் உடைமையும், அறை
போகாமையான் அரசன்மாட்டு அன்புடைமையும் பெறப்பட்டன.
வழி வந்த வன்கண்மை: கல்நின்றான் எந்தை கணவன்
களப்பட்டான், முன்னின்று மொய்யவிந்தார் என்ஐயர்-
பின்னின்று, கைபோய்க் கணையுதைப்பக் காவலன் மேலோடி
எய்போற் கிடந்தான் என ஏறு," [பு.வெ. மா. வாகை, 22]
என்பதனான் அறிக. குற்றியலுகரத்தின் முன்னர் உடம்படுமெய்
விகாரத்தான் வந்தது. இது வருகின்ற பாட்டுள்ளும் ஒக்கும்.) ---
மு.வ உரை:
(போர்முனையில்) அழிவு இல்லாததாய், (பகைவருடைய)
வஞ்சனைக்கு இரையாகாததாய், தொன்று தொட்டு வந்த அஞ்சாமை
உடையதே படையாகும்.
G.U.Pope:
That is a host, by no defeats, by no desertions shamed,
For old hereditary courage famed.
Explanation
That indeed is an army which has stood firm of old without suffering destruction or deserting (to the enemy).
மூலம்:
765 . கூற்றுஉடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.
பரிமேழலகர் உரை:
கூற்று உடன்று மேல் வரினும். கூற்றுவன் தானே வெகுண்டு
மேல் வந்தாலும்; கூடி எதிர்நிற்கும் ஆற்றலதுவே படை நெஞ்சு
ஒத்து எதிர்நின்று தாங்கும் ஆற்றலையுடையதே படையாவது.
('மருந்தில் கூற்று' ஆகலின், [புற. நா.3] உம்மை
சிறப்பும்மை. மிகப்பலர் நெஞ்சொத்தற்குக் காரணம் அரசன்மேல்
அன்பு. ஆற்றல் - மனவலி.) ---
மு.வ உரை:
எமனே சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், ஒன்றாகத்
திரண்டு எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடையதே படையாகும்.
G.U.Pope:
That is a 'host' that joins its ranks, and mightily withstands,
Though death with sudden wrath should fall upon its bands.
Explanation
That indeed is an army which is capable of offering a united resistance, even if Yama advances against it with fury.
மூலம்:
766 . மறம்மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு.
பரிமேழலகர் உரை:
மறம் மானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் என நான்கே-
தறுகண்மையும், மானமும், முன் வீரராயினார் சென்ற
நன்னெறிக்கண் சேறலும், அரசனால் தேறப்படுதலும் என
இந்நான்கு குணமுமே; படைக்கு ஏமம்-படைக்கு அரணாவது.
(இவற்றான் முறையே பகைவரைக் கடிதிற் கொன்று நிற்றலும்,
அரசனுக்குத் தாழ்வு வாராமற் காத்தலும், "அழியுநர்
புறக்கொடை அயில்வாளோச்சா'மை [பு.வெ.மா. வஞ்சி 20]
முதலியனவும், அறைபோகாமையும், ஆகிய செய்கைகள்
பெறப்பட்டன. இச் செய்கையார்க்குப் பகைவர் நணுகாராகலின்,
வேறு அரண் வேண்டா என்பதாம்.) ---
மு.வ உரை:
வீரம், மானம், சிறந்த வழியில்நடக்கும் நடக்கை, தலைவரால்
நம்பித் தெளியப்படுதல் ஆகிய நான்கு பண்புகளும் படைக்குச்
சிறந்தவையாகும்.
G.U.Pope:
Valour with honour, sure advance in glory's path, with confidence;
To warlike host these four are sure defence.
Explanation
Valour, honour, following in the excellent-footsteps (of its predecessors) and trust-worthiness; these four alone constitute the safeguard of an army.
மூலம்:
767 . தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து.
பரிமேழலகர் உரை:
தலை வந்த போர் தாங்கும் தன்மை அறிந்து-மாற்றாரால்
வகுக்கப்பட்டுத் தன்மேல் வந்த படையின் போரைவிலக்கும்
வகுப்பு அறிந்து வகுத்துக்கொண்டு; தார் தாங்கிச் செல்வது
தானை-அவர் தூசியைத் தன்மேல் வாராமல் தடுத்துத்தான்
அதன்மேற்செல்வதே படையாவது.
(படை வகுப்பாவது: வியூகம். அஃது எழுவகை உறுப்பிற்றாய்,
வகையான் நான்காய், விரியான் முப்பதாம். உறுப்பு ஏழாவன;
உரம் முதல் கோடி ஈறாயின. வகை நான்காவன: தண்டம்,
மண்டலம், அசங்கதம், போகம் என இவை. விரி முப்பதாவன:
தண்டவிரி பதினேழும், மண்டல விரி இரண்டும், அசங்கதவிரி
ஆறும், போக விரி ஐந்தும் என இவை. இவற்றின் பெயர்களும்
இலக்கணமும் ஈண்டு உரைப்பின் பெருகும். அவை எல்லாம்
வடநூல்களுள் கண்டுகொள்க. இவை நான்கு பாட்டானும்
படையினது இலக்கணம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தன்மேல் எதிர்த்துவந்த பகைவரின் போரைத் தாங்கி, வெல்லும்
தன்மை அறிந்து, அவருடைய தூசிப்படையை எதிர்த்துச்
செல்லவல்லதே படையாகும்.
G.U.Pope:
A valiant army bears the onslaught, onward goes,
Well taught with marshalled ranks to meet their coming foes.
Explanation
That is an army which knowing the art of warding off an impending struggle, can bear against the dust-van (of a hostile force).
மூலம்:
768 . அடல்தகையும் ஆற்றலும் இல்எனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும்.
பரிமேழலகர் உரை:
தானை-தானை; அடல் தகையும் ஆற்றல் இல் எனினும்-
பகைமேல் தான் சென்று அடும் தறுகண்மையும், அது தன் மேல்
வந்தால் பொறுக்கும் ஆற்றலும் இல்லையாயினும்;
படைத்தகையால் பாடு பெறும்-தன் தோற்றப் பொலிவானே
பெருமை எய்தும்.
('இல்லெனினும்' எனவே, அவற்றது இன்றியமையாமை
பெறப்பட்டது. 'படைத்தகை' என்றது ஒரு பெயர் மாத்திரமாய்
நின்றது. தோற்றப் பொலிவாவது அலங்கரிக்கப்பட்ட தேர்
யானை குதிரைகளுடனும், பதாகை கொடி, குடை, பல்லியம்,
காகளம் முதலியவற்றுடனும் அணிந்து தோன்றும் அழகு. பாடு:
கண்ட அளவிலே பகைவர் அஞ்சும் பெருமை.) ---
மு.வ உரை:
போர் செய்யும் வீரமும் (எதிர்ப்பைத் தாங்கும்) ஆற்றலும்
இல்லையானாலும் படை தன்னுடைய அணி வகுப்பால் பெருமை
பெறும்.
G.U.Pope:
Though not in war offensive or defensive skilled;
An army gains applause when well equipped and drilled.
Explanation
Though destitute of courage to fight and strength (to endure), an army may yet gain renown by the splendour of its appearance.
மூலம்:
769 . சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை.
பரிமேழலகர் உரை:
சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும் இல்லாயின்-தான்
தேய்ந்து சிறிதாகலும், மனத்தினின்று நீங்காத வெறுப்பும்,
நல்குரவும் தனக்கு இல்லையாயின்; படைவெல்லும்-படை
பகையை வெல்லும்.
(விட்டுப் போதலும் நின்றது நல்கூர்தலும் அரசன் பொருள்
கொடாமையான் வருவன. செல்லாத் துனியாவது: மகளிரை
வௌவல், இளிவரவாயின செய்தல் முதலியவற்றான் வருவது.
இவையுள் வழி அவன் மாட்டு அன்பு இன்றி உதறுப்
பொராமையின், 'இல்லாயின் வெல்லும்' என்றார்.) ---
மு.வ உரை:
தன் அளவு சிறிதாகத் தேய்தலும், தலைவரிடம் நீங்காத வெறுப்பும்
வறுமையும் இல்லாதிருக்குமானால் அத்தகைய படை
வெற்றிபெறும்.
G.U.Pope:
Where weakness, clinging fear and poverty
Are not, the host will gain the victory.
Explanation
An army can triumph (over its foes) if it is free from diminution; irremediable aversion and poverty.
மூலம்:
770 . நிலைமக்கள் சால உடைத்துஎனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்.
பரிமேழலகர் உரை:
நிலை மக்கள் சால உடைத்து எனினும். போரின்கண்
நிலையுடைய வீரரை மிக உடைத்தே யாயினும்; தலைமக்கள்
இல்வழித் தானை இல்-தனக்குத் தலைவராகிய வீரர் இல்லாத
வழித் தானை நில்லாது.
(படைத்தலைவர் நிலையுடையரன்றிப் போவாராயின்,
காண்போர் இல்லெனப் பொராது தானும் போம் என்பார்,
'தலைமக்கள் இல் வழி இல்' என்றார். இவை மூன்று
பாட்டானும் முறையே படைத்தகையின்மையானும் அரசன்
கொடைத் தாழ்வுகளானும், தலைவர் இன்மையானும் தாழ்வு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நெடுங்காலமாக நிலைத்திருக்கும் வீரர் பலரை உடையதே
ஆனாலும், தலைமை தாங்கும் தலைவர் இல்லாதபோது படைக்குப்
பெருமை இல்லையாகும்.
G.U.Pope:
Though men abound, all ready for the war,
No army is where no fit leaders are.
Explanation
Though an army may contain a large number of permanent soldiers, it cannot last if it has no generals.