மூலம்:
751 . பொருள்அல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள்அல்லது இல்லை பொருள்.
பரிமேழலகர் உரை:
பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது -
ஒரு பொருளாக மதிக்கப்படாதாரையும் படுவாராகச் செய்ய
வல்ல பொருளையொழிய; பொருள் இல்லை - ஒருவனுக்குப்
பொருளாவதில்லை.
(மதிக்கப்படாதார் - அறிவிலாதார், இழி குலத்தார். இழிவு
சிறப்புஉம்மை விகாரத்தால் தொக்கது. மதிக்கப்படுவாராகச்
செய்தல் அறிவுடையாரும் உயர்குலத்தாரும் அவர்பாற் சென்று
நிற்கப் பண்ணுதல். அதனால் ஈட்டப்படுவது அதுவே;
பிறிதில்லை என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச்
செய்வதாகிய பொருள் அல்லாமல், சிறப்புடைய பொருள் வேறு
இல்லை.
G.U.Pope:
Nothing exists save wealth, that can
Change man of nought to worthy man.
Explanation
Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance.
மூலம்:
752 . இல்லாரை எல்லோரும் எள்ளுவர்: செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு.
பரிமேழலகர் உரை:
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும்
உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்;
செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும்
உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் - எல்லா நன்மையும்
உடையராயினும் பொருளில்லாரை யாவரும் இகழ்வர்;
செல்வரை எல்லாரும் சிறப்புச் செய்வர் - எல்லாத் தீமையும்
உடையராயினும் அஃது உடையாரை யாவரும் உயரச் செய்வர்.
(உயரச் செய்தல் - தாம் தாழ்ந்து நிற்றல். இகழ்தற்கண்ணும்
தாழ்தற்கண்ணும் பகைவர், நட்டார், நொதுமலர் என்னும்
மூவகையாரும் ஒத்தலின், 'யாவரும்' என்றார். பின்னும்
கூறியது அதனை வலியுறுத்தற்பொருட்டு) ---
மு.வ உரை:
பொருள் இல்லாதவரை (வேறு நன்மை உடையவராக இருந்தாலும்)
எல்லாரும் இகழ்வர்; செல்வரை (வேறு நன்மை
இல்லாவிட்டாலும்) எல்லாரும் சிறப்புச் செய்வர்.
G.U.Pope:
Those who have nought all will despise;
All raise the wealthy to the skies.
Explanation
All despise the poor; (but) all praise the rich.
மூலம்:
753 . பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள்அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று.
பரிமேழலகர் உரை:
பொருள் என்று எல்லாரானும் சிறப்பிக்கப்படும் நந்தா விளக்கு;
எண்ணிய தேயத்துச் சென்று இருள் அறுக்கும் - தன்னைச்
செய்தவர்க்கு அவர் நினைத்த தேயத்துச் சென்று பகை என்னும்
இருளைக் கெடுக்கும்.
(எல்லார்க்கும் எஞ்ஞான்றும் இன்றியமையாததாய் வருதல்
பற்றி, 'பொய்யா ' என்றும், ஏனைய விளக்கோடு இதனிடை
வேற்றுமை தோன்று எண்ணிய தேயத்துச் சென்று என்றும்
கூறினார். ஏகதேச உருவகம். இவை மூன்று பாட்டானும்
பொருளது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பொருள் என்று சொல்லப்படுகின்ற நந்தாவிளக்கு, நினைத்த
இடத்திற்குச் சென்று உள்ள இடையூற்றைக் கெடுக்கும்.
G.U.Pope:
Wealth, the lamp unfailing, speeds to every land,
Dispersing darkness at its lord's command.
Explanation
The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein).
மூலம்:
754 . அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறன்அறிந்து
தீதுஇன்றி வந்த பொருள்.
பரிமேழலகர் உரை:
திறன் அறிந்து தீது இன்றி வந்த பொருள் - செய்யும் திறத்தினை
அறிந்து அரசன் கொடுங்கோன்மையிலனாக உளதாய பொருள்;
அறன் ஈனும் இன்பமும் ஈனும் - அவனுக்கு அறத்தையும்
கொடுக்கும், இன்பத்தையும் கொடுக்கும்.
(செய்யுந்திறம்: தான் பொருள் செய்தற்கு உரிய நெறி.
'இலனாக' என்றது 'இன்றி' எனத் திரிந்து நின்றது.
'செங்கோல்' என்று புகழப்படுதலானும், கடவுட் பூசை
தானங்களாற் பயனெய்தலானும், 'அறன் ஈனும்' என்றும்,
நெடுங்காலம் நின்று துய்க்கப்படுதலான், 'இன்பமும் ஈனும்'
என்றும் கூறினார். அதனான் அத்திறத்தான் ஈட்டுக என்பதாம்.)
---
மு.வ உரை:
சேர்க்கும் திறம் அறிந்து தீமை ஒன்றும் இல்லாமல் சேர்க்கப்பட்டு
வந்த செல்வத்தின் ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத்
தீமையானது என்று நீக்கிவிட வேண்டும்.
G.U.Pope:
Their wealth, who blameless means can use aright,
Is source of virtue and of choice delight.
Explanation
The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness.
மூலம்:
755 . அருளொடும் அன்பொடும் வாராப் பொருள்ஆக்கம்
புல்லார் புரள விடல்.
பரிமேழலகர் உரை:
அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம் - தாம்
குடிகள்மாட்டுச் செய்யும் அருளொடும், அவர் தம்மாட்டுச்
செய்யும் அன்பொடும் கூடி வாராத பொருளீட்டத்தை, புல்லார்
புரள விடல் - அரசர் பொருந்தாது கழியவிடுக.
(அவற்றொடு கூடி வருதலாவது, ஆறிலொன்றாய் வருதல்.
அவ்வாறு வாராத பொருளீட்டம் பசுமட்கலத்துள் நீர் போலச்
செய்தானையும் கொண்டு இறத்தலின், அதனைப் 'புல்லார்'
என்று ஒழியாது, 'புரளவிடல்' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
அருளோடும் அன்போடும் பொருந்தாத வழிகளில் வந்த செல்வத்தின்
ஆக்கத்தைப் பெற்று மகிழாமல் அதைத் தீமையானது என்று
நீக்கிவிட வேண்டும்.
G.U.Pope:
Wealth gained by loss of love and grace,
Let man cast off from his embrace.
Explanation
(Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love.
மூலம்:
756 . உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்.
பரிமேழலகர் உரை:
உறு பொளும் - உடையாரின்மையின் தானே வந்துற்ற
பொருளும்; உல்கு பொருளும் - சுங்கமாகிய பொருளும்; தன்
ஒன்னார்த் தெறுபொருளும் - தன் பகைவரைத் திறையாகக்
கொள்ளும் பொருளும்; வேந்தன் பொருள் - அரசனுக்கு உரிய
பொருள்கள்.
(உறுபொருள்; வைத்தார் இறந்துபோக நெடுங்காலம்
நிலத்தின்கண் கிடந்து பின் கண்டெடுத்தூஉம், தாயத்தார்
பெறாததூஉமாம். சுங்கம்-கலத்தினும் காலினும் வரும்
வண்டங்கட்கு இறையாயது. தெறுபொருள்: 'தெறுதலான் வரும்
பொருள்' என விரியும். ஆறில் ஒன்று ஒழியவும் உரியன
கூறியவாறு. இவை மூன்று பாட்டானும் அஃது ஈட்டும் நெறி
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும்
பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும்
பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
G.U.Pope:
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues,
The spoils of slaughtered foes; these are the royal revenues.
Explanation
Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king.
மூலம்:
757 . அருள்என்னும் அன்புஈன் குழவி பொருள்என்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
பரிமேழலகர் உரை:
அன்பு ஈன் அருள் என்னும் குழவி-அன்பினால் ஈனப்பட்ட அருள்
என்னும் குழவி; பொருள் என்னும் செல்வச் செவிலியால்
உண்டு - பொருள் என்று உயர்த்துச் சொல்லப்படும்
செல்வத்தையுடைய செவிலியான் வளரும்.
(தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள்
தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவதாகலின்,
அதனை 'அன்பு ஈன் குழவி' என்றும், அது வறியார்
மேற்செல்வது அவ்வறுமை களையவல்லார்க்காதலின்
பொருளை அதற்குச் 'செலிலி' என்றும், அஃது உலகிற்
செவிலியர் போலாது, தானே எல்லாப் பொருளும் உதவி
வளர்த்தலிற் 'செல்வச் 'செவிலி' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
அன்பினால் பெறப்பட்ட அருள் என்று கூறப்படும் குழந்தை, பொருள்
என்று கூறப்படும் செல்வமுள்ள செவிலித் தாயால் வளர்வதாகும்.
G.U.Pope:
'Tis love that kindliness as offspring bears:
And wealth as bounteous nurse the infant rears.
Explanation
The child mercy which is borne by love grows under the care of the rich nurse of wealth.
மூலம்:
758 . குன்றுஏறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்துஒன்று
உண்டாகச் செய்வான் வினை.
பரிமேழலகர் உரை:
தன் கைத்து உண்டாக ஒன்று செய்வான் வினை - தன்
கையதாகிய பொருளுண்டாக ஒரு வினையை எடுத்துக்
கொண்டான் அதனைச் செய்தல்; குன்று ஏறி யானைப்போர்
கண்டற்று - ஒருவன் மலைமேல் ஏறிநின்று யானைப்போரைக்
கண்டால் ஒக்கும்.
('கைத்து உண்டாக ஒன்று செய்வான்' எனக் கூட்டுக. 'ஒன்று'
என்பது வினையாதல் 'செய்வான்' என்றதனாற் பெற்றாம்.
குன்றேறியான் அச்சமும் வருத்தமும் இன்றி நிலத்திடை
யானையும் யானையும் பொருபோரைத் தான் இனிதிருந்து
காணுமது போலக் கைத்து உண்டாக வினையை
மேற்கொண்டானும் அச்சமும் வருத்தமும் இன்றி வல்லாரை
ஏவித் தான் இனிதிருந்து முடிக்கும் என்பதாம்.) ---
மு.வ உரை:
தன் கைப்பொருள் ஒன்று தன்னிடம் இருக்க அதைக் கொண்டு
ஒருவன் செயல் செய்தல், மலையின்மேல் ஏறி, யானைப் போரைக்
கண்டாற் போன்றது.
G.U.Pope:
As one to view the strife of elephants who takes his stand,
On hill he's climbed, is he who works with money in his hand.
Explanation
An undertaking of one who has wealth in one's hands is like viewing an elephant-fight from a hill-top.
மூலம்:
759 . செய்க பொருளை: செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனின் கூரியது இல்.
பரிமேழலகர் உரை:
பொருளைச் செய்க - தமக்கொன்றுண்டாகக் கருதுவார்
பொருளை உண்டாக்குக; செறுநர் செருக்கு அறுக்கும் எஃகு - தம்
பகைவர் தருக்கினை அறுக்கும் படைக்கலம் அதுவாம்; அதனிற்
கூறியது இல் - அதற்கு அதுபோலக் கூரிய படைக்கலம் பிறிது
இல்லை.
('அதுவாம்' 'அதற்கு' என்பன அவாய் நிலையான் வந்தன.
பொருளைச் செய்யவே பெரும்படையும் நட்பும் உடையராவர்.
ஆகவே, பகைவர் தருக்கு ஒழிந்து தாமே அடங்குவர் என்பார்,
'செறுநர் செருக்கு அறுக்கு எஃகு' என்றும், ஏனை எஃகுகள்
அதுபோல அருவப்பொருளை அறுக்க மாட்டாமையின் 'அதனிற்
கூறியது இல்' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
ஒருவன் பொருளை ஈட்டவேண்டும்; அவனுடைய பகைவரின்
செருக்கைக் கெடுக்கவல்ல வாள் அதைவிடக் கூர்மையானது வேறு
இல்லை.
G.U.Pope:
Make money! Foeman's insolence o'ergrown
To lop away no keener steel is known.
Explanation
Accumulate wealth; it will destroy the arrogance of (your) foes; there is no weapon sharper than it.
மூலம்:
760 . ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு.
பரிமேழலகர் உரை:
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு - நெறியான் வரும்
பொருளை இறப்ப மிகப் படைத்தார்க்கு; ஏனை இரண்டும்
ஒருங்கு எண்பொருள்- மற்றை அறனும் இன்பமும் ஒருங்கே
எளிய பொருள்களாம்.
(காழ்தல்: முதிர்தல். பயன் கொடுத்தல்லது போகாமையின்,
'ஒண்பொருள்' என்றும், ஏனை இரண்டும் அதன்
விளைவாகலின் தாமே ஒருகாலத்திலே உளவாம் என்பார்
'எண்பொருள்' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்
அதனான் வரும் பயன் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சிறந்ததாகிய பொருளை மிகுதியாக ஈட்டியவர்க்கு, மற்ற அறமும்
இன்பமுமாகிய இரண்டும் ஒருசேரக் கை கூடும் எளிய
பொருளாகும்.
G.U.Pope:
Who plenteous store of glorious wealth have gained,
By them the other two are easily obtained.
Explanation
To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition).