மூலம்:
741 . ஆற்று பவர்க்கும் அரண்பொருள்: அஞ்சித்தன்
போற்று பவர்க்கும் பொருள்.
பரிமேழலகர் உரை:
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் - மூவகை
ஆற்றலுமுடையராய்ப் பிறர்மேற்செல்வார்க்கும் அரண் சிறந்தது;
அஞ்சித் தன் போற்றுபவர்க்கும் அரண் பொருள் - அவையின்றித்
தம்மேல் வருவார்க்கு அஞ்சித் தன்னையே அடைவார்க்கும்
அரண் சிறந்தது.
(பிறர்மேல் செல்லுங்கால் உரிமை பொருள் முதலியவற்றைப்
பிறனொருவன் வௌவாமல் வைத்துச்
செல்லவேண்டுமாகலானும், அப்பெருமை தொலைந்து இறுதி
வந்துழிக் கடல் நடுவண் உடைகலத்தால் போன்று ஏமங்காணாது
இறுவராகலானும், ஆற்றுபவர்க்கும் பொற்றுபவர்க்கும் அரண்
பொருளாயிற்று. ஆற்றல் உடையாராயினும் அரண் இல்வழி
அழியும் பாலராகலின், அவரை முற்கூறினார். இதனான்,
அரணினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
(படையெடுத்துப்) போர்செய்யச் செல்பவர்க்கும் அரண் சிறந்ததாகும்;
(படையெடுத்தவர்க்கு) அஞ்சித் தன்னைப் புகலிடமாக
அடைந்தவர்க்கும் அது சிறந்ததாகும்.
G.U.Pope:
A fort is wealth to those who act against their foes;
Is wealth to them who, fearing, guard themselves from woes.
Explanation
A fort is an object of importance to those who march (against their foes) as well as to those who through fear (of pursuers) would seek it for shelter.
மூலம்:
742 . மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழல்
காடும் உடையது அரண்.
பரிமேழலகர் உரை:
மணி நீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது
அரண் - மணி போலும் நிறத்தினையுடைய நீரும்,
வெள்புள்ளிடை நிலமும், மலையும், குளிர்ந்த நிழலையுடைய
காடும் உடையதே அரணாவது.
(எஞ்ஞான்றும் வற்றாத நீர் என்பார் 'மணி நீர்' என்றும், நீரும்
நிழலும் இல்லா மருநிலமும் என்பார் 'மண்' என்றும், செறிந்த
காடு என்பார். 'அணி நிழற் காடு' என்றும் கூறினார்.
மதிற்புறத்து மருநிலம் பகைவர் அரண் பற்றாமைப் பொருட்டு.
நீரரண், நிலவரண், மலையரண், காட்டரண் என இயற்கையும்
செயற்கையுமாய இந்நான்கு அரணும் சூழப்படுவது அரண்
என்பதாம்.) ---
மு.வ உரை:
மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும்,
மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும்
உடையதே அரண் ஆகும்.
G.U.Pope:
A fort is that which owns fount of waters crystal clear,
An open space, a hill, and shade of beauteous forest near.
Explanation
A fort is that which has everlasting water, plains, mountains and cool shady forests.
மூலம்:
743 . உயர்வுஅகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவுஅரண் என்றுஉரைக்கும் நூல்.
பரிமேழலகர் உரை:
உயர்வு, அகலம், திண்மை, அருமை இந்நான்கின் அமைவு -
உயர்ச்சியும், அகலமும், திண்மையும், அருமையும் என்று
சொல்லப்பட்ட இந்நான்கின் மிகுதியையுடைய மதிலை; அரண்
என்று உரைக்கும் நூல் - அரண் என்று சொல்லுவர் நூலோர்.
('அமைவு', 'நூல்' என்பன ஆகுபெயர் - உயர்வு - ஏணி
யெய்தாதது. அகலம் - புறத்தோர்க்கு அகழலாகா அடியகலமும்,
அகத்தோர்க்கு நின்று வினை செய்யலாம் தலையகலமும்.
திண்மை - கல் இட்டிகைகளாற் செய்தலின் குத்தப்படாமை.
அருமை - பொறிகளான் அணுகுதற்கு அருமை. பொறிகளாவன,
"வளைவிற் பொறியும் அயிற்செறி நிலையும், கருவிர லூகமும்
கல்லுமிழ் கவணும், பரிவுறு வெத்நெயும் பாகடு குழிசியும்,
காய்பொன் உலையும், கல்லிடு கூடையும், தூண்டிலும்
துடக்கும் ஆண்டலை யடுப்பும், கவையும் கழுவும் புதையும்
புழையும், ஐயவித் துலாமும் கைபெய ரூசியும், சென்றெறி
சிரலும், பன்றியும் பணையும், எழுவும் சீப்பும் உழுவிறற்
கணையமும்,கோலும் குந்தமும் வேலும் சூலமும்" (சிலப்.
அடைக் 207-216) என்றிவை முதலாயின.) ---
மு.வ உரை:
உயரம், அகலம், உறுதி, பகைவரால் அழிக்க முடியாத அருமை
ஆகிய நான்கும் அமைந்திருப்பதே அரண் என்று நூலோர் கூறுவர்.
G.U.Pope:
Height, breadth, strength, difficult access:
Science declares a fort must these possess.
Explanation
The learned say that a fortress is an enclosure having these four (qualities) viz., height, breadth, strength and inaccessibility.
மூலம்:
744 . சிறுகாப்பின் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்பது அரண்.
பரிமேழலகர் உரை:
சிறு காப்பின் பேர் இடத்து ஆகி - காக்க வேண்டும் இடம்
சிறிதாய் அகன்ற இடத்தை உடைத்தாய்; உறு பகை ஊக்கம்
அழிப்பது அரண் - தன்னை வந்து முற்றிய பகைவரது மன
எழுச்சியைக் கெடுப்பதே அரணாவது.
(வாயிலும் வழியும் ஒழிந்த இடங்கள் மலை, காடு, நீர்நிலை
என்றிவற்றுள் ஏற்பன உடைத்தாதல் பற்றி, 'சிறுகாப்பின்'
என்றும், அகத்தோர் நலிவின்றியிருத்தல் பற்றி, 'பேரிடத்தது
ஆகி' என்றும், தன் வலி நோக்கி 'இது பொழுதே அழித்தும்'
என்று வரும் பகைவர் வந்து கண்டால், அவ்வூக்கமொழிதல்
பற்றி, 'ஊக்கம் அழிப்பது' என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
காக்கவேண்டிய இடம் சிறியதாய், மற்ற இடம் பெரிய
பரப்புள்ளதாய், தன்னை எதிர்த்து வந்த பகைவருடைய ஊக்கத்தை
அழிக்கவல்லது அரண் ஆகும்
G.U.Pope:
A fort must need but slight defence, yet ample be,
Defying all the foeman's energy.
Explanation
A fort is that which has an extensive space within, but only small places to be guarded, and such as can destroy the courage of besieging foes.
மூலம்:
745 . கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்குஎளிதாம் நீரது அரண்.
பரிமேழலகர் உரை:
கொளற்கு அரிதாய் - புறத்தாரால் கோடற்கு அரிதாய்; கொண்ட
கூழ்த்து ஆகி - உட்கொண்ட பலவகை உணவிற்றாய்; அகத்தார்
நிலைக்கு எளிதாம் நீரது அரண் - அகத்தாரது போர்நிலைக்கு
எளிதாய நீர்மையையுடையதே அரணாவது.
(கோடற்கு அருமை: இளை கிடங்குகளானும், பொறிகளானும்
இடங்கொள்ளுதற்கு அருமை. உணவு தலைமைபற்றிக்
கூறினமையின், மற்றுள்ள நுகரப்படுவனவும் அடங்கின.
நிலைக்கு எளிதாம் நீர்மையாவது, அகத்தார் விட்ட ஆயுதம்
முதலிய புறத்தார்மேல் எளிதில் சேறலும்' அவர் விட்டன
அகத்தார்மேல் செல்லாமையும்; பதணப்பரப்பும் முதலாயின. ---
மு.வ உரை:
பகைவரால் கைப்பற்றப்படுவதற்கு முடியாததாய், தன்னிடம்
உணவுப்பொருள் கொண்டதாய், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு
எளியதாகிய தன்மை உடையது அரண்.
G.U.Pope:
Impregnable, containing ample stores of food,
A fort for those within, must be a warlike station good.
Explanation
A fort is that which cannot be captured, which abounds in suitable provisions, and affords a position of easy defence to its inmates.
மூலம்:
746 . எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துஉதவும்
நல்ஆள் உடையது அரண்.
பரிமேழலகர் உரை:
எல்லாப் பொருளும் உடைத்தாய - அகத்தோர்க்கு வேண்டும்
பொருள்கள எல்லாவற்றையும் உள்ளே உடைத்தாய்; இடத்து
உதவும் நல்லாள் உடையது அரண் - புறத்தோரால் அழிவெய்தும்
எல்லைக்கண் அஃது எய்தாவகை உதவிக் காக்கும் நல்ல
வீரரையும் உடையதே அரணாவது.
(அரசன் மாட்டு அன்பும் மானமும் மறமும் சோர்வின்மையும்
முதலிய நற்குணங்கள் உடைமைபற்றி, 'நல்லாள்' என்றார்.) --
-
மு.வ உரை:
தன்னிடம் உள்ளவர்க்கு (வேண்டிய) எல்லாப் பொருளும்
உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல
வீரர்களை உடையது அரண் ஆகும்.
G.U.Pope:
A fort, with all munitions amply stored,
In time of need should good reserves afford.
Explanation
A fort is that which has all (needful) things, and excellent heroes that can help it against destruction (by foes).
மூலம்:
747 . முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்.
பரிமேழலகர் உரை:
முற்றியும் - புகலொடு போக்கு ஒழியும் வகை நெருங்கிச்
சூழ்ந்தும்; முற்றாது எறிந்தும் - அங்ஙனம் சூழாது நெகிழ்ந்த
இடன் நோக்கி ஒருமுகமாகப் பொருதும்; அறைப்படுத்தும் -
அகத்தோரை அவர் தௌ¢ந்தோரை விட்டுக் கீழறுத்துத்
திறப்பித்தும்; பற்றற்கு அரியது அரண் - புறத்தோரால்
கொள்ளுதற்கு அரியதே அரணாவது.
(இம் மூன்று உபாயத்துள்ளும் முதலாவது எல்லாப் பொருளும்
உடைமையானும், ஏனைய நல்லாளுடைமையானும்
வாயாவாயின.) ---
மு.வ உரை:
முற்றுகையிட்டும், முற்றுகையிடாமல் போர் செய்தும், வஞ்சனை
செய்தும் எப்படியும் பகைவரால் கைப்பற்ற முடியாத அருமை
உடையது அரண் ஆகும்.
G.U.Pope:
A fort should be impregnable to foes who gird it round,
Or aim there darts from far, or mine beneath the ground.
Explanation
A fort is that which cannot be captured by blockading, assaulting, or undermining it.
மூலம்:
748 . முற்றுஆற்றி முற்றி யவரையும் பற்றுஆற்றிப்
பற்றியார் வெல்வது அரண்.
பரிமேழலகர் உரை:
முற்று அற்றி முற்றியவரையும் - தானைப் பெருமையால்
சூழ்தல் வல்லராய் வந்து சூழ்ந்த புறத்தோரையும், பற்றி யார்
பற்று ஆற்றி வெல்வது அரண் - தன்னைப் பற்றிய அகத்தோர்
தாம் பற்றிய இடம் விடாதே நின்று பொருது வெல்வதே
அரணாவது.
(உம்மை, சிறப்பும்மை. 'பற்றின் கண்ணே ஆற்றி' என
விரியும். பற்று - ஆகுபெயர். 'வெல்வது' என, உடையார்
தொழில் அரண்மேல் நின்றது. பெரும் படையானைச்
சிறுபடையான் பொறுத்து நிற்கும் துணையேயன்றி, வெல்லும்
இயல்பினது என்பதாம். இதற்குப் பிறிது உரைப்பாரும் உளர்.
இவை ஏழு பாட்டானும் அதனது இலக்கணம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
முற்றுகையிடுவதில் வல்லமை கொண்டு முற்றுகை இட்டவரையும்
(உள்ளிருந்தவர் பற்றிய) பற்றை விடாமலிருந்து வெல்வதற்கு
உரியது அரண் ஆகும்.
G.U.Pope:
Howe'er the circling foe may strive access to win,
A fort should give the victory to those who guard within.
Explanation
That is a fort whose inmates are able to overcome without losing their ground, even abler men who have besieged it.
மூலம்:
749 . முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறுஎய்தி மாண்டது அரண்.
பரிமேழலகர் உரை:
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து வீறு எய்தி -
போர் தொடங்கின அளவிலே பகைவர் கெடும் வண்ணம்
அகத்தோர் செய்யும் வினை வேறுபாடுகளான் வீறு பெற்று;
மாண்டது அரண் - மற்றும் வேண்டும் மாட்சியையுடையதே
அரணாவது.
(தொடக்கத்திற் கெட்டார் பின்னுங் கூடிப் பொருதல்
கூடாமையின், 'முனைமுகத்துச் சாய' என்றார். வினை
வேறுபாடுகளாவன: பகைவர் தொடங்கிய போரினை அறிந்து,
எய்தல், எறிதல், குத்துதல், வெட்டுதல் என்றிவை முதலாய
வினைகளுள், அதனைச் சாய்ப்பன செய்தல். 'மற்றும்
வேண்டும் மாட்சி' யென்றது, புறத்தோர் அறியாமற் புகுதல்
செய்தற்குக் கண்ட சுருங்கை வழி முதலாயின உடைமை.) ---
மு.வ உரை:
போர்முனையில் பகைவர் அழியும்படியாக (உள்ளிருந்தவர்
செய்யும்) போர்ச் செயல் வகையால் பெருமை பெற்றுச்
சிறப்புடையதாய் விளங்குவது அரண் ஆகும்.
G.U.Pope:
At outset of the strife a fort should foes dismay;
And greatness gain by deeds in every glorious day.
Explanation
A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield.
மூலம்:
750 . எனைமாட்சித்து ஆகிய கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண்.
பரிமேழலகர் உரை:
அரண் - அரண்; எனை மாட்சித்து ஆகியக்கண்ணும் - மேற்
சொல்லப்பட்ட மாட்சியெல்லாம் உடைத்தாய விடத்தும்; வினை
மாட்சி இல்லார்கண் இல்லது - வினை செய்தற்கண் மாட்சி
இல்லாதார் மாட்டு அவையிலதாம்.
(வாளா இருந்தாலும், அளவறியாது செய்தலும், ஏலாதது
செய்தலும் எல்லாம் அடங்க, 'வினைமாட்சியில்லார்' என்றும்,
ஏற்ற வினையை அளவறிந்து செய்து காவாக்கால்
அம்மாட்சிகளால் பயனின்றி அழியுமென்பார்,
'அவையுடைத்தன்று' என்றும் கூறினார். இவை இரண்டு
பாட்டானும் காப்பாரை இன்றியமையாதென்பது கூறப்பட்டது.) --
-
மு.வ உரை:
எத்தகைய பெருமைகளை உடையதாக இருந்த போதிலும்,
செயல்வகையால் சிறப்பு இல்லாதவரிடத்தில் அரண்
பயனில்லாததாகும்.
G.U.Pope:
Howe'er majestic castled walls may rise,
To craven souls no fortress strength supplies.
Explanation
Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.