திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அரணியல்

              அதிகாரம்: 74                   நாடு
731. தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு.

மு.வ உரை:
குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.

732. பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.

மு.வ உரை:
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய், கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.

733. பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு.

மு.வ உரை:
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல் வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும் தரவல்லது நாடாகும்.

734. உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா இயல்வது நாடு.

மு.வ உரை:
மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி) அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில் நடைபெறுவதே நாடாகும்.

735. பல்குழுவும் பாழ்செயயும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.

மு.வ உரை:
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில் பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.

736. கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.

மு.வ உரை:
பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம் குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது என்று கூறுவர்.

737. இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.

மு.வ உரை:
ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.

738. பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து.

மு.வ உரை:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

739. நாடுஎன்ப நாடா வளத்தன: நாடுஅல்ல
நாட வளந்தரு நாடு.

மு.வ உரை:
முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச் சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் அல்ல,

740. ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு.

மு.வ உரை:
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம் அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.

------


Back to Top