மூலம்:
731 . தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வுஇலாச்
செல்வரும் சேர்வது நாடு.
பரிமேழலகர் உரை:
தள்ளா விளையுளும் - குன்றாத விளையுளைச் செய்வோரும்;
தக்காரும் - அறவோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடு
இல்லாச் செல்வமுடையோரும்; சேர்வது நாடு - ஒருங்கு
வாழ்வதே நாடாவது:
விளக்கம் (மற்றை உயர்திணைப் பொருள்களோடும்
சேர்தல்தொழிலோடும் இயையாமையின், 'விளையுள்' என்பது
உழவர்மேல் நின்றது. குன்றாமை: எல்லா உணவுகளும் நிறைய
உளவாதல். இதனான் வாழ்வார்க்கு வறுமையின்மை
பெறப்பட்டது. அறவோர் - துறந்தோர், அந்தணர் முதலாயினார்.
"நற்றவஞ் செய்வார்க்கு இடம்; தவம் செய்வார்க்கும் அஃது
இடம்" (சீவக. நாமக. 48) என்றார் பிறரும். இதனான்
அழிவின்மை பெறப்பட்டது. கேடு இல்லாமை - வழங்கத்
தொலையாமை. செல்வர் - கலத்தினும் காலினும்
அரும்பொருள் தரும் வணிகர். இதனான் அரசனுக்கும்
வாழ்வார்க்கும் பொருள் வாய்த்தல் பெறப்பட்டது.) --
மு.வ உரை:
குறையாத விளைபொருளும், தக்க அறிஞரும், கேடில்லாத
செல்வம் உடையவரும் கூடிப் பொருந்தியுள்ள நாடே நாடாகும்.
G.U.Pope:
Where spreads fertility unfailing, where resides a band,
Of virtuous men, and those of ample wealth, call that a 'land'
Explanation
A kingdom is that in which (those who carry on) a complete cultivation, virtuous persons, and merchants with inexhaustible wealth, dwell together.
மூலம்:
732 . பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு.
பரிமேழலகர் உரை:
பெரும்பொருளால் பெட்டக்கது ஆகி - அளவிறந்த
பொருளுடைமையால் பிற தேய்த்தாரானும் விரும்பத் தக்கதாய்;
அருங்கேட்டால் ஆற்ற விளைவது நாடு - கேடின் மையோடுகூடி
மிகவிளைவதே நாடாவது.
(அளவிறப்பு, பொருள்களது பன்மைமேலும் தனித்தனி
அவற்றின் மிகுதி மேலும் நின்றது. கேடாவது, மிக்க பெயல்,
பெயலின்மை, எலி, விட்டில், கிளி, அரசண்மை என்றிவற்றான்
வருவது. 'மிக்க பெயலோடு பெயலின்மை எலி விட்டில்கிளி
அக்கண்அரசண்மையோடு ஆறு.' இவற்றை வடநூலார்
'ஈதிவாதைகள்' என்ப. இவற்றுள் முன்னையவற்றது இன்மை
அரசன் அறத்தானும், பின்னையது இன்மை அவன் மறத்தானும்
வரும். இவ்வின்மைகளான் மிக விளைவதாயிற்று.) ---
மு.வ உரை:
மிக்க பொருள்வளம் உடையதாய், எல்லாரும் விரும்பத்தக்கதாய்,
கேடு இல்லாததாய், மிகுதியாக விளைபொருள் தருவதே நாடாகும்.
G.U.Pope:
That is a 'land' which men desire for wealth's abundant share,
Yielding rich increase, where calamities are rare.
Explanation
A kingdom is that which is desire for its immense wealth, and which grows greatly in prosperity, being free from destructive causes.
மூலம்:
733 . பொறைஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறைஒருங்கு நேர்வது நாடு.
பரிமேழலகர் உரை:
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள்
பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால்
அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு -
அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும்
உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.
(பாரங்கள் - மக்கள் தொகுதியும் ஆன் எருமை முதலிய
விலங்குத் தொகுதியும். தாங்குதல் - அவை தத்தம் தேயத்துப்
பகை வந்து இறுத்ததாக, அரசு கோல் கோடியதாக,
உணவின்மையானாகத் தன்கண் வந்தால் அவ்வத்தேயங்களைப்
போல இனிதிருப்பச் செய்தல். அச்செயலால் இறையைக்
குறைப்படுத்தாது தானே கொடுப்பதென்பார், 'இறை ஒருங்கு
நேர்வது' என்றார்.) ---
மு.வ உரை:
(மற்ற நாட்டு மக்கள் குடியேறுவதால்) சுமை ஒரு சேரத் தன்மேல்
வரும்போது தாங்கி, அரசனுக்கு இறைப்பொருள் முழுவதும்
தரவல்லது நாடாகும்.
G.U.Pope:
When burthens press, it bears; Yet, With unfailing hand
To king due tribute pays: that is the 'land'
Explanation
A kingdom is that which can bear any burden that may be pressed on it (from adjoining kingdoms) and (yet) pay the full tribute to its sovereign.
மூலம்:
734 . உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா இயல்வது நாடு.
பரிமேழலகர் உரை:
பொறை ஒருங்கு மேல் வருங்கால் தாங்கி - பிற நாடுகள்
பொறுத்த பாரமெல்லாம் ஒருங்கே தன்கண் வருங்கால்
அவற்றைத் தாங்கி; இறைவற்கு இறை ஒருங்கு நேர்வது நாடு -
அதன்மேல் தன் அரசனுக்கு இறைப்பொருள் முழுவதையும்
உடம்பட்டுக் கொடுப்பதே நாடாவது.
(உறுபசி, உழவருடைமையானும் ஆற்ற விளைதலானும்
சேராதாயிற்று. ஓவாப்பிணி, தீக்காற்று மிக்க குளிர்
வெப்பங்களும் நுகரப்படுமவற்றது தீமையும் இன்மையின்
சேராதாயிற்று. செறு பகை, அரசனாற்றலும் நிலை படையும்
அடவியும் அரணும் உடைமையின் சேராதாயிற்று.) ---
மு.வ உரை:
மிக்க பசியும், ஓயாத நோயும், (வெளியே இருந்துவந்து தாக்கி)
அழிவு செய்யும் பகையும் தன்னிடம் சேராமல் நல்ல வகையில்
நடைபெறுவதே நாடாகும்.
G.U.Pope:
That is a 'land' whose peaceful anna ls know,
Nor famine fierce, nor wasting plague, nor ravage of the foe.
Explanation
A kingdom is that which continues to be free from excessive starvation, irremediable epidemics, and destructive foes.
மூலம்:
735 . பல்குழுவும் பாழ்செயயும் உட்பகையும் வேந்துஅலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு.
பரிமேழலகர் உரை:
பல் குழுவும் - சங்கேத வயத்தான் மாறுபட்டுக் கூடும் பல
கூட்டமும்; பாழ் செய்யும் உட்பகையும் - உடனுறையா நின்றே
பாழாகச் செய்யும் உட்பகையும்; வேந்து அலைக்கும் கொல்
குறும்பும் இல்லது நாடு - அளவு வந்தால் வேந்தனை
அலைக்கும் கொல்வினைக் குறும்பரும் இல்லாததே நாடாவது.
(சங்கேதம் - சாதி பற்றியும் கடவுள் பற்றியும் பலர்க்கு உளதாம்
ஒருமை. உட்பகை - ஆறலைப்பார், கள்வர், குறளை கூறுவார்
முதலிய மக்களும், பன்றி, புலி கரடி முதலிய விலங்குகளும்.
'உட்பகை, குறும்பு' என்பன ஆகுபெயர். இம் மூன்றும்
அரசனாலும் வாழ்வாராலும் கடியப்பட்டு நடப்பதே நாடு
என்பதாம்.) ---
மு.வ உரை:
பலவகையாக மாறுபடும் கூட்டங்களும், உடனிருந்தே அழிவு
செய்யும் பகையும், அரசனை வருத்துகின்ற கொலைத் தொழில்
பொருந்திய குறுநில மன்னரும் இல்லாதது நாடு.
G.U.Pope:
From factions free, and desolating civil strife, and band
Of lurking murderers that king afflict, that is the 'land'.
Explanation
A kingdom is that which is without various (irregular) associations, destructive internal enemies, and murderous savages who (sometimes) harass the sovereign.
மூலம்:
736 . கேடுஅறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடுஎன்ப நாட்டின் தலை.
பரிமேழலகர் உரை:
கேடு அறியா - பகைவரால் கெடுதலறியாததாய்; கெட்ட
விடத்தும் வளம் குன்றா நாடு - அரிதின் கெட்டதாயினும்
அப்பொழுதும் தன் வளங்குன்றாத நாட்டினை; நாட்டின் தலை
என்ப எல்லா நாட்டினும் தலை என்று சொல்லுவர் நூலோர்.
('அறியாத, குன்றாத' என்னும் பெயரெச்சங்களின் இறுதி
நிலைகள் விகாரத்தால் தொக்கன. கேடு அறியாமை
ரசனாற்றலானும், கடவுட்பூசை அறங்கள் என்றிவற்றது
செயலானும் வரும். வளம் - ஆகாரங்களிற் படுவனவும்,
வயலினும் தண்டலையினும் விளைவனவுமாம். குன்றாமை:
அவை செய்ய வேண்டாமல் இயல்பாகவே உளவாயும் முன்
ஈட்டப்பட்டும் குறைவறுதல். இவை ஆறு பாட்டானும் நாட்டது
இலக்கணம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பகைவரால் கெடுக்கப்படாததாய், கெட்டுவிட்ட காலத்திலும் வளம்
குன்றாததாய், உள்ள நாடே நாடுகள் எல்லாவற்றிலும் தலையானது
என்று கூறுவர்.
G.U.Pope:
Chief of all lands is that, where nought disturbs its peace;
Or, if invaders come, still yields its rich increase.
Explanation
The learned say that the best kingdom is that which knows no evil (from its foes), and, if injured (at all), suffers no diminution in its fruitfulness.
மூலம்:
737 . இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
பரிமேழலகர் உரை:
இருபுனலும் -'கீழ் நீர், மேல் நீர்' எனப்பட்ட தன்கண் நீரும்;
வாய்ந்தமலையும் - வாய்ப்புடையதாய மலையும்; வருபுனலும்
- அதனினின்றும் வருவதாய நீரும்; வல்லரணும் - அழியாத
நகரியும்; நாட்டிற்கு உறுப்பு - நாட்டிற்கு அவயவமாம்.
(ஈண்டுப் 'புனல்' என்றது துரவு கேணிகளும் ஏரிகளும்
ஆறுகளுமாகிய ஆதாரங்களை, அவயவமாதற்குரியன அவையே
ஆகலின். அவற்றான் வானம் வறப்பினும் வளனுடைமை
பெறப்பட்டது. இடையதன்றி ஒருபுடையதாகலும், தன் வளம்
தருதலும், மாரிக்கண் உண்ட நீர் கோடைக்கண் உமிழ்தலும்
உடைமைபற்றி 'வாய்ந்த மலை' என்றார். அரண்-ஆகுபெயர்.
இதனான் அதன் அவயவம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த
மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும்,
வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புக்களாம்.
G.U.Pope:
Waters from rains and springs, a mountain near, and waters thence;
These make a land, with fortress' sure defence.
Explanation
The constituents of a kingdom are the two waters (from above and below), well situated hills and an undestructible fort.
மூலம்:
738 . பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்
அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து.
பரிமேழலகர் உரை:
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம் இவ் ஐந்து -
நோயின்மையும் செல்வம் விளைதல் இன்பம் காவல் என்றிவை
உடைமையுமாகிய இவ்வைந்தனையும்; நாட்டிற்கு அணி என்ப
நாட்டிற்கு அழகு என்று சொல்லுவர் நூலோர்.
(பிணியின்மை, நிலநலத்தான் வருவது. செல்வம்,
மேற்சொல்லியன. இன்பம், விழவும் வேள்வியும் சான்றோரும்
உடைமையானும், நுகர்வன உடைமையானும், நில நீர்களது
நன்மையானும் வாழ்வார்க்கு உள் நிகழ்வது. 'காவல்' எனவே,
அரசன் காவலும், வாழ்வோர் காவலும் அரண் காவலும்,
அடங்கின. பிற தேயங்களினுள்ளாரும் விழைந்து பின்
அவையுள்ளாமைக்கு ஏதுவாய அதன் அழகு இதனாற்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள் வளம்,
இன்பவாழ்வு, நல்ல காவல் ஆகிய இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு
என்று கூறுவர்.
G.U.Pope:
A country's jewels are these five: unfailing health,
Fertility, and joy, a sure defence, and wealth.
Explanation
Freedom from epidemics, wealth, produce, happiness and protection (to subjects); these five, the learned, say, are the ornaments of a kingdom.
மூலம்:
739 . நாடுஎன்ப நாடா வளத்தன: நாடுஅல்ல
நாட வளந்தரு நாடு.
பரிமேழலகர் உரை:
நாடா வளத்தன நாடு என்ப - தங்கண் வாழ்வார் தேடி
வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை
உடையவற்றை நூலோர் நாடு என்று சொல்வர்; நாடவளம்
தரும் நாடு நாடு அல்ல - ஆதலால் தேடி வருந்தச் செல்வம்
அடைவிக்கும் நாடுகள் நாடாகா.
(நாடுதல், இரு வழியும் வருத்தத்தின்மேல் நின்றது. "பொருள்
செய்வார்க்கும் அஃது இடம்" (சிந். நாம 48.) என்றார் பிறரும்.
நூலோர் விதிபற்றி எதிர்மறை முகத்தான் குற்றம் கூறியவாறு.
இவ்வாறின்றி, 'என்ப' என்பதனைப் பின்னும் கூட்டி
இருபொருள்பட உரைப்பின், அனுவாதமாம்.) ---
மு.வ உரை:
முயற்சி செய்து தேடாமலே தரும் வளத்தை உடைய நாடுகளைச்
சிறந்த நாடுகள் என்று கூறுவர்; தேடி முயன்றால் வளம் தரும்
நாடுகள் அல்ல,
G.U.Pope:
That is a land that yields increase unsought,
That is no land whose gifts with toil are bought.
Explanation
The learned say that those are kingdom whose wealth is not laboured for, and those not, whose wealth is only obtained through labour.
மூலம்:
740 . ஆங்குஅமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்துஅமை வில்லாத நாடு.
பரிமேழலகர் உரை:
வேந்து அமைவு இல்லாத நாடு - வேந்தனோடு மேவுதல்
இல்லாத நாடு; ஆங்கு அமைவு எய்தியக் கண்ணும் பயம்
இன்றே - மேற்சொல்லிய குணங்கள் எல்லாவற்றினும்
நிறைந்திருந்ததாயினும், அவற்றால் பயனுடைத்தன்று.
('வேந்து அமைவு' எனவே, குடிகள் அவன்மாட்டு
அன்புடையராதலும், அவன்தான் இவர்மாட்டு
அருளுடையனாதலும் அடங்கின. அவை இல்வழி வாழ்வோர்
இன்மையின், அவற்றால் பயனின்றாயிற்று. இவை இரண்டு
பாட்டானும் அதன் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நல்ல அரசன் பொருந்தாத நாடு, மேற்சொன்ன நன்மைகள் எல்லாம்
அமைந்திருந்த போதிலும் அவற்றால் பயன் இல்லாமற் போகும்.
G.U.Pope:
Though blest with all these varied gifts' increase,
A land gains nought that is not with its king at peace.
Explanation
Although in possession of all the above mentioned excellences, these are indeed of no use to a country, in the absence of harmony between the sovereign and the sujects.