திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அமைச்சியல்

              அதிகாரம்: 70                   மன்னரைச் சேர்ந்தொழுதல்
691. அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.

மு.வ உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க வேண்டும்.

692. மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.

மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல் (அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப் பெற்றுத் தரும்.

693. போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.

மு.வ உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால், அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின் அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.

694. செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.

மு.வ உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல் ஒழுக வேண்டும்.

695. எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.

மு.வ உரை:
(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும் உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.

696. குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல்.

மு.வ உரை:
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி, வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர் விரும்புமாறு சொல்ல வேண்டும்.

697. வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.

மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.

698. இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.

மு.வ உரை:
(அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.

699. கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்.

மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால் விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச் செய்யமாட்டார்.

700. பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.

மு.வ உரை:
`யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித் தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.

------


Back to Top