மூலம்:
691 . அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
பரிமேழலகர் உரை:
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார் -
மாறுபாடுதலையுடைய அரசரைச் சேர்ந்தொழுகும்
அமைச்சர்; அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க -
அவரை மிக நீங்குவதும் மிகச் செறிவதும் செய்யாது
தீக்காய்வார் போல இடை நிலத்திலே நிற்க.
[கடிதின் வெகுளும் தன்மையர் என்பது தோன்ற,
'இகல் வேந்தர்' என்றார். மிக அகலின் பயன் கெடாது,
மிக அணுகின் அவமதிபற்றித் தெறும் வேந்தர்க்கு, மிக
அகலின் குளிர் நீங்காது மிக அணுகின் சுடுவதாய
தீயோடு உளதாய தொழில் உவமம் பெறப்பட்டது.] ---
மு.வ உரை:
அரசரைச் சார்ந்து வாழ்கின்றவர், அவரை மிக நீங்காமலும், மிக
அணுகாமலும் நெருப்பில் குளிர் காய்கின்றவர்போல இருக்க
வேண்டும்.
G.U.Pope:
Who warm them at the fire draw not too near, nor keep too much aloof;
Thus let them act who dwell beneath of warlike kings the palace-roof.
Explanation
Ministers who serve under fickle-minded monarchs should, like those who warm themselves at the fire, be neither (too) far, nor (too) near.
மூலம்:
692 . மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கம் தரும்.
பரிமேழலகர் உரை:
மன்னர் விழைப விழையாமை - தம்மால் சேரப்பட்ட
மன்னர் விரும்புவனவற்றைத் தாம் விரும்பாதொழிதல்;
மன்னரான் மன்னிய ஆக்கம் தரும் - அமைச்சர்க்கு
அவரானே நிலைபெற்ற செல்வத்தைக் கொடுக்கும்.
[ஈண்டு 'விழைப' என்றது அவர்க்குச் சிறப்பாக
உரியவற்றை. அவை: நுகரப்படுவன, ஒப்பனை,
மேம்மை என்றிவை முதலாயின. இவற்றை ஒப்பிற்கு
அஞ்சித் தாம் விழையா தொழியவே, அவ்வச்சம்
நோக்கி உவந்து, அவர் தாமே எல்லாச் செல்வமும்
நல்குவர் என்பது கருத்து. எனவே, அவற்றை
விரும்பின் கேடு தரும் என்பதாம்.] ---
மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவைகளைத் தாம் விரும்பாமலிருத்தல்
(அரசரைச் சார்ந்திருப்பவர்க்கு) அரசரால் நிலையான ஆக்கத்தைப்
பெற்றுத் தரும்.
G.U.Pope:
To those who prize not state that kings are wont to prize,
The king himself abundant wealth supplies.
Explanation
For ministers not to cover the things desired by their kings will through the kings themselves yield them everlasting wealth.
மூலம்:
693 . போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது.
பரிமேழலகர் உரை:
போற்றின் அரியவை போற்றல் - அமைச்சர் தம்மைக்
காக்கக் கருதின் அரிய பிழைகள் தங்கண் வாராமல்
காக்க; கடுத்த பின் தேற்றுதல் யார்க்கும் அரிது -
அவற்றை வந்தனவாகக் கேட்டு அவ்வரசர் ஐயுற்றால்
அவரைப் பின் தெளிவித்தல் யாவர்க்கும் அரிது
ஆகலான்.
[அரிய பிழைகளாவன: அவரால் பொறுத்தற்கு அரிய
அறைபோதல், உரிமையொடு மருவல், அரும்பொருள்
வெளவல் என்றிவை முதலாயின. அவற்றைக்
காத்தலாவது, ஒருவன் சொல்லியக்கால் தகுமோ என்று
ஐயுறாது தகாது என்றே அவர் துணிய ஒழுகல்.
ஒருவாற்றான் தெளிவித்தாலும் கடன்கொண்டான்
தோன்றப் பொருள் தோன்றுமாறுபோலக்
கண்டுழியெல்லாம் அவை நினைக்கப்படுதலின்
யார்க்கும் அரிதென்றார். இவை மூன்று பாட்டானும்
அது பொதுவகையால் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
(அரசரைச் சார்ந்தவர்) தம்மைக் காத்துக்கொள்ள விரும்பினால்,
அரிய தவறுகள் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்; ஐயுற்றபின்
அரசரைத் தெளிவித்தல் எவர்க்கும் முடியாது.
G.U.Pope:
Who would walk warily, let him of greater faults beware;
To clear suspicions once aroused is an achievement rare.
Explanation
Ministers who would save themselves should avoid (the commission of) serious errors for if the king's suspicion is once roused, no one can remove it.
மூலம்:
694 . செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்துஒழுகல்
ஆன்ற பெரியா ரகத்து.
பரிமேழலகர் உரை:
ஆன்ற பெரியாரகத்து - அமைந்த அரசர் அருகு
இருந்தால்; செவிச் சொல்லும் சேர்ந்த நகையும்
அவித்து ஒழுகல் - அவர் காண ஒருவன் செவிக்கண்
சொல்லுதலையும் ஒருவன் முகம் நோக்கி நகுதலையும்
தவிர்த்து ஒழுகுக.
[சேர்தல்:பிறனொடு சேர்தல். செய்தொழுகின், தம்
குற்றம் கண்டு செய்தனவாகக் கொள்வர் என்பது
கருத்து.] ---
மு.வ உரை:
வல்லமை அமைந்த பெரியாரிடத்தில், (மற்றொருவன்) செவியை
நெருங்கிச் சொல்லுதலும் உடன் சேர்ந்து நகைத்தலும் செய்யாமல்
ஒழுக வேண்டும்.
G.U.Pope:
All whispered words and interchange of smiles repress,
In presence of the men who kingly power possess.
Explanation
While in the presence of the sovereign, ministers should neither whisper to nor smile at others.
மூலம்:
695 . எப்பொருளும் ஓரார் தொடரார்மற்று அப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை.
பரிமேழலகர் உரை:
மறை - அரசனுக்குப் பிறரோடு மறை நிகழ்வுழி;
எப்பொருளும் ஓரார் - யாதொரு பொருளையும் செவி
கொடுத்துக் கோளாது; தொடரார்- அவனை முடுகி
வினவுவதும் செய்யாது; அப்பொருளை விட்டக்கால்
கேட்க - அம்மறைப் பொருளை அவன்தானே அடக்காது
சொல்லியக்கால் கேட்க.
['ஓர்தற்கு ஏற்கும் பொருளாயினும்' என்பார்,
'எப்பொருளும்' என்றார். 'மற்று' வினை மாற்றின்
கண் வந்தது.] ---
மு.வ உரை:
(அரசர் மறைப்பொருள் பேசும்போது) எப்பொருளையும்
உற்றுக்கேட்காமல், தொடர்ந்து வினவாமல், அப்பொருளை அவரே
விட்டுச் சொன்னபோது கேட்டறிய வேண்டும்.
G.U.Pope:
Seek not, ask not, the secret of the king to hear;
But if he lets the matter forth, give ear!
Explanation
(When the king is engaged) in secret counsel (with others), ministers should neither over-hear anything whatever nor pry into it with inquisitive questions, but (wait to) listen when it is divulged (by the king himself).
மூலம்:
696 . குறிப்புஅறிந்து காலம் கருதி வெறுப்புஇல
வேண்டுப வேட்பச் சொலல்.
பரிமேழலகர் உரை:
குறிப்பு அறிந்து - அரசனுக்குக் காரியஞ் சொல்லுங்கால்
அப்பொழுது நிகழ்கின்ற அவன் குறிப்பினை அறிந்து;
காலம் கருதி - சொல்லுதற்கு ஏற்ற காலத்தையும்
நோக்கி; வெறுப்பு இல வேண்டுப வேட்பச் சொலல் -
வெறுப்பிலவுமாய் வேண்டுவனவுமாய காரியங்களை
அவன் விரும்பும் வகை சொல்லுக.
[குறிப்புக் காரியத்தின் கண் அன்றிக் காம
வெகுளியுள்ளிட்டவற்றின் நிகழ்வுழியும் அதற்கு ஏலாக்
காலத்தும் சொல்லுதல் பயனிற்றாகலின் 'குறிப்பு
அறிந்து காலம் கருதி' என்றும், அவன் உடம்படாதன
முடிவு போகாமையின் 'வெறுப்பில' என்றும்,
பயனிலவும் பயன் சுருங்கியவும் செய்தல்
வேண்டாமையின் 'வேண்டுப' என்றும், அவற்றை
இனியவாய்ச் சுருங்கி விளங்கிய பொருளவாய
சொற்களால் சொல்லுக என்பார் 'வேட்பச் சொலல்'
என்றும் கூறினார்.] ---
மு.வ உரை:
அரசருடைய குறிப்பை அறிந்து, தக்க காலத்தை எதிர் நோக்கி,
வெறுப்பில்லாதவற்றையும் விருப்பமானவற்றையும் அவர்
விரும்புமாறு சொல்ல வேண்டும்.
G.U.Pope:
Knowing the signs, waiting for fitting time, with courteous care,
Things not displeasing, needful things, declare.
Explanation
Knowing the (king's disposition and seeking the right time, (the minister) should in a pleasing manner suggest things such as are desirable and not disagreeable.
மூலம்:
697 . வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்.
பரிமேழலகர் உரை:
வேட்பன சொல்லி - பயன் பெரியனவுமாய் அரசன்
விரும்புவனவுமாய காரியங்களை அவன்
கேட்டிலனாயினும் சொல்லி; எஞ்ஞான்றும் வினை இல
கேட்பினும் சொல்லாவிடல் - எஞ்ஞான்றும்
பயனிலவாயவற்றைத் தானே கேட்டாலும் சொல்லாது
விடுக.
['வினையில' எனவும், 'கேட்பினும்' எனவும் வந்த
சொற்களான், அவற்றின் மறுதலைச் சொற்கள்
வருவிக்கப்பட்டன. வினையான் வருதலின் 'வினை'
என்றும், வறுமைக்காலமும் அடங்க 'எஞ்ஞான்றும்'
என்றும் கூறினார். சொல்லுவனவும் சொல்லாதனவும்
வகுத்துக் கூறியவாறு. இவை நான்கு பாட்டானும்
சிறப்பு வகையால் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
அரசர் விரும்புகின்றவற்றை மட்டும் சொல்லிப் பயனில்லாதவற்றை
அவரே கேட்டபோதிலும் எப்போதும் சொல்லாமல் விட வேண்டும்.
G.U.Pope:
Speak pleasant things, but never utter idle word;
Not though by monarch's ears with pleasure heard.
Explanation
Ministers should (always) give agreeable advice but on no occasion recommend useless actions, though requested (to do so).
மூலம்:
698 . இளையர் இனமுறையர் என்றுஇகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும்.
பரிமேழலகர் உரை:
இளையர் இன முறையர் என்று இகழார் - இவர்
எம்மின் இளையர் என்றும், எமக்கு இன்ன
முறையினையுடையர் என்றும் அரசரை அவமதியாது;
நின்ற ஒளியொடு ஒழுகப்படும். அவர் மாட்டு நின்ற
ஒளியொடு பொருந்த ஒழுகுதல் செய்யப்படும்.
[ஒளி; உறங்காநிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர்
கடவுள்தன்மை. அதனோடு பொருந்த ஒழுகலாவது,
அவர் கடவுளரும் தாம் மக்களுமாய் ஒழுகுதல்.
அவ்வொளியால் போக்கப்பட்ட இளமையும்
முறைமையும் பற்றி இகழ்வராயின், தாமும்
போக்கப்படுவர் என்பது கருத்து.] ---
மு.வ உரை:
(அரசனை) "எமக்கு இளையவர்; எமக்கு இன்ன முறை
உடையவர்" என்று இகழாமல் அவருடைய நிலைக்கு ஏற்றவாறு
அமைந்த புகழுடன் பொருந்த நடக்க வேண்டும்.
G.U.Pope:
Say not, 'He's young, my kinsman,' despising thus your king;
But reverence the glory kingly state doth bring.
Explanation
Ministers should behave in accordance with the (Divine) light in the person of kings and not despise them saying, "He is our junior (in age) and connected with our family!".
மூலம்:
699 . கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்குற்ற காட்சி யவர்.
பரிமேழலகர் உரை:
கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார் -
அரசனால் யாம் நன்கு மதிக்கப்பட்டேம் என்று கருதி
அவன் விரும்பாதவற்றைச் செய்யார்; துளக்கு அற்ற
காட்சியவர் - நிலை பெற்ற அறிவினையுடையார்.
[கொள்ளாதன செய்து அழிவு எய்துவார்
கொளப்பாட்டிற்குப்பின் தம்மை வேறொருவராகக்
கருதுவர் ஆகலின், ன்னையராகவே கருதி
அஞ்சியொழுகுவாரைத் 'துளக்கு அற்ற காட்சியவர்'
என்றார்.] ---
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினை உடையவர், யாம் அரசரால்
விரும்பப்பட்டோம்` என்று எண்ணி அவர் விரும்பாதவற்றைச்
செய்யமாட்டார்.
G.U.Pope:
'We've gained his grace, boots nought what graceless acts we do',
So deem not sages who the changeless vision view.
Explanation
Those whose judgement is firm will not do what is disagreeable (to the sovereign) saying (within themselves) "We are esteemed by the king".
மூலம்:
700 . பழையம் எனக்கருதிப் பண்புஅல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்.
பரிமேழலகர் உரை:
பழையம் எனக்கருதிப் பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை அரசனுக்கு யாம் பழையம் எனக் கருதித்
தமக்கு இயல்பு அல்லாதவற்றைச் செய்யும் உரிமை;
கேடு தரும் - அமைச்சர்க்குக் கேட்டினைப் பயக்கும்.
[அவன் பொறாது செறும் பொழுதின், அப்பழைமை
நோக்கிக் கண்ணோடாது உயிரை வெளவுதலான்,
அவன் வேண்டாதன செய்தற்கு ஏதுவாய கெழுதகைமை
கேடு தரும் என்றார். இவை மூன்று பாட்டானும்,
பொறுப்பர் என்று அரசர் வெறுப்பன செய்யற்க என்பது
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
`யாம் அரசர்க்குப் பழைமையானவராய் உள்ளோம் எனக் கருதித்
தகுதி அல்லாதவற்றைச் செய்யும் உரிமை கேட்டைத் தரும்.
G.U.Pope:
Who think 'We're ancient friends' and do unseemly things;
To these familiarity sure ruin brings.
Explanation
The (foolish) claim with which a minister does unbecoming acts because of his (long) familiarity (with the king) will ensure his ruin.