மூலம்:
61 . பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
பரிமேழலகர் உரை:
பெறுமவற்றுள் - ஒருவன் பெறும் பேறுகளுள்; அறிவு
அறிந்த மக்கட்பேறு அல்ல பிற - அறிய வேண்டுவன
அறிதற்குரிய மக்களைப் பெறுதல் அல்லது பிற
பேறுகளை; யாம் அறிவது இல்லை - யாம் மதிப்பது
இல்லை. ('அறிவது' என்பது அறிதலைச் செய்வது என
அத்தொழில் மேல் நின்றது. காரணம் ஆகிய உரிமை
காரியம் ஆகிய அறிதலைப் பயந்தே விடுமாதலான்,
'அத்துணிவு' பற்றி அறிந்த என இறந்த காலத்தால்
கூறினார். 'அறிவறிந்த' என்ற அதனான், 'மக்கள்'
என்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது. இதனான்
புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பெறத் தகுந்த பேறுகளில், அறியவேண்டியவைகளை அறியும்
நன்மக்களைப் பெறுவதைத் தவிர மற்றப் பேறுகளை யாம்
மதிப்பதில்லை.
G.U.Pope:
Of all that men acquire, we know not any greater gain,
Than that which by the birth of learned children men obtain.
Explanation
Among all the benefits that may be acquired, we know no greater benefit than the acquisition of intelligent children.
மூலம்:
62 . எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.
பரிமேழலகர் உரை:
எழுபிறப்பும் தீயவை தீண்டா - வினைவயத்தால்
பிறக்கும் பிறப்பு ஏழின்கண்ணும் ஒருவனைத்
துன்பங்கள் சென்றடையா; பழி பிறங்காப் பண்பு உடை
மக்கட்பெறின் - பிறரால் பழிக்கப்படாத நற்குணங்களை
உடைய புதல்வரைப் பெறுவான் ஆயின். ('அவன்
தீவினை வளராது தேய்தற்குக் காரணம் ஆகிய
நல்வினைகளைச் செய்யும் புதல்வரைப் பெறுவான்
ஆயின்' என்றவாறு ஆயிற்று. பிறப்பு ஏழாவன: 'ஊர்வ
பதினொன்றாம் ஒன்பது மானிடம் நீர்பறவை நாற்கால்
ஓர் பப்பத்துச் சீரிய, பந்தம்ஆம் தேவர் பதினான்கு
அயன்படைத்த அந்தம் இல்சீர்த் தாவரம் நாலைந்து'
தந்தை தாயர் தீவினை தேய்தற்பொருட்டு அவரை
நோக்கிப் புதல்வர் செய்யும் தான தருமங்கட்கு அவர்
நற்குணம் காரணமாகலின், 'பண்பு' என்னும் காரணப்
பெயர் காரியத்தின்மேல் நின்றது.).
மு.வ உரை:
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப் பெற்றால்
ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள்
சென்று சேரா.
G.U.Pope:
Who children gain, that none reproach, of virtuous worth,
No evils touch them, through the sev'n-fold maze of birth.
Explanation
The evils of the seven births shall not touch those who abtain children of a good disposition, free from vice.
மூலம்:
63 . தம்பொருள் என்பதம் மக்கள்; அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
பரிமேழலகர் உரை:
தம் மக்கள் தம் பொருள் என்ப - தம் புதல்வரைத் தம்
பொருள் என்று சொல்லுவர் அறிந்தோர்; அவர் பொருள்
தம் தம் வினையான் வரும் - அப்புதல்வர் செய்த
பொருள் தம்மை நோக்கி அவர் செய்யும்
நல்வினையானே தம்பால் வரும் ஆதலான். ('தம்தம்
வினை' என்புழித் தொக்கு நின்ற ஆறாம் வேற்றுமை,
'முருகனது குறிஞ்சிநிலம்' என்புழிப் போல உரிமைப்
பொருட்கண் வந்தது. பொருள் செய்த மக்களைப்
'பொருள்' என உபசரித்தார். இவை இரண்டு
பாட்டானும் நன்மக்களைப் பெற்றார் பெறும் மறுமைப்
பயன் கூறப்பட்டது.
மு.வ உரை:
தம் மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர்;
மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின்
பயனால் வந்து சேரும்.
G.U.Pope:
'Man's children are his fortune,' say the wise;
From each one's deeds his varied fortunes rise.
Explanation
Men will call their sons their wealth, because it flows to them through the deeds which they (sons) perform on their behalf.
மூலம்:
64 . அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.
பரிமேழலகர் உரை:
அமிழ்தினும் ஆற்ற இனிதே - சுவையான
அமிழ்தத்தினும் மிக இனிமையுடைத்து; தம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ் - தம் மக்களது சிறுகையான்
அளாவப்பட்ட சோறு. (சிறுகையான் அளாவலாவது,
'இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் - நெய்யுடை
அடிசில் மெய்பட விதிர்த்தல். புறநா.188).
மு.வ உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு,
பெற்றோர்க்கு அமிழ்தத்தைவிட மிக்க இனிமை உடையதாகும்
G.U.Pope:
Than God's ambrosia sweeter far the food before men laid,
In which the little hands of children of their own have play'd.
Explanation
The rice in which the little hand of their children has dabbled will be far sweeter (to the parent) than ambrosia.
மூலம்:
65 . மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொல்கேட்டல் இன்பம் செவிக்கு.
பரிமேழலகர் உரை:
உடற்கு இன்பம் மக்கள்மெய் தீண்டல் - ஒருவன்
மெய்க்கு இன்பமாவது மக்களது மெய்யைத் தீண்டுதல்;
செவிக்கு இன்பம் அவர் சொல் கேட்டல் - செவிக்கு
இன்பமாவது அவரது சொல்லைக் கேட்டல். ('மற்று'
வினைமாற்று. மக்களது மழலைச் சொல்லே அன்றி
அவர் கற்றறிவுடையராய்ச் சொல்லுஞ் சொல்லும்
இன்பமாகலின், பொதுப்படச் 'சொல்' என்றார்.
'தீண்டல்', 'கேட்டல்' என்னும் காரணப்பெயர்கள்
ஈண்டுக் காரியங்கள்மேல் நின்றன.).
மு.வ உரை:
மக்களின் உடம்பைத் தொடுதல் உடம்பிற்கு இன்பம் தருவதாகும்;
அம் மக்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு இன்பம்
தருவதாகும்.
G.U.Pope:
To patent sweet the touch of children dear;
Their voice is sweetest music to his ear.
Explanation
The touch of children gives pleasure to the body, and the hearing of their words, pleasure to the ear.
மூலம்:
66 . குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
பரிமேழலகர் உரை:
குழல் இனிது யாழ் இனிது என்ப - குழலிசை இனிது
யாழிசை இனிது என்று சொல்லுவர்; தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர் - தம் புதல்வருடைய
குதலைச் சொற்களைக் கேளாதவர். ('குழல்', 'யாழ்'
என்பன ஆகுபெயர். கேட்டவர் அவற்றினும்
மழலைச்சொல் இனிது என்பர் என்பது குறிப்பெச்சம்.
இனிமை மிகுதிபற்றி மழலைச்சொல்லைச் சிறப்பு
வகையானும் கூறியவாறு. இவை மூன்று பாட்டானும்
இம்மைப் பயன் கூறப்பட்டது.).
மு.வ உரை:
தம் மக்களின் மழலைச் சொல்லைக் கேட்டு அதன் இனிமையை
நுகராதவரே குழலின் இசை இனியது, யாழின் இசை இனியது
என்று கூறுவர்.
G.U.Pope:
'The pipe is sweet,' 'the lute is sweet,' by them't will be averred,
Who music of their infants' lisping lips have never heard.
Explanation
"The pipe is sweet, the lute is sweet," say those who have not heard the prattle of their own children.
மூலம்:
67 . தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்.
பரிமேழலகர் உரை:
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி - தந்தை புதல்வனுக்குச்
செய்யும் நன்மையாவது;அவையத்து முந்தி இருப்பச்
செயல் - கற்றார் அவையின்கண் அவரினும் மிக்கு
இருக்குமாறு கல்வியுடையன் ஆக்குதல்.
(பொருளுடையான் ஆக்குதல் முதலாயின துன்பம்
பயத்தலின் நன்மை ஆகா என்பது கருத்து. இதனான்
தந்தை கடன் கூறப்பட்டது.).
மு.வ உரை:
தந்தை தன் மகனுக்குச் செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர்
கூட்டத்தில் தன் மகன் முந்தியிருக்கும்படியாக அவனைக் கல்வியில்
மேம்படச் செய்தலாகும்.
G.U.Pope:
Sire greatest boon on son confers, who makes him meet,
In councils of the wise to fill the highest seat.
Explanation
The benefit which a father should confer on his son is to give him precedence in the assembly of the learned.
மூலம்:
68 . தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.
பரிமேழலகர் உரை:
தம் மக்கள் அறிவுடைமை - தம் மக்களது
அறிவுடைமை; மாநிலத்து மன்உயிர்க்கு எல்லாம்
தம்மின் இனிது - பெரிய நிலத்து மன்னா நின்ற
உயிர்கட்கு எல்லாம் தம்மினும் இனிது ஆம். (ஈண்டு
'அறிவு' என்றது இயல்பாகிய அறிவோடு கூடிய
கல்வியறிவினை. 'மன்னுயிர்' என்றது ஈண்டு
அறிவுடையார் மேல் நின்றது. அறிவுடைமை கண்டு
இன்புறுதற்கு உரியார் அவராகலின். இதனான்
தந்தையினும் அவையத்தார் உவப்பர் என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
தம் மக்களின் அறிவுடைமை, தமக்கு இன்பம் பயப்பதைவிட
உலகத்து உயிர்களுக்கெல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
G.U.Pope:
Their children's wisdom greater than their own confessed,
Through the wide world is sweet to every human breast.
Explanation
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves.
மூலம்:
69 . ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.
பரிமேழலகர் உரை:
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் - தான் பெற்ற
பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய் - தன் மகனைக் கல்வி
கேள்விகளால் நிறைந்தான் என்று அறிவுடையோர்
சொல்லக் கேட்ட தாய். (கவானின் கண்கண்ட பொது
உவகையினும் சால்புடையான் எனக்கேட்ட சிறப்பு
உவகை பெரிதாகலின், 'பெரிது உவக்கும்' எனவும்,
'பெண்ணியல்பால் தானாக அறியாமையின் கேட்ட
தாய்' எனவும் கூறினார். அறிவுடையார் என்பது
வருவிக்கப்பட்டது. சான்றோன் என்றற்கு உரியர் அவர்
ஆகலின். தாய் உவகைக்கு அளவு இன்மையின் அஃது
இதனான் பிரித்துக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப் பிறர் சொல்லக்
கேள்வியுற்ற தாய், தான் அவனைப் பெற்ற காலத்து உற்ற
மகிழ்ச்சியைவிடப் பெரிதும் மகிழ்வாள்.
G.U.Pope:
When mother hears him named 'fulfill'd of wisdom's lore,'
Far greater joy she feels, than when her son she bore.
Explanation
The mother who hears her son called "a wise man" will rejoice more than she did at his birth.
மூலம்:
70 . மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.
பரிமேழலகர் உரை:
தந்தைக்கு மகன் ஆற்றும் உதவி -
கல்வியுடையனாக்கிய தந்தைக்கு மகன் செய்யும்
கைம்மாறாவது; இவன் தந்தை என்நோற்றான் கொல்
எனும் சொல் - தன்னறிவும் ஒழுக்கமுங் கண்டார்
இவன் தந்தை இவனைப் பெறுதற்கு என்ன தவஞ்
செய்தான் கொல்லோ வென்று சொல்லுஞ் சொல்லை
நிகழ்த்துதல். ('சொல்' லென்பது நிகழ்த்துதலாகிய தன்
காரணந்தோன்ற நின்றது.நிகழ்த்துதல் - அங்ஙனஞ்
சொல்ல வொழுகல்.இதனாற் புதல்வன் கடன்
கூறப்பட்டது).
மு.வ உரை:
மகன் தன் தந்தைக்குச் செய்யத்தக்க கைம்மாறு, `இவன் தந்தை
இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ’ என்று பிறர்
புகழ்ந்து சொல்லும் சொல்லாகும்.
G.U.Pope:
To sire, what best requital can by grateful child be done?
To make men say, 'What merit gained the father such a son?'
Explanation
(So to act) that it may be said "by what great penance did his father beget him," is the benefit which a son should render to his father.