திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அமைச்சியல்

              அதிகாரம்: 66                   வினைத்தூய்மை
651. துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.

மு.வ உரை:
ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்; செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும் கொடுக்கும்.

652. என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.

மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

653. ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.

மு.வ உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.

654. இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.

மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில் சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான செயல்களைச் செய்யமாட்டார்.

655. எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று.

மு.வ உரை:
பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச் செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும் அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.

656. ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.

மு.வ உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன் செய்யக்கூடாது.

657. பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.

மு.வ உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

658. கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.

மு.வ உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

659. அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.

மு.வ உரை:
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன் வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.

660. சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.

மு.வ உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல், பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற் போன்றது.

------


Back to Top