மூலம்:
651 . துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாம் தரும்.
பரிமேழலகர் உரை:
துணை நலம் ஆக்கம் தரூஉம்- ஒருவனுக்குத் துணையது நன்மை
செல்வம் ஒன்றனையும் கொடுக்கும்; வினை நலம் வேண்டிய
எல்லாம் தரும் - அவ்வளவன்றி வினையது நன்மை அவன்
வேண்டியன யாவற்றையும் கொடுக்கும்.
['வேண்டிய எல்லாம்' என்றது இம்மைக்கண் அறம், பொருள்,
இன்பம் முதலியவற்றையும், மறுமைக்கண் தான் விரும்பிய
பதங்களையும். இதனான் காணப்படும் துணை நன்மையினும்,
கருதப்படும் வினை நன்மை சிறந்தது என வினைத்தூய்மையது
சிறப்புக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
ஒருவனுக்கு வாய்ந்த துணையின் நன்மை ஆக்கத்தைக் கொடுக்கும்;
செய்யும் வினையின் நன்மை அவன் விரும்பிய எல்லாவற்றையும்
கொடுக்கும்.
G.U.Pope:
The good external help confers is worldly gain;
By action good men every needed gift obtain.
Explanation
The efficacy of support will yield (only) wealth; (but) the efficacy of action will yield all that is desired.
மூலம்:
652 . என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.
பரிமேழலகர் உரை:
புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக் கண்
புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும்
ஒருவுதல் வேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல்
வேண்டும்.
[பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு
காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது
ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.] ---
மு.வ உரை:
புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை
எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.
G.U.Pope:
From action evermore thyself restrain
Of glory and of good that yields no gain.
Explanation
Ministers should at all times avoid acts which, in addition to fame, yield no benefit (for the future).
மூலம்:
653 . ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்.
பரிமேழலகர் உரை:
ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி
மாழ்கும் வினை செய் ஓதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக்
காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.
['ஓதல் வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல்
என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும்
நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர்
மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத்தொகை
யாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம்
அன்று என்பதாம்.] ---
மு.வ உரை:
மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர்
தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல்
விடவேண்டும்.
G.U.Pope:
Who tell themselves that nobler things shall yet be won
All deeds that dim the light of glory must they shun.
Explanation
Those who say, "we will become (better)" should avoid the performance of acts that would destroy (their fame).
மூலம்:
654 . இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்.
பரிமேழலகர் உரை:
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார் - தாம் இடுக்கணிலே
படவரினும், அது தீர்தற்பொருட்டு முன் செய்தார்க்கு இளி வந்த
வினைகளைச் செய்யார்; நடுக்கு அற்ற காட்சியவர் - துளக்கம்
அற்ற தெளிவினை உடையார்.
[சிறிது போழ்தில் கழிவதாய இடுக்கண் நோக்கி, எஞ்ஞான்றும்
கழியாத இளிவு எய்தற்பாலது அன்று என்பதூஉம், அஃது
எய்தினாலும் வருவது வரும் என்பதூஉம் தெளிவர் ஆகலான்,
'செய்யார்' என்றார்.] ---
மு.வ உரை:
அசைவற்ற தெளிந்த அறிவினையுடையவர், துன்பத்தில்
சிக்குண்டாலும் (அத் துன்பத்தைத் தீர்ப்பதற்காகவும்) இழிவான
செயல்களைச் செய்யமாட்டார்.
G.U.Pope:
Though troubles press, no shameful deed they do,
Whose eyes the ever-during vision view.
Explanation
Those who have infallible judgement though threatened with peril will not do acts which have brought disgrace (on former ministers).
மூலம்:
655 . எற்றுஎன்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றுஅன்ன செய்யாமை நன்று.
பரிமேழலகர் உரை:
எற்று என்று இரங்குவ செய்யற்க - 'யான் செய்தது எத்தன்மைத்து'
என்று பின் தானே இரங்கும் வினைகளை ஒருகாலும்
செய்யாதொழிக; செய்வானேல் மற்று அன்ன செய்யாமை நன்று -
அன்றி ஒருகால் மயங்கி அவற்றைச் செய்யும் தன்மையனாயினான்
ஆயின், பின் இருந்து அவ்விரங்கல்களைச் செய்யாதொழிதல்
நன்று.
['இரங்குவ' என முன் வந்தமையின், பின் 'அன்ன'வெனச் சுட்டி
ஒழிந்தார். அவ்வினைகளது பன்மையான் இரக்கமும் பலவாயின.
அச்செயற்குப் பின்னிருந்து இரங்குவனாயின், அது தீரும் வாயில்
அறிந்திலன் எனவும், திட்பமிலன் எனவும், பயனல்லன
செய்கின்றான் எனவும், தன்பழியைத் தானே தூற்றுகின்றான்
எனவும் எல்லாரும் இகழ்தலின், 'பின் இரங்காமை நன்று' என்றார்.
இதுவும், வினைத்தூயார் செயலாகலின், உடன் கூறப்பட்டது. 'பின்
தொடர்தற்குச் செய்வானாயின், அவை போல்வனவும் செய்யாமை
நன்று' எனப் பிறரெல்லாம் இயைபு அற உரைத்தார்.] ---
மு.வ உரை:
பிறகு நினைந்து வருந்துவதற்குக் காரணமான செயல்களைச்
செய்யக்கூடாது. ஒருகால் தவறிச் செய்தாலும், மீண்டும்
அத்தன்மையானவற்றைச் செய்யாதிருத்தல் நல்லது.
G.U.Pope:
Do nought that soul repent ing must deplore,
If thou hast sinned, 'tis well if thou dost sin no more.
Explanation
Let a minister never do acts of which he would have to grieve saying, "what is this I have done"; (but) should he do (them), it were good that he grieved not.
மூலம்:
656 . ஈன்றான் பசிகாண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை.
பரிமேழலகர் உரை:
ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் - தன்னைப் பயந்தாளது பசியை
வறுமையால் கண்டு இரங்கும் தன்மையினான் எனினும்; சான்றோர்
பழிக்கும் வினை செய்யற்க - அது சுட்டி அறிவுடையார் பழிக்கும்
வினைகளை ஒருவன் செய்யாதொழிக.
['இறந்த மூப்பினராய இருமுதுகுரவரும் கற்புடை மனைவியும்
குழவியும் பசியான் வருந்தும் எல்லைக்கண் தீயன பலவுஞ்
செய்தாயினும் புறந்தருக' என்னும் அறநூற்பொது விதி,
பொருள்நூல் வழி ஒழுகுதலும், அரசர் தொழிற்கு உரியராதலும்,
நன்கு மதிக்கற்பாடும் உடைய அமைச்சர்க்கு எய்தாமைபற்றி,
இவ்வாறு கூறினார். இவை ஐந்து பாட்டானும், 'பாவமும் பழியும்
பயக்கும் வினை செய்யற்க' என்பது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர்
பழிப்பதற்குக் காரணமான இழிவுற்ற செயல்களை ஒருவன்
செய்யக்கூடாது.
G.U.Pope:
Though her that bore thee hung'ring thou behold, no deed
Do thou, that men of perfect soul have crime decreed.
Explanation
Though a minister may see his mother starve; let him do not act which the wise would (treat with contempt).
மூலம்:
657 . பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை.
பரிமேழலகர் உரை:
பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச்
செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின் ;
சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர்
அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.
[நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை
மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர்
கழிநல்குரவே தலை' என்றார்.] ---
மு.வ உரை:
பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும்
செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும்
பொல்லாத வறுமையே சிறந்தது.
G.U.Pope:
Than store of wealth guilt-laden souls obtain,
The sorest poverty of perfect soul is richer gain.
Explanation
Far more excellent is the extreme poverty of the wise than wealth obtained by heaping up of sinful deeds.
மூலம்:
658 . கடிந்த கடிந்துஓரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்.
பரிமேழலகர் உரை:
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத்
தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு;
அவைதான் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின்
முடியா; ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே
கொடுக்கும்.
[முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய
பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள் மேல்
ஏற்பட்டது.] ---
மு.வ உரை:
ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல்
மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும்
துன்பமே கொடுக்கும்.
G.U.Pope:
To those who hate reproof and do forbidden thing.
What prospers now, in after days shall anguish bring.
Explanation
The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow.
மூலம்:
659 . அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை.
பரிமேழலகர் உரை:
அழக்கொண்ட எல்லாம் அழப்போம் - ஒருவன், தீயவினைகளைச்
செய்து பிறர் இரங்கக் கொண்ட பொருளெல்லாம் இம்மையிலே
அவன் தான் இரங்கப் போகாநிற்கும்; நற்பாலவை இழப்பினும்
பிற்பயக்கும் - மற்றைத்தூய வினையான் வந்த பொருள்கள் முன்
இழந்தானாயினும் அவனுக்குப் பின்னர் வந்து பயன் கொடுக்கும்.
['பின்' எனவே, மறுமையும் அடங்கிற்று. பொருள்களான்
அவற்றிற்குக் காரணமாய வினைகளது இயல்பு கூறியவாறு.] ---
மு.வ உரை:
பிறர் வருந்துமாறு செய்து பெற்ற பொருள் எல்லாம் பெற்றவன்
வருந்துமாறு செய்து போய்விடும்; நல்வழியில் வந்தவை
இழக்கப்பட்டாலும் பிறகு பயன் தரும்.
G.U.Pope:
What's gained through tears with tears shall go;
From loss good deeds entail harvests of blessings grow.
Explanation
All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit.
மூலம்:
660 . சலத்தால் பொருள்செய்துஏம் ஆர்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்துஇரீஇ யற்று.
பரிமேழலகர் உரை:
சலத்தால் பொருள் செய்து ஏமார்த்தல் - அமைச்சன் தீய
வினைகளாற் பொருள் படைத்து, அதனால் அரசனுக்கு
ஏமஞ்செய்தல்; பசுமட்கலத்துள் நீர் பெய்து இரீஇயற்று-பசிய
மட்கலத்துள்ளே நீரைப் பெய்து அதற்கு ஏமஞ்செய்ததனோடு
ஒக்கும்.
[முன் ஆக்கம் பயப்பன்போல் தோன்றப் பின் அழிவே பயத்தலால்,
அவை 'சலம்' எனப்பட்டன. 'ஏமமார்த்தல்' என்பது 'ஏமார்த்தல்'
என்றாயிற்று. ஏமத்தை அடையப் பண்ணுதல் என்றவாறு.
இருத்துதல் - நெடுங்காலம் இருப்பச் செய்தல். அரசனும் பொருளும்
சேரப்போம் என்பதாம். பிறரெல்லாம், 'ஏமாத்தல்' என்று
பாடமோதி, அதற்கு மகிழ்தல் என்றும், 'இரீஇயற்று' என்பதற்கு
வைத்தாற்போலும் என்றும் உரைத்தார்; அவர் அவை தன்வினையும்
பிறிதின் வினையுமாய் உவமையிலக்கணத்தோடு மாறுகோடல்
நோக்கிற்றிலர். இவை நான்கு பாட்டானும் அதற்குக் காரணம்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
வஞ்சனையான வழியால் பொருளைச் சேர்த்துக் காப்பாற்றுதல்,
பச்சை மண்கலத்துள் நீரைவிட்டு அதைக் காப்பாற்றி வைத்தாற்
போன்றது.
G.U.Pope:
In pot of clay unburnt he water pours and would retain,
Who seeks by wrong the realm in wealth and safety to maintain.
Explanation
(For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water.