மூலம்:
641 . நாநலம் என்னும் நலன்உடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று.
பரிமேழலகர் உரை:
நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக்
குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச்
சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து
உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம்
எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
['நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத்
தம் வய்த்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும்
நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும்,
பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம்
யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல்
பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது
இன்றியமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ
என்பது கருத்து.] ---
மு.வ உரை:
நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம்
தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும்
அடங்குவது அன்று.
G.U.Pope:
A tongue that rightly speaks the right is greatest gain,
It stands alone midst goodly things that men obtain.
Explanation
The possession of that goodness which is called the goodness of speech is (even to others) better than any other goodness.
மூலம்:
642 . ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்துஓம்பல் சொல்லின்கண் சோர்வு.
பரிமேழலகர் உரை:
ஆக்கமும் கேடும் அதனால் வருதலால் - தம் அரசர்க்கும்
அங்கங்கட்கும் ஆக்க அழிவுகள் தம் சொல்லான் வரும் ஆகலான்;
சொல்லின் கண் சோர்வு காத்து ஓம்பல் - அப்பெற்றித்தாய
சொல்லின்கண் சோர்தலை அமைச்சர் தம்கண் நிகழாமல் போற்றிக்
காக்க.
[ஆக்கத்திற்கு ஏதுவாய நற்சொல்லையும் கேட்டிற்கு ஏதுவாய
தீச்சொல்லையும், சொல்லாதல் ஒப்புமைபற்றி 'அதனால்' என்றார்.
செய்யுள் ஆகலின்' சுட்டுப் பெயர் முன்வந்தது. பிறர் சோர்வு
போலாது உயிர்கட்கு எல்லாம் ஒருங்கு வருதலால், 'காத்து
ஓம்பல்' என்றார். இவை இரண்டு பாட்டானும் இஃது இவர்க்கு
இன்றியமையாதது என்பது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
ஆக்கமும் கேடும் சொல்கின்ற சொல்லால் வருதலால் ஒருவன்
தன்னுடைய சொல்லில் தவறு நேராமல் காத்துக் கொள்ள
வேண்டும்.
G.U.Pope:
Since gain and loss in life on speech depend,
From careless slip in speech thyself defend.
Explanation
Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.
மூலம்:
643 . கேட்டார்ப் பிணிக்குந் தகைஅவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.
பரிமேழலகர் உரை:
கேட்டார்ப் பிணிக்கும் தகை அவாய் - நட்பாய் ஏற்றுக்
கொண்டாரைப் பின் வேறுபடாமல் பிணிக்கும் குணங்களை அவாவி;
கேளாரும் வேட்ப மொழிவது - மற்றைப் பகையாய் ஏற்றுக்
கொள்ளாதாரும் பின் அப்பகைமை ஒழிந்து நட்பினை விரும்பும்
வண்ணம் சொல்லப்படுவதே, சொல்லாம் - அமைச்சர்க்குச்
சொல்லாவது.
[அக்குணங்களாவன: வழுவின்மை, சுருங்குதல், விளங்குதல்,
இனிதாதல், விழுப்பயன் தருதல் என்றிவை முதலாயின. அவற்றை
அவாவுதலாவது: சொல்லுவான் குறித்தனவேயன்றி வேறு
நுண்ணுணர்வுடையோர் கொள்பவற்றின்மேலும் நோக்குடைத்தாதல்.
'அவாய்' என்னும் செய்தென்எச்சம் 'மொழிவது' என்னும்
செயப்பாட்டு வினை கொண்டது. இனி 'கேட்டார்' 'கேளார்'
என்பதற்கு 'நூல் கேட்டார் கேளாதார்' எனவும், 'வின வியார்
வினவாதார்' எனவும் உரைப்பாரும் உளர்.' 'தகையவாய்'
என்பதற்கு, எல்லாரும், 'தகுதியையுடையவாய்' என்று உரைத்தார்;
அவர் அப்பன்மை, மொழிவது என்னும் ஒருமையோடு இயையாமை
நோக்கிற்றிலர். இதனால் சொல்லினது இலக்கணம் கூறப்பட்டது.] -
--
மு.வ உரை:
சொல்லும்போது கேட்டவரைத் தன் வயப்படுத்தும் பண்புகளுடன்,
கேட்காதவரும் கேட்க விரும்புமாறு கூறப்படுவது
சொல்வன்மையாகும்.
G.U.Pope:
'Tis speech that spell-bound holds the listening ear,
While those who have not heard desire to hear.
Explanation
The (minister's) speech is that which seeks (to express) elements as bind his friends (to himself) and is so delivered as to make even his enemies desire (his friendship).
மூலம்:
644 . திறன்அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின்ஊங்கு இல்.
பரிமேழலகர் உரை:
சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக - அப்பெற்றித்தாய
சொல்லை, அமைச்சர் தம்முடையவும், கேட்பாருடையவுமாய
திறங்களை அறிந்து சொல்லுக; அதனின் ஊங்கு அறனும்
பொருளும் இல் - அங்ஙனம் சொல்லுதற்கு மேற்பட்ட அறனும்
பொருளும் இல்லையாகலான்.
[அறத்திறங்களாவன: குடிப்பிறப்பு, கல்வி, ஒழுக்கம், செல்வம்,
உருவம், பருவம் என்பவற்றான் வரும் தகுதி வேறுபாடுகள்.
அவற்றை அறிந்து சொல்லுதலாவது, அவற்றால் தமக்கும்
அவர்க்கும் உளவாய ஏற்றத்தாழ்வுகளை அறிந்து அவ்வம் மரபாற்
சொல்லுதல். அஃது உலகத்தோடு ஒட்ட ஒழுகலையும்
இனிமையையும் பயத்தலின் அறனாயிற்று. தம் காரியம்
முடித்தலின் பொருளாயிற்று. அறனும் பொருளும் எனக்
காரணத்தைக் காரியமாக்கிக் கூறினார்.] ---
மு.வ உரை:
சொல்லின் திறத்தை அறிந்து சொல்லை வழங்க வேண்டும்;
அத்தகைய சொல்வன்மையைவிடச் சிறந்த அறமும் பொருளும்
இல்லை.
G.U.Pope:
Speak words adapted well to various hearers' state;
No higher virtue lives, no gain more surely great.
Explanation
Understand the qualities (of your hearers) and (then) make your speech; for superior to it, there is neither virtue nor wealth.
மூலம்:
645 . சொல்லுக சொல்லைப் பிறிதுஓர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.
பரிமேழலகர் உரை:
சொல்லைப் பிறிது ஓர்சொல் வெல்லும் சொல் இன்மை அறிந்து -
தாம் சொல்லக் கருதிய சொல்லைப் பிறிதோர் சொல்லால் வெல்ல
வல்லதொரு சொல் இல்லாமை அறிந்து; அச்சொல்லைச் சொல்லுக
- பின் அச்சொல்லைச் சொல்லுக.
[பிறிதோர் சொல் - மாற்றாரது மறுதலைச் சொல். வெல்லுதல் -
குணங்களான் மிகுதல்; அதுவே வெல்லச் சொல்லுக என்பதாம்.
இனிப் 'பிறிதோர் சொல், வெல்லும் சொல்' எனச்
செவ்வெண்ணாக்கி, ஒத்த சொல்லும் மிக்க சொல்லும் உளவாகாமல்
சொல்லுக என்று உரைப்பாரும் உளர். இது சொற்பொருட் பின்வரும்
நிலை.] ---
மு.வ உரை:
வேறொரு சொல் அந்தச் சொல்லை வெல்லும் சொல்லாக
இல்லாதிருத்தலை அறிந்த பிறகே சொல்லக் கருதியதைச்
சொல்லவேண்டும்.
G.U.Pope:
Speak out your speech, when once 'tis past dispute
That none can utter speech that shall your speech refute.
Explanation
Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.
மூலம்:
646 . வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசுஅற்றார் கோள்.
பரிமேழலகர் உரை:
வேட்பத்தாம் சொல்லிப் பிறர் சொற் பயன் கோடல் - பிறர்க்குத்
தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு
சொல்லி; அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக்
கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் -
அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
[பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார்
என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின்,
இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச்
சொல்லுமாறு கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது
அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற
சிறப்புடையவரின் கொள்கையாகும்.
G.U.Pope:
Charming each hearer's ear, of others' words to seize the sense,
Is method wise of men of spotless excellence.
Explanation
It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.
மூலம்:
647 . சொலல்வல்லன் சோர்வுஇலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது.
பரிமேழலகர் உரை:
சொலன் வல்லன் - தான் எண்ணிய காரியங்களைப் பிறர்க்கு ஏற்பச்
சொல்லுதல் வல்லனாய்; சோர்வு இலன் - அவை மிகப்
பலவாயவழி ஒன்றினும் சோர்விலனாய்; அஞ்சான் - அவைக்கு
அஞ்சானாயினான் யாவன்; அவனை இகல் வெல்லல் யார்க்கும்
அரிது - அவனை மாறுபாட்டின் கண் வெல்லுதல் யாவர்க்கும்
அரிது.
[ஏற்பச் சொல்லுதல் - அவர்க்கு அவை காரியமல்லவாயினும்,
ஆம் எனத் துணியும் வகை சொல்லுதல். சோர்வு சொல்ல
வேண்டுவதனை மறப்பான் ஒழிதல். இம்மூன்று குணமும்
உடையானை மாற்றாராய்ப் பிரித்தல் பொருத்தல் செய்து
வெல்வாரில்லை என்பதாம்.] ---
மு.வ உரை:
தான் கருதியவற்றை நன்கு சொல்ல வல்லவனாய், சொல்லும்
போது சோர்வு இல்லாதவனாய், அஞ்சாதவனாய் உள்ளவனை
மாறுபாட்டால் வெல்வது யார்க்கும் முடியாது.
G.U.Pope:
Mighty in word, of unforgetful mind, of fearless speech,
'Tis hard for hostile power such man to overreach.
Explanation
It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.
மூலம்:
648 . விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்துஇனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்.
பரிமேழலகர் உரை:
தொழில் நிரந்து இனிது செல்லுதல் வல்லார்ப்பெறின் -
சொல்லப்படும் காரியங்களை நிரல்படக் கோத்து இனிதாகச்
சொல்லுதல் வல்லாரைப் பெறின்; ஞாலம் விரைந்து கேட்கும் -
உலகம் அவற்றை விரைந்து ஏற்றுக் கொள்ளும்.
['தொழில்' சாதியொருமை. நிரல்படக் கோத்தல் - முன்
சொல்வனவும் பின் சொல்வனவும் அறிந்து அம்முறையே வைத்தல்.
இனி தாதல் - கேட்டார்க்கு இன்பம் பயத்தல். ''சொல்லுதல்
வல்லான் நூறாயிரவருள் ஒருவன்,'' என்ற வடமொழி பற்றி,
'பெறின்' என்றார். ஈண்டும் 'கேட்டல்' ஏற்றுக் கோடல். இவை
இரண்டு பாட்டானும் அவ்வாற்றால் சொல்லுதல் வல்லாரது சிறப்புக்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
கருத்துக்களை ஒழுங்காகக் கோத்து இனிமையாகச் சொல்ல
வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து அவருடைய ஏவலைக்
கேட்டு நடக்கும்.
G.U.Pope:
Swiftly the listening world will gather round,
When men of mighty speech the weighty theme propound.
Explanation
If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them.
மூலம்:
649 . பலசொல்லக் காமுறுவர் மன்றமாசு அற்ற
சிலசொல்லல் தேற்றா தவர்.
பரிமேழலகர் உரை:
மாசு அற்ற சில சொல்லல் தேற்றாதவர் - குற்றமற்றன வாய்ச்
சிலவாய வார்த்தைகளை அவ்வாற்றால் சொல்லுதலை அறியாதார்;
பல சொல்லக் காமுறுவர் - பலவாய வார்த்தைகளைத் தொடுத்துச்
சொல்ல விரும்புவர்.
[குற்றம் மேல் சொல்லிய குணங்கட்கு மறுதலையாயின.
இடைவிடாது பல சொல்லுதலையும் சொல்வன்மை என்று
விரும்புவாரும் உளர். இவர் இவ்வாறு சொல்ல மாட்டாதாரே
வல்லார் அது செய்யாரென யாப்புறுப்பார், 'மன்ற' என்றார்.] ---
மு.வ உரை:
குற்றமற்றவையாகிய சில சொற்களைச் சொல்லத் தெரியாதவர்,
உண்மையாகவே பல சொற்களைச் சொல்லிக் கொண்டிருக்க
விரும்புவர்.
G.U.Pope:
Who have not skill ten faultless words to utter plain,
Their tongues will itch with thousand words man's ears to pain.
Explanation
They will desire to utter many words, who do not know how to speak a few faultless ones.
மூலம்:
650 . இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துஉரையா தார்.
பரிமேழலகர் உரை:
கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப்
பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும்
நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும்
நாறாத பூவையொப்பர்.
[செவ்விபெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாதபூச்
சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும்
சொல்லமாட்டாதார் நன்கு மதிக்கப்பட்டார் என்றமையின், இது
தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது
மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க
முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத
மலரைப் போன்றவர்.
G.U.Pope:
Like scentless flower in blooming garland bound
Are men who can't their lore acquired to other's ears expound.
Explanation
Those who are unable to set forth their acquirements (before others) are like flowers blossoming in a cluster and yet without fragrance.