திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அரசியல்

              அதிகாரம்: 61                   மடியின்மை
601. குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.

மு.வ உரை:
ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.

602. மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.

மு.வ உரை:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.

603. மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.

மு.வ உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும் அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.

604. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.

மு.வ உரை:
சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.

605. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.

மு.வ உரை:
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும் மரக்கலமாம்.

606. படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.

மு.வ உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும், சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.

607. இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.

மு.வ உரை:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய் வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக் கேட்கும் நிலைமை அடைவர்.

608. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.

மு.வ உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால், அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு செய்துவிடும்.

609. குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்.

மு.வ உரை:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால் அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து விடும்.

610. மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.

மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.

------


Back to Top