மூலம்:
601 . குடிஎன்னும் குன்றா விளக்கம் மடிஎன்னும்
மாசுஊர மாய்ந்து கெடும்.
பரிமேழலகர் உரை:
குடி என்னும் குன்றா -தான் பிறந்த குடியாகிய நந்தா விளக்கு
மடி என்னும் மாசு ஊர மாய்ந்து கெடும்-ஒருவன் மடியாகிய
இருள் அடர நந்திப் போம்.
(உலக நடை உள்ள துணையும் இடையறாது தன்னுள்
பிறந்தாரை விளக்குதலின், குடியைக் 'குன்றா ' என்றும், தாமத
குணத்தான் வருதலின் 'மடியை' மாசு என்றும், அஃது
ஏனையிருள் போலாது அவ்விளக்கத்தைத் தான் அடர்ந்து
மாய்க்கும் வலி உடைமையின் 'மாசு ஊர மாய்ந்து கெடும்'
என்றும் கூறினார். கெடுதல் - பெயர் வழக்கமும் இல்லை
யாதல்.) ---
மு.வ உரை:
ஒருவனுக்குத் தன் குடியாகிய மங்காத விளக்கு, அவனுடைய
சோம்பலாகிய மாசு படியப் படிய ஒளி மங்கிக் கெட்டுவிடும்.
G.U.Pope:
Of household dignity the lustre beaming bright,
Flickers and dies when sluggish foulness dims its light.
Explanation
By the darkness, of idleness, the indestructible lamp of family (rank) will be extinguished.
மூலம்:
602 . மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்.
பரிமேழலகர் உரை:
குடியைக் குடியாக வேண்டுபவர் - தாம் பிறந்த குடியை
மேல்மேல் உயரும் நற்குடியாக வேண்டுவார்; மடியை மடியா
ஒழுகல் - மடியை மடியாகவே கருதி முயற்சியோடு ஒழுகுக.
('முயற்சியோடு' என்பது அவாய் நிலையான் வந்தது.
நெருப்பிற் கொடியது பிறிதின்மை பற்றி, நெருப்பை
நெருப்பாகவே கருதுக' என்றார் போல, மடியின் தீயது
பிறிதின்மை பற்றிப் பின்னும் அப்பெயர் தன்னானே கூறினார்.
'அங்ஙனம் கருதி அதனைக் கடிந்து முயன்று ஒழுகவே தாம்
உயர்வர்; உயரவே குடி உயரும், 'என்பார், குடியைக் குடியாக
வேண்டுபவர்' என்றார். அங்ஙனம் ஒழுகாக்கால் குடி அழியும்
என்பது கருத்து. இனி மடியா என்பதனை வினையெச்சமாக்கிக்
கெடுத்தொழுகுக என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
தம் குடியைச் சிறப்புடைய குடியாக விளங்குமாறு செய்ய
விரும்புகின்றவர் சோம்பலைச் சோம்பலாகக் கொண்டு
முயற்சியுடையவராய் நடக்கவேண்டும்.
G.U.Pope:
Let indolence, the death of effort, die,
If you'd uphold your household's dignity.
Explanation
Let those, who desire that their family may be illustrious, put away all idleness from their conduct.
மூலம்:
603 . மடிமடிக் கொண்டுஒழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து.
பரிமேழலகர் உரை:
மடி மடிக்கொண்டு ஒழுகும் பேதை பிறந்த குடி - விடத்
தகுவதாய மடியைத் தன்னுள்ளே கொண்டு ஒழுகும்
அறிவில்லாதான் பிறந்த குடி; தன்னினும் முந்து மடியும் -
அவன் தன்னினும் முந்துற அழியும்.
(அழிவு தருவதனை அகத்தே கொண்டு ஒழுகுதலின், 'பேதை'
என்றும், அவனால் புறம் தரப்படுவதாகலின் 'குடி தன்னினும்
முந்துற அழியும்' என்றும் கூறினார். ஆக்கத்திற் பிற்படினும்
அழிவில் முற்படும் என்பதாம்.) ---
மு.வ உரை:
அழிக்கும் இயல்புடைய சோம்பலைத் தன்னிடம் கொண்டு நடக்கும்
அறிவில்லாதவன் பிறந்த குடி, அவனுக்கு முன் அழிந்துவிடும்.
G.U.Pope:
Who fosters indolence within his breast, the silly elf!
The house from which he springs shall perish ere himself.
Explanation
The (lustre of the) family of the ignorant man, who acts under the influence of destructive laziness will perish, even before he is dead.
மூலம்:
604 . குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு.
பரிமேழலகர் உரை:
மடி மடிந்து மாண்ட உஞற்று இலவர்க்கு - மடியின் கண்ணே
வீழ்தலான் திருந்திய முயற்சி இலராயினார்க்கு; குடி மடிந்து
குற்றம் பெருகும் - குடியும் மடிந்து குற்றமும் பல்கும்.
('மடிந்து' எனத் திரிந்து நின்ற வினையெச்சம் 'இலவர்'
என்னுங் குறிப்பு வினைப்பெயர் கொண்டது. குற்றங்கள்
முன்னர்க் கூறுப. இவை நான்கு பாட்டானும் மடியின் தீமை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சோம்பலில் அகப்பட்டுச் சிறந்த முயற்சி இல்லாதவராய்
வாழ்கின்றவர்க்குக் குடியின் பெருமை அழிந்து குற்றம் பெருகும்.
G.U.Pope:
His family decays, and faults unheeded thrive,
Who, sunk in sloth, for noble objects doth not strive.
Explanation
Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions.
மூலம்:
605 . நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன்.
பரிமேழலகர் உரை:
மடி நெடுநீர் மறவி துயில் நான்கும் - மடியும், விரைந்து
செய்வதனை நீடித்துச் செய்யும் இயல்பும், மறப்பும், துயிலும்
ஆகிய இந்நான்கும்; கெடும் நீரார் காமக் கலன் - இறக்கும்
இயல்பினையுடையார் விரும்பி ஏறும் மரக்கலம்.
(முன் நிற்கற்பாலதாய மடி, செய்யுள் நோக்கி இடை நின்றது.
நெடுமையாகிய காலப் பண்பு, அதன்கண் நிகழ்வதாய
செயல்மேல் நின்றது. கால நீட்டத்தையுடைய செயல்
முதல்மூன்றும் தாமதகுணத்தில் தோன்றி உடன்நிகழ்வன
ஆகலின், மடியோடு ஒருங்கு எண்ணப்பட்டன. இறக்கும் இயல்பு
- நாள் உலத்தல், இவை துன்புறும் நீரார்க்கு இன்புறுத்துவ
போன்று காட்டி, அவர் விரும்பிக் கொண்ட வழித் துன்பத்திடை
வீழ்த்தலின், 'நாள் உலர்ந்தார்க்கு ஆக்கம் பயப்பது போன்று
காட்டி, அவர் விரும்பியேறிய வழிக் கடலிடை வீழ்க்கும்
கலத்தினை ஒக்கும்,' என்னும் உவமைக்குறிப்பு 'காமக்கலன்'
என்னும் சொல்லால் பெறப்பட்டது. இதற்கு விரும்பிப் பூணும்
ஆபரணம் என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
காலம் நீட்டித்தல், மறதி, சோம்பல், அளவு மீறிய தூக்கம் ஆகிய
இந் நான்கும் கெடுகின்ற இயல்புடையவர் விரும்பி ஏறும்
மரக்கலமாம்.
G.U.Pope:
Delay, oblivion, sloth, and sleep: these four
Are pleasure-boat to bear the doomed to ruin's shore.
Explanation
Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction.
மூலம்:
606 . படியுடையார் பற்றுஅமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது.
பரிமேழலகர் உரை:
படி உடையார் பற்று அமைந்தக் கண்ணும் - நிலம் முழுவதும்
ஆண்டாரது செல்வம் தானே வந்து எய்திய இடத்தும்; மடி
உடையார் மாண் பயன் எய்தல் அரிது - மடியுடையார் அதனான்
மாண்ட பயனை எய்துதல் இல்லை.
('உம்மை' எய்தாமை விளக்கி நின்றது. மாண்பயன் -
பேரின்பம். அச்செல்வம், அழியாமல் காக்கும் முயற்சி
இன்மையின் அழியும்; அழியவே, தம் துன்பம் நீங்காது
என்பதாம். இதற்கு 'நிலம் முழுதும் உடைய வேந்தர்
துணையாதல் கூடிய இடத்தும்' என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
நாட்டை ஆளும் தலைவருடைய உறவு தானே வந்து சேர்ந்தாலும்,
சோம்பல் உடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.
G.U.Pope:
Though lords of earth unearned possessions gain,
The slothful ones no yield of good obtain.
Explanation
It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.
மூலம்:
607 . இடிபுரிந்து எள்ளும்சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர்.
பரிமேழலகர் உரை:
மடிந்து புரிந்து மாண்ட உஞற்று இலவர் - மடியை
விரும்புதலான் மாண்ட முயற்சி இல்லாதார்; இடி புரிந்து
எள்ளும் சொல் கேட்பர் - தம் நட்டார்முன் கழறுதலை மிகச்
செய்து அதனால் பயன் காணாமையின், பின் இகழ்ந்து
சொல்லும் சொல்லைக் கேட்பர்.
('இடி என்னும் முதல்நிலைத் தொழிற் பெயரான், 'நட்டார்'
என்பது பெற்றாம். அவர் இகழ்ச்சி சொல்லவே, பிறர் இகழ்ச்சி
சொல்லாமையே முடிந்தது. அவற்றிற்கெல்லாம் மாறு
சொல்லும் ஆற்றல் இன்மையின், 'கேட்பர்' என்றார்.) ---
மு.வ உரை:
சோம்பலை விரும்பி மேற்கொண்டு சிறந்த முயற்சி இல்லாதவராய்
வாழ்கின்றவர், பிறர் இடித்துக் கூறி இகழ்கின்ற சொல்லைக்
கேட்கும் நிலைமை அடைவர்.
G.U.Pope:
Who hug their sloth, nor noble works attempt,
Shall bear reproofs and words of just contempt.
Explanation
Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches.
மூலம்:
608 . மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும்.
பரிமேழலகர் உரை:
மடி குடிமைக்கண் தங்கின் - மடியினது தன்மை
குடிமையுடையான்கண்ணே தங்குமாயின்; தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும் - அஃது அவனைத் தன் பகைவர்க்கு
அடியனாம் தன்மையை அடைவித்துவிடும்;
(மடியினது தன்மை - காரியக் கேடு. குடிமை - குடி செய்தல்
தன்மை, அஃது அதனை உடைய அரசன் மேற்றதல், 'தன்
ஒன்னார்க்கு' என்றதனான் அறிக. அடியனாம் தன்மை -
தாழ்ந்து நின்று ஏவல் கேட்டல்.) ---
மு.வ உரை:
சோம்பல் நல்ல குடியில் பிறந்தவனிடம் வந்து பொருந்தினால்,
அஃது அவனை அவனுடைய பகைவர்க்கு அடிமையாகுமாறு
செய்துவிடும்.
G.U.Pope:
If sloth a dwelling find mid noble family,
Bondsmen to them that hate them shall they be.
Explanation
If idleness take up its abode in a king of high birth, it will make him a slave of his enemies.
மூலம்:
609 . குடிஆண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடிஆண்மை மாற்றக் கெடும்.
பரிமேழலகர் உரை:
ஒருவன் மடி ஆண்மை மாற்ற - ஒருவன் தன்
மடியாளுந்தன்மையை ஒழிக்கவே; குடி ஆண்மையுள் வந்த
குற்றம் கெடும் - அவன் குடியுள்ளும் ஆண்மையுள்ளும் வந்த
குற்றங்கள் கெடும்.
(மடியாளுந்தன்மை - மடியுடைமைக்கு ஏது வாய தாமத
குணம். 'குடியாண்மை' என்பது உம்மைத் தொகை. 'அவற்றின்
கண் வந்த குற்றம்' என்றது மடியான் அன்றி முன்னே பிற
காரணங்களான் நிகழ்ந்தவற்றை. அவையும் மடியாண்மையை
மாற்றி, முயற்சி உடையனாக நீங்கும் என்பதாம்.) ---
மு.வ உரை:
ஒருவன் சோம்பலை ஆளுந் தன்மையை மாற்றி விட்டால்
அவனுடைய குடியிலும் ஆண்மையிலும் வந்த குற்றம் தீர்ந்து
விடும்.
G.U.Pope:
Who changes slothful habits saves
Himself from all that household rule depraves.
Explanation
When a man puts away idleness, the reproach which has come upon himself and his family will disappear.
மூலம்:
610 . மடிஇலா மன்னவன் எய்தும் அடிஅளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு.
பரிமேழலகர் உரை:
அடி அளந்தான் தா அயது எல்லாம் - தன் அடியளவானே எல்லா
உலகையும் அளந்த இறைவன் கடந்த பரப்பு முழுதையும்; மடி
இலா மன்னவன் ஒருங்கு எய்தும் - மடியிலாத அரசன்
முறையானன்றி ஒருங்கே எய்தும்.
('அடியளந்தான்' என்றது வாளா பெயராய் நின்றது. 'தாவியது'
என்பது இடைக் குறைந்து நின்றது. எப்பொழுதும் வினையின்
கண்ணே முயறலின், இடையீடின்றி எய்தும் என்பதாம். இவை
இரண்டு பாட்டானும் மடியிலாதான் எய்தும் பயன் கூறப்பட்டது.)
---
மு.வ உரை:
அடியால் உலகத்தை அளந்த கடவுள் தாவிய பரப்பு
எல்லாவற்றையும் சோம்பல் இல்லாத அரசன் ஒருசேர அடைவான்.
G.U.Pope:
The king whose life from sluggishness is ri d,
Shall rule o'er all by foot of mighty god bestrid.
Explanation
The king who never gives way to idleness will obtain entire possession of (the whole earth) passed over by him who measured (the worlds) with His foot.