மூலம்:
51 . மனைத்தக்க மாண்புஉடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.
பரிமேழலகர் உரை:
மனைத் தக்க மாண்பு உடையளாகித் தன் கொண்டான்
வளத்தக்காள் - மனையறத்திற்குத் தக்க நற்குண
நற்செய்கைகளை உடையவளாய்த் தன்னைக்
கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை
உடையாள்; வாழ்க்கைத் துணை- அதற்குத்துணை.
(நற்குணங்களாவன : துறந்தார்ப் பேணலும், விருந்து
அயர்தலும், வறியார்மாட்டு அருளுடைமையும்
முதலாயின. நற்செய்கைகளாவன: வாழ்க்கைக்கு
வேண்டும் பொருள்கள் அறிந்து கடைப்பிடித்தலும்,
அட்டில் தொழில் வன்மையும், ஒப்புரவு செய்தலும்
முதலாயின. வருவாய்க்குத் தக்க வாழ்க்கையாவது:
முதலை அறிந்து அதற்கு இயைய அழித்தல். இதனால்
இவ்விரண்டு நன்மையும் சிறந்தன என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்
கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை
நடத்துகின்றவளே வாழ்க்கைத் துணை ஆவாள்.
G.U.Pope:
As doth the house beseem, she shows her wifely dignity;
As doth her husband's wealth befit, she spends: help - meet is she.
Explanation
She who has the excellence of home virtues, and can expend within the means of her husband, is a help in the domestic state.
மூலம்:
52 . மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல்.
பரிமேழலகர் உரை:
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் -
மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள்
ஒருவன் இல்லாளிடத்து இல்லையாயின்; வாழ்க்கை
எனைமாட்சித்து ஆயினும் இல் - அவ்வில்வாழ்க்கை
செல்வத்தான் எத்துணை மாட்சிமையுடைத்தாயினும்
அஃது உடைத்தன்று. ('இல்' என்றார்
பயன்படாமையின்.).
மு.வ உரை:
இல்வாழ்க்கைக்குத் தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால்.
ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும்
பயன் இல்லை.
G.U.Pope:
If household excellence be wanting in the wife,
Howe'er with splendour lived, all worthless is the life.
Explanation
If the wife be devoid of domestic excellence, whatever (other) greatness be possessed, the conjugal state, is nothing.
மூலம்:
53 . இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
பரிமேழலகர் உரை:
இல்லவள் மாண்பு ஆனால் இல்லது என் - ஒருவனுக்கு
இல்லாள் நற்குண நற்செய்கையள் ஆயினக்கால்
இல்லாதது யாது? இல்லவள் மாணாக்கடை உள்ளது
என் - அவள் அன்னள் அல்லாக்கால் உள்ளது யாது?
('மாண்பு' எனக்குணத்தின் பெயர் குணிமேல் நின்றது.
இவை இரண்டு பாட்டானும் இல்வாழ்க்கைக்கு
வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது
என்ன? அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது
என்ன?
G.U.Pope:
There is no lack within the house, where wife in worth excels,
There is no luck within the house, where wife dishonoured dwells.
Explanation
If his wife be eminent (in virtue), what does (that man) not possess ? If she be without excellence, what does (he) possess ?
மூலம்:
54 . பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்?
பரிமேழலகர் உரை:
பெண்ணின் பெருந்தக்க யாஉள-ஒருவன் எய்தும்
பொருள்களுள் இல்லாளின் மேம்பட்ட பொருள்கள்
யாவை உள; கற்பு என்னும் திண்மை உண்டாகப்
பெறின் - அவள் மாட்டுக்கற்பு என்னும் கலங்கா
நிலைமை உண்டாகப் பெறின். (கற்புடையாள் போல
அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற
இன்மையின் 'யாஉள' என்றார். இதனால் கற்பு
நலத்தது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால்,
பெண்ணைவிடப் பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன?
G.U.Pope:
If woman might of chastity retain,
What choicer treasure doth the world contain?
Explanation
What is more excellent than a wife, if she possess the stability of chastity ?
மூலம்:
55 . தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்எனப் பெய்யும் மழை.
பரிமேழலகர் உரை:
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய்என - பிற தெய்வம் தொழாது தன் தெய்வம்
ஆகிய கொழுநனைத் தொழாநின்று துயிலெழுவாள்
'பெய்' என்று சொல்ல; மழை பெய்யும்-மழை
பெய்யும். (தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது
துயிலெழும் காலத்தாகலின், 'தொழுது எழுவாள்'
என்றார். 'தொழாநின்று' என்பது, 'தொழுது' எனத்
திரிந்து நின்றது. தெய்வம்ந்தான் ஏவல் செய்யும்
என்பதாகும். இதனால் கற்புடையவளது ஆற்றல்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக்
கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை
பெய்யும்!
G.U.Pope:
No God adoring, low she bends before her lord;
Then rising, serves: the rain falls instant at her word!
Explanation
If she, who does not worship God, but who rising worships her husband, say, "let it rain," it will rain.
மூலம்:
56 . தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொல்காத்துச் சோர்விலாள் பெண்.
பரிமேழலகர் உரை:
தன் காத்துத் தன் கொண்டான் பேணி - கற்பினின்றும்
வழுவாமல்தன்னைக் காத்துத் தன்னைக்
கொண்டவனையும் உண்டி முதலியவற்றால் பேணி;
தகைசான்ற சொல் காத்து - இருவர் மாட்டும் நன்மை
அமைந்த புகழ் நீங்காமல் காத்து; சோர்வு இலாள் பெண்
- மேற்சொல்லிய நற்குண நற்செய்கைகளினும்
கடைப்பிடி உடையவளே பெண் ஆவாள். (தன் மாட்டுப்
புகழாவது, வாழும் ஊர் கற்பால் தன்னைப் புகழ்வது.
சோர்வு-மறவி. இதனால் கற்புடையாளது சிறப்புக்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும்
காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல்
வாழ்கின்றவளே பெண்.
G.U.Pope:
Who guards herself, for husband's comfort cares, her household's fame,
In perfect wise with sleepless soul preserves, -give her a woman's name.
Explanation
She is a wife who unweariedly guards herself, takes care of her husband, and preserves an unsullied fame.
மூலம்:
57 . சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர்
நிறைகாக்குங் காப்பே தலை.
பரிமேழலகர் உரை:
மகளிர் சிறைகாக்கும் காப்பு எவன் செய்யும் -
மகளிரைத் தலைவர் சிறையால் காக்கும் காவல் என்ன
பயனைச் செய்யும்? நிறை காக்கும் காப்பே தலை -
அவர் தமது நிறையால் காக்கும் காவலே தலையாய
காவல். (சிறை : மதிலும், வாயில்காவலும்
முதலாயின. நிறை: நெஞ்சைக் கற்பு நெறியில்
நிறுத்தல். காவல் இரண்டினும் நிறைக் காவல் இல்வழி
ஏனைச் சிறைக்காவலால் பயன் இல்லை என்பார்,
'நிறைகாக்கும் காப்பே தலை' என்றார். ஏகாரம்
பிரிநிலைக் கண் வந்தது. இதனால் தற்காத்தற் சிறப்புக்
கூறப்பட்டது.
மு.வ உரை:
மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்புமுறை என்ன பயனை
உண்டாக்கும்? அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தாம்
காக்கும் காப்பே சிறந்தது.
G.U.Pope:
Of what avail is wat ch and ward?
Honour's woman's safest guard.
Explanation
What avails the guard of a prison ? The chief guard of a woman is her chastity.
மூலம்:
58 . பெற்றால் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
பரிமேழலகர் உரை:
பெண்டிர் பெற்றான் பெறின் - பெண்டிர் தம்மை எய்திய
கணவனை வழிபடுதல் பெறுவராயின்; புத்தேளிர்
வாழும் உலகு பெருஞ்சிறப்புப் பெறுவர் - புத்தேளிர்
வாழும் உலகின் கண் அவரால் பெருஞ்சிறப்பினைப்
பெறுவர். (வழிபடுதல் என்பது சொல்லெச்சம். இதனால்
தற்கொண்டாற் பேணிய மகளிர் புத்தேளிரால்
பேணப்படுவர் என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப் பெற்றால் மகளிர்
பெரிய சிறப்பை உடைய மேலுலக வாழ்வைப் பெறுவர்.
G.U.Pope:
If wife be wholly true to him who gained her as his bride,
Great glory gains she in the world where gods bliss abide.
Explanation
If women shew reverence to their husbands, they will obtain great excellence in the world where the gods flourish.
மூலம்:
59 . புகழ்புரிந்த இல்இலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
பரிமேழலகர் உரை:
புகழ் புரிந்த இல் இலோர்க்கு - புகழை விரும்பிய
இல்லாளை இல்லாதார்க்கு; இகழ்வார் முன் ஏறு போல்
பீடுநடை இல்லை - தம்மை இகழ்ந்துரைக்கும்
பகைவர்முன் சிங்க ஏறு போல நடக்கும் பெருமித நடை
இல்லை. ('புரிந்த' என்னும் பெயரெச்சத்து அகரம்
விகாரத்தால் தொக்கது. பெருமிதம் உடையானுக்குச்
சிங்க ஏறு நடையான் உவமம் ஆகலின், 'ஏறுபோல்'
என்றார். இதனால் தகைசான்ற சொல் காவா
வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து
பேசும் பகைவர்முன் காளைபோல் நடக்கும் பெருமித நடை
இல்லை.
G.U.Pope:
Who have not spouses that in virtue's praise delight,
They lion-like can never walk in scorner's sight.
Explanation
The man whose wife seeks not the praise (of chastity) cannot walk with lion-like stately step, before those who revile them.
மூலம்:
60 . மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.
பரிமேழலகர் உரை:
மங்கலம் என்ப மனை மாட்சி - ஒருவர்க்கு நன்மை
என்று சொல்லுவர் அறிந்தோர், மனையாளது நற்குண
நற்செய்கைகளை; அதன் நன்கலன் (என்ப)
நன்மக்கட்பேறு - அவை தமக்கு நல்ல அணிகலம்
என்று சொல்லுவர் நல்ல புதல்வரைப் பெறுதலை.
('அறிந்தோர்' என்பது எஞ்சி நின்றது. 'மற்று' அசை
நிலை. இதனான் வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர்
அணிகலம் கூறி, வருகின்ற அதிகாரத்திற்குத்
தோற்றுவாய் செய்யப்பட்டது.).
மு.வ உரை:
மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று
கூறுவர்; நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம்
என்றும் கூறுவர்.
G.U.Pope:
The house's 'blessing', men pronounce the house-wife excellent;
The gain of blessed children is its goodly ornament.
Explanation
The excellence of a wife is the good of her husband; and good children are the jewels of that goodness.