மூலம்:
581 . ஒற்றும் உரைசான்ற நூலும் இவைஇரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
பரிமேழலகர் உரை:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவை இரண்டும்-ஒற்றும்
புகழமைந்த நீதிநூலுமாகிய இவை இரண்டனையும்;
மன்னவன்கண் தெற்றென்க-அரசன் தன் இரண்டு
கண்ணுமாகத் தெளிக.
(ஒற்றுத் தன் கண் செல்லமாட்டாத பரப்பெலாம்
சென்று கண்டு ஆண்டு நிகழ்ந்தன எல்லாம்
உணர்த்தலானும், நூல் அந்நிகழ்ந்தவற்றிற்குத்
தன்னுணர்வு செல்ல மாட்டாத வினைகளையெல்லாம்
சொல்லி உணர்த்தலானும், இவ்விரண்டனையுமே
தனக்கு ஊனக் கண்ணும் ஞானக்கண்ணுமாகத் துணிந்து
கொண்டு ஒழுகுக என்பதாம். ஒற்றனை 'ஒற்று'
என்றார், வேந்தனை 'வேந்து' என்றார்போல.
'தெற்றென்க' என்பது 'தெற்று' என்பது
முதனிலையாகவந்த வியங்கோள். அது 'தெற்றென'
என்னும் செயவென் எச்சத்தான் அறிக. இதனான்
ஒற்றினது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒற்றரும் புகழ் அமைந்த நீதிநூலும் ஆகிய இவ்விருவகைக்
கருவிகளையும் அரசன் தன்னுடைய கண்களாகத் தெளிய
வேண்டும்.
G.U.Pope:
These two: the code renowned and spies,
In these let king confide as eyes.
Explanation
Let a king consider as his eyes these two things, a spy and a book (of laws) universally esteemed.
மூலம்:
582 . எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்.
பரிமேழலகர் உரை:
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும்
வல்அறிதல்- எல்லார்கண்ணும் நிகழ்வன
எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான்
விரைந்தறிதல்; வேந்தன் தொழில்-அரசனுக்கு உரிய
தொழில்.
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும்.
நான்காது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன
எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய
சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த
பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச்
செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும்,
இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆகலின்,
அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும்
கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது.
இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
எல்லாரிடத்திலும்நிகழ்கின்றவை எல்லாவற்றையும்
எக்காலத்திலும்(ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல்
அரசனுக்குரிய தொழிலாகும்.
G.U.Pope:
Each day, of every subject every deed,
'Tis duty of the king to learn with speed.
Explanation
It is the duty of a king to know quickly (by a spy) what all happens, daily, amongst all men.
மூலம்:
583 . ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்.
பரிமேழலகர் உரை:
ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்-
ஒற்றினானே எல்லார் கண்ணும் நிகழ்ந்தவற்றை
ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத
அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல்-
வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு
எளியனாதல் பிறிதின் தீராமையின், 'கொற்றம் கொளக்
கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு
வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும்.
இதனான், அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை
ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.
G.U.Pope:
By spies who spies, not weighing things they bring,
Nothing can victory give to that unwary king.
Explanation
There is no way for a king to obtain conquests, who knows not the advantage of discoveries made by a spy.
மூலம்:
584 . வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று.
பரிமேழலகர் உரை:
தம்வினை செய்வார், சுற்றம் வேண்டாதார் என்ற
அனைவரையும் ஆராய்வது-தம் காரியம் செய்வார்,
சுற்றத்தார், பகைவர் என்று சொல்லப்பட்ட
அனைவரையும் சொல் செயல்களான் ஆராய்வானே.
ஒற்று-ஒற்றனாவான்.
('தம்' என்றது, அரசனோடு உளப்படுத்தி அவனுக்குக்
காரியம் செய்வார் செய்வனவும், சுற்றத்தார்
தன்னிடத்து நாட்டிடத்தும் செய்வனவும், பகைவர் தன்
அற்றம் ஆராய்தலும் மேல் தேறப்படுதலும்
முன்னிட்டுத் தன்னிடத்துச் செய்வனவும் அறிந்து,
அவற்றிற்கு ஏற்றன செய்ய வேண்டுதலின்,
இம்மூவகையாரையும் எஞ்சாமல் ஆராய வேண்டும்
என்பார், 'அனைவரையும் ஆராய்வது ஒற்று' என்றார்.)
---
மு.வ உரை:
தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம்
பகைவர் என்று கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின்
தொழிலாகும்.
G.U.Pope:
His officers, his friends, his enemies,
All these who watch are trusty spies.
Explanation
He is a spy who watches all men, to wit, those who are in the king's employment, his relatives, and his enemies.
மூலம்:
585 . கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று.
பரிமேழலகர் உரை:
கடாஅ உருவொடு-ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத
வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது-அவர் ஐயுற்று
அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு
அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று
நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக்
கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து
எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர்
முதலாயினார் வடிவு.) ---
மு.வ உரை:
ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு
அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல்,
இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.
G.U.Pope:
Of unsuspected mien and all-unfearing eyes,
Who let no secret out, are trusty spies.
Explanation
A spy is one who is able to assume an appearance which may create no suspicion (in the minds of others), who fears no man's face, and who never reveals (his purpose).
மூலம்:
586 . துறந்தார் படிவத்தர் ஆகி இறந்துஆராய்ந்து
என்செயினும் சோர்வுஇலது ஒற்று.
பரிமேழலகர் உரை:
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து-முற்றும்
துறந்தாராயும் விரதஒழுக்கினராயும் உள்யுகுதற்கு அரிய
இடங்களெல்லாம் உள்புக்கு ஆராயவேண்டுவன
ஆராய்ந்தறிந்து; என் செயினும் சோர்வு இலது ஒற்று -
ஆண்டையார் ஐயுற்றுப் பிடித்து எல்லாத்துன்பமும்
செய்து கேட்டாலும் தன்னை வெளிப்படுத்தாதவனே
ஒற்றனாவான்.
(விரத ஒழுக்கம்-தீர்த்த யாத்திரை முதலாயின.
செயினும் என்பது அறவோர் என்று செய்வாரின்மை
விளக்கி நின்றது. மேல் நால்கை உபாயத்தினும்
சோர்வின்மை சொல்லி வைத்தும், ஈண்டும்
தண்டத்தைப் பிரித்துக் கூறியது, அதனது பொறுத்தற்கு
அருமைச் சிறப்பு நோக்கி. இதனுள் 'படிவம்'
என்றதனை வேடமாக்கி, 'துறந்தார் வேடத்தாராகி'
என்று உரைப்பாரும் உளர்.) ---
மு.வ உரை:
துறந்தவரின் வடிவத்தை உடையவராய், அரிய இடங்களிலெல்லாம்
சென்று ஆராய்ந்து, (ஐயுற்றவர்) என்ன செய்தாலும்
சோர்ந்துவிடாதவரே ஒற்றர் ஆவார்.
G.U.Pope:
As monk or devotee, through every hindrance making way,
A spy, whate'er men do, must watchful mind display.
Explanation
He is a spy who, assuming the appearance of an ascetic, goes into (whatever place he wishes), examines into (all, that is needful), and never discovers himself, whatever may be done to him.
மூலம்:
587 . மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று.
பரிமேழலகர் உரை:
மறைந்தவை கேட்க வற்று ஆகி-ஒற்றப்பட்டார்
மறையச் செய்த செயல்களை உள்ளாயினாரால் கேட்க
வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று-
கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது
துணியவல்லவனே ஒற்றனாவான்.
(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர்
அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை,
அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே
விளைத்து, அத் தொடர்பால் கேட்குங்காலும்
உறாதார்போன்று நின்று கேட்க வேண்டுதலின், 'கேட்க
வற்று ஆகி' என்றும், கேட்டறிந்தவற்றைத் தானே
ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற
வினை செய்யலாகாமையின்,'ஐயப்பாடு இல்லதே'
என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும்
ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த
செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன்
ஆவான்.
G.U.Pope:
A spy must search each hidden matter out,
And full report must render, free from doubt.
Explanation
A spy is one who is able to discover what is hidden and who retains no doubt concerning what he has known.
மூலம்:
588 . ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
பரிமேழலகர் உரை:
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஓரொற்றன்
ஒற்றிவந்து அறிவித்த காரியத்தன்னையும்; மற்றும் ஓர்
ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும்
ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும்
கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது
என்பதாம்.) ---
மு.வ உரை:
ஓர் ஒற்றன் மறைந்து கேட்டுத் தெரிவித்த செய்தியையும் மற்றோர்
ஒற்றனால் கேட்டுவரச் செய்து ஒப்புமை கண்டபின் உண்மை என்று
கொள்ள வேண்டும்.
G.U.Pope:
Spying by spies, the things they tell
To test by other spies is well.
Explanation
Let not a king receive the information which a spy has discovered and made known to him, until he has examined it by another spy.
மூலம்:
589 . ஒற்றுஒற்று உணராமை ஆள்க உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும்.
பரிமேழலகர் உரை:
ஒற்று ஒற்று உணராமை ஆள்க - ஒற்றரையாளும்
இடத்து ஒருவனையொருவன் அறியாமல் ஆள்க; உடன்
மூவர் சொல் தொக்க தேறப்படும் - அங்ஙனம் ஆண்ட
ஒற்றர் மூவரை ஒரு பொருள்மேல் வேறுவேறு
விட்டால் அம்மூவர் சொல்லும் பயனால்
ஒத்தனவாயின், அது மெய் என்று தெளியப்படும்.
('ஆயின்' என்பது வருவிக்கப்பட்டது.
ஒருவனையொருவன் அறியின் தம்முள் இயைந்து
ஒப்பக் கூறுவர் ஆகலின், 'உணராமை ஆள்க' என்றும்,
மூவர்க்கும் நெஞ்சு ஒற்றுமைப்படுதலும், பட்டால் நீடு
நிற்றலும் கூடாமையின் 'தேறப்படும்' என்றும்
கூறினார். இதனானே அஃது ஒத்திலவாயின் பின்னும்
ஆராய்க என்பதூஉம் பெற்றாம்.) ---
மு.வ உரை:
ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்;
அவ்வாறு ஆளப்பட்ட ஒற்றர் மூவரின் சொல் ஒத்திருந்தால் அவை
உண்மை எனத் தெளியப்படும்.
G.U.Pope:
One spy must not another see: contrive it so;
And things by three confirmed as truth you know.
Explanation
Let a king employ spies so that one may have no knowledge of the other; and when the information of three agrees together, let him receive it.
மூலம்:
590 . சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க: செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை.
பரிமேழலகர் உரை:
ஒற்றின்கண் சிறப்பு அறியச் செய்யற்க-மறைந்தவை
அறிந்து கூறிய ஒற்றின்கண் செய்யும் சிறப்பினை
அரசன் பிறர் அறியச் செய்யாதொழிக; செய்யின் மறை
புறப்படுத்தான் ஆகும்-செய்தானாயின் தன்னகத்து
அடக்கப்படும் மறையைத் தானே புறத்திட்டான் ஆம்.
(மறையாவது அவன் ஒற்றனாய தூஉம் அவன்
கூறியதூஉம் ஆம். சிறப்புப் பெற்ற இவன் யாவன்
என்றும், இது பெறுதற்குக் காரணம் யாது என்றும்
வினவுவாரும் இறுப்பாரும் அயலாராகலின்,
'புறப்படுத்தானாகும்' என்றார். இவை மூன்று
பாட்டானும் ஒற்றரை ஆளுமாறும், அவரான் நிகழ்ந்தன
அறியுமாறும், அறிந்தால் சிறப்புச் செய்யுமாறும்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
ஒற்றனிடத்தில் செய்யும் சிறப்பைப் பிறர் அறியுமாறு
செய்யக்கூடாது; செய்தால் மறைப்பொருளைத் தானே
வெளிப்படுத்தியவன் ஆவான்.
G.U.Pope:
Reward not trusty spy in others' sight,
Or all the mystery will come to light.
Explanation
Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret.