மூலம்:
571 . கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு.
பரிமேழலகர் உரை:
கண்ணோட்டம் என்னும் கழி பெருங் காரிகை
உண்மையான்- கண்ணோட்டம் என்று
சொல்லப்படுகின்ற சிறப்பு உடைய அழகு அரசர்மாட்டு
உண்டு ஆகலான்; இவ்வுலகு உண்டு-இவ்வுலகம்
உண்டாகாநின்றது.
('கழிபெருங்காரிகை' என்புழி ஒரு பொருட்
பன்மொழி. இவ் உயிரழகது சிறப்புணர நின்றது.
இவ்வழகு அதற்கு உறுப்பு ஆகலின், 'உண்மையான்'
என நிலைபேறும் கூறினார். இன்மை வெகு வந்த
செய்தல் ஆகலின், அவர் நாட்டு வாழ்வார் புலியை
அடைந்த புல்வாயினம் போன்று ஏமஞ் சாராமை பற்றி,
'இவ்வுலகுண்டு' என்றார்.) ---
மு.வ உரை:
கண்ணோட்டம் என்று சொல்லப்படுகின்ற மிகச் சிறந்த அழகு
இருக்கும் காரணத்தால்தான், இந்த உலகம் அழியாமல்
இருக்கின்றது.
G.U.Pope:
Since true benignity, that grace exceeding great, resides
In kingly souls, world in happy state abides.
Explanation
The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour.
மூலம்:
572 . கண்ணோட்டத்து உள்ளது உலகியல்; அஃதிலார்
உன்மை நிலக்குப் பொறை.
பரிமேழலகர் உரை:
உலகியல் கண்ணோட்டத்து உள்ளது-உலகநடை
கண்ணோட்டத்தின் கண்ணே நிகழ்வது; அஃது இலார்
உண்மை நிலக்குப் பொறை-ஆகலான்,
அக்கண்ணோட்டம் இல்லாதார் உளராதல்
இந்நிலத்திற்குப் பாராமாதற்கே, பிறிதொன்றற்கு அன்று.
(உலகநடையாவது: ஒப்புரவு செய்தல், புறந்தருதல்,
பிழைத்தன பொறுத்தல் என்ற இவை முதலாயின.
அவை நிகழாமையால் தமக்கும் பிறர்க்கும் பயன்படார்
என்பதுபற்றி, 'நிலக்குப்பொறை' என்றார். 'அதற்கு'
என்பது சொல்லெச்சம். இவை இரண்டு பாட்டானும்
கண்ணோட்டத்தது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கண்ணோட்டத்தினால் உலகியல் நடைபெறுகின்றது; கண்ணோட்டம்
இல்லாதவர் உயிரோடு இருந்தால் நிலத்திற்குச் சுமையே தவிர,
வேறு பயனில்லை.
G.U.Pope:
The world goes on its wonted way, since grace benign is there;
All other men are burthen for the earth to bear.
Explanation
The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth.
மூலம்:
573 . பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல்: கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?
பரிமேழலகர் உரை:
பண் என்னால் பாடற்கு இயைபு இன்றேல்-பண் என்ன
பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்!
கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்-அது
போலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத
இடத்து.
('பண்' 'கண்' என்பன சாதிப்பெயர். பண்களாவன:
பாலைவாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல்
தொழில்களாவன: மாழின்கண் வார்தல் முதலிய
எட்டும்; பண்ணல் முதலிய எட்டும்; மிடற்றின்கண்
எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம்
என்னும் ஐந்தும்; பெருவண்ணம், இடைவண்ணம்,
வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள்
எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப்
பண்ணால் பயன் இல்லாதவாறு போலக்
கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால்
பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல்
பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்'
என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்" (திரிகடுகம் 1)
என்புழிப்போலக் கொள்க.) ---
மு.வ உரை:
பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன
பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால்
கண் என்ன பயனுடையதாகும்?
G.U.Pope:
Where not accordant with the song, what use of sounding chords?
What gain of eye that no benignant light affords?
Explanation
Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness.
மூலம்:
574 . உளபோல் முகத்துஎவன் செய்யும் அளவினால்
கண்ணேட்டம் இல்லாத கண்?
பரிமேழலகர் உரை:
முகத்து உளபோல் எவன் செய்யும்-கண்டார்க்கு,
முகத்தின்கண் உளபோலத் தோன்றல் அல்லது வேறு
என்ன பயனைச் செய்யும்; அளவினால் கண்ணோட்டம்
இல்லாத கண்-அளவிறவாத கண்ணோடுதலை உடைய
அல்லாத கண்கள்.
('தோன்றல்', 'அல்லது' என்னும் சொற்கள் அவாய்
நிலையான் வந்தன. கழிகண்ணோட்டத்தின் நீக்குதற்கு
'அளவினான்' என்றார். 'ஒரு பயனையும் செய்யா'
என்பது குறிப்பெச்சம்.) ---
மு.வ உரை:
தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில்
உள்ளவைபோல் தோன்றுதல் அல்லாமல் வேறு என்ன பயன்
செய்யும்?
G.U.Pope:
The seeming eye of face gives no expressive light,
When not with duly meted kindness bright.
Explanation
Beyond appearing to be in the face, what good do they do, those eyes in which is no well-regulated kindness ?
மூலம்:
575 . கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல்
புண்ணென்று உணரப் படும்.
பரிமேழலகர் உரை:
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம்-ஒருவன்
கண்ணிற்கு அணியும் கலமாவது கண்ணோட்டம்; அஃது
இன்றேல் புண் என்று உணரப்படும் - அக் கலம்
இல்லையாயின் அஃது அறிவு உடையாரால் புண் என்று
அறியப்படும்.
(வேறு அணிகலம் இன்மையின் 'கண்ணிற்கு
அணிகலம்' என்றும், கண்ணாய்த் தோன்றினும்
நோய்களானும் புலன் பற்றலானும் துயர் விளைத்தல்
நோக்கி, 'புண் என்று உணரப்படும்' என்றும் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் ஓடாது நின்ற கண்ணின்
குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுடைய கண்ணுக்கு அணிகலமாவது கண்ணோட்டம் என்னும்
பண்பே; அஃது இல்லையானால் புண் என்று உணரப்படும்.
G.U.Pope:
Benignity is eyes' adorning grace;
Without it eyes are wounds disfiguring face.
Explanation
Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores.
மூலம்:
576 . மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ணோடா தவர்.
பரிமேழலகர் உரை:
கண்ணொடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு
உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்;
மண்ணொடு இயைந்த மரத்து அனையர் -
இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி
நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல்
நின்றது, மரமும் கண்ணோடு இயைந்து
கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச்
சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று
உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும்
கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார்
உள்ளீட்டால் கூறினமையானும், "மரக்கண்ணோ
மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய்"
(புறத்திரட்டு 1555 முத்தொள்.) என்பதனானும் அறிக. -
--
மு.வ உரை:
கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும்
கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப்
போன்றவர்.
G.U.Pope:
Whose eyes 'neath brow infixed diffuse no ray
Of grace; like tree in earth infixed are they.
Explanation
They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).
மூலம்:
577 . கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர், கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்.
பரிமேழலகர் உரை:
கண்ணோட்டம் இல்லவர் கண் இலர்-கண்ணோட்டம்
இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்-கண்ணுடையவர்
கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும்
என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்'
எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான்
விளக்கினார். 'உம்மை' இறந்தது தழீஇய எச்சஉம்மை.
இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண்
உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.
G.U.Pope:
Eyeless are they whose eyes with no benignant lustre shine;
Who've eyes can never lack the light of grace benign.
Explanation
Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks.
மூலம்:
578 . கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்துஇவ் வுலகு.
பரிமேழலகர் உரை:
கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு-முறை
செய்தல் ஆகிய தன் தொழில் அழியாமல் கண்ணோட
வல்ல வேந்தர்க்கு; உரிமை உடைத்து இவ்வுலகு-
உரித்தாம் தன்மை உடைத்து இவ்வுலகம்.
(தம்மொடு பயின்றார் பிறரை இடுக்கண் செய்துழி
அவரைக் கண்ணோடி ஒறாதார்க்கு முறை சிதைதல்,
மேல் "ஓர்ந்து கண்ணோடாது" (குறள் 541) என்ற
முறை இலக்கணத்தாலும் பெற்றாம். முறை சிதைய
வரும் வழிக் கண்ணோடாமையும், வாராவழிக்
கண்ணோடலும் ஒருவற்கு இயல்பாதல் அருமையின்,
கண்ணோட வல்லார்க்கு' என்றும், அவ் வியல்பு
உடையார்க்கு உலகம் நெடுங்காலம் சேறலின்,
'உரிமை உடைத்து' என்றும் கூறினார். இதனான்
கண்ணோடுமாறு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
தம் தம் கடமையாகிய தொழில் கெடாமல் கண்ணோட்டம்
உடையவராக இருக்கவல்லவர்க்கு, இவ்வுலகம் உரிமை உடையது.
G.U.Pope:
Who can benignant smile, yet leave no work undone;
By them as very own may all the earth be won.
Explanation
The world is theirs (kings) who are able to show kindness, without injury to their affairs, (administration of justice).
மூலம்:
579 . ஒறுத்துஆற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்துஆற்றும் பண்பே தலை.
பரிமேழலகர் உரை:
ஒறுத்து ஆற்றும் பண்பினார் கண்ணும்- தம்மை
ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை- கண்ணோட்டம்
உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே
அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம்.
'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு
ஒரு சொல் நீர.) ---
மு.வ உரை:
தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம்
செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே
சிறந்தது.
G.U.Pope:
To smile on those that vex, with kindly face,
Enduring long, is most excelling grace.
Explanation
Patiently to bear with, and show kindness to those who grieve us, is the most excellent of all dispositions.
மூலம்:
580 . பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்.
பரிமேழலகர் உரை:
நஞ்சு பெயக் கண்டும் உண்டு அமைவர்-பயின்றார்
தமக்கு நஞ்சிடக் கண்டுவைத்தும், கண்
மறுக்கமாட்டாமையின், அதனை உண்டு பின்னும்
அவரோடு மேவுவர்; நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் -
யாவரானும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை
வேண்டுமவர்.
(நாகரிகம் என்பது கண்ணோட்டமாதல்" முந்தை
இருந்த நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநா
கரிகர்" (நற். 355) என்பதனானும் அறிக. அரசர் அவரை
ஒறாது கண்ணோடற்பாலது தம்மாட்டுக் குற்றம்
செய்துழி என்பது இவ்விரண்டு பாட்டானும்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
யாவராலும் விரும்பத்தக்க நாகரிகமான கண்ணோட்டத்தை
விரும்புகின்றவர், பழகியவர் தமக்கு நஞ்சு இடக்கண்டும் அதை
உண்டு அமைவர்.
G.U.Pope:
They drink with smiling grace, though poison interfused they see,
Who seek the praise of all-esteemed courtesy.
Explanation
Those who desire (to cultivate that degree of) urbanity which all shall love, even after swallowing the poison served to them by their friends, will be friendly with them.