மூலம்:
541 . உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றும்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.
பரிமேழலகர் உரை:
ஓர்ந்து-தன்கீழ் வாழ்வார் குற்றம் செய்தால்
அக்குற்றத்தை நாடி; யார்மாட்டும் கண்ணோடாது-
யாவர் மாட்டும் கண்ணோடாது; இறை புரிந்து -நடுவு
நிலைமையைப் பொருந்தி; தேர்ந்து-அக்குற்றத்திற்குச்
சொல்லிய தண்டத்தை நூலோரோடும் ஆராய்ந்து;
செய்வஃதே முறை- அவ்வளவிற்றாகச் செய்வதே
முறையாம்.
[நடுவு நிற்றல் இறைக்கு இயல்பு ஆகலின், அதனை
'இறை' என்றும், உயிரினும் சிறந்தார்கண்ணும்
என்பார், 'யார் மாட்டும்' என்றும் கூறினார். இறைமை
'இறை' எனவும், செய்வது 'செய்வஃது' எனவும்
நின்றன. இதனான் செங்கோன்மையது இலக்கணம்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து, கண்ணோட்டம்
செய்யாமல் நடுவுநிலைமை பொருந்தி (செய்யத்தக்கதை) ஆராய்ந்து
செய்வதே நீதிமுறையாகும்.
G.U.Pope:
Search out, to no one favour show; with heart that justice loves
Consult, then act; this is the rule that right approves.
Explanation
To examine into (the crimes which may be committed), to show no favour (to any one), to desire to act with impartiality towards all, and to inflict (such punishments) as may be wisely resolved on, constitute rectitude.
மூலம்:
542 . வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல்நோக்கி வாழும் குடி.
பரிமேழலகர் உரை:
உலகு எல்லாம் வான் நோக்கி வாழும் - உலகத்து
உயிர் எல்லாம் மழை உளதாயின் உளவாகாநிற்குமே
எனினும்; குடி மன்னவன் கோல் நோக்கி வாழும் -
குடிகள் அரசன் செங்கோல் உளதாயின் உளவாகா
நிற்கும்.
[நோக்கி வாழ்தல், இன்றியமையாமை. வானின் ஆய
உணவை 'வான்' என்றும், கோலின் ஆய ஏமத்தைக்
'கோல்' என்றும் கூறினார். அவ்வேமம் இல்வழி
உணவுளதாயினும் குடிகட்கு அதனால் பயனில்லை
என்பதாம்.] ---
மு.வ உரை:
உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி
வாழ்கின்றன. அது போல் குடிகள் எல்லாம் அரசனுடைய
செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.
G.U.Pope:
All earth looks up to heav'n whence raindrops fall;
All subjects look to king that ruleth all.
Explanation
When there is rain, the living creation thrives; and so when the king rules justly, his subjects thrive.
மூலம்:
543 . அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்.
பரிமேழலகர் உரை:
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது -
அந்தணர்க்கு உரித்தாய வேதத்திற்கும் அதனால்
சொல்லப்பட்ட அறத்திற்கும் காரணமாய் நிலைபெற்றது;
மன்னவன் கோல் - அரசனால் செலுத்தப் படுகின்ற
செங்கோல்.
[அரசர் வணிகர் ஏனையோர்க்கு உரித்தாயினும்,
தலைமை பற்றி 'அந்தணர் நூல்' என்றார். ''மாதவர்
நோன்பும் மடவார் கற்பும், காவலன் காவல்'' (மணி.
22: 208, 209) அன்றித் தம் காவலான் ஆகலின், ஈண்டு
'அறன்' என்றது அவை ஒழிந்தவற்றை. வேதமும்
அறனும் - அநாதியாயினும், செங்கோல் இல்வழி
நடவா ஆகலின், அதனை அவற்றிற்கு 'ஆதி' என்றும்,
அப்பெற்றியே தனக்கு ஆதியாவது பிறிதில்லை என்பார்
'நின்றது' என்றும் கூறினார். இவை இரண்டு
பாட்டானும் செங்கோலது சிறப்புக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
அந்தணர் போற்றும் மறைநூலுக்கும் அறத்திற்கும் அடிப்படையாய்
நின்று உலகத்தைக் காப்பது அரசனுடைய செங்கோலாகும்.
G.U.Pope:
Learning and virtue of the sages spring,
From all-controlling sceptre of the king.
Explanation
The sceptre of the king is the firm support of the Vedas of the Brahmin, and of all virtues therein described.
மூலம்:
544 . குடிதழீஇக் கோல்ஓச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.
பரிமேழலகர் உரை:
குடிதழீஇக் கோல் ஒச்சும் மாநில மன்னன் அடி- தன்
குடிகளையும் அணைத்துச் செங்கோலையும் செலுத்தும்
பெருநில வேந்தன் அடியை; தழீஇ நிற்கும் உலகு -
பொருந்தி, விடார் உலகத்தார்.
[அணைத்தல் - இன்சொல் சொல்லுதலும், தளர்ந்துழி
வேண்டுவன கொடுத்தலும் முதலாயின.
இவ்விரண்டனையும் வழுவாமல் செய்தான் நிலம்
முழுதும் ஆளும் ஆகலின், அவனை 'மாநில மன்னன்'
என்றும், அவன் மாட்டு யாவரும் நீங்கா அன்பினராவர்
ஆகலின், 'அடிதழீஇ நிற்கும் உலகு' என்றும்
கூறினார்.] ---
மு.வ உரை:
குடிகளை அன்போடு அணைத்துக் கொண்டு செங்கோல்
செலுத்துகின்ற அரசனுடைய அடியைப் பொருந்தி உலகம்
நிலைபெறும்.
G.U.Pope:
Whose heart embraces subjects all, lord over mighty land
Who rules, the world his feet embracing stands.
Explanation
The world will constantly embrace the feet of the great king who rules over his subjects with love.
மூலம்:
545 . இயல்புளிக் கோல்ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.
பரிமேழலகர் உரை:
பெயலும் விளையுளும் தொக்கு-பருவமழையும்
குன்றாத விளைவும் ஒருங்கு கூடி; இயல்புளிக் கோல்
ஒச்சும் மன்னவன் நாட்ட-நூல்கள் சொல்லிய
இயல்பால் செங்கோலைச் செலுத்தும் அரசனது நாட்டின்
கண்ணவாம்.
['உளி' என்பது மூன்றவதன் பொருள்படுவதோர்
இடைச்சொல், வானும் நிலனும் சேரத் தொழிற்பட்டு
வளம் சுரக்கும் என்பதாம்.] ---
மு.வ உரை:
நீதிமுறைப்படி செங்கோல் செலுத்தும் அரசனுடைய நாட்டில் பருவ
மழையும் நிறைந்த விளைவும் ஒரு சேர ஏற்படுவனவாகும்.
G.U.Pope:
Where king, who righteous laws regards, the sceptre wields,
There fall the showers, there rich abundance crowns the fields.
Explanation
Rain and plentiful crops will ever dwell together in the country of the king who sways his sceptre with justice.
மூலம்:
546 . வேல்அன்று வென்றி தருவது: மன்னவன்
கோல்அதூஉம் கோடாது எனின்.
பரிமேழலகர் உரை:
மன்னவன் வென்றி தருவது வேல் அன்று கோல் -
மன்னவனுக்குப் போரின் கண் வென்றியைக் கொடுப்பது
அவன் எறியும் வேல் அன்று, கோல்; அதூஉம்
கோடாது எனின் - அஃதும் அப்பெற்றித்தாவது தான்
கோடாதாயின்,
[கோல் செவ்விதாயவழியே வேல் வாய்ப்பது என்பார்,
'வேல் அன்று' என்றார்; ''மாண்ட. அறநெறி முதற்றே
அரசின் கொற்றம்'' (புறநா 55) என்றார் பிறரும்.
'கோடான்' என்பது பாடம் ஆயின், கருவியின் தொழில்
வினைமுதல்மேல் நின்றதாக உரைக்க.] ---
மு.வ உரை:
ஒருவனுக்கு வெற்றி பெற்றுத் தருவது வேல் அன்று; அரசனுடைய
செங்கோலே ஆகும்; அச்செங்கோலும் கோணாதிருக்குமாயின்.
G.U.Pope:
Not lance gives kings the victory,
But sceptre swayed with equity.
Explanation
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.
மூலம்:
547 . இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
பரிமேழலகர் உரை:
வையகம் எல்லாம் இறை காக்கும் - வையகத்தை
எல்லாம் அரசன் காக்கும்; அவனை முறை காக்கும் -
அவன் தன்னை அவனது செங்கோலே காக்கும்;
முட்டாச் செயின் - அதனை முட்டு வந்துழியும்
முட்டாமல் செலுத்துவனாயின்.
[முட்டாமல் செலுத்தியவாறு; மகனை முறை
செய்தான் கண்ணும் (சிலப். 20;53 - 55), தன்கை
குறைத்தான் கண்ணும் (சிலப். 23: 42 - 53) காண்க.
'முட்டாது' என்பதன் இறுதி நிலை விகாரத்தால்
தொக்கது. இவை நான்கு பாட்டானும் அதனைச்
செலுத்தினான் எய்தும் பயன் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
உலகத்தை எல்லாம் அரசன் காப்பாற்றுவான்; நீதிமுறை
கெடாதவாறு ஆட்சி செய்வானாயின் அரசனை அந்த முறையே
காப்பாற்றும்.
G.U.Pope:
The king all the whole realm of earth protects;
And justice guards the king who right respects.
Explanation
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.
மூலம்:
548 . எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.
பரிமேழலகர் உரை:
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் - முறை
வேண்டினார்க்கு எளிய செவ்வி உடையனாய், அவர்
சொல்லியவற்றை நூலோர் பலரோடும் ஆராய்ந்து,
நின்ற உண்மைக்கு ஒப்ப முறை செய்யாத அரசன்;
தண்பதத்தான் தானே கெடும் - தாழ்ந்த பதத்திலே
நின்றுதானே கெடும்.
['எண்பதத்தான்' என்னும் முற்று வினை எச்சமும்,
'ஓரா' என்னும் வினை எச்சமும், 'செய்யா' என்னும்
பெயரெச்சமும், எதிர்மறையுள் செய்தல் வினை
கொண்டன. தாழ்ந்த பதம் : பாவமும் பழியும் எய்தி
நிற்கும் நிலை. 'அல்லவை செய்தார்க்கு அறம்
கூற்றம்' (நான்மணிக் 85) ஆகலின், பகைவர்
இன்றியும் கெடும் என்றார். இதனான் முறை
செலுத்தாதானது கேடு கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
எளிய செல்வி உடையவனாய் ஆராய்ந்து நீதிமுறை செய்யாத
அரசன் தாழ்ந்த நிலையில் நின்று ( பகைவரில்லாமலும்) தானே
கெடுவான்.
G.U.Pope:
Hard o f access, nought searching out, with partial hand
The king who rules, shall sink and perish from the land.
Explanation
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.
மூலம்:
549 . குடிபுறங் காத்துஓம்பிக் குற்றம் கடிதல்
வடுஅன்று வேந்தன் தொழில்.
பரிமேழலகர் உரை:
குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல் - குடிகளைப்
பிறர் நலியாமல் காத்துத் தானும் நலியாது பேணி,
அவர் மாட்டுக் குற்றம் நிகழின் அதனை ஒறுப்பான்
ஒழித்தல்; வேந்தன் வடு அன்று தொழில் -
வேந்தனுக்குப் பழி அன்று, தொழில் ஆகலான்.
[துன்பம் செய்தல், பொருள் கோடல், கோறல் என
ஒறுப்பு மூன்று. அவற்றுள் ஈண்டைக்கு எய்துவன
முன்னைய என்பது குற்றம் கடிதல் என்பதனால்
பெற்றாம். தன்கீழ் வாழ்வாரை ஒறுத்தல் அறன்
அன்மையின், வடுவாம் என்பதனை ஆசங்கித்து,
''அஃது ஆகாது அரசனுக்கு அவரை அக்குற்றத்தின்
நீக்கித் தூயர் ஆக்குதலும் சாதி தருமம்'' என்றார்.] ---
மு.வ உரை:
குடிகளைப் பிறர் வருத்தாமல் காத்துத், தானும் வருத்தாமல்
காப்பாற்றி, அவர்களுடைய குற்றங்களைத் தக்க தண்டனையால்
ஒழித்தல், அரசனுடைய தொழில்; பழி அன்று.
G.U.Pope:
Abroad to guard, at home to punish, brings
No just reproach; 'tis work assigned to kings.
Explanation
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.
மூலம்:
550 . கொலையிற் கொடியாரை வேந்துஒறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்.
பரிமேழலகர் உரை:
வேந்து கொடியாரைக் கொலையின் ஒறுத்தல்-அரசன்
கொடியவர்களைக் கொலையான் ஒறுத்துத் தக்கோரைக்
காத்தல்; பைங்கூழ்களை கட்டதனோடு நேர்-உழவன்
களையைக் களைந்து பைங்கூழைக் காத்ததனோடு
ஒக்கும்.
['கொடியவர்' என்றது, தீக்கொளுவுவார், நஞ்சிடுவார்,
கருவியிற் கொல்வார், கள்வர், ஆறலைபடார், சூறை
கொள்வார், பிறன்இல் விழைவார் என்றிவர்
முதலாயினாரை; இவரை வடநூலார் 'ஆததாயிகள்'
என்ப. இப்பெற்றியாரைக் கண்ளோடிக் கொல்லாவழிப்
புற்களைக்கு அஞ்சாநின்ற பைங்கூழ்போன்று நலிவுபல
எய்தி உலகு இடர்ப்படுதலின், கோறலும் அரசற்குச்
சாதிதருமம் என்பதாயிற்று. இவை இரண்டு பாட்டானும்
செங்கோல் செலுத்தும் வெண்குடை வேந்தற்குத் தீயார்
மாட்டு மூவகை ஒறுப்பும் ஒழியற்பால அல்ல என்பது
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
கொடியவர் சிலரைக் கொலைத்தண்டனையால் அரசன் ஒறுத்தல்
பயிரைக் காப்பாற்றக் களையைக் களைவதற்கு நிகரான செயலாகும்.
G.U.Pope:
By punishment of death the cruel to restrain,
Is as when farmer frees from weeds the tender grain.
Explanation
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.