மூலம்:
521 . பற்றற்ற கண்ணும் பழமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள.
பரிமேழலகர் உரை:
பற்று அற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் -
ஒருவன் செல்வம் தொலைந்து வறியனாயவழியும்
விடாது தம்மோடு அவனிடைப் பழைமையை எடுத்துக்
கொண்டாடும் இயல்புகள்; சுற்றத்தார்கண்ணே உள-
சுற்றத்தார் மாட்டே உள ஆவன.
[சிறப்பு உம்மை வறியனாயவழிப் பாராட்டப் படாமை
விளக்கி நின்றது. பழைமை: பற்றறாக் காலத்துத்
தமக்குச் செய்த உபகாரம். பிறரெல்லாம் அவன்
பற்றற்ற பொழுதே தாமும் அவனோடு பற்றறுவர்
ஆகலின், ஏகாரம் தேற்றத்தின்கண்ணே வந்தது.
இதனான் சுற்றத்தது சிறப்புக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
ஒருவன் வறியவனான காலத்திலும் அவனுக்கும் தமக்கும் இருந்த
பழைய உறவைப் பாராட்டிப் பேசும் பண்புகள் சுற்றத்தாரிடம் உண்டு.
G.U.Pope:
When wealth is fled, old kindness still to show,
Is kindly grace that only kinsmen know.
Explanation
Even when (a man's) property is all gone, relatives will act towards him with their accustomed (kindness).
மூலம்:
522 . விருப்புஅறாச் சுற்றம் இயையின் அருப்புஅறா
ஆக்கம் பலவும் தரும்.
பரிமேழலகர் உரை:
விருப்பு அறாச் சுற்றம் இயையின் - அன்பும் அறாத
சுற்றம் ஒருவற்கு எய்துமாயின்; அருப்பு அறா ஆக்கம்
பலவும் தரும்-அஃது அவற்குக் கிளைத்தல் அறாத
செல்வங்கள் பலவற்றையும் கொடுக்கும்.
[உட்பகையின் நீக்குதற்கு 'விருப்பு அறாச் சுற்றம்'
என்றும், தானே வளர்க்கும் ஒரு தலையாய
செல்வத்தின் நீக்குதற்கு 'அருப்பு அறா ஆக்கம்' என்றும்
விசேடித்தார். தொடை நோக்கி விகாரமாயிற்று.
'இயையின், என்பது, அதனது அருமை விளக்கி
நின்றது. ஆக்கம் என்பது ஆகுபெயர், பலவும் என்பது
அங்கங்கள் ஆறினையும் நோக்கிப் பலர் கூடி
வளர்த்தலின், அவை மேல்மேன் கிளைக்கும் என்பது
கருத்து.] ---
மு.வ உரை:
அன்பு நீங்காத சுற்றம் ஒருவனுக்குக் கிடைத்தால், அது
மேன்மேலும் வளர்ச்சி குறையாத ஆக்கம் பலவற்றையும்
அவனுக்குக் கொடுக்கும்.
G.U.Pope:
The gift of kin's unfailing love bestows
Much gain of good, like flower that fadeless blows.
Explanation
If (a man's) relatives remain attached to him with unchanging love, it will be a source of ever-increasing wealth.
மூலம்:
523 . அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடுஇன்றி நீர்நிறைந் தற்று.
பரிமேழலகர் உரை:
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை - அச்சுற்றத்தோடு
நெஞ்சு கலத்தல் இல்லாதவன் வாழ்க்கை; குளவளாக்
கோடு இன்றி நீர் நிறைந்தற்று - குளப்பரப்புக்
கரையின்றி நீர் நிறைந்தாற்போலும்.
[சுற்றத்தோடு என்பது அதிகாரத்தான் வந்தது. நெஞ்சுக்
கலப்புத் தன்னளவும் அதனளவும் உசாவுதலான்
வருவது ஆகலின், 'அளவளாவு' என்பது ஆகு பெயர்.
'வாழ்க்கை' எனறதூஉம் அதற்கு ஏதுவாய
செல்வங்களை, 'நிறைதல்' என்னும் இடத்து நிகழ்
பொருளின் தொழில் இடத்தின்மேல் நின்றது. சுற்றம்
இல்லாதான் செல்வங்கள் தாங்குவார் இன்மையின்
புறத்துப் போம் என்பதாம்.] ---
மு.வ உரை:
சுற்றத்தாரோடு மனம் கலந்து பழகும் தன்மை இல்லாதவனுடைய
வாழ்க்கை, குளப்பரப்பானது கரையில்லாமல் நீர் நிறைந்தாற்
போன்றது.
G.U.Pope:
His joy of life who mingles not with kinsmen gathered round,
Is lake where streams pour in, with no encircling bound.
Explanation
The wealth of one who does not mingle freely with his relatives, will be like the filling of water in a spacious tank that has no banks.
மூலம்:
524 . சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
பரிமேழலகர் உரை:
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற
அதனால் ஒருவன் பெற்ற பயனாவது; சுற்றத்தால்தான்
சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும்
வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
['பெற்ற' என்பதனுள் அகரமும் 'அதனான்'
என்பதனுள் அன்சாரியையும் தொடைநோக்கி
விகாரத்தால் தொக்கன. இவ்வொழுக்குப் பகையின்றி
அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்
பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந்
தழால் செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம்
என்பது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக
வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.
G.U.Pope:
The profit gained by wealth's increase,
Is living compassed round by relatives in peace.
Explanation
To live surrounded by relatives, is the advantage to be derived from the acquisition of wealth.
மூலம்:
525 . கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்.
பரிமேழலகர் உரை:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன்
சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல்
சொல்லுதலையும் வல்லனாயின்; அடுக்கிய சுற்றத்தான்
சுற்றப்படும் - தம்மில் தொடர்ந்த பல வகைச்
சுற்றத்தானே சூழப்படும்.
[இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது
தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது-
சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான்
பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார்
தானமும் சாமமும் என்ப.] ---
மு.வ உரை:
பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய
வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால்
சூழப்படுவான்.
G.U.Pope:
Who knows the use of pleasant words, and liberal gifts can give,
Connections, heaps of them, surrounding him shall live.
Explanation
He will be surrounded by numerous relatives who manifests generosity and affability.
மூலம்:
526 . பெரும்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குஉடையார் மாநிலத்து இல்.
பரிமேழலகர் உரை:
பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன்
மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை
விரும்பானுமாயின்; அவனின் மருங்கு உடையார்
மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார்
இவ்வுலகத்து இல்லை.
[மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல்
கொடுத்தல், விரும்பாமை: 'இஃது அரசற்கு
வேண்டுவதொன்று,' என்று அளவிறந்து செய்யாமை.]
---
மு.வ உரை:
பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன்
இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில்
யாரும் இல்லை.
G.U.Pope:
Than one who gifts bestows and wrath restrains,
Through the wide world none larger following gains.
Explanation
No one, in all the world, will have so many relatives (about him), as he who makes large gift, and does not give way to anger.
மூலம்:
527 . காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.
பரிமேழலகர் உரை:
காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு
இரையாயின கண்டவழி மறையாது இனத்தை
அழைத்து அதனோடும் கூட உண்ணா நிற்கும்;
ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும்
ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை
உடையார்க்கே உளவாவன.
[அவ்வாக்கங்களாவன: பகையின்மையும்,
பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின. எச்ச
உம்மையான் அறமும் இன்பமுமே அன்றிப் பொருளும்
எய்தும் என்பது பெறுதும்.' அப்பெற்றித்தாய இயல்பு'
என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு
வைத்தல்.] ---
மு.வ உரை:
காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக்
கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு
உடையவர்க்கே உண்டு.
G.U.Pope:
The crows conceal not, call their friends to come, then eat;
Increase of good such worthy ones shall meet.
Explanation
The crows do not conceal (their prey), but will call out for others (to share with them) while they eat it; wealth will be with those who show a similar disposition (towards their relatives).
மூலம்:
528 . பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
பரிமேழலகர் உரை:
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் -
எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன்
தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின் அது நோக்கி
வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது
வாழும் சுற்றத்தார் பலர்.
[உயர்ந்தார் நீக்குதல் நோக்கியபோது நோக்கை
விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை
நோக்கை விதித்தார். இந்நான்கு பாட்டானும் சுற்றம்
தழுவும் உபாயம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர்
சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக
வாழ்கின்றவர் பலர் ஆவர்.
G.U.Pope:
Where king regards not all alike, but each in his degree,
'Neath such discerning rule many dwell happily.
Explanation
Many relatives will live near a king, when they observe that he does not look on all alike, but that he looks on each man according to his merit.
மூலம்:
529 . தமராகித் தன்துறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும்.
பரிமேழலகர் உரை:
தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் - முன் தமராய்
வைத்துத் தன்னோடு அமராது யாதானும் ஒரு
காரணத்தால் தன்னைப் பிரிந்து போயவர் பின்னும்
வந்து சுற்றமாதல்; அமராமைக் காரணம் இன்றி வரும்
- அவ்வமராமைக் காரணம் தன் மாட்டு இல்லையாகத்
தானே உளதாம்.
['அமராமைக் காரணம் இன்றி' என்றதனான், முன்
அஃது உண்டாய்த் துறத்தல் பெற்றாம். அஃதாவது,
அரசன் தான் நெறிகெட ஒழுகல், வெறுப்பன செய்தல்
என்றிவை முதலியவற்றான் வருவது. 'ஆக்கம்'
வருவிக்கப்பட்டது. இயற்கையாகவே அன்புடையராய
சுற்றத்தார்க்குச் செய்கையான் வந்த நீக்கம்
அதனையொழிய ஒழியும்; ஒழிந்தால் அவர்க்கு அன்பு
செய்து கொள்ள வேண்டா; பழைய இயல்பாய் நிற்கும்
என்பார், 'வரும்' என்றார்.] ---
மு.வ உரை:
முன் சுற்றத்தாராக இருந்து பின் ஒரு காரணத்தால் பிரிந்தவரின்
உறவு, அவ்வாறு அவர் பொருந்தாமலிருந்த காரணம் நீங்கியபின்
தானே வந்து சேரும்.
G.U.Pope:
Who once were his, and then forsook him, as before
Will come around, when cause of disagreement is no more.
Explanation
Those who have been friends and have afterwards forsaken him, will return and join themselves (to him), when the cause of disagreement is not to be found in him.
மூலம்:
530 . உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்துஇருந்து எண்ணிக் கொளல்.
பரிமேழலகர் உரை:
உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை - காரணம்
இன்றித் தன்னிடத்து நின்றும் பிரிந்துபோய்ப் பின்
காரணத்தான் வந்த சுற்றத்தானை; வேந்தன் இழைத்து
இருந்து எண்ணிக் கொளல் - அரசன், அக்காரணத்தைச்
செய்து வைத்து ஆராய்ந்து தழீஇக் கொள்க.
[வாளா 'உழைப்பிரிந்து' என்றமையின், பிரிதற்குக்
காரணம் இன்மை பெற்றாம். வருதற் காரணத்தைச்
செய்யாதவழிப் பின்னும் பிரிந்து, போய்ப் பகையோடு
கூடும் ஆகலின், 'இழைத்திருந்து' என்றும்,
அன்பின்றிப் போய்ப் பின்னும் காரணத்தான்
வந்தமையின், 'எண்ணிக் கொளல்' என்றும் கூறினார்.
பிரிந்து போய சுற்றத்தாருள் தீமை செய்யப்போய்
அதனை ஒழிய வருவானும், பின் நன்மைசெய்ய
வருவானும் தழுவப்படும் ஆகலின், தழுவுமாறு
முறையே இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
தன்னிடமிருந்து பிரிந்து சென்று ஒரு காரணம்பற்றித் திரும்பி
வந்தவனை, அரசன், அவன் நாடிய உதவியைச் செய்து ஆராய்ந்து
உறவு கொள்ளவேண்டும்.
G.U.Pope:
Who causeless went away, then to return, for any cause, ask leave;
The king should sift their motives well, consider, and receive!
Explanation
When one may have left him, and for some cause has returned to him, let the king fulfil the object (for which he has come back) and thoughtfully receive him again.