மூலம்:
511 . நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும்.
பரிமேழலகர் உரை:
நன்மையும் தீமையும் நாடி-அரசன் முதற்கண் ஒரு
வினையைத் தன்கண் வைத்தால், அதன்கண்
ஆவனவும் ஆகாதனவும் ஆய செயல்களை ஆராய்ந்து
அறிந்து; நலம் புரிந்த தன்மையான்-அவற்றுள்
ஆவனவற்றையே விரும்பிய இயல்பினையுடையான்;
ஆளப்படும். பின் அவனால் சிறந்த வினைகளிலே
ஆளப்படும்.
[தன்னை உரிமை அறிதற்பொருட்டு அகம் புறங்கட்கு
நடுவாயதோர் வினையை அரசன் தன்கண் வைத்த
வழி, அதன் கண் ஆம் செயல்களையே செய்தவன்
பின்னும் அவ்வியல்பினனாதல் பற்றி, அகமாய
வினைக்கண்ணே ஆளப்படுவன் என்பதாயிற்று. 'புரிந்த'
என்ற இறந்த காலத்தான், முன் உரிமை
அறிதற்பொருட்டு வைத்த வினையாதல் பெற்றாம்.] ---
மு.வ உரை:
நன்மையும் தீமையுமாகிய இரண்டையும் ஆராய்ந்து நன்மை
தருகின்றவற்றையே விரும்புகின்ற இயல்புடையவன் (செயலுக்கு
உரியவனாக) ஆளப்படுவான்.
G.U.Pope:
Who good and evil scanning, ever makes the good his joy;
Such man of virtuous mood should king employ.
Explanation
He should be employed (by a king), whose nature leads him to choose the good, after having weighed both the evil and the good in any undertaking.
மூலம்:
512 . வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை.
பரிமேழலகர் உரை:
வாரி பெருக்கி - பொருள்வரு வாயில்களை விரியச்
செய்து; வளம் படுத்து - அப் பொருளால்
செல்வங்களை வளர்த்து; உற்றவை ஆராய்வான் - அவ்
வாயில்கட்கும் பொருட்கும் செல்வங்கட்கும் உற்ற
இடையூறுகளை நாள்தோறும ஆராய்ந்து
நீக்கவல்லவன்; வினை செய்க - அரசனுக்கு வினை
செய்க.
[வாயில்களாவன: மேல் இறைமாட்சியுள்
''இயற்றலும்'' (குறள். 385) என்புழி உரைத்தனவும்;
உழவு, பசுக்காவல், வாணிகம் என்னும்
வார்த்தையுமாம். செல்வங்களாவன; ஆண்டுப்
பொருளும் இன்பமுமாக உரைக்கப்பட்டன.
இடையூறுகளாவன: அரசன், வினை செல்வார்,
சுற்றத்தார், பகைவர், கள்வர் என்று இவரான் வரும்
நலிவுகள்.] ---
மு.வ உரை:
பொருள் வரும் வழிகளைப் பெருகச் செய்து, அவற்றால் வளத்தை
உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்க வல்லவனே
செயல் செய்யவேண்டும்.
G.U.Pope:
Who swells the revenues, spreads plenty o'er the land,
Seeks out what hinders progress, his the workman's hand.
Explanation
Let him do (the king's) work who can enlarge the sources (of revenue), increase wealth and considerately prevent the accidents (which would destroy it).
மூலம்:
513 . அன்புஅறிவு தேற்றம் அவாஇன்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு.
பரிமேழலகர் உரை:
அன்பு - அரசன் மாட்டு அன்பும்; அறிவு - அவனுக்கு
ஆவன அறியும் அறிவும்; தோற்றம்-அவை செய்தற்கண்
கலங்காமையும்; அவா இன்மை - அவற்றால் பொருள்
கையுற்ற வழி அதன்மேல் அவா இன்மையும் ஆகிய;
இந்நான்கும் நன்கு உடையான்கட்டே தெளிவு -
இந்நான்கு குணங்களையும் நிலைபெற உடையான்
மேலதே வினையை விட்டிருக்கும் தெளிவு.
[இந்நான்கும் நன்குடைமை இவன் செய்கின்ற
வினைக்கண் யாதும் ஆராய வேண்டுவதில்லை என்று
அரசன் தெளிவதற்கு ஏது ஆகலின், அவனை, அதன்
பிறப்பிடனாக்கிக் கூறினார். இவை மூன்று பாட்டானும்
ஆடற்குரியானது இலக்கணம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா
இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக
உடையவனைத் தெளியலாம்.
G.U.Pope:
A loyal love with wisdom, clearness, mind from avarice free;
Who hath these four good gifts should ever trusted be.
Explanation
Let the choice (of a king) fall upon him who largely possesses these four things, love, knowledge, a clear mind and freedom from covetousness.
மூலம்:
514 . எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறுஆகும் மாந்தர் பலர்.
பரிமேழலகர் உரை:
எனை வகையான் தேறியக் கண்ணும்-எல்லா
வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த
பின்னும்; வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் -
அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர்
உலகத்துப் பலர்.
[கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி
விகாரப்படுவதல்லது, அதனைக் குற்றம் என்று ஒழிந்து
தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், 'வேறாகும்
மாந்தர் பலர்' என்றார். வினை வைப்பதற்கு முன்
எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின்
விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து
அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால்
ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு
செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள்
உலகத்தில் உண்டு.
G.U.Pope:
Even when tests of every kind are multiplied,
Full many a man proves otherwise, by action tried!
Explanation
Even when (a king) has tried them in every possible way, there are many men who change, from the nature of the works (in which they may be employed).
மூலம்:
515 . அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான் என்று ஏவற்பாற் றன்று.
பரிமேழலகர் உரை:
அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும்
உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும்
வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவு செய்ய
வல்லானை யல்லது; வினைதான் சிறந்தான் என்று
ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு
அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும்
இயல்புடைத்தன்று.
['செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு
ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என
இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
(செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச்
செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன்
என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.
G.U.Pope:
No specious fav'rite should the king's commission bear,
But he that knows, and work performs with patient care.
Explanation
(A king's) work can only be accomplished by a man of wisdom and patient endurance; it is not of a nature to be given to one from mere personal attachment.
மூலம்:
516 . செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்.
பரிமேழலகர் உரை:
செய்வானை நாடி-முதற் கண்ணே செய்வானது
இலக்கணத்தை ஆராய்ந்து, வினை நாடி-பின்
செய்யப்படும் வினையினது இயல்பை ஆராய்ந்து;
காலத்தொடு எய்த உணர்ந்து செயல்-பின் அவனையும்
அதனையும் காலத்தோடு படுத்துப் பொருந்த அறிந்து
அவனை அதன்கண் ஆடலைச் செய்க.
[செய்வானது இலக்கணமும் வினையினது இயல்பும்
மேலே கூறப்பட்டன. காலத்தொடு எய்த
உணர்தலாவது, இக்காலத்து இவ்விலக்கணமுடையான்
செய்யின் இவ்வியல் பிற்றாய வினை முடியும் என்று
கூட்டி உணர்தல்.] ---
மு.வ உரை:
செய்கின்றவனுடைய தன்மையை ஆராய்ந்து, செயலின்
தன்மையையும் ஆராய்ந்து, தக்க காலத்தோடு பொருந்துமாறு
உணர்ந்து செய்விக்க வேண்டும்.
G.U.Pope:
Let king first ask, 'Who shall the deed perform?' and 'What the deed?'
Of hour befitting both assured, let every work proceed.
Explanation
Let (a king) act, after having considered the agent (whom he is to employ), the deed (he desires to do), and the time which is suitable to it.
மூலம்:
517 . இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல்.
பரிமேழலகர் உரை:
இதனை இதனான் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து -
இவ் வினையை இக்கருவியால் இவன்
முடிக்கவல்லவன் எனக் கூறுபடுத்து ஆராய்ந்து;
அதனை அவன்கண் விடல் - மூன்றும் தம்முள்
இயைந்தவழி அவ்வினையை அவன்கண்ணே விடுக.
[கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை
முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது
ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம்
உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை
உரியனாக்குதல்.]
[கருவி:துணைவரும் பொருளும் முதலாயின. வினை
முதலும் கருவியும் வினையும் தம்முள் இயைதலாவது
ஓரொன்றோடு ஏனைய இரண்டற்கும் பொருத்தம்
உண்டாதல். விடுதல்: அதற்கு அவனை
உரியனாக்குதல்.] ---
மு.வ உரை:
இந்தத் தொழிலை இக் கருவியால் இன்னவன் முடிப்பான் என்று
ஆராய்ந்த பிறகு அத் தொழிலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
G.U.Pope:
'This man, this work shall thus work out,' let thoughtful king command;
Then leave the matter wholly in his servant's hand.
Explanation
After having considered, "this man can accomplish this, by these means", let (the king) leave with him the discharge of that duty.
மூலம்:
518 . வினைக்குஉரிமை நாடிய பின்றை அவனை
அதற்குஉரிய னாகச் செயல்.
பரிமேழலகர் உரை:
வினைக்கு உரிமை நாடிய பின்றை-ஒருவனை அரசன்
தன் வினை செய்தற்கு உரியனாக ஆராய்ந்து
துணிந்தால்;அவனை அதற்கு உரியனாகச் செயல்-பின்
அவனை அதற்குரியனாமாறு உயரச் செய்க.
[உயரச் செய்தலாவது: அதனைத் தானே செய்து
முடிக்கும் ஆற்றலுடையனாக்குதல். அது
செய்யாக்காலும் கெடும் என்பது கருத்து.] ---
மு.வ உரை:
ஒருவன் ஒரு தொழிலைச் செய்வதற்கு உரியவனாக இருப்பதை
ஆராய்ந்த பிறகு அவனை அத் தொழிலுக்கு உரியவனாகும்படி
உயர்த்தவேண்டும்.
G.U.Pope:
As each man's special aptitude is known,
Bid each man make that special work his own.
Explanation
Having considered what work a man is fit for, let (the king) employ him in that work.
மூலம்:
519 . வினைக்கண் வினையுடையான் கேண்மைவேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு.
பரிமேழலகர் உரை:
வினைக்கண் வினை உடையான் கேண்மை-
எப்பொழுதும் தன் வினையின் கண்ணே முயறலை
உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய்
ஒழுகுகின்ற தன்மையை; வேறாக நினைப்பானைத் திரு
நீங்கும் - அது பொறாதார் சொற் கேட்டு அரசன்
மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு
தீங்கும்.
[கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாம்
நில்லாது கேளிர் செய்யும் உரிமை எல்லாம்
செய்தொழுகுதல் அவனை அவமதிப்பாகக் கொண்டு
செறக் கருதுமாயின், பின் ஒருவரும் உட்பட்டு
முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம்
கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும்
ஆடற்குரியானை ஆளும் திறம் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின்
உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம்
நீங்கும்.
G.U.Pope:
Fortune deserts the king who ill can bear,
Informal friendly ways of men his tolls who share.
Explanation
Prosperity will leave (the king) who doubts the friendship of the man who steadily labours in the discharge of his duties.
மூலம்:
520 . நாள்தோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.
பரிமேழலகர் உரை:
வினை செய்வான் கோடாமை உலகு கோடாது -
வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது;
மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன்
செயலை) நாள்தோறும் ஆராய்க.
[அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய
உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம்; அதனால் அவன்
உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக
என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம்
கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய
நிலைமையை ஆராய வேண்டும்.
G.U.Pope:
Let king search out his servants' deeds each day;
When these do right, the world goes rightly on its way.
Explanation
Let a king daily examine the conduct of his servants; if they do not act crookedly, the world will not act crookedly.