மூலம்:
501 . அறம்பொருள் இன்பம் உயிர்அச்சம் நான்கின்
திறம்தெரிந்து தேறப் படும்.
பரிமேழலகர் உரை:
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் - அரசனால்
தெளியப்படுவான் ஒருவன், அறமும் பொருளும்
இன்பமும் உயிர்ப் பொருட்டான் வரும் அச்சமும்
என்னும்; நான்கின் திறம் தெரிந்து தேறப்படும் - உபதை
நான்கின் திறத்தான் மனவியல்பு ஆராய்ந்தால் பின்பு
தெளியப்படும்.
[அவற்றுள், அற உபதையாவது, புரோகிதரையும்
அறவோரையும் விட்டு அவரால் 'இவ்வரசன்
அறவோன் அன்மையின் இவனைப் போக்கி அறனும்
உரிமையும் உடையான் ஒருவனை வைத்தற்கு
எண்ணினம்; இதுதான் யாவர்க்கும் இயைந்தது; நின்
கருத்து என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
பொருள் உபதையாவது, சேனைத் தலைவனையும்
அவனோடு இயைந்தாரையும் விட்டு, அவரான்
'இவ்வரசன் இவறன் மாலையன் ஆகலின், இவனைப்
போக்கிக் கொடையும் உரிமையும் உடையான்
ஒருவனை வைத்தற்கு எண்ணினம்; இதுதான்
யாவருக்கும் இயைந்தது; நின் கருத்து என்னை?' எனச்
சூளுறவோடு சொல்லுவித்தல். இன்ப உபதையாவது,
தொன்று தொட்டு உரிமையோடு பயின்றாளொரு
தவமுதுமகளை விட்டு, 'அவளால், உரிமையுள்
இன்னாள் நின்னைக் கண்டு வருத்தமுற்றுக் கூட்டுவிக்க
வேண்டும் என்று என்னை விடுத்தாள்; அவளைக்
கூடுவையாயின் நினக்குப் பேரின்பமே அன்றிப்
பெரும்பொருளும் கைகூடும்' எனச் சூளுறவோடு
சொல்லுவித்தல். அச்ச உபதையாவது, ஒரு
நிமித்தத்தின் மேலிட்டு ஓர் அமைச்சனால்
ஏனையோரை அவன் இல்லின் கண் அழைப்பித்து,
'இவர் அறைபோவான் எண்ணற்குக் குழீயினார்' என்று
தான் காவல் செய்து, 'ஒருவனால் இவ்வரசன் நம்மைக்
கொல்வான் சூழ்கின்றமையின் அதனை நாம் முற்படச்
செய்து, நமக்கு இனிய அரசன் ஒருவனை வைத்தல்
ஈண்டை யாவர்க்கும் இணைந்தது; நின் கருத்து
என்னை?' எனச் சூளுறவோடு சொல்லுவித்தல்.
இந்நான்கினும் திரிபிலன் ஆயவழி, எதிர்காலத்தும்
திரிபிலன் எனக் கருத்தளவையால் தெளியப்படும்
என்பதாம். இவ்வடநூற் பொருண்மையை உட்கொண்டு
இவர் ஓதியது அறியாது, பிறரெல்லாம் இதனை
'உயிரெச்சம்' எனப் பாடம் திரித்துத் தத்தமக்குத்
தோன்றியவாறே உரைத்தார்.] ---
மு.வ உரை:
அறம், பொருள், இன்பம், உயிர்க்காக அஞ்சும் அச்சம் ஆகிய
நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு
தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான்.
G.U.Pope:
How treats he virtue, wealth and pleasure? How, when life's at stake,
Comports himself? This four-fold test of man will full assurance make.
Explanation
Let (a minister) be chosen, after he has been tried by means of these four things, viz,-his virtue, (love of) money, (love of) sexual pleasure, and tear of (losing) life.
மூலம்:
502 . குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாண்உடையான் கட்டே தெளிவு.
பரிமேழலகர் உரை:
குடிப்பிறந்து - உயர்ந்த குடியில் பிறந்து; குற்றத்தின்
நீங்கி - குற்றங்களினின்று நீங்கி; வடுப்பரியும் நாண்
உடையான் கட்டே தெளிவு - தமக்கு வடு வருங்கொல்
என்று அஞ்சா நிற்கும் நாணுடையவன் கண்ணதே
அரசனது தெளிவு.
[குற்றங்களாவன; மேல் அரசனுக்குச் சொல்லிய பகை
ஆறும்; மடி, மறப்பு, பிழைப்பு என்ற இவை
முதலாயவும் ஆம். நாண்; இழிதொழில்களில் மனம்
செல்லாமை. இவை பெரும்பான்மையும் தக்கோர்வாய்க்
கேட்டலாகிய ஆகம அளவையால் தெரிவன.
இந்நான்கும் உடையவனையே தெளிக என்பதாம்.] ---
மு.வ உரை:
நல்ல குடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியான
செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித்
தெளிய வேண்டும்.
G.U.Pope:
Of noble race, of faultless worth, of generous pride
That shrinks from shame or stain; in him may king confide.
Explanation
(The king's) choice should (fall) on him, who is of good family, who is free from faults, and who has the modesty which fears the wounds (of sin).
மூலம்:
503 . அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
பரிமேழலகர் உரை:
அரிய கற்று ஆசு அற்றார் கண்ணும்-கற்றற்கு அரிய
நூல்களைக் கற்று மேற்சொல்லிய குற்றங்கள் அற்றார்
மாட்டும்; தெரியுங்கால் வெளிறு இன்மை அரிது -
நுண்ணிதாக ஆராயுமிடத்து வெண்மை இல்லாமை
அரிது.
[வெண்மை: அறியாமை; அஃது அவர்மாட்டு
உளதாவது, மனத்தது நிலையாமையான்
ஒரோவழியாகலின், 'தெரியுங்கால்' என்றார்.
காட்சியளவையால் தெரிந்தால் அதுவும் இல்லாதாரே
தெளியப்படுவர் என்பது குறிப்பெச்சம்.
'இவ்வளவைகளான இக்குணமும் குற்றமும் தெரிந்து
குணமுடையாரைத் தெளிக என்பது, இவை மூன்று
பாட்டானும் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும்
ஆராய்ந்து பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது
அருமையாகும்.
G.U.Pope:
Though deeply learned, unflecked by fault, 'tis rare to see,
When closely scanned, a man from all unwisdom free.
Explanation
When even men, who have studied the most difficult works, and who are free from faults, are (carefully) examined, it is a rare thing to find them without ignorance.
மூலம்:
504 . குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
பரிமேழலகர் உரை:
குணம் நாடி - குணம் குற்றங்களுள் ஒன்றேயுடையார்
உலகத்து இன்மையின், ஒருவன் குணங்களை
ஆராய்ந்து; குற்றமும் நாடி - ஏனைக் குற்றங்களையும்
ஆராய்ந்து; அவற்றுள் மிகை நாடி - பின் அவ்விரு
பகுதியுள்ளும் மிக்கவற்றை ஆராய்ந்து; மிக்க கொளல் -
அவனை அம்மிக்கவற்றானே அறிக.
[மிகையுடையவற்றை 'மிகை' என்றார். அவை
யாவன: தலைமையானாகப் பன்மையானாக
உயர்ந்தன. அவற்றான் அறிதலாவது, குணம்
மிக்கதாயின் வினைக்கு உரியன் என்றும், குற்றம்
மிக்கதாயின் அல்லன் என்றும் அறிதல். குணமே
யுடையார் உலகத்து அரியர் ஆகலின், இவ்வகை
யாவரையும் தெளிக என்பது இதனான் கூறப்பட்டது.] --
-
மு.வ உரை:
ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும்
ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து,
மிகுந்திருப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும்.
G.U.Pope:
Weigh well the good of each, his failings closely scan,
As these or those prevail, so estimate the man.
Explanation
Let (a king) consider (a man's) good qualities, as well as his faults, and then judge (of his character) by that which prevails.
மூலம்:
505 . பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம்தம்
கருமமே கட்டளைக் கல்.
பரிமேழலகர் உரை:
பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் கட்டளைக்கல் -
பிறப்பு குணம் அறிவு என்பனவற்றான் மக்கள் எய்தும்
பெருமைக்கும் மற்றைச் சிறுமைக்கும் உரைகல்லாவது;
தத்தம் கருமமே - தாம் தாம் செய்யும் கருமமே,
பிறிதில்லை.
(இஃது ஏகதேச உருவகம், மக்களது பெருமையும்
சிறுமையும் தப்பாமல் அறியலுறுவார்க்குப் பிற
கருவிகளும் உளவாயினும், முடிந்த கருவி செயல்
என்பது தேற்றேகாரத்தால் பெற்றாம். இதனால் குணம்
குற்றங்கள் நாடற்குக கருவி கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும்
(குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக
இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்.
G.U.Pope:
Of greatness and of meanness too,
The deeds of each are touchstone true.
Explanation
A man's deeds are the touchstone of his greatness and littleness.
மூலம்:
506 . அற்றாரைத் தேறுதல் ஓம்புக: மற்றுஅவர்
பற்றிலர் நாணார் பழி.
பரிமேழலகர் உரை:
அற்றாரைத் தேறுதல் ஓம்புக - சுற்றம் இல்லாரைத்
தெளிதலை ஒழிக; அவர் மற்றுப் பற்று இலர் - அவர்
உலகத்தோடு தொடர்பு இலர்; பழி நாணார் - ஆகலான்
பழிக்கு அஞ்சார்.
['பற்று இலர்' என்பதனால் 'சுற்றம் என்பது
வருவிக்கப்பட்டது. உலகத்தார் பழிப்பன ஒழிதற்கும்
புகழ்வன செய்தற்கும் ஏதுவாகிய உலகநடை இயல்பு
சுற்றம் இல்லாதார்க்கு இன்மையின், அவர்
தெளியப்படார் என்பதாம்.] ---
மு.வ உரை:
சுற்றத்தாரின் தொடர்பு அற்றவரை நம்பித் தெளியக் கூடாது; அவர்
உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாணமாட்டார்.
G.U.Pope:
Beware of trusting men who have no kith of kin;
No bonds restrain such men, no shame deters from sin.
Explanation
Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime.
மூலம்:
507 . காதன்மை கந்தா அறிவுஅறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்.
பரிமேழலகர் உரை:
காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல் - அன்பு
உடைமை பற்றுக்கோடாகத் தமக்கு அறியவேண்டுவன
அறியாதாரைத் தெளிதல்; பேதைமை எல்லாம் தரும் -
அரசனுக்கு எல்லா அறியாமையும் கொடுக்கும்.
[தன்னோடு அவரிடை நின்ற அன்புபற்றி, அரசன்
அறிவிலார் மேல் வினையை வைப்பின், அஃது அவர்
அறிவின்மையாற் கெடும்; கெட்டால் அவர்க்கு
உளதேயன்றி வினைக்கு உரியாரை அறியாமை, மேல்
விளைவு அறியாமை முதலாக அவனுக்கு அறியாமை
பலவும் உளவாம் என்பதாம்.] ---
மு.வ உரை:
அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை
காரணமாக நம்பித் தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா
அறியாமையையும் கொடுக்கும்.
G.U.Pope:
By fond affection led who trusts in men of unwise soul,
Yields all his being up to folly's blind control.
Explanation
To choose ignorant men, through partiality, is the height of folly.
மூலம்:
508 . தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்.
பரிமேழலகர் உரை:
பிறனைத் தேரான் தெளிந்தான் - தன்னோடு
இயைபுடையன் அல்லாதானைப் பிறப்பு
முதலியவற்றானும் செயலானும் ஆராய்ந்து தெளிந்த
அரசனுக்கு; வழிமுறை தீரா இடும்பை தரும் -
அத்தெளிவு தன் வழிமுறையினும் நீங்காத துன்பத்தைக்
கொடுக்கும்.
[இயைபு: தன் குடியோடு தொடர்ந்த மரபு. இதனானே
அதுவும் வேண்டும் என்பது பெற்றாம். தெளிதல் அவன்
கண்ணே வினையை வைத்தல். அவ்வினை
கெடுதலால், தன் குலத்துப் பிறந்தாரும் பகைவர்
கைப்பட்டுக் கீழாய்விடுவர் என்பதாம். நான்கன் உருபு
விகாரத்தால் தொக்கது.] ---
மு.வ உரை:
மற்றவனைப் பற்றி ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது
(அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில்
தோன்றியவர்க்கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும்.
G.U.Pope:
Who trusts an untried stranger, brings disgrace,
Remediless, on all his race.
Explanation
Sorrow that will not leave even his posterity will come upon him chooses a stranger whose character he has not known.
மூலம்:
509 . தேறற்க யாரையும் தேராது: தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்.
பரிமேழலகர் உரை:
யாரையும் தேராது தேறற்க - யாவரையும் ஆராயாது
தெளியா தொழிக; தேர்ந்த பின் தேறும் பொருள்
தேறுக- ஆராய்ந்தபின் தெளியும் பொருள்களை
ஐயுறாது ஒழிக.
['தேறற்க' என்ற பொதுமையான் ஒருவினைக்
கண்ணும் தெளியலாகாது என்பது பெற்றாம். ஈண்டு,
'தேறுக' என்றது தாற்பரியத்தால் ஐயுறவினது
விலக்கின்மேல் நின்றது. 'தேறும் பொருள்' என்றது
அவரவர் ஆற்றற்கு ஏற்ற வினைகளை, 'பொருள்'
ஆகுபெயர்.] --
மு.வ உரை:
யாரையும் ஆராயமல் தெளியக்கூடாது; நன்றாக ஆராய்ந்த பிறகு,
அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப
வேண்டும்.
G.U.Pope:
Trust no man whom you have not fully tried,
When tested, in his prudence proved confide.
Explanation
Let (a king) choose no one without previous consideration; after he has made his choice, let him unhesitatingly select for each such duties as are appropriate.
மூலம்:
510 . தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.
பரிமேழலகர் உரை:
தேரான் தெளிவும்-அரசன் ஒருவனை ஆராயாது
தெளிதலும்; தெளிந்தான்கண் ஐயுறவும்-ஆராய்ந்து
தெளிந்தவன்மாட்டு ஐயப்படுதலும், இவ்விரண்டும்; தீரா
இடும்பை தரும்-அவனுக்கு நீங்காத துன்பத்தைக்
கொடுக்கும்.
[வினை வைத்த பின் ஒரு தவறு காணாது வைத்து
ஐயுறுமாயின், அதனை அவன் அறிந்து, 'இனி இது
நில்லாது' என்னும் கருத்தான் அவ்வினையை
நெகிழ்த்து விடும்; அதுவேயன்றிப் பகைவரால் எளிதில்
பிரிக்கவும் படும். ஆதலால் தெளிந்தான்கண் ஐயுறவும்
ஆகாதாயிற்று. தெளிவிற்கு எல்லை கூறியவாறு இவை
ஐந்து பாட்டானும், தெளியப்படாதார் இவர் என்பதூஉம்,
அவரைத் தெளிந்தால் படும் இழுக்கும், தெளிவிற்கு
எல்லையும் கூறப்பட்டன.] ---
மு.வ உரை:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிந்த
ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காத துன்பத்தைக்
கொடுக்கும்.
G.U.Pope:
Trust where you have not tried, doubt of a friend to feel,
Once trusted, wounds inflict that nought can heal.
Explanation
To make choice of one who has not been examined, and to entertain doubts respecting one who has been chosen, will produce irremediable sorrow.