மூலம்:
41 . இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.
பரிமேழலகர் உரை:
இல்வாழ்வான் என்பான் - இல்லறத்தோடு கூடி
வாழ்வான் என்று சொல்லப்படுவான்; இயல்பு உடைய
மூவர்க்கும் நல் ஆற்றின் நின்ற துணை- அற
இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் நல் ஆற்றின்
நின்ற துணை - அற இயல்பினையுடைய ஏனை
மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண்
நிலை பெற்ற துணை ஆம். (இல் என்பது ஆகுபெயர்.
என்பான் எனச் செயப்படு பொருள் வினைமுதல்
போலக் கூறப்பட்டது. ஏனை மூவர் ஆவார்,
ஆசாரியனிடத்தினின்று ஓதுதலும் விரதங்காத்தலும்
ஆகிய பிரமசரிய ஒழுக்கத்தானும், இல்லை விட்டு
வனத்தின்கண் தீயொடு சென்று மனையாள் வழிபடத்
தவஞ் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றத் துறந்த யோக
ஒழுக்கத்தானும் என இவர்; இவருள் முன்னை
இருவரையும் பிறர் மதம் மேற்கொண்டு கூறினார்.
இவர் இவ்வொழுக்க நெறிகளை முடியச்
செல்லுமளவும், அச்செலவிற்குப் பசி நோய், குளிர்
முதலியவற்றான் இடையூறுவாராமல், உண்டியும்
மருந்தும் உறையுளும் முதலிய உதவி,
அவ்வந்நெறிகளின் வழுவாமல் செலுத்துதலான் 'நல்
ஆற்றின் நின்ற துணை' என்றார்.).
மு.வ உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகின்றவன் அறத்தின்
இயல்பை உடைய மூவர்க்கும் நல்வழியில் நிலை பெற்ற
துணையாவான்.
G.U.Pope:
The men of household virtue, firm in way of good, sustain
The other orders three that rule professed maintain.
Explanation
He will be called a (true) householder, who is a firm support to the virtuous of the three orders in their good path.
மூலம்:
42 . துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.
பரிமேழலகர் உரை:
துறந்தார்க்கும்- களைகண் ஆனவரால்
துறக்கப்பட்டார்க்கும்; துவ்வாதவர்க்கும் -
நல்கூர்ந்தார்க்கும்; இறந்தார்க்கும்-ஒருவருமன்றித்
தன்பால்வந்து இறந்தார்க்கும்; இல்வாழ்வான் என்பான்
'துணை'-இல்வாழ்வானென்று சொல்லப்படுவான்
துணை (துறந்தார்க்குப் பாவம் ஒழிய அவர்
களைகணாய் நின்று வேண்டுவன செய்தலானும்,
துவ்வாதவர்க்கு உணவு முதலிய கொடுத்தலானும்,
இறந்தார்க்கு நீர்க்கடன் முதலிய செய்து
நல்லுலகின்கண் செலுத்தலானும், துணை என்றார்.
இவை இரண்டு பாட்டானும் இல்நிலை எல்லா
உபகாரத்திற்கும் உரித்தாதல் கூறப்பட்டது.).
மு.வ உரை:
துறந்தவர்க்கும் வறியவர்க்கும் தன்னிடத்தே இறந்தவர்க்கும்
இல்லறம் மேற்கொண்டு வாழ்கின்றவன் துணையாவான்.
G.U.Pope:
To anchorites, to indigent, to those who've passed away,
The man for household virtue famed is needful held and stay.
Explanation
He will be said to flourish in domestic virtue who aids the forsaken, the poor, and the dead.
மூலம்:
43 . தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.
பரிமேழலகர் உரை:
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று -
பிதிரர்,தேவர்,விருந்தினர்,சுற்றத்தார் தான் என்று
சொல்லப்பட்ட; ஐம் புலத்து ஆறு ஓம்பல் தலை - ஐந்து
இடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல்
இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறம்ஆம்.
(பிதிரராவார் படைப்புக்காலத்து அயனால்
படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம்
தென்திசை ஆதலின், 'தென்புலத்தார்' என்றார்.
தெய்வம் என்றது சாதியொருமை. 'விருந்து' என்பது
புதுமை; அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய்
வந்தார்மேல் நின்றது; அவர் இரு வகையர்: பண்டு
அறிவுண்மையின் குறித்து வந்தாரும், அஃது
இன்மையின் குறியாது வந்தாரும் என. ஒக்கல்:
சுற்றத்தார். எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று
செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்பலும்
அறனாயிற்று. 'என்ற என்பது விகாரமாயிற்று'.
'ஆங்கு' அசை. ஐவகையும் அறம் செய்தற்கு
இடனாகலின் 'ஐம்புலம்' என்றார். அரசனுக்கு
இறைப்பொருள் ஆறில் ஒன்றாயிற்று,
இவ்வைம்புலத்திற்கும் ஐந்து கூறு வேண்டுதலான்
என்பதறிக.).
மு.வ உரை:
தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்ற
ஐவகையிடத்தும் அறநெறி தவறாமல் போற்றுதல் சிறந்த
கடமையாகும்.
G.U.Pope:
The manes, God, guests kindred, self, in due degree,
These five to cherish well is chiefest charity.
Explanation
The chief (duty of the householder) is to preserve the five-fold rule (of conduct) towards the manes, the Gods, his guests, his relations and himself.
மூலம்:
44 . பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.
பரிமேழலகர் உரை:
பழி அஞ்சிப் பாத்து ஊண் வாழ்க்கை உடைத்தாயின் -
பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி,
அப்பொருளை இயல்பு உடைய மூவர்
முதலாயினார்க்கும் தென் புலத்தார் முதலிய
நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன்
இல்வாழ்க்கை உடைத்தாயின்; வழி எஞ்ஞான்றும்
எஞ்சல் இல் - அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும்
நிற்றல் அல்லது இறத்தல் இல்லை. (பாவத்தான் வந்த
பிறன் பொருளைப் பகுத்து உண்ணின், அறம்
பொருளுடையார் மேலும், பாவம் தன் மேலுமாய்
நின்று வழி எஞ்சும் ஆகலின், 'பழி அஞ்சி' என்றார்.
வாழ்வானது உடைமை வாழ்க்கை மேல்
ஏற்றப்பட்டது.).
மு.வ உரை:
பொருள் சேர்க்கும்போது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு
செய்யும்போது பகுத்து உண்பதை மேற்கொண்டால்,
அவ்வாழ்க்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
G.U.Pope:
Who shares his meal with other, while all guilt he shuns,
His virtuous line unbroken though the ages runs.
Explanation
His descendants shall never fail who, living in the domestic state, fears vice (in the acquisition of property) and shares his food (with others).
மூலம்:
45 . அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பரிமேழலகர் உரை:
இல்வாழ்க்கை அன்பும் அறனும் உடைத்தாயின் -
ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல்
செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்து
உண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின்; அது
பண்பும் பயனும் - அவ்வுடைமை அதற்குப் பண்பும்
பயனும் ஆகும். (நிரல்நிறை. இல்லாட்கும் கணவற்கும்
நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடைபோகாமையின்,
அன்புடைமை பண்பு ஆயிற்று; அறனுடைமை பயன்
ஆயிற்று. இவை மூன்று பாட்டானும் இல்நிலையில்
நின்றான் அறஞ்செய்யுமாறு கூறப்பட்டது.).
மு.வ உரை:
இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால்,
அந்த வாழ்க்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.
G.U.Pope:
If love and virtue in the household reign,
This is of life the perfect grace and gain.
Explanation
If the married life possess love and virtue, these will be both its duty and reward.
மூலம்:
46 . அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவது எவன்?
பரிமேழலகர் உரை:
இல்வாழ்க்கை அறத்தாற்றின் ஆற்றின் - ஒருவன் இல்
வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவன் ஆயின்;
புறத்தாற்றின் போஒய்ப் பெறுவது எவன் - அவன்
அதற்குப் புறம் ஆகிய நெறியில் போய்ப் பெறும் பயன்
யாது? ('அறத்தாறு' என்பது பழி அஞ்சிப் பகுத்து
உண்டலும், அன்பு உடைமையும் என மேற்சொல்லிய
ஆறு. 'புறத்தாறு' இல்லை விட்டு வனத்துச் செல்லும்
நிலை. அந்நிலையின் இது பயனுடைத்து என்பார்,
போஒய்ப் பெறுவது எவன் என்றார்.).
மு.வ உரை:
ஒருவன் அறநெறியில் இல்வாழ்க்கையைச் செலுத்தி
வாழ்வானானால், அத்தகையவன் வேறு நெறியில் சென்று
பெறத்தக்கது என்ன?
G.U.Pope:
If man in active household life a virtuous soul retain,
What fruit from other modes of virtue can he gain?
Explanation
What will he who lives virtuously in the domestic state gain by going into the other, (ascetic) state ?
மூலம்:
47 . இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.
பரிமேழலகர் உரை:
இல் வாழ்க்கை இயல்பினான் வாழ்பவன் என்பான் -
இல்வாழ்க்கைக்கண் நின்று அதற்கு உரிய இயல்போடு
கூடி வாழ்பவன் என்று சொல்லப்படுவான்;
முயல்வாருள் எல்லாம் தலை - புலன்களை விட
முயல்வார் எல்லாருள்ளும் மிக்கவன். (முற்றத்
துறந்தவர் விட்டமையின், 'முயல்வார்' என்றது
மூன்றாம் நிலையில் நின்றாரை. அந்நிலைதான் பல
வகைப்படுதலின், எல்லாருள்ளும் எனவும், முயலாது
வைத்துப் பயன் எய்துதலின், 'தலை' எனவும்
கூறினார்.).
மு.வ உரை:
அறத்தின் இயல்போடு இல்வாழ்க்கை வாழ்கின்றவன்- வாழ
முயல்கின்றவன் பல திறத்தாரிலும் மேம்பட்டு விளங்குகின்றவன்
ஆவான்.
G.U.Pope:
In nature's way who spends his calm domestic days,
'Mid all that strive for virtue's crown hath foremost place.
Explanation
Among all those who labour (for future happiness) he is greatest who lives well in the household state.
மூலம்:
48 . ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
பரிமேழலகர் உரை:
ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை -
தவஞ்செய்வாரையும் தத்தம் நெறியின்கண் ஒழுகப்
பண்ணித் தானும் தன் அறத்தின் தவறாத
இல்வாழ்க்கை; நோற்பாரின் நோன்மை உடைத்து - அத்
தவஞ்செய்வார் நிலையினும் பொறையுடைத்து. (பசி
முதலிய இடையூறு நீக்கலின் 'ஆற்றின் ஒழுக்கி'
என்றார். 'நோற்பார்' என்பது ஆகுபெயர்.நோற்பார்
நிலைக்கு அவர்தம்மை உற்ற நோயல்லது இல்வாழ்வார்
நிலைபோல் பிறரை உற்ற நோயும் பொறுத்தல்
இன்மையின், 'நோற்பாரின் நோன்மையுடைத்து'
என்றார்.).
மு.வ உரை:
மற்றவரையும் அறநெறியில் ஒழுகச் செய்து, தானும் அறம் தவறாத
இல்வாழ்க்கை, தவம் செய்வாரைவிட மிக்க வல்லமை உடைய
வாழ்க்கையாகும்.
G.U.Pope:
Others it sets upon their way, itself from virtue ne'er declines;
Than stern ascetics' pains such life domestic brighter shines.
Explanation
The householder who, not swerving from virtue, helps the ascetic in his way, endures more than those who endure penance.
மூலம்:
49 . அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்லாயின் நன்று.
பரிமேழலகர் உரை:
அறன் எனப்பட்டது இல்வாழ்க்கை - இருவகை
அறத்தினும் நூல்களான் அறன் என்று சிறப்பித்துச்
சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அஃதும் பிறன்
பழிப்பது இல்லாயின் நன்று - ஏனைத் துறவறமோ
எனின், அதுவும் பிறனால் பழிக்கப்படுவது
இல்லையாயின், அவ்வாழ்க்கையோடு ஒரு
தன்மைத்தாக நன்று. (ஏகாரம் பிரிநிலைக்கண் வந்தது.
இதனால் பிரிக்கப்பட்டது துறவறம் ஆதலின், 'அஃது'
என்னும் சுட்டுப்பெயர் அதன் மேல் நின்றது. 'பிறன்
பழிப்பது' என்றது கூடாவொழுக்கத்தை. துறவறம்
மனத்தையும் பொறிகளையும் ஒறுத்து அடக்கவல்ல
அருமையுடைத்தாய வழியே, அவற்றை ஒறுக்க
வேண்டாது ஐம்புல இன்பங்கள் ஆரத்துய்க்கும்
மென்மையுடைய இல்வாழ்க்கையோடு அறம் என
ஒருங்கு எண்ணப்படுவது என்றவாறு ஆயிற்று. இவை
நான்கு பாட்டானும் இல்நிலையே பயனுடைத்து என
இதன் சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும்;
அதுவும் மற்றவன் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால்
மேலும் நன்மையாகும்.
G.U.Pope:
The life domestic rightly bears true virtue's name;
That other too, if blameless found, due praise may claim.
Explanation
The marriage state is truly called virtue. The other state is also good, if others do not reproach it.
மூலம்:
50 . வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
பரிமேழலகர் உரை:
வாழ்வாங்கு வையத்துள் வாழ்பவன் - இல்லறத்தோடு
கூடி வாழும் இயல்பினால் வையத்தின்கண் வாழ்பவன்;
வான் உறையும் தெய்வத்துள் வைக்கப்படும்-
வையத்தானே எனினும் வானின்கண் உறையும்
தேவருள் ஒருவனாக வைத்து நன்கு மதிக்கப்படும். பின்
தேவனாய் அவ்வறப்பயன் நுகர்தல் ஒருதலையாகலின்,
'தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார். இதனான்
இல்நிலையது மறுமைப்பயன் கூறப்பட்டது. இம்மைப்
பயன் புகழ், அதனை இறுதிக்கண் கூறுப.
(அதி.24.புகழ்).
மு.வ உரை:
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கின்றவன்,
வானுலகத்தில் உள்ள தெய்வமுறையில் வைத்து மதிக்கப்படுவான்.
G.U.Pope:
Who shares domestic life, by household virtues graced,
Shall, mid the Gods, in heaven who dwell, be placed.
Explanation
He who on earth has lived in the conjugal state as he should live, will be placed among the Gods who dwell in heaven.