மூலம்:
481 . பகல்வெல்லும் கூகையைக் காக்கை: இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
பரிமேழலகர் உரை:
கூகையைக் காக்கை பகல் வெல்லும் - தன்னின்
வலிதாய கூகையைக் காக்கை பகற்பொழுதின் கண்
வெல்லாநிற்கும்; இகல் வெல்லும் வேந்தர்க்குப்
பொழுது வேண்டும் - அது போலப் பகைவரது இல்லை
வெல்லக் கருதும் அரசர்க்கு அதற்கு ஏற்ற காலம்
இன்னி அமையாது.
[எடுத்துக் காட்டு உவமை, காலம் அல்லாவழி
வலியால் பயன் இல்லை என்பது விளக்கி நின்றது.
இனிக் காலம் ஆவது, வெம்மையும் குளிர்ச்சியும்
தம்முள் ஒத்து, நோய் செய்யாது, தண்ணீரும் உணவும்
முதலிய உடைத்தாய்த் தானை வருந்தாது செல்லும்
இயல்பினதாம். இதனால் காலத்தது சிறப்புக்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
காக்கை தன்னைவிட வலிய கோட்டானைப் பகலில் வென்றுவிடும்;
அதுபோல் பகையை வெல்லக் கருதும் அரசர்க்கும் அதற்கு ஏற்ற
காலம் வேண்டும்
G.U.Pope:
A crow will conquer owl in broad daylight;
The king that foes would crush, needs fitting time to fight.
Explanation
A crow will overcome an owl in the day time; so the king who would conquer his enemy must have (a suitable) time.
மூலம்:
482 . பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு.
பரிமேழலகர் உரை:
பருவத்தோடு ஒட்ட ஒழுகல் - அரசன் காலத்தோடு
பொருந்த வினைசெய்து ஒழுகுதல்; திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு - ஒருவர்கண்ணும் நில்லாது
நீங்கும் செல்வத்தைத் தன்கண் நீங்காமல் பிணிக்கும்
கயிறாம்.
[காலத்தோடு பொருந்துதல் - காலம் தப்பாமல்
செய்தல். 'தீராமை' என்றதனால், தீர்தல் மாலையது
என்பது பெற்றாம். வினை வாய்த்து வருதலான்,
அதனின் ஆகும் செல்வம் எஞ்ஞான்றும் நீங்காது
என்பதாம்.] ---
மு.வ உரை:
காலத்தோடு பொருந்துமாறு ஆராய்ந்து நடத்தல் (நில்லாத இயல்பு
உடைய) செல்வத்தை நீங்காமல் நிற்குமாறு கட்டும் கயிறாகும்.
G.U.Pope:
The bond binds fortune fast is ordered effort made,
Strictly observant still of favouring season's aid.
Explanation
Acting at the right season, is a cord that will immoveably bind success (to a king).
மூலம்:
483 . அருவினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்?
பரிமேழலகர் உரை:
அருவினை என்ப உளவோ-அரசரால் செய்தற்கு அரிய
வினைகள் என்று சொல்லப்படுவன உளவோ;
கருவியான் காலம் அறிது செயின் - அவற்றை
முடித்தற்கு ஏற்ற கருவிகளுடனே செய்தற்கு ஆம்
காலம் அறிந்து செய்வராயின்
[கருவிகளாவன: மூவகை ஆற்றலும் நால்வகை
உபாயங்களுமாம். 'அவை உளவாய் வழியும் காலம்
வேண்டும்' என்பது அறிவித்தற்குக் 'கருவியான்'
என்றார். எல்லா வினையும் எளிதில் முடியும்
என்பதாம்.] ---
மு.வ உரை:
(செய்யும் செயலை முடிப்பதற்கு வேண்டிய) கருவிகளுடன் ஏற்ற
காலத்தையும் அறிந்து செய்தால், அரிய செயல்கள் என்பவை
உண்டோ?
G.U.Pope:
Can any work be hard in very fact,
If men use fitting means in timely act?
Explanation
Is there anything difficult for him to do, who acts, with (the right) instruments at the right time ?
மூலம்:
484 . ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தால் செயின்.
பரிமேழலகர் உரை:
ஞாலம் கருதினும் கைகூடும் - ஒருவன் ஞாலம்
முழுவதும் தானே ஆளக் கருதினானாயினும் அஃது
அவன் கையகத்ததாம்; காலம் கருதி இடத்தான் செயின்
- அதற்குச் செய்யும் வினையைக் காலம் அறிந்து
இடத்தோடு பொருந்தச் செய்வானாயின்.
['இடத்தான்' என்பதற்கு, மேல் 'கருவியான்'
என்பதற்கு உரைத்தாங்கு உரைக்க; கைகூடாதனவும்
கைகூடும் என்பதாம். இவை மூன்று பாட்டானும்
காலம் அறிதற் பயன் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
(செயலை முடிப்பதற்கு ஏற்ற) காலத்தை அறிந்து இடத்தோடு
பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் எனக் கருதினாலும்
கைகூடும்.
G.U.Pope:
The pendant world's dominion may be won,
In fitting time and place by action done.
Explanation
Though (a man) should meditate (the conquest of) the world, he may accomplish it if he acts in the right time, and at the right place.
மூலம்:
485 . காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர்.
பரிமேழலகர் உரை:
கலங்காது ஞாலம் கருதுபவர் - தப்பாது ஞாலம்
எல்லாம் கொள்ளக் கருதும் அரசர்; காலம் கருதி
இருப்பர் - தம் வலி மிகுமாயினும், அது கருதாது,
அதற்கு ஏற்ற காலத்தையே கருதி அது வருந்துணையும்
பகைமேல் செல்லார்.
[தப்பாமை: கருதிய வழியே கொள்ளுதல். வலி மிகுதி
'காலம் கருதி' என்றதனால் பெற்றாம். அது கருதாது
செல்லின் இருவகைப் பெருமையும் தேய்ந்து
வருத்தமும் உறுவராகலின், 'இருப்பர்' என்றார்.
இருத்தலாவது: நட்பாக்கல், பகையாக்கல், மேற்சேறல்,
இருத்தல், பிரித்தல், கூட்டல் என்னும் அறுவகைக்
குணங்களுள் மேற்செலவிற்கு மாறாயது. இதனாற்
காலம் வாராவழிச் செய்வது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
உலகத்தைக் கொள்ளக் கருதுகின்றவர் அதைப்பற்றி எண்ணிக்
கலங்காமல் அதற்கு ஏற்ற காலத்தைக் கருதிக் கொண்டு
பொறுத்திருப்பர்.
G.U.Pope:
Who think the pendant world itself to subjugate,
With mind unruffled for the fitting time must wait.
Explanation
They who thoughtfully consider and wait for the (right) time (for action), may successfully meditate (the conquest of) the world.
மூலம்:
486 . ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து.
பரிமேழலகர் உரை:
ஊக்கம் உடையான் ஒடுக்கம் - வலிமிகுதி உடைய
அரசன் பகை மேற்செல்லாது காலம் பார்த்திருக்கின்ற
இருப்பு; பொரு தகர் தாக்கற்குப் பேரும் தகைத்து -
பொருகின்ற தகர் தன் பகைகெடப் பாய்தற்பொருட்டுப்
பின்னே கால் வாங்கும் தன்மைத்து.
[உவமைக்கண் 'தாக்கற்கு' என்றதனால்,
'பொருளினும் வென்றி எய்தற்பொருட்டு' என்பது
கொள்க. இதனான் அவ்விருப்பின் சிறப்புக்
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
ஊக்கம் மிகுந்தவன் (காலத்தை எதிர்பார்த்து) அடங்கியிருத்தல்,
போர் செய்யும் ஆட்டுக்கடா தன் பகையைத் தாக்குவதற்காகப்
பின்னே கால்வாங்குதலைப் போன்றது.
G.U.Pope:
The men of mighty power their hidden energies repress,
As fighting ram recoils to rush on foe with heavier stress.
Explanation
The self-restraint of the energetic (while waiting for a suitable opportunity), is like the drawing back of a fighting-ram in order to butt.
மூலம்:
487 . பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.
பரிமேழலகர் உரை:
ஒள்ளியவர் - அறிவுடைய அரசர்; ஆங்கே பொள்ளெனப்
புறம் வேரார் - பகைவர் மிகை செய்த பொழுதே
விரைவாக அவரறியப் புறத்து வெகுளார்; காலம்
பார்த்து உள் வேர்ப்பர் - தாம் அவரை வெல்லுதற்கு
ஏற்ற காலத்தினை அறிந்து அது வரும் துணையும்
உள்ளே வெகுள்வர்.
['பொள்ளென' என்பது குறிப்பு மொழி. 'வேரார்',
'வேர்ப்பர்' எனக் காரணத்தைக் காரியமாக உபசரித்தார்;
அறிய வெகுண்டுழித் தம்மைக் காப்பாராகலின், 'புறம்
வேரார்' என்றும், வெகுளி ஒழிந்துழிப் பின்னும் மிகை
செய்யாமல் அடக்குதல் கூடாமையின் 'உள் வேர்ப்பர்'
என்றும் கூறினார்.] ---
மு.வ உரை:
அறிவுடையவர், (பகைவர் தீங்கு செய்த) அப்பொழுதே உடனே
புறத்தில் சினம் கொள்ளமாட்டார்;(வெல்வதற்கு ஏற்ற) காலம்
பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.
G.U.Pope:
The glorious once of wrath enkindled make no outward show,
At once; they bide their time, while hidden fires within them glow.
Explanation
The wise will not immediately and hastily shew out their anger; they will watch their time, and restrain it within.
மூலம்:
488 . செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை.
பரிமேழலகர் உரை:
செறுநரைக் காணின் சுமக்க - தாம் வெல்லக்கருதிய
அரசர் பகைவருக்கு இறுதிக் காலம் வருந்துணையும்
அவரைக் கண்டால் பணிக; இறுவரை காணின் தலை
கிழக்கு ஆம் - பணியவே, அக்காலம் வந்திறும் வழி
அவர் தகைவின்றி இறுவர்.
['பகைமை ஒழியும் வகை மிகவும் தாழ்க' என்பார்,
'சுமக்க' என்றும்; அங்ஙனம் தாழவே, அவர் தம்மைக்
காத்தல் இகழ்வர் ஆகலின் தப்பாமல் கெடுவர் என்பார்,
'அவர் தலை கீழாம்' என்றும் கூறினார்.
தலைமேற்கொண்டதொரு பொருளைத் தள்ளுங்கால்,
அது தன் தலைகீழாக விழுமாகலின், அவ்வியல்பு
பெறப்பட்டது. இவை இரண்டு பாட்டானும் இருக்கும்
வழிப் பகைமை தோன்றாமல் இருக்க என்பது
கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
பகைவரைக் கண்டால் பொறுத்துச் செல்ல வேண்டும்; அப்
பகைவர்க்கு முடிவுகாலம் வந்தபோது அவருடைய தலைகீழே
விழும்.
G.U.Pope:
If foes' detested form they see, with patience let them bear;
When fateful hour at last they spy,- the head lies there.
Explanation
If one meets his enemy, let him show him all respect, until the time for his destruction is come; when that is come, his head will be easily b rought low.
மூலம்:
489 . எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற்கு அரிய செயல்.
பரிமேழலகர் உரை:
எய்தற்கு அரியது இயைந்தக்கால் - பகையை வெல்லக்
கருதும் அரசர், தம்மால் எய்துதற்கு அரிய காலம் வந்து
கூடியக்கால்; அந்நிலையே செய்தற்கு அரிய செயல் -
அது கழிவதற்கு முன்பே அது கூடாவழித் தம்மாற்
செய்தற்கு அரிய வினைகளைச் செய்க.
[ஆற்றல் முதலியவற்றால் செய்து
கொள்ளப்படாமையின் 'எய்தற்கு அரியது' என்றும்,
அது தானே வந்து இயைதல் அரிதாகலின்,
'இயைந்தக்கால்' என்றும், இயைந்தவழிப் பின்
நில்லாது ஓடுதலின், 'அந்நிலையே' என்றும், அது
பெறாவழிச் செய்யப்படாமையின் 'செய்தற்கு அரிய'
என்றும் கூறினார். இதனால் காலம் வந்துழி விரைந்து
செய்க என்பது கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
கிடைத்தற்கரிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப்
பயன்படுத்திக்கொண்டு அப்போதே செய்தற்கரிய செயல்களைச்
செய்யவேண்டும்.
G.U.Pope:
When hardest gain of opportunity at last is won,
With promptitude let hardest deed be done.
Explanation
If a rare opportunity occurs, while it lasts, let a man do that which is rarely to be accomplished (but for such an opportunity).
மூலம்:
490 . கொக்குஒக்க கூம்பும் பருவத்து மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து.
பரிமேழலகர் உரை:
கூம்பும் பருவத்துக் கொக்கு ஒக்க -
வினைமேற்செல்லாதிருக்கும் காலத்துக் கொக்கு
இருக்குமாறு போல இருக்க; மற்றுச் சீர்த்த இடத்து
அதன் குத்து ஒக்க - மற்றைச் செல்லும் காலம்
வாய்த்தவழி, அது செய்து முடிக்குமாறு போலத்
தப்பாமல் செய்து முடிக்க.
[மீன் கோடற்கு இருக்கும்வழி, அது வந்து எய்தும்
துணையும் முன் அறிந்து தப்பாமைப்பொருட்டு
உயிரில்லது போன்று இருக்கும் ஆகலானும்,
எய்தியவழிப் பின் தப்புவதற்கு முன்பே விரைந்து
குத்தும் ஆகலானும், இருப்பிற்கும் செயலிற்கும்
கொக்கு உவமையாயிற்று. 'கொக்கு ஒக்க'
என்றாராயினும், 'அது கூம்புமாறு போலக்
கூம்புக'என்றும், 'குத்து ஒக்க' என்றாராயினும் 'அது
குத்துமாறு போலக குத்துக' என்றும் உரைக்கப்படும்.
இது தொழிலுவமம். ஆகலின் உவமை முகத்தான்
இருப்பிற்கும் செயலிற்கும் இலக்கணம்
கூறியவாறாயிற்று.] ---
மு.வ உரை:
பொறுத்திருக்கும் காலத்தில் கொக்குப்போல் அமைதியா
இருக்கவேண்டும்; காலம் வாய்த்தபோது அதன் குத்துப் போல்
தவறாமல் செய்து முடிக்கவேண்டும்.
G.U.Pope:
As heron stands with folded wing, so wait in waiting hour;
As heron snaps its prey, when fortune smiles, put forth your power.
Explanation
At the time when one should use self-control, let him restrain himself like a heron; and, let him like it, strike, when there is a favourable opportunity.