மூலம்:
471 . வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல்.
பரிமேழலகர் உரை:
வினை வலியும் - தான் செய்யக்கருதிய
வினைவலியையும்; தன் வலியும் - அதனைச் செய்து
முடிக்கும் தன் வலியையும்; மாற்றான் வலியும் -
அதனை விலக்கலுறும் மாற்றான் வலியையும்;
துணைவலியும் - இருவர்க்குந் துணையாவார்
வலியையும், தூக்கிச் செயல் - சீர்தூக்கித் தன்
வலிமிகுமாயின் அவ்வினையைச் செய்க.
[இந் நால்வகை வலியுள் வினைவலி அரண்
முற்றலும் கோடலும் முதலிய தொழிலானும், ஏனைய
மூவகை ஆற்றலானும் கூறுபடுத்துத் தூக்கப்படும்.
'தன்வலி மிகவின்கண் செய்க' என்ற விதியால்,
தோற்றல் ஒரு தலையாய குறைவின் கண்ணும்,
வேறல் ஐயமாய ஒப்பின் கண்ணும் ஒழிக என்பது
பெற்றாம்.] ---
மு.வ உரை:
செயலின் வலிமையும், தன் வலிமையும், பகைவனுடைய
வலிமையும், இருவர்க்கும் துணையானவரின் வலிமையும்
ஆராய்ந்து செய்யவேண்டும்.
G.U.Pope:
The force the strife demands, the force he owns, the force of foes,
The force of friends; these should he weigh ere to the war he goes.
Explanation
Let (one) weigh well the strength of the deed (he purposes to do), his own strength, the strength of his enemy, and the strength of the allies (of both), and then let him act.
மூலம்:
472 . ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
பரிமேழலகர் உரை:
ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும்
வினையையும் அதற்கு அறிய வேண்டுவதாய
வலியையும் அறிந்து; அதன்கண் தங்கிச் செல்வார்க்கு -
எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன் கண்
வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது
இல் - முடியாத பொருள் இல்லை.
['ஒல்வது' எனவே வினைவலி முதலாய மூன்றும்
அடங்குதலின், ஈண்டு 'அறிவது' என்றது
துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர்
என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின்
பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும்
பயனும் கூறப்பட்டன.] ---
மு.வ உரை:
தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய
வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு
முடியாதது ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை.
G.U.Pope:
Who know what can be wrought, with knowledge of the means, on this,
Their mind firm set, go forth, nought goes with them amiss.
Explanation
There is nothing which may not be accomplished by those who, before they attack (an enemy), make themselves acquainted with their own ability, and with whatever else is (needful) to be known, and apply themselves wholly to their object.
மூலம்:
473 . உடைத்தம் வலிஅறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.
பரிமேழலகர் உரை:
உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய
தம் வலியின் அளவறியாதே: ஊக்கத்தின் ஊக்கி - மன
எழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத்
தொடங்கி; இடைக்கண் முரிந்தார் பலர் - அவர்
அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே
கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
['உடைய' என்பது அவாய் நின்றமையின், செயப்படு
பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும்
சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார்
பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக
என்பது எஞ்சி நின்றது.] ---
மு.வ உரை:
தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால்
முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல்
அழிந்தவர் பலர்.
G.U.Pope:
Ill-deeming of their proper powers, have many monarchs striven,
And midmost of unequal conflict fallen asunder riven.
Explanation
There are many who, ignoran t of their (want of) power (to meet it), have haughtily set out to war, and broken down in the midst of it.
மூலம்:
474 . அமைந்தாங்கு ஒழுகான் அளவுஅறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்.
பரிமேழலகர் உரை:
ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு
பொருந்தி ஒழுகுவதும் செய்யாது; அளவு அறியான் -
தன் வலியளவு அறிவதும் செய்யாது; தன்னை
வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த
அரசன்; விரைந்து கெடும் - விரையக் கெடும்
[காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்'
என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய்
ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும்
இரண்டனுள் ஒன்றன்றே அயல் வேந்தரோடு
செயற்பாலது; இவையன்றித் தான் மெலியனாய்
வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும்
நிலையின்மையின், 'விரைந்து கெடும்' என்றார்.
இவை இரண்டு பாட்டானும் தன்வலி அறியாவழிப்படும்
இழுக்குக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின்
அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக்
கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்.
G.U.Pope:
Who not agrees with those around, no moderation knows,
In self-applause indulging, swift to ruin goes.
Explanation
He will quickly perish who, ignorant of his own resources flatters himself of his greatness, and does not live in peace with his neighbours.
மூலம்:
475 . பீலிபெய் சாகாடும் அச்சுஇறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்.
பரிமேழலகர் உரை:
பீலிபெய் சாகாடும் அச்சு இறும் - பீலியேற்றிய
சகடமும் அச்சு முரியும்; அப்பண்டம் சால மிகுத்துப்
பெயின் - அப்பீலியை அது பொறுக்கும் அளவின்றி
மிகுத்து ஏற்றின்.
[உம்மை சாகாட்டது வலிச்சிறப்பேயு மன்றிப் பீலியது
நொய்மைச் சிறப்பும் தோன்ற நின்றது. 'இறும்'
என்னுஞ் சினைவினை முதல்மேல் நின்றது. 'எளியர்'
என்று பலரோடு பகைகொள்வான். தான் வலியனே
ஆயினும் அவர் தொக்க வழி வலியழியும்; என்னும்
பொருள் தோன்ற நின்றமையின், இது பிறிது மொழிதல்
என்னும் அலங்காரம். இதனை 'நுவலா நுவற்சி'
என்பாரும், 'ஒட்டு' என்பாரும் உளர். ஒருவர்
தொகுவார் பலரோடு பகைகொள்ளற்க என்றமையின்,
இதனால் மாற்றான் வலியும் அவன் துணை வலியும்
அறியா வழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
மயிலிறகு ஏற்றிய வண்டியே ஆனாலும், அந்தப் பண்டமும்
(அளவோடு ஏற்றாமல்) அளவுகடந்து மிகுதியாக ஏற்றினால் அச்சு
முறியும்.
G.U.Pope:
With peacock feathers light, you load the wain;
Yet, heaped too high, the axle snaps in twain.
Explanation
The axle tree of a bandy, loaded only with peacocks' feathers will break, if it be greatly overloaded.
மூலம்:
476 . நுனிக்கொம்பர் ஏறினார் அஃதுஇறந்து ஊக்கின்
உயிர்க்குஇறுதி யாகி விடும்.
பரிமேழலகர் உரை:
கொம்பர் நுனி ஏறினார் அஃது இறந்து ஊக்கின் -
ஒருமரக் கோட்டினது நுனிக்கண்ணே ஏறி நின்றார், தம்
ஊக்கத்தால் அவ்வளவினைக் கடந்து மேலும் ஏற
ஊக்குவாராயின்; உயிர்க்கு இறுதி ஆகிவிடும் -
அவ்வூக்கம் அவர் உயிர்க்கு இறுதியாய் முடியும்.
['நுனிக் கொம்பர்' என்பது 'கடைக்கண்'
என்பதுபோலப் பின் முன்னாகத் தொக்க ஆறாம்
வேற்றுமைத் தொகை. பன்மை அறிவின்மைபற்றி
இழித்தற்கண் வந்தது. இறுதிக்கு ஏது ஆவதனை
'இறுதி' என்றார். 'பகைமேற் செல்வான் தொடங்கித்
தன்னால் செல்லலாமளவும் சென்று நின்றான், பின்
அவ்வளவின் நில்லாது மன எழுச்சியான் மேலும்
செல்லுமாயின், அவ்வெழுச்சி வினை முடிவிற்கு
ஏதுவாகாது அவனுயிர் முடிவிற்கு ஏதுவாம்' என்னும்
பொருள்தோன்ற நின்றமையின், இதுவும் மேலை
அலங்காரம். 'அளவு அறிந்து நிற்றல் வேண்டும்'
என்றமையின், இதனான் வினைவலி அறியாவழிப்படும்
இழுக்குக் கூறப்பட்டது.] ---
மு.வ உரை:
ஒரு மரத்தின் நுனிக்கொம்பில் ஏறியவர், அதையும் கடந்து
மேலும் ஏற முனைந்தால், அவருடைய உயிர்க்கு முடிவாக
நேர்ந்துவிடும்
G.U.Pope:
Who daring climbs, and would himself upraise
Beyond the branch's tip, with life the forfeit pays.
Explanation
There will be an end to the life of him who, having climbed out to the end of a branch, ventures to go further.
மூலம்:
477 . ஆற்றின் அளவறிந்து ஈக: அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி.
பரிமேழலகர் உரை:
ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியானே
தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு
ஏற்ப ஈக; அது பொருள்போற்றி வழங்கும் நெறி -
அங்ஙனம் ஈதல் பொருகாப் பேணிக் கொண்டொழுகும்
நெறியாம்.
[ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் ''வகுத்தலும்
வல்லதரசு'' (குறள்.385) என்புழி உரைத்தாம்.
எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை
நான்கு கூறாக்கி, அவற்றுள் இரண்டனைத் தன்
செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது
நீக்குதற் பொருட்டு வைப்பாக்கி, நின்ற ஒன்றனை
ஈதல், பிறரும், ''வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்''
(திரிகடுகம், 21) என்றார். பேணிக் கொண்டு ஒழுகுதல்:
ஒருவரோடு நட்பில்லாத அதனை தம்மோடு
நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு
சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.] ---
மு.வ உரை:
தக்க வழியில் பிறர்க்குக் கொடுக்கும் அளவு அறிந்து
கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும்
வழியாகும்.
G.U.Pope:
With knowledge of the measure due, as virtue bids you give!
That is the way to guard your wealth, and seemly live.
Explanation
Let a man know the measure of his ability (to give), and let him give accordingly; such giving is the way to preserve his property.
மூலம்:
478 . ஆகுஆறு அளவுஇட்டிது ஆயினும் கேடுஇல்லை
போகுஆறு அகலாக் கடை.
பரிமேழலகர் உரை:
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை -
அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு
சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்;
போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறி அளவு
அதனின் பெருகாதாயின்.
['இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின்
தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள்' என்பது
அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும்
கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள்
ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.] ---
மு.வ உரை:
பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும்
வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை.
G.U.Pope:
Incomings may be scant; but yet, no failure there,
If in expenditure you rightly learn to spare.
Explanation
Even though the income (of a king) be small, it will not cause his (ruin), if his outgoings be not larger than his income.
மூலம்:
479 . அளவுஅறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும்.
பரிமேழலகர் உரை:
அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை - தனக்குள்ள
பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப
வாழமாட்டாதான் வாழ்க்கைகள்; உளபோல இல்லாகித்
தோன்றாக் கெடும் - உள்ளன போலத் தோன்றி,
மெய்ம்மையின் இல்லையாய்ப் பின்பு அத்தோற்றமும்
இன்றிக் கெட்டுவிடும்.
[அவ்வெல்லைக்கு ஏற்ப வாழ்தலாவது: அதனின்
சுருக்கக் கூடாதாயின் ஒப்பவாயினும் ஈத்தும் துய்த்தும்
வாழ்தல். தொடக்கத்தில் கேடு வெளிப்படாமையின்,
'உளபோலத் தோன்றி' என்றார். முதலிற் செலவு
மிக்கால் வரும் ஏதம் கூறியவாறு] ---
மு.வ உரை:
பொருளின் அளவு அறிந்து வாழாதவனுடைய வாழ்க்கை (பல
வளமும்) இருப்பது போல் தோன்றி இல்லாமல் மறைந்து
கெட்டுவிடும்.
G.U.Pope:
Who prosperous lives and of enjoyment knows no bound,
His seeming wealth, departing, nowhere shall be found.
Explanation
The prosperity of him who lives without knowing the measure (of his property), will perish, even while it seems to continue.
மூலம்:
480 . உளவரை தூக்காத ஒப்புரவு ஆண்மை
வளவரை வல்லைக் கெடும்.
பரிமேழலகர் உரை:
உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள
அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்;
வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின்
எல்லை விரையக் கெடும்
['ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான்,
இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை
ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள்
வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.] --
-
மு.வ உரை:
தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும்
ஒப்புரவினால், ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில்
கெடும்.
G.U.Pope:
Beneficence that measures not its bound of means,
Will swiftly bring to nought the wealth on which it leans.
Explanation
The measure of his wealth will quickly perish, whose liberality weighs not the measure of his property.