திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       பொருட்பால்                       அரசியல்

              அதிகாரம்: 46                   சிற்றினஞ்சேராமை
451. சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.

மு.வ உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

452. நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.

மு.வ உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்

453. மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.

மு.வ உரை:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன் என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால் ஏற்படும்.

454. மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.

மு.வ உரை:
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி (உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில் உள்ளதாகும்.

455. மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.

மு.வ உரை:
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.

456. மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.

மு.வ உரை:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும் புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.

457. மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.

மு.வ உரை:
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை (அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.

458. மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.

மு.வ உரை:
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.

459. மனநலத்தின் ஆகும் மறுமை:மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.

மு.வ உரை:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும் இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.

460. நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை: தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

மு.வ உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.

------


Back to Top