மூலம்:
451 . சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்.
பரிமேழலகர் உரை:
பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய
இனத்தை அஞ்சாநிற்கும்; சிறுமை தான் சுற்றமாச்
சூழ்ந்துவிடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த
பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித்
துணியும்.
(தத்தம் அறிவு திரியுமாறும், அதனால் தமக்கு வரும்
துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர்
என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது
நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத்
துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள்
பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம்
பெரியோர்க்கு ஆகாது' என்பது கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின்
இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.
G.U.Pope:
The great of soul will mean association fear;
The mean of soul regard mean men as kinsmen dear.
Explanation
(True) greatness fears the society of the base; it is only the low - minded who will regard them as friends.
மூலம்:
452 . நிலத்துஇயல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்துஇயல்பது ஆகும் அறிவு.
பரிமேழலகர் உரை:
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான்
சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை
திரிந்து அந்நிலத்தின் தன்மைதாம்; மாந்தர்க்கு இனத்து
இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் - அதுபோல
மாந்தர்க்ருத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே
அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின்
தன்மைத்தாம். --
(எடுத்துக்காட்டு உவமை. விசும்பின்கண் தன்
தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம்,
சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி
நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிற
இனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள்
திரியும் என, இதனான் அதனது காரணங்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின்
தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின்
இயல்பினை உடையதாகும்
G.U.Pope:
The waters' virtues change with soil through which they flow;
As man's companionship so will his wisdom show.
Explanation
As water changes (its nature), from the nature of the soil (in which it flows), so will the character of men resemble that of their associates.
மூலம்:
453 . மனத்தான்ஆம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தான்ஆம்
இன்னான் எனப்படும் சொல்.
பரிமேழலகர் உரை:
மாந்தர்க்கு உணர்ச்சி மனத்தான் ஆம் - மாந்தர்க்குப்
பொது உணர்வு தம் மனம் காரணமாக உண்டாம்;
இன்னான் எனப்படும்சொல் இனத்தான் ஆம் - 'இவன்
இத்தன்மையன்' என்று உலகத்தாரான் சொல்லப்படும்
சொல்இனம் காரணமாக உண்டாம்.
(இயற்கையாய புலன் உணர்வு மாத்திரத்திற்கு இனம்
வேண்டாமையின், அதனை 'மனத்தான் ஆம்' என்றும்,
செயற்கையாய விசேட உணர்வுபற்றி நல்லன் என்றாகத்
தீயன் என்றாக நிகழும் சொற்கு இனம் வேண்டுதலின்,
அதனை 'இனத்தான் ஆம்' என்றும் கூறினார்.
உவமையளவை கொள்ளாது. 'அத் திரிபும் மனத்தான்
ஆம்' என்பாரை நோக்கி, இதனான் அது மறுத்துக்
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மக்களுக்கு இயற்கையறிவு மனத்தால் ஏற்படும்; இப்படிப்பட்டவன்
என்று உலகத்தாரால் மதிக்கப்படும் சொல் சேர்ந்த இனத்தால்
ஏற்படும்.
G.U.Pope:
Perceptions manifold in men are of the mind alone;
The value of the man by his companionship is known.
Explanation
The power of knowing is from the mind; (but) his character is from that of his associates.
மூலம்:
454 . மனத்து உளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துஉள தாகும் அறிவு.
பரிமேழலகர் உரை:
அறிவு - அவ் விசேட உணர்வு; ஒருவற்கு மனத்து
உளது போலக் காட்டி - ஒருவற்கு மனத்தின் கண்ணே
உளதாவது போலத் தன்னைப் புலப்படுத்தி; இனத்து
உளதாகும் - அவன் சேர்ந்த இனத்தின்கண்ணே
உளதாம்.
(மெய்ம்மை நோக்காமுன் மனத்துளது போன்று
காட்டியும், பின் நோக்கிய வழிப் பயின்ற
இனத்துளதாயும் இருத்தலின், 'காட்டி' என இறந்த
காலத்தால் கூறினார். 'விசேட உணர்வுதானும்
மனத்தின்கண்ணே அன்றேயுளதாவது?' என்பாரை
நோக்கி, ஆண்டுப் புலப்படும் துணையே உள்ளது;
அதற்கு மூலம் இனம் என்பது இதனான் கூறப்பட்டது.)
---
மு.வ உரை:
ஒருவனுக்குச் சிறப்பறிவு மனத்தில் உள்ளது போலக்காட்டி
(உண்மையாக நோக்கும் போது) அவன் சேர்ந்த இனத்தில்
உள்ளதாகும்.
G.U.Pope:
Man's wisdom seems the offspring of his mind;
'Tis outcome of companionship we find.
Explanation
Wisdom appears to rest in the mind, but it really exists to a man in his companions.
மூலம்:
455 . மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனம்தூய்மை தூவா வரும்.
பரிமேழலகர் உரை:
மனம் தூய்மை செய்வினை தூய்மை இரண்டும் -
(அவ்விசேட உணர்வு புலப்படுவதற்கு இடனாய) மனம்
தூயனாதல் தன்மையும் செய்யும் வினை தூயனாதல்
தன்மையும் ஆகிய இரண்டும்; இனம் தூய்மை தூவா
வரம் - ஒருவற்கு இனம் தூயனாதல் தன்மை பற்றுக்
கோடாக உளவாம்.
(மனம் தூயனாதல் ஆவது, விசேட உணர்வு
புலப்படுமாறு இயற்கையாய அறியாமையின் நீங்குதல்.
செய்வினை தூயனாதல் ஆவது, மொழிமெய்களால
செய்யும் நல்வினை உடையனாதல். தூவென்பது
அப்பொருட்டாதல் "தூவறத் துறந்தாரை" (கலித்.
நெய்த. 1) என்பதனானும் அறிக. ஒருவன் இனம்
தூயனாகவே அதனோடு பயிற்சி வயத்தான் மனம்
தூயனாய் அதன்கண் விசேட உணர்வு புலப்பட்டு,
அதனால் சொல்லும் செயலும் தூயனாம் என, இதனான்
இனத்து உள்ளவாம் ஆறு கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மனத்தின் தூய்மை, செய்யும் செயலின் தூய்மை ஆகிய
இவ்விரண்டும் சேர்ந்த இனத்தின் தூய்மையைப் பொறுத்தே ஏற்படும்.
G.U.Pope:
Both purity of mind, and purity of action clear,
Leaning no staff of pure companionship, to man draw near.
Explanation
Chaste company is the staff on which come, these two things, viz, purity of mind and purity of conduct.
மூலம்:
456 . மனம்தூயார்க்கு எச்சம்நன் றாகும் இனம்தூயார்க்கு
இல்லைநன்று ஆகா வினை.
பரிமேழலகர் உரை:
மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் . மனம்
தூயராயினார்க்கு மக்கட்பேறு நன்று ஆகும்; இனம்
தூயார்க்கு நன்று ஆகா வினை இல்லை - இனம்
தூயார்க்கு நன்றாகாத வினையாதும் இல்லை.
(காரியம் காரணத்தின் வேறுபடாமையின் 'எச்சம்,
நன்று ஆகும்' என்றும், நல்லினத்தோடு எண்ணிச்
செய்யப்படுதலின் 'எல்லா வினையும் நல்லவாம்'
என்றும் கூறினார்.) ---
மு.வ உரை:
மனம் தூய்மையாகப் பெற்றவர்க்கு அவர்க்குப்பின் எஞ்சி நிற்கும்
புகழ் முதலியவை நன்மையாகும். இனம் தூய்மையாக
உள்ளவர்க்கு நன்மையாகாத செயல் இல்லை.
G.U.Pope:
From true pure-minded men a virtuous race proceeds;
To men of pure companionship belong no evil deeds.
Explanation
To the pure-minded there will be a good posterity. By those whose associates are pure, no deeds will be done that are not good.
மூலம்:
457 . மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும்.
பரிமேழலகர் உரை:
மன் உயிர்க்கு மனநலம் ஆக்கம் (தரும்) - நிலைபெற்ற
உயிர்கட்கு மனத்தது நன்மை செல்வத்தைக்
கொடுக்கும்; இனநலம் எல்லாப் புகழும் தரும் -
இனத்தது நன்மை அதனோடு எல்லாப் புகழையும்
கொடுக்கும்.
('மன் உயிர்' என்றது ஈண்டு உயர்திணைமேல்
நின்றது. 'தரும்' என்னும் இடவழுவமைதிச்சொல்
முன்னும் கூறப்பட்டது. உம்மை இறந்தது தழீஇய
எச்சஉம்மை. மனம் நன்றாதல்தானே அறம் ஆகலின்,
அதனை 'ஆக்கம் தரும்' என்றும், புகழ் கொடுத்தற்கு
உரிய நல்லோர்தாமே இனமாகலின், 'இனநலம்
எல்லாப் புகழும் தரும்' என்றும் கூறினார். மேல்
'மனநன்மை இனநன்மை பற்றி வரும்,' என்பதனை
உட்கொண்டு, அஃது இயல்பாகவே உடையார்க்கு
அவ்வின நன்மை வேண்டா என்பாரை நோக்கி,
'அதுவேயன்றி அத்தன்மைய பலவற்றையும் தரும்'
என, அவர்க்கும் இது வேண்டும் என்பது, இவ்விரண்டு
பாட்டானும் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
மனத்தின் நன்மை உயிர்க்கு ஆக்கமாகும்; இனத்தின் நன்மை
(அவ்வளவோடு நிற்காமல்) எல்லாப் புகழையும் கொடுக்கும்.
G.U.Pope:
Goodness of mind to lives of men increaseth gain;
And good companionship doth all of praise obtain.
Explanation
Goodness of mind will give wealth, and good society will bring with it all praise, to men.
மூலம்:
458 . மனநலம் நன்குஉடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப்பு உடைத்து.
பரிமேழலகர் உரை:
மனநலம் நன்கு உடையராயினும் - மன நன்மையை
முன்னை நல்வினையால் தாமே உடையராயினும்;
சான்றோர்க்கு இனநலம் ஏமாப்பு உடைத்து -
அமைந்தார்க்கு இனநன்மை அதற்கு
வலியாதலையுடைத்து.
('நன்கால்' என்னும் மூன்றன் உருபு விகாரத்தால்
தொக்கது. அந் நல்வினை உள்வழியும் மனநலத்தை
வளர்த்து வருதலின், அதற்கு ஏமாப்பு
உடைத்தாயிற்று.) ---
மு.வ உரை:
மனத்தின் நன்மையை உறுதியாக உடையவராயினும் சான்றோர்க்கு
இனத்தின் நன்மை மேலும் நல்ல காவலாக அமைவதாகும்.
G.U.Pope:
To perfect men, though minds right good belong,
Yet good companionship is confirmation strong.
Explanation
Although they may have great (natural) goodness of mind, yet good society will tend to strengthen it.
மூலம்:
459 . மனநலத்தின் ஆகும் மறுமை:மற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
பரிமேழலகர் உரை:
மனநலத்தின் மறுமை ஆகும் - ஒருவற்கு
மனநன்மையானே மறுமை இன்பம் உண்டாம்; மற்ற
அஃது இனநலத்தின் ஏமாப்பு உடைத்து - அதற்கு அச்
சிறப்புத்தானும் இன நன்மையான் வலி பெறுதலை
உடைத்து.
(மனநலத்தின் ஆகும் மறுமை' என்றது, பயப்பது
மனநன்மைதானே, பிறிதொன்று அன்று', என்னும்
மதத்தை உடம்பட்டுக் கூறியவாறு. மற்று -
வினைமாற்று. உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை.
ஒரோவழித் தாமத குணத்தான மனநலம் திரியினும்,
நல்லினம் ஒப்ப நிறுத்தி மறுமை பயப்பிக்கும் என
நிலைபெறச் செய்யுமாறு கூறப்பட்டது. இவை ஐந்து
பாட்டானும் சிற்றினம் சேராமையது சிறப்பு நல்லினம்
சேர்தலாகிய எதிர்மறை முகத்தால் கூறியவாறு அறிக.)
---
மு.வ உரை:
மனத்தின் நன்மையால் மறுமை இன்பம் உண்டாகும்; அதுவும்
இனத்தின் நன்மையால் மேலும் சிறப்புடையதாகும்.
G.U.Pope:
Although to mental goodness joys of other life belong,
Y et good companionship is confirmation strong.
Explanation
Future bliss is (the result) of goodness of mind; and even this acquires strength from the society of the good.
மூலம்:
460 . நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை: தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.
பரிமேழலகர் உரை:
நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு
நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை; தீயினத்தின்
(ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின்
மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன.
'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி
உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித்
துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும்,
தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின்
அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல்
படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி
எதிர்மறைகள் உடன் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை;
தீய இனத்தைவிடத் துன்பப்படுத்தும் பகையும் இல்லை.
G.U.Pope:
Than good companionship no surer help we know;
Than bad companionship nought causes direr woe.
Explanation
There is no greater help than the company of the good; there is no greater source of sorrow than the company of the wicked.