மூலம்:
441 . அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
பரிமேழலகர் உரை:
அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை -
அறத்தினது நுண்மையை அறிந்து தன்னின் மூத்த
அறிவுடையாரது கேண்மையை; தேர்ந்து திறன் அறிந்து
கொளல் - அரசன் அதனது அருமையை ஓர்ந்து,
கொள்ளும் திறன் அறிந்து கொள்க.
(அறநுண்மை நுலானேயன்றி, உய்த்துணர்வானும்
அறிய வேண்டுதலின், 'அறம் அறிந்து' என்றார்.
மூத்தல் - அறிவானும் சீலத்தானும் காலத்தானும்
முதிர்தல். அறிவு உடையார் நீதியையும் உலக
இயலையும் அறிதலை உடையார். திறன் அறிதலாவது
நன்கு மதித்தல், உயரச் செய்தல், அவர் வரை நிற்றல்
என்பன முதலாக அவர் பிணிப்புண்ணும் திறன் அறிந்து
செய்தல்.) ---
மு.வ உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள
அறிவுடையவரின் நட்பைக், கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து
கொள்ள வேண்டும்.
G.U.Pope:
As friends the men who virtue know, and riper wisdom share,
Their worth weighed well, the king should choose with care.
Explanation
Let (a king) ponder well its value, and secure the friendship of men of virtue and of mature knowledge.
மூலம்:
442 . உற்றநோய் நீக்கி உறாஅமை முன்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
பரிமேழலகர் உரை:
உற்ற நோய் நீக்கி - தெய்வத்தானாக மக்களானாகத்
தனக்கு வந்த துன்பங்களை நீக்குமாறு அறிந்து நீக்கி;
உறாமை முற்காக்கும் பெற்றியார் . பின் அப்பெற்றியன
வாராவண்ணம் முன் அறிந்து காக்கவல்ல
தன்மையினையுடையாரை; பேணிக் கொளல் - அரசன்
அவர் உவப்பன செய்து துணையாகக் கொள்க.
(தெய்வத்தான் வரும் துன்பங்களாவன: மழையினது
இன்மை மிகுதிகளானும், காற்று, தீ, பிணி என்ற
இவற்றானும் வருவன. அவை கடவுளரையும்
தக்கோரையும் நோக்கிச் செய்யும் சாந்திகளான்
நீக்கப்படும். மக்களான் வரும் துன்பங்களாவன:
பகைவர், கள்வர், கற்றறிந்தார், வினை செய்வார்
என்றிவர்களான் வருவன. அவை சாமபேத தான
தண்டங்கள் ஆகிய நால்வகை உபாயத்துள் ஏற்றதனால்
நீக்கப்படும். முற்காத்தலாவது: தெய்வத்தான்
வருவனவற்றை உற்பாதங்களால் அறித்து
அச்சாந்திகளால் காத்தலும், மக்களான் வருவனவற்றை
அவர் குணம், இங்கிதம், ஆகாரம், செயல்
என்பனவற்றான் அறிந்து, அவ்வுபாயங்களுள் ஒன்றால்
காத்தலும் ஆம்; ஆகவே, புரோகிதரையும்
அமைச்சரையும் கூறியவாறாயிற்று. இங்கிதம் -
குறிப்பால் நிகழும் உறுப்பின் தொழில். ஆகாரம் -
குறிப்ரின்றி நிகழும் வேறுபாடு. உவப்பன - நன்கு
மதித்தல் முதலியன. இவை இரண்டு பாட்டானும்
பெரியாரது இலக்கணமும், அவரைத் துணையாகக்
கோடல் வேண்டும் என்பதூஉம், கொள்ளுமாறும்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே
காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள
வேண்டும்.
G.U.Pope:
Cherish the all-accomplished men as friends,
Whose skill the present ill removes, from coming ill defends.
Explanation
Let (a king) procure and kindly care for men who can overcome difficulties when they occur, and guard against them before they happen.
மூலம்:
443 . அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
பரிமேழலகர் உரை:
பெரியாரைப் பேணித் தமராக் கொளர் -
அப்பெரியவர்களை அவர் உவர்ப்பன அறிந்து செய்து
தமக்குச் சிறந்தாராகக் கொள்ளுதல்; அறியவற்றுள்
எல்லாம் அரிது - அரசர்க்கு அரிய பேறுகள்
எல்லாவற்றுள்ளும் பெரிது.
(உலகத்து அரியனவெல்லாம் பெறுதற்கு உரிய
அரசர்க்கு இப்பேறு சிறந்தது என்றது, இதனான்
அவையெல்லாம் உளவாதல் நோக்கி.) ---
மு.வ உரை:
பெரியாரைப் போற்றித் தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல்
பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.
G.U.Pope:
To cherish men of mighty soul, and make them all their own,
Of kingly treasures rare, as rarest gift is known.
Explanation
To cherish great men and make them his own, is the most difficult of all difficult things.
மூலம்:
444 . தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
பரிமேழலகர் உரை:
தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல் - அறிவு
முதலியவற்றால் தம்மின் மிக்கார் தமக்குச்
சிறந்தாராகத் தாம் அவர் வழிநின்று ஒழுகுதல்;
வன்மையுள் எல்லாம் தலை - அரசர்க்கு. எல்லா வலி
உடைமையினும் தலை.
(பொருள், படை, அரண்களான்ஆய வலியினும் இத்
துணைவலி சிறந்தது என்றது, இவர் அவற்றான்
நீக்கப்படாத தெய்வத்துன்பம் முதலியனவும் நீக்குதற்கு
உரியர் ஆகலின்.) --
மு.வ உரை:
தம்மை விட, ( அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச்
சுற்றத்தாராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும்
சிறந்ததாகும்.
G.U.Pope:
To live with men of greatness that their own excels,
As cherished friends, is greatest power that with a monarch dwells.
Explanation
So to act as to make those men, his own, who are greater than himself is of all powers the highest.
மூலம்:
445 . சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
பரிமேழலகர் உரை:
சூழ்வார் கண் ஆக ஒழுகலான் - தன் பாரம்
அமைச்சரைக் கண்ணாகக் கொண்டு நடந்தலான்;
மன்னவன் சூழ்வாரைச் சூழ்ந்து கொளல் - அரசன்
அத்தன்மையராய அமைச்சரை ஆராய்ந்து தனக்குத்
துணையாகக் கொள்க.
(இரண்டாவது விகாரத்தால் தொக்கது. தானே
சூழவல்லானாயினும் அளவிறந்த தொழில்களான்
ஆகுலம் எய்தும் அரசன் பாரம் அதுவே தொழிலாய
அமைச்சரான் அல்லது இனிது நடவாமை பற்றி,
அவரைக் கண்ணாகக் கூறினார். ஆராய்தல் -
அமைச்சியலுள் சொல்லப்படும் இலக்கணத்தினர்
என்பதனை ஆராய்தல். இவை மூன்று பாட்டானும்
பெரியாரைத் துணைகோடலின் சிறப்புக் கூறப்பட்டது.)
---
மு.வ உரை:
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக்
கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரை ஆராய்ந்து
நட்புக் கொள்ள வேண்டும்.
G.U.Pope:
The king, since counsellors are monarch's eyes,
Should counsellors select with counsel wise.
Explanation
As a king must use his ministers as eyes (in managing his kingdom), let him well examine their character and qualifications before he engages them.
மூலம்:
446 . தக்கார் இனத்தனாய்த் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்.
பரிமேழலகர் உரை:
தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானை -
தக்காராகிய இனத்தை உடையவனாய்த் தானும் அறிந்து
ஒழுக வல்ல அரசனை; செற்றார் செயக் கிடந்தது இல்
- பகைவர் செய்யக் கிடந்ததொரு துன்பமும் இல்லை.
(தக்கார்: அறிவு ஒழுக்கங்களால் தகுதியுடையார்.
ஒழுகுதல்: அறநீதிகளின் நெறி வழுவாமல் நடத்தல்.
வஞ்சித்தல், கூடினவரைப் பிரித்தல், வேறு பகை
விளைத்தல் என்ற இவற்றானும், வலியானும் பகைவர்
செய்யுந் துன்பங்கள் பலதிறத்த ஆயினும், தானும்
அறிந்து, அறிவார் சொல்லும் கொண்டொழுகுவான்கண்
அவற்றுள் ஒன்றும் வாராது என்பார், 'செற்றார் செயக்
கிடந்தது இல்' என்றார்.) ---
மு.வ உரை:
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளவனாய் நடக்கவல்ல
ஒருவனுக்கு அவனுடைய பகைவர் செய்யக்கூடிய தீங்கு ஒன்றும்
இல்லை.
G.U.Pope:
The king, who knows to live with worthy men allied,
Has nought to fear from any foeman's pride.
Explanation
There will be nothing left for enemies to do, against him who has the power of acting (so as to secure) the fellowship of worthy men.
மூலம்:
447 . இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்?
பரிமேழலகர் உரை:
இடிக்கும் துணையாரை ஆள்வாரை - தீயன கண்டால்
நெருங்கிச் சொல்லும் துணையாந் தன்மையை
உடையாரை 'இவர் நமக்குச் சிறந்தார்' என்று
ஆளும்அரசரை, கெடுக்கும் தகைமையவர் யார் -
கெடுக்கும் பெருமை உடைய பகைவர் உலகத்து யாவர்?
(தீயன: பாவங்களும் நீதியல்லனவும். துணையாம்
தன்மையாவது: தமக்கு அவையின்மையும், அரசன்கண்
அன்புடைமையும் ஆம். அத்தன்மை உடையார்
நெறியின் நீங்க விடாமையின், அவரை ஆளும் அரசர்
ஒருவரானும் கெடுக்கப்படார் என்பதாம். 'நெருங்கிச்
சொல்லும் அளவினோரை' என்று உரைப்பாரும் உளர்.
இவை இரண்டு பாட்டானும் அதன் பயன் கூறப்பட்டது.)
---
மு.வ உரை:
கடிந்து அறிவுரை கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு
நடப்பவரைக் கெடுக்கும் ஆற்றல் உடையவர் யார் இருக்கின்றனர்?
G.U.Pope:
What power can work his fall, who faithful ministers
Employs, that thunder out reproaches when he errs.
Explanation
Who are great enough to destroy him who has servants that have power to rebuke him ?
மூலம்:
448 . இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானுங் கெடும்.
பரிமேழலகர் உரை:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் - கழறுதற்கு
உரியாரைத் தனக்குத் துணையாகக் கொள்ளாமையின்
காவலற்ற அரசன்; கெடுப்பார் இலானும் கெடும் -
பகையாய்க் கெடுப்பார் இல்லையாயினும் தானே
கெடும்.
('இல்லாத, ஏமரா' என்பன பெயரெச்ச அடுக்கு.
கொடுப்பார் உளராவார் என்பது தோன்ற, 'இலானும்'
என்றார். தானே கெடுதலாவது: பாகனில்லாத
யானைபோல நெறியல்லா நெறிச் சென்று கெடுதல்.) --
-
மு.வ உரை:
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற
அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும்
கெடுவான்.
G.U.Pope:
The king with none to censure him, bereft of safeguards all,
Though none his ruin work, shall surely ruined fall.
Explanation
The king, who is without the guard of men who can rebuke him, will perish, even though there be no one to destroy him.
மூலம்:
449 . முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
பரிமேழலகர் உரை:
முதல் இலார்க்கு ஊதியம் இல்லை . முதற்பொருள்
இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம்
இல்லையாம்; மதலையாம் சார்பு இலார்க்கு நிலை
இல்லை - அது போலத் தம்மைத் தாங்குவதாம்
துணையில்லாத அரசர்க்கு அதனான் வரும்
நிலையில்லை.
(முதலைப் பெற்றே இலாபம் பெற வேண்டுமாறு
போலத் தாங்குவாரைப் பெற்றே நிலை பெற வேண்டும்
என்பதாம். நிலை: அரச பாரத்தோடு சலியாது நிற்றல்.)
---
மு.வ உரை:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை;
அது போல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு
நிலைபேறு இல்லை.
G.U.Pope:
Who owns no principal, can have no gain of usury;
Who lacks support of friends, knows no stability.
Explanation
There can be no gain to those who have no capital; and in like manner there can be no permanence to those who are without the support of adherents.
மூலம்:
450 . பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
பரிமேழலகர் உரை:
பல்லார் பகை கொள்லின் பத்து அடுத்த தீமைத்து -
தான் தனியனாய் வைத்துப் பலரோடும் பகை
கொள்ளுதலின் பதிற்று மடங்கு தீமை உடைத்து;
நல்லார் தொடர் கை விடல் - அரசன் பெரியாரோடு
நட்பினைக் கொள்ளா தொழிதல். (பலர் பகை
ஆயக்கால் "மோதி முள்ளொடு முட்பகை கண்டிடல்,
பேது செய்து பிளந்திடல்"
(சீவக. விமலை. 32) என்பவையல்லது, ஒருங்கு
வினையாக் குறித்துச் செய்தாலும் ஒருவாற்றான்
உய்தல் கூடும்; நல்லார் தொடர்பை விட்டால்
ஒருவாற்றானும் உய்தல் கூடாமையின்; இது செய்தல்
அதனினும் தீது என்பதாம். இவை மூன்று பாட்டானும்
அது செய்யாத வழிப்படும் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய
பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை
உடையதாகும்.
G.U.Pope:
Than hate of many foes incurred, works greater woe
Ten-fold, of worthy men the friendship to forego.
Explanation
It is tenfold more injurious to abandon the friendship of the good, than to incur the hatred of the many.