மூலம்:
411 . செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை.
பரிமேழலகர் உரை:
செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் - ஒருவருக்குச்
சிறப்புடைய செல்வமானது செவியான் வரும் செல்வம்;
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை -
அச்செல்வம் பிற செல்வங்கள் எல்லாவற்றினும்
தலையாகலான்.
(செவியான் வரும் செல்வம் - கேள்வியால் - எல்லாப்
பொருளையும் அறிதல். பிற செல்வங்கள் - பொருளால்
வருவன. அவை நிலையா ஆகலானும்,
துன்பவிளைவின ஆகலானும், இது தலையாயிற்று.
அவற்றை ஒழித்து இதனையே செய்க என்பது
குறிப்பெச்சம்.) ---
மு.வ உரை:
செவியால் கேட்டறியும் செல்வம், செல்வங்களுள் ஒன்றாகப்
போற்றப்படும் செல்வமாகும்; அச் செல்வம் செல்வங்கள்
எல்லாவற்றிலும் தலையானதாகும்.
G.U.Pope:
Wealth of wealth is wealth acquired be ear attent;
Wealth mid all wealth supremely excellent.
Explanation
Wealth (gained) by the ear is wealth of wealth; that wealth is the chief of all wealth.
மூலம்:
412 . செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்.
பரிமேழலகர் உரை:
செவிக்கு உணவு இல்லாத போழ்து - செவிக்கு
உணவாகிய கேள்வி இல்லாத பொழுது; வயிற்றுக்கும்
சிறிது ஈயப்படும் - வயிற்றுக்கும் சிறிது உணவு
இடப்படும்.
(சுவை மிகுதியும் பிற்பயத்தலும் உடைய கேள்வி
உள்ளபொழுது வெறுக்கப்படுதலான் 'இல்லாத போழ்து'
என்றும், பெரிதாயவழித் தேடல் துன்பமே யன்றி
நோயும் காமமும் பெருகுதலான் 'சிறிது' என்றும்,
அதுதானும் பின்இருந்து கேட்டற்பொருட்டாகலான்
'ஈயப்படும்' என்றும் கூறினார். ஈதல், வயிற்றது
இழிவு தோன்ற நின்றது. இவை இரண்டு பாட்டானும்
கேள்வியது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
செவிக்குக் கேள்வியாகிய உணவு இல்லாதபோது (அதற்குத்
துணையாக உடலை ஓம்புமாறு) வயிற்றுக்கும் சிறிது உணவு
தரப்படும்.
G.U.Pope:
When 'tis no longer time the listening ear to feed
With trifling dole of food supply the body's need.
Explanation
When there is no food for the ear, give a little also to the stomach.
மூலம்:
413 . செவிஉணவிற் கேள்வி யுடையார் அவிஉணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து.
பரிமேழலகர் உரை:
செவி உணவின் கேள்வி உடையார் - செவியுணவாகிய
கேள்வியினை உடையார்; நிலத்து அவியுணவின்
ஆன்றாரொடு ஒப்பர் - நிலத்தின்கண்ணர் ஆயினும்
அவியுணவினையுடைய தேவரொடு ஒப்பர். (செவி
உணவு: செவியான் உண்ணும் உணவு. அவ்வழிக்கண்
வந்த இன் சாரியையது னகரம் வலிந்து நின்றது.
அவியாகிய உணவு - தேவர்க்கு வேள்வித் தீயில்
கொடுப்பன. அறிவான் நிறைந்தமையான் 'ஆன்றார்'
என்றும், துன்பம் அறியாமையான் 'தேவரொடு ஒப்பர்'
என்றும் கூறினார். இதனான் அதனை உடையாரது
சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
செவியுணவாகிய கேள்வி உடையவர் நிலத்தில் வாழ்கின்றவரே
ஆயினும், அவி உணவைக்கொள்ளும் தேவரோடு ஒப்பாவர்.
G.U.Pope:
Who feed their ear with learned teachings rare,
Are like the happy gods oblations rich who share.
Explanation
Those who in this world enjoy instruction which is the food of the ear, are equal to the Gods, who enjoy the food of the sacrifices.
மூலம்:
414 . கற்றிலன் ஆயினும் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை.
பரிமேழலகர் உரை:
கற்றிலன் ஆயினும் கேட்க - உறுதி நூல்களைத் தான்
கற்றிலன் ஆயினும், அவற்றின் பொருள்களைக்
கற்றறிந்தார் சொல்லக் கேட்க; அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாம் துணை - அக்கேள்வி
ஒருவனுக்குத் தளர்ச்சி வந்துழிப் பற்றுக் கோடாம்
துணை ஆகலான்.
('உம்மை' கற்க வேண்டும் என்பது பட நின்றது.
தளர்ச்சி - வறுமையானாதல் அறிவின்மையானாதல்
இடுக்கண்பட்டுழி மனம் தளர்தல். அதனைக்
கேள்வியினானாய அறிவு நீக்கும் ஆகலின், 'ஊற்றாம்
துணை' என்றார். 'ஊன்று' என்னும் ஆகுபெயரின்
னகரம் திரிந்து நின்றது.) ---
மு.வ உரை:
நூல்களைக் கற்கவில்லையாயினும், கற்றறிந்தவரிடம் கேட்டறிய
வேண்டும்; அஃது ஒருவனுக்கு வாழ்க்கையில் தளர்ச்சி வந்தபோது
ஊன்றுகோல்போல் துணையாகும்.
G.U.Pope:
Though learning none hath he, yet let him hear alway:
In weakness this shall prove a staff and stay.
Explanation
Although a man be without learning, let him listen (to the teaching of the learned); that will be to him a staff in adversity.
மூலம்:
415 . இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்.
பரிமேழலகர் உரை:
இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்று -
வழுக்குதலையுடைய சேற்று நிலத்து இயங்குவார்க்கு
ஊன்றுகோல் போல உதவும்; ஒழுக்கம் உடையார்
வாய்ச்சொல் - காவற் சாகாடு உகைப்பார்க்கு
ஒழுக்கமுடையார் வாயிற் சொற்கள்.
(அவாய்நிலையான் வந்த உவமையடையால் பொருள்
அடை வருவிக்கப்பட்டது. ஊற்றாகிய கோல் போல
உதவுதல் - தளந்துழி அதனை நீக்குதல்.
கல்வியுடையரேனும் ஒழுக்கம் இல்லாதார்
அறிவிலராகலின், அவர் வாய்சொல் கேட்கப்படாது
என்பதுதோன்ற, 'ஒழுக்கமுடையார் வாய் சொல்'
என்றார். 'வாய்' என்பது தீச்சொல் அறியாமையாகிய
சிறப்புணர நினறது. 'அவற்றைக் கேட்க' என்பது
குறிப்பெச்சம்.) ---
மு.வ உரை:
ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச்சொற்கள், வழுக்கல் உடைய
சேற்றுநிலத்தில் ஊன்றுகோல்போல் வாழ்க்கையில் உதவும்.
G.U.Pope:
Like staff in hand of him in slippery ground who strays
Are words from mouth of those who walk in righteous ways.
Explanation
The words of the good are like a staff in a slippery place.
மூலம்:
416 . எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.
பரிமேழலகர் உரை:
எனைத்தானும் நல்லவை கேட்க - ஒருவன்
சிறிதாயினும் உறுதிப் பொருள்களைக் கேட்க;
அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் - அக்கேள்வி
அத்துணையாயினும் நிறைந்த பெருமையைத் தரும்
ஆகலான்.
('எனைத்து', 'அனைத்து' என்பன கேட்கும்
பொருள்மேலும் காலத்தின்மேலும் நின்றன. அக்கேள்வி
மழைத் துளைபோல வந்து ஈண்டு எல்லா
அறிவுகளையும் உள ஆக்கலின், 'சிறிது' என்று
இகழற்க என்பதாம்.) ---
மு.வ உரை:
எவ்வளவு சிறிதேயாயினும் நல்லவற்றைக் கேட்டறிய வேண்டும்;
கேட்ட அந்த அளவிற்கு அவை நிறைந்த பெருமையைத் தரும்.
G.U.Pope:
Let each man good things learn, for e'en as he
Shall learn, he gains increase of perfect dignity.
Explanation
Let a man listen, never so little, to good (instruction), even that will bring him great dignity.
மூலம்:
417 . பிழைத்துஉணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்துணர்ந்து
ஈண்டிய கேள்வி யவர்.
பரிமேழலகர் உரை:
பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்வார் - பிழை
உணர்ந்த வழியும், தமக்குப் பேதைமை பயக்குஞ்
சொற்களை சொல்லார்; இழைத்து உணர்ந்து ஈண்டிய
கேள்வியவர் - பொருள்களைத் தாமும் நுண்ணியதாக
ஆராய்ந்தறிந்து அதன்மேலும் ஈண்டிய கேள்வியினை
உடையார்.
('பிழைப்பு' என்பது திரிந்து நின்றது. பேதைமை:
ஆகுபெயர். ஈண்டுதல்: பலவாற்றான் வந்து நிறைதல்.
பொருள்களின் மெய்ம்மையைத் தாமும் அறிந்து,
அறிந்தாரோடு ஒப்பிப்பதும் செய்தால் தாமத குணத்தான்
மயங்கினர் ஆயினும், அவ்வாறல்லது சொல்லார்
என்பதாம். இவை நான்கு பாட்டானும் கேட்டார்க்கு
வரும் நன்மை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
நுட்பமாக உணர்ந்து நிறைந்த கேள்வியறிவை உடையவர்.
(ஒருகால் பொருள்களைத்) தவறாக உணர்ந்திருந்தாலும்
பேதைமையானவற்றைச் சொல்லார்.
G.U.Pope:
Not e'en through inadvertence speak they foolish word,
With clear discerning mind who've learning's ample lessons heard.
Explanation
Not even when they have imperfectly understood (a matter), will those men speak foolishly, who have profoundly studied and diligently listened (to instruction).
மூலம்:
418 . கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
பரிமேழலகர் உரை:
கேட்பினும் கேளாத் தகையவே - தம் புலமாய ஓசை
மாத்திரத்தைக் கேட்கும் ஆயினும் செவிடாம்
தன்மையவேயாம். கேள்வியால் தோட்கப்படாத செவி -
கேள்வியால் துளைக்கப்படாத செவிகள்.
(ஏகாரம் தேற்றத்தின்கண் வந்தது. ஓசை
மாத்திரத்தான் உறுதி எய்தாமையின் 'கேளாத்தகைய'
என்றும், மனத்தின்கண் நூற்பொருள் நுழைதற்கு
வழியாக்கலிற் கேள்வியைக் கருவியாக்கியும் கூறினார்.
'பழைய துளை துளையன்று' என்பதாம்.) ---
மு.வ உரை:
கேள்வியறிவால் துளைக்கப்படாத செவிகள், (இயற்கையான
துளைகள் கொண்டு ஒசையைக்) கேட்டறிந்தலும், கேளாத
செவிட்டுத் தன்மை உடையனவே.
G.U.Pope:
Where teaching hath not oped the learner's ear,
The man may listen, but he scarce can hear.
Explanation
The ear which has not been bored by instruction, although it hears, is deaf.
மூலம்:
419 . நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது.
பரிமேழலகர் உரை:
நுணங்கிய கேள்வியர் அல்லார் - நுண்ணியதாகிய
கேள்வியுடையார் அல்லாதார்; வணங்கிய வாயினர்
ஆதல் அரிது - பணிந்த மொழியினை உடையராதல்
கூடாது.
(கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை கேள்விமேல்
ஏற்றப்பட்டது. 'வாய்' ஆகுபெயர். பணிந்தமொழி -
பணிவைப் புலப்படுத்திய மொழி. கேளாதார் உணர்வு
இன்மையால் தம்மை வியந்து கூறுவர் என்பதாம்.
'அல்லால்' என்பதூஉம் பாடம்.) ---
மு.வ உரை:
நுட்பமான பொருள்களைக் கேட்டறிந்தவர் அல்லாத மற்றவர்,
வணக்கமான சொற்களைப் பேசும் வாயினை உடையவராக
முடியாது.
G.U.Pope:
'Tis hard for mouth to utter gentle, modest word,
When ears discourse of lore refined have never heard.
Explanation
It is a rare thing to find modesty, a reverend mouth- with those who have not received choice instruction.
மூலம்:
420 . செவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்?
பரிமேழலகர் உரை:
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள் -
செவியான் நுகரப்படுஞ் சுவைகளை உணராத வாய்
உணர்வினையுடைய மாந்தர்; அவியினும் வாழினும்
என் - சாவினும் வாழினும் உலகிற்கு வருவது என்ன?
(செவியால் நுகரப்படும் சுவைகளாவன:
சொற்சுவையும் பொருள்சுவையும். அவற்றுள்
சொற்சுவை குணம், அலங்காரம் என இருவகைத்து;
பொருட்சுவை காமம், நகை, கருணை, வீரம்,
உருத்திரம், அச்சம், இழிப்பு, வியப்பு, சாந்தம் என
ஒன்பது வகைத்து. அவையெல்லாம் ஈண்டு உரைப்பின்
பெருகும். 'வாயுணர்வு' என்பது இடைப்பதங்கள்
தொக்கு நின்ற மூன்றாம் வேற்றுமைத் தொகை; அது
வாயான் நுகரப்படும் சுவைகளை உணரும் உணர்வு என
விரியும். அவை கைப்பு, கார்ப்பு, புளிப்பு, உவர்ப்பு,
துவர்ப்பு, தித்திப்பு என ஆறு ஆம். செத்தால் இழப்பதும்
வாழ்ந்தால் பெறுவதும் இன்மையின், இரண்டும் ஒக்கும்
என்பதாம். 'வாயுணர்வின் என்று பாடம் ஓதுவாரும்
உளர். இவை மூன்று பாட்டானும் கேளாதவழிப்படும்
குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
செவியால் கேள்விச்சுவை உணராமல் வாயின் சுவையுணர்வு
மட்டும் உடைய மக்கள், இறந்தாலும் என்ன? உயிரோடு
வாழ்ந்தாலும் என்ன?
G.U.Pope:
His mouth can taste, but ear no taste of joy can give!
What matter if he die, or prosperous live?
Explanation
What does it matter whether those men live or die, who can judge of tastes by the mouth, and not by the ear ?