மூலம்:
401 . அரங்குஇன்றி வட்டுஆடி யற்றே நிரம்பிய
நூல்இன்றிக் கோட்டி கொளல்.
பரிமேழலகர் உரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை
இழையாது வட்டாடினாற்போலும்; நிரம்பிய நூல்இன்றி
கோட்டி கோளல்தான் நிரம்புதற்கு ஏதுவாகிய
நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண்
ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை
உருட்டல். இவை "கட்டளையன்ன வட்டரங்கு
இழைத்துக், கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்" (நற்.
3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன
எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர்.
"புல்லா எழுத்தின் பொருள்இல் வறுங்கோட்டி" (நாலடி.
155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா
என்பதாம்.) ---
மு.வ உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமான நூல்களைக் கற்காமல்
கற்றவரிடம் சென்று பேசுதல், சூதாடும் அரங்கு இழைக்காமல்
வட்டுக்காயை உருட்டி ஆடினாற் போன்றது.
G.U.Pope:
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.
Explanation
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
மூலம்:
402 . கல்லாதான் சொல்கா முறுதல் முலைஇரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று.
பரிமேழலகர் உரை:
கல்லாதான் சொல் காமுறுதல் - கல்வியில்லாதவன்
ஒருவன் அவையின்கண் ஒன்று சொல்லுதலை
அவாவுதல்; முலை இரண்டும் இல்லாதாள் பெண்
காமுற்றற்று - இயல்பாகவே முலை இரண்டும்
இல்லாதாள் ஒருத்தி பெண்மையை அவாவினாற்
போலும்.
("இனைத்தென அறிந்த சினை" (தொல். சொல். 33)
ஆகலின், தொகையோடு முற்று உம்மை கொடுத்தார்.
சிறிதும் இல்லாதான் என்பதாம். அவாவியவழிக்
கடைப்போகாது; போகினும் நகை விளைக்கும்
என்பதாயிற்று.) ---
மு.வ உரை:
(கற்றவரின் அவையில்) கல்லாதவன் ஒன்றைச் சொல்ல
விரும்புதல், முலை இரண்டும் இல்லாதவள் பெண் தன்மையை
விரும்பினாற் போன்றது.
G.U.Pope:
Like those who doat on hoyden's undeveloped charms are they,
Of learning void, who eagerly their power of words display.
Explanation
The desire of the unlearned to speak (in an assembly), is like a woman without breasts desiring (the enjoyment of ) woman-hood.
மூலம்:
403 . கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லாது இருக்கப் பெறின்.
பரிமேழலகர் உரை:
கல்லாதவரும் நனி நல்லர் - கல்லாதாரும் மிக
நல்லராவர்; கற்றார் முன் சொல்லாது இருக்கப் பெறின்
- தாமே தம்மையறிந்து கற்றார் அவையின்கண்
ஒன்றனையும் சொல்லாதிருத்தல் கூடுமாயின்.
(உம்மை . இழிவுச் சிறப்பு உம்மை; தம்மைத்தாம்
அறியாமையின் அது கூடாது என்பார், 'பெறின்'
என்னும், கூடின் ஆண்டுத் தம்மை
வெளிப்படுத்தாமையானும், பின் கல்வியை
விரும்புவராகலானும் 'நனி நல்லர்' என்றும் கூறினார்.
இவை மூன்று பாட்டானும் கல்லாதார், அவைக்கண்
சொல்லுதற்கு உரியரன்மை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக
இருக்கப்பெற்றால், கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவர்.
G.U.Pope:
The blockheads, too, may men of worth appear,
If they can keep from speaking where the learned hear!
Explanation
The unlearned also are very excellent men, if they know how to keep silence before the learned.
மூலம்:
404 . கல்லாதான் ஓட்பம் கழியநன்று ஆயினும்
கொள்ளார் அறிவுஉடை யார்.
பரிமேழலகர் உரை:
கல்லாதான் ஒட்பம் கழிய நன்று ஆயினும் -
கல்லாதவனது ஒண்மை ஒரோவழி நன்றாயிருப்பினும்;
அறிவுடையார் கொள்ளார் - அறிவுடையார் அதனை
ஒண்மையாகக் கொள்ளார்.
(ஒண்மை: அறிவுடைமை. அது நன்றாகாது,
ஆயிற்றாயினும், ஏரலெழுத்துப் போல்வதோர்
விழுக்காடு ஆகலின், நிலைபெற்ற தூல் அறிவுடையார்
அதனை மதியார் என்பதாம்.) ---
மு.வ உரை:
கல்லாதவனுடைய அறிவுடைமை ஒருகால் மிக நன்றாக
இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்
கொள்ளமாட்டார்.
G.U.Pope:
From blockheads' lips, when words of wisdom glibly flow,
The wise receive them not, though good they seem to show.
Explanation
Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.
மூலம்:
405 . கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.
பரிமேழலகர் உரை:
கல்லா ஒருவன் தகைமை - நூல்களைக் கல்லாத
ஒருவன் 'யான் அறிவுடையேன்' எனத் தன்னை
மதிக்கும் மதிப்பு; தலைப்பெய்து சொல்லாடச்
சோர்வுபடும் - அவற்றைக் கற்றவன் கண்டு உரையாடக்
கெடும்.
('கற்றவன்' என்பது வருவிக்கப்பட்டது. யாதானும் ஓர்
வார்த்தை சொல்லும் துணையுமே நிற்பது,
சொல்லியவழி வழுப்படுதலின், அழிந்து விடும்
என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கல்லாதாரது
இயற்கையறிவின் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கல்லாத ஒருவன் தன்னைத் தான் மதித்துக் கொள்ளும் மதிப்பு
(கற்றவரிடம்) கூடிப் பேசும்போது அப்பேச்சினால் கெடும்.
G.U.Pope:
As worthless shows the worth of man unlearned,
When council meets, by words he speaks discerned.
Explanation
The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of thelearned).
மூலம்:
406 . உளர்என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர்அனையர் கல்லா தவர்.
பரிமேழலகர் உரை:
கல்லாதவர் - கல்லாதவர்; உளர் என்னும்
மாத்திரையார் அல்லால் - காணப்படுதலான் இலரல்லர்
உளர் என்று சிலர் சொல்லும் அளவினர் ஆதல் அன்றி;
பயவாக் களர் அனையர் - தமக்கும் பிறருக்கும்
பயன்படாமையால் விளையாத களர் நிலத்தோடு
ஒப்பர்.
(களர் தானும் பேணற்பாடு அழிந்து, உயிர்கட்கும்
உணவு முதலிய உதவாதது போலத், தாமும் நன்று
மதிக்கற்பாடு அழிந்து, பிறர்க்கும் அறிவு முதலிய
உதவார் என்பதாம். இதனான் கல்லாதாரது
பயன்படாமை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப் படும்
அளவினரே அல்லாமல், ஒன்றும் விளையாத களர்நிலத்திற்கு
ஒப்பாவர்.
G.U.Pope:
'They are': so much is true of men untaught;
But, like a barren field, they yield us nought!
Explanation
The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.
மூலம்:
407 . நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.
பரிமேழலகர் உரை:
நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில் நலம் -
நுண்ணியதாய், மாட்சிமைப்பட்டுப் பல நூல்களினும்
சென்ற அறிவு இல்லாதவனுடைய எழுச்சியும் அழகும்;
மண், மாண் புனை பாவை அற்று - சுவையான்
மாட்சிமைப்படப் புனைந்த பாவையுடைய எழுச்சியும்
அழகும் போலும்.
(அறிவிற்கு மாட்சிமையாவது, பொருள்களைக்
கடிதிற்காண்டலும் மறவாமையும் முதலாயின.
'பாவை' ஆகுபெயர். "உருவின் மிக்கதோர் உடம்பது
பெறுதலும் அரிது'' (சீவக. முத்தி. 154) ஆகலான்,
எழில் நலங்களும் ஒரு பயனே எனினும், நூலறிவு
இல்வழிச் சிறப்பில் என்பதாம். இதனால் அவர்
வடிவழகால் பயன் இன்மை கூறப்பட்டது.) --
மு.வ உரை:
நுட்பமானதாய் மாட்சியுடையதாய் ஆராயவல்லதான அறிவு
இல்லாதவனுடைய எழுச்சியான அழகு, மண்ணால் சிறப்பாகப்
புனையப்பட்ட பாவை போன்றது.
G.U.Pope:
Who lack the power of subtle, large, and penetrating sense,
Like puppet, decked with ornaments of clay, their beauty's vain pretence.
Explanation
The beauty and goodness of one who is destitute of knowledge by the study of great and exquisite works, is like (the beauty and goodness) of a painted earthen doll.
மூலம்:
408 . நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு.
பரிமேழலகர் உரை:
நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாது -
கற்றார்மாட்டு நின்ற வறுமையினும் இன்னாது;
கல்லார்கண் பட்ட திரு - கல்லாதார் மாட்டு நின்ற
செல்வம்.
(இழிவு சிறப்பு உம்மை விகாரத்தால் தொக்கது. தம்தம்
நிலையின் அன்றி மாறி நிற்றலால் தாம்
இடுக்கண்படுதலும் உலகிற்குத் துன்பஞ்செய்தலும்
இரண்டற்கும் ஒக்குமாயினும், திருகல்லாரைக்
கெடுக்க, வறுமை நல்லாரைக் கெடாது நிற்றலான்,
'வறுமையினும் திரு இன்னாது' என்றார். இதனால்
அவர் திருவின் குற்றம் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கல்லாதவரிடம் சேர்ந்துள்ள செல்வமானது, கற்றறிந்த நல்லவரிடம்
உள்ள வறுமையைவிட மிகத் துன்பம் செய்வதாகும்.
G.U.Pope:
To men unlearned, from fortune's favour greater-evil springs
Than poverty to men of goodly wisdom brings.
Explanation
Wealth, gained by the unlearned, will give more sorrow than the poverty which may come upon the learned.
மூலம்:
409 . மேல்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு.
பரிமேழலகர் உரை:
கல்லாதார் மேற்பிறந்தார் ஆயினும் - கல்லாதார்
உயர்ந்த சாதிக்கண் பிறந்தாராயினும்; கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்துப் பாடு இலர் - தாழ்ந்த சாதிக்கண்
பிறந்துவைத்தும் கற்றாரது பெருமை அளவிற்றாய
பெருமையிலர்.
(உடலோடு ஒழியும் சாதி உயர்ச்சியினும், உயிரோடு
செல்லும் கல்வி உயர்ச்சி சிறப்புடைத்து என்பதாம்.
இதனான் அவர் சாதி உயர்ச்சியால் பயனின்மை
கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் தாழ்ந்த
குடியில் பிறந்திருந்தும் கல்வி கற்றவரைப் போன்ற பெருமை
இல்லாதவரே.
G.U.Pope:
Lower are men unlearned, though noble be their race,
Than low-born men adorned with learning's grace.
Explanation
The unlearned, though born in a high caste, are not equal in dignity to the learned; though they may have been born in a low caste.
மூலம்:
410 . விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர்.
பரிமேழலகர் உரை:
விலங்கொடு மக்கள்அனையர் - விலங்கொடு நோக்க
மக்கள் எத்துணை நன்மையுடையர் அத்துணைத்
தீமையுடையர், இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர் -
விளங்கிய நூலைக் கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்.
(இலங்கு நூல்: சாதிப் பெயர். விளங்குதல்:
மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு
மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாகலின்,
கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர்
என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட்
பிறப்பார் பயன் எய்தாமை கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
அறிவு விளங்குவதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடு
கல்லாதவர், மக்களோடு விலங்குகளுக்கு உள்ள அவ்வளவு
வேற்றுமை உடையவர்.
G.U.Pope:
Learning's irradiating grace who gain,
Others excel, as men the bestial train.
Explanation
As beasts by the side of men, so are other men by the side of those who are learned in celebrated works.