மூலம்:
391 . கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.
பரிமேழலகர் உரை:
கற்பவை கசடு அறக் கற்க - ஒருவன் கற்கப்படும்
நூல்களைப் பழுதறக் கற்க; கற்றபின் அதற்குத் தக
நிற்க - அங்ஙனம் கற்றால், அக்கல்விக்கத் தக அவை
சொல்லுகின்ற நெறிக் கண்ணே நிற்க.
('கற்பவை' என்றதனான், அறம் பொருள் இன்பம் வீடு
என்னும் உறுதிப்பொருள் உணர்த்துவன அன்றிப்
பிறபொருள் உணர்த்துவன, சின்னாள் பல்பிணிச்
சிற்றறிவினர்க்கு ஆகா என்பது பெற்றாம். கசடறக்
கற்றலாவது: விபரீத ஐயங்களை நீக்கி
மெய்ப்பொருளை நல்லோர் பலருடனும் பலகாலும்
பயிறல். நிற்றலாவது: இல்வாழ்வுழிக் "கருமமும்
உள்படாப் போகமும் துவ்வாத், தருமமும் தக்கார்க்கே
செய்" தலினும், (நாலடி. 250) துறந்துழித் தவத்தான்
மெய் உணர்ந்து அவா அறுத்தலினும் வழுவாமை
சிறப்புடை மகற்காயின் கற்றல் வேண்டும் என்பதூஉம்,
அவனால் கற்கப்படும் நூல்களும், அவற்றைக்
கற்குமாறும், கற்றதனால் பயனும் இதனாற்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
கற்கத் தகுந்த நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும்; அவ்வாறு
கற்ற பிறகு கற்ற கல்விக்குத் தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.
G.U.Pope:
So learn that you may full and faultless learning gain,
Then in obedience meet to lessons learnt remain.
Explanation
Let a man learn thoroughly whatever he may learn, and let his conduct be worthy of his learning.
மூலம்:
392 . எண்என்ப ஏனை எழுத்துஎன்ப இவ்விரண்டும்
கண்என்ப வாழும் உயிர்க்கு.
பரிமேழலகர் உரை:
எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ்விரண்டும் -
அறியாதார் எண் என்று சொல்லுவனவும் மற்றை
எழுத்து என்று சொல்லுவனவம் ஆகிய கலைகள்
இரண்டினையும்; வாழும் உயிர்க்குக் கண் என்ப -
அறிந்தார் சிறப்புடை உயிர்கட்குக் கண் என்று
சொல்லுவர்.
(எண் என்பது கணிதம் அது கருவியும் செய்கையும் என
இருவகைப்படும்; அவை ஏரம்பம் முதலிய நூல்களுள்
காண்க. எழுத்து எனவே, அதனோடு ஒற்றுமையுடைய
சொல்லும் அடங்கிற்று. இவ்விருதிறமும்,
அறமுதற்பொருள்களைக் காண்டற்குக் கருவியாகலின்,
'கண்' எனப்பட்டன. அவை கருவியாதல் ''ஆதி
முதலொழிய அல்லாதன எண்ணி, நீதி வழுவா
நிலைமையவால் - மாதே, அறமார் பொருள் இன்பம்
வீடு என்று இவற்றின், திறமாமோ எண்ணிறத்தால்
செப்பு." "எழுத்தறியத் தீரும் இழிதகைமை, தீர்ந்தான்,
மொழித்திறத்தின் முட்டறுப்பான் ஆகும்,
மொழித்திறத்தின், முட்டறுத்த நல்லோன் முதல் நூல்
பொருள் உணர்ந்து, கட்டறுத்து வீடு பெறும்."
இவற்றான் அறிக. 'என்ப' என்பவற்று, முன்னைய
இரண்டும் அஃறிணைப் பன்மைப் பெயர்; பின்னது
உயர்திணைப் பன்மை வினை. அறியாதார், அறிந்தார்
என்பன வருவிக்கப்பட்டன. சிறப்புடைய உயிர் என்றது
மக்கள் உயிருள்ளும் உணர்வு மிகுதி உடையதனை.
இதனால் கற்கப்படும் நூல்கட்குக் கருவியாவனவும்
அவற்றது இன்றியமையாமையும் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
எண் என்று சொல்லப்படுவன, எழுத்து என்று சொல்லப்படுவன
ஆகிய இருவகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள்
என்று கூறுவர்.
G.U.Pope:
The twain that lore of numbers and of letters give
Are eyes, the wise declare, to all on earth that live.
Explanation
Letters and numbers are the two eyes of man.
மூலம்:
393 . கண்உடையர் என்பவர் கற்றோர்: முகத்துஇரண்டு
புண்உடையர் கல்லா தவர்.
பரிமேழலகர் உரை:
கண் உடையர் என்பவர் கற்றோர் - கண்ணுடையர்
என்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே;
கல்லாதவர் முகத்து இரண்டு புண் உடையர் - மற்றைக்
கல்லாதவர் முகத்தின்கண் இரண்டு புண்ணுடையர்;
கண்ணிலர்.
(தேயம் இடையிட்டவற்றையும் காலம்
இடையிட்டவற்றையும் காணும் ஞானக்கண்
உடைமையின், கற்றாரைக் 'கண்ணுடையர்' என்றும்,
அஃதின்றி நோய் முதலியவற்றால் துன்பம் செய்யும்
ஊன்கண்ணே உடைமையின், கல்லாதவரைப்
'புண்ணுடையர்' என்றும் கூறினார். மேல்
கண்ணன்மை உணரநின்ற ஊனக்கண்ணின் மெய்ம்மை
கூறியவாற்றான், பொருள் நூல்களையும்
கருவிநூல்களையும் கற்றாரது உயர்வும், கல்லாதாரது
இழிவும் இதனான் தொகுத்துக் கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
கண்ணுடையவர் என்று உயர்வாகக் கூறப்படுகின்றவர் கற்றவரே;
கல்லாதவர் முகத்தில் இரண்டு புண் உடையவர் ஆவர்.
G.U.Pope:
Men who learning gain have eyes, men say;
Blockheads' faces pairs of sores display.
Explanation
The learned are said to have eyes, but the unlearned have (merely) two sores in their face.
மூலம்:
394 . உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்.
பரிமேழலகர் உரை:
உவப்பத் தலைக்கடி உள்ளப் பிரிதல் அனைத்தே -
யாவரையும் அவர் உவக்குமாறு தலைப்பெய்து, 'இனி
இவரை யாம் எங்ஙனம் கூடுதும்? என நினையுமாறு
நீங்குதலாகிய அத்தன்மைத்து; புலவர் தொழில் -
கற்றறிந்தாரது தொழில்.
(தாம் நல்வழி ஒழுகல் பிறர்க்கு உறுதி கூறல் என்பன
இரண்டும் தொழில் என ஒன்றாய் அடங்குதலின்,
'அத்தன்மைத்து' என்றார். அத்தன்மை: அப்பயனைத்
தரும் தன்மை. நல்லொழுக்கம் காண்டலானும், தமக்கு
மதுரமும் உறுதியுமாய கூற்றுக்கள் நிகழ்வு
எதிர்வுகளின் இன்பம் பயத்தலானும் கற்றார்மாட்டு
எல்லாரும் அன்புடையராவர் என்பதாம். இதனால்
கற்றாரது உயர்வு வகுத்துக் கூறப்பட்டது. ---
மு.வ உரை:
மகிழும்படியாகக் கூடிப் பழகி. (இனி இவரை எப்போது காண்போம்
என்று) வருந்தி நினைக்கும் படியாகப் பிரிதல் புலவரின்
தொழிலாகும்.
G.U.Pope:
You meet with joy, with pleasant thought you part;
Such is the learned scholar's wonderous art!
Explanation
It is the part of the learned to give joy to those whom they meet, and on leaving, to make them think (Oh! when shall we meet them again.)
மூலம்:
395 . உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
பரிமேழலகர் உரை:
உடையார்முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார் -
'பிற்றை நிலைமுனியாது கற்றல் நன்று' (புறநா. 183)
ஆதலான், செல்வர்முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு
போலத் தாமும் ஆசிரியர்முன் ஏக்கற்று நின்றும்
கற்றார் தலையாயினார்; கல்லாதவர் கடையரே -
அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்றும்
இழிந்தாரேயாவர்.
('உடையார், இல்லார்' என்பன உலகவழக்கு.
ஏக்கறுதல்; ஆசையால் தாழ்தல். கடையர்'
என்றதனான், அதன் மறுதலைப் பெயர்
வருவிக்கப்பட்டது. பொய்யாய மானம் நோக்க
மெய்யாய கல்வி இழந்தார் பின் ஒரு ஞான்றும்
அறிவுடைய ராகாமையின், 'கடையரே' என்றார்.
இதனால், கற்றாரது உயர்வும் கல்லாதாரது இழிவும்
கூறப்பட்டன.) ---
மு.வ உரை:
செல்வர்முன் வறியவர் நிற்பதுபோல் (கற்றவர்முன்) ஏங்கித் தாழ்ந்து
நின்றும் கல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.
G.U.Pope:
With soul submiss they stand, as paupers front a rich man's face;
Yet learned men are first; th'unlearned stand in lowest place.
Explanation
The unlearned are inferior to the learned, before whom they stand begging, as the destitute before the wealthy.
மூலம்:
396 . தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு.
பரிமேழலகர் உரை:
மணற்கேணி தொட்ட அனைத்து ஊறும் - மணலின்கண்
கேணி தோண்டிய அளவிற்றாக ஊறும்; மாந்தர்க்கு
அறிவு கற்றனைத்து ஊறும் - அதுபோல மக்கட்கு
அறிவு கற்ற அளவிற்றாக ஊறும்.
(ஈண்டுக் 'கேணி' என்றது, அதற்கண் நீரை.
'அளவிற்றாக' என்றது, அதன் அளவும் செல்ல
என்றவாறு. சிறிது கற்ற துணையான் அமையாது,
மேன்மேல் கற்றல் வேண்டும் என்பதாம். இஃது ஊழ்
மாறு கொள்ளாவழியாகலின் மேல் 'உண்மை அறிவே
மிகும்' (குறள். 373) என்றதனோடு மலையாமை
அறிக.) ---
மு.வ உரை:
மணலில் உள்ள கேணியில் தோண்டிய அளவிற்கு நீர் ஊறும்;
அதுபோல், மக்களுக்குக் கற்ற கல்வியின் அளவிற்கு அறிவு
ஊறும்.
G.U.Pope:
In sandy soil, when deep you delve, you reach the springs below;
The more you learn, the freer streams of wisdom flow.
Explanation
Water will flow from a well in the sand in proportion to the depth to which it is dug, and knowledge will flow from a man in proportion to his learning.
மூலம்:
397 . யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு.
பரிமேழலகர் உரை:
யாதானும் நாடுஆம் ஊர்ஆம் - கற்றவனுக்குத்
தன்னோடும் தன்னூருமேயன்றி, யாதானும் ஒரு நாடும்
நாடாம்; யாதானும் ஓர் ஊரும் ஊர் ஆம்; ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு என் - இங்ஙனமாயின்,
ஒருவன் தான் இறக்கும் அளவும் கல்லாது கழிகின்றது
என் கருதி?
(உயிரோடு சேறலின், 'சாம் துணையும்' என்றார். பிறர்
நாடுகளும் ஊர்களும் தம்போல உற்றுப்
பொருட்கொடையும் பூசையும் உவந்து செய்தற்கு
ஏதுவாகலின் கல்வி போலச் சிறந்தது பிறிதில்லை;
அதனையே எப்பொழுதும் செய்க என்பதாம்.) ---
மு.வ உரை:
கற்றவனுக்குத் தன் நாடும் ஊரும்போலவே வேறு எதுவாயினும்
நாடாகும்; ஊராகும்; ஆகையால் ஒருவன் சாகும்வரையில்
கல்லாமல் காலங்கழிப்பது ஏன்?
G.U.Pope:
The learned make each land their own, in every city find a home;
Who, till they die; learn nought, along what weary ways they roam!
Explanation
How is it that any one can remain without learning, even to his death, when (to the learned man) every country is his own (country), and every town his own (town) ?
மூலம்:
398 . ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து.
பரிமேழலகர் உரை:
ஒருவற்கு - ஒருவனுக்கு, தான் ஒருமைக்கண் கற்ற
கல்வி - தான் ஒரு பிறப்பின்கண் கற்ற கல்வி,
எழுமையும் ஏமாப்பு உடைத்து எழுபிறப்பினும் சென்று
உதவுதலை உடைத்து.
(வினைகள்போல உயிரின்கண் கிடந்து அது புக்குழிப்
புகும் ஆகலின், 'எழுமையும் ஏமாப்பு உடைத்து'
என்றார். எழுமை மேலே கூறப்பட்டது (குறள் 62.)
உதவுதல் - நன்னெறிக் கண் உய்த்தல்.) ---
மு.வ உரை:
ஒரு பிறப்பில் தான் கற்ற கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும்
அல்லாமல் ஒருவனுக்கு எழுபிறப்பிலும் உதவும்
தன்மையுடையதாகும்.
G.U.Pope:
The man who store of learning gains,
In one, through seven worlds, bliss attains.
Explanation
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births.
மூலம்:
399 . தாம்இன் புறுவது உலகுஇன் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
பரிமேழலகர் உரை:
தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு - தாம்
இன்புறுதற்கு ஏதுவாகிய கல்விக்கு உலகம்
இன்புறுதலால் அச்சிறப்பு நோக்கி; கற்றறிந்தார்
காமுறுவர் - கற்றறிந்தார் பின்னும் அதனையே
விரும்புவர்.
(தாம் இன்புறுதலானது, நிகழ்வின் கண்
சொற்பொருள்களின் சுவை நுகர்வானும், புகழ் பொருள்
பூசை பெறுதலானும், எதிர்வின்கண் அறம் வீடு
பயத்தலானும், அதனான் இடையறாத இன்பம்
எய்துதல். உலகு இன்புறுதலாவது: 'இம்மிக்காரோடு
தலைப்பெய்து அறியாதன எல்லாம் அறியப்பெற்றோம்'
என்றும், "யாண்டு பலவாக நரையில் மாயினேம்"
(புறநா. 191) என்றும் உவத்தல். செல்வமாயின்,
ஈட்டல் காத்தல் இழத்தல் என்ற இவற்றான்
துன்புறுதலும், பலரையும் பகையாக்கலும் உடைத்து
என அறிந்து, அதனைக் காமுறாமையின் 'கற்றறிந்தார்'
என்றும், கரும்பு அயிறற்குக் கூலிபோலத் தாம்
இன்புறுதற்கு உலகு இன்புறுதல் பிறவாற்றான்
இன்மையின் அதனையே காமுறுவர் என்றும்
கூறினார்.) ---
மு.வ உரை:
தாம் இன்புறுவதற்குக் காரணமான கல்வியால் உலகமும்
இன்புறுவதைக் கண்டு, கற்றறிந்த அறிஞர் மேன்மேலும்
(அக்கல்வியையே) விரும்புவர்.
G.U.Pope:
Their joy is joy of all the world, they see; thus more
The learners learn to love their cherished lore.
Explanation
The learned will long (for more learning), when they see that while it gives pleasure to themselves, the world also derives pleasure from it.
மூலம்:
400 . கேடுஇல் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
மாடுஅல்ல மற்றை யவை.
பரிமேழலகர் உரை:
ஒருவற்குக் கேடு இல் விழுச்செல்வம் கல்வி
ஒருவனுக்கு அழிவு இல்லாத சீரிய செல்வமாவது
கல்வி; மற்றையவை மாடு அல்ல - அஃது ஒழிந்த
மணியும் பொன்னும், முதலாயின செல்வமல்ல.
(அழிவின்மையாவது: தாயத்தார், கள்வர், வலியர்,
அரசர் என்ற இவரால் கொள்ளப்படாமையும்,
வழிப்பட்டார்க்குக் கொடுத்துழிக் குறையாமையும் ஆம்.
சீர்மை: தக்கார்கண்ணே நிற்றல். மணி, பொன்
முதலியவற்றிற்கு இவ்விரண்டும் இன்மையின்,
அவற்றை 'மாடு அல்ல' என்றார். இவை ஐந்து
பாட்டானும் கல்வியது சிறப்புக் கூறப்பட்டது.) ---
மு.வ உரை:
ஒருவனுக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும்;
கல்வி தவிர மற்றப் பொருள்கள் (அத்தகைய சிறப்புடைய )
செல்வம் அல்ல.
G.U.Pope:
Learning is excellence of wealth that none destroy;
To man nought else affords reality of joy.
Explanation
Learning is the true imperishable riches; all other things are not riches.