திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       ஊழியல்

              அதிகாரம்: 38                   ஊழ்
371. ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை: கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.

மு.வ உரை:
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழால் சோம்பல் ஏற்படும்.

372. பேதைப் படுக்கும் இழவுஊழ்: அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.

மு.வ உரை:
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை யாக்கும்; பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.

373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.

மு.வ உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.

374. இருவேறு உலகத்து இயற்கை: திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.

மு.வ உரை:
உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும்; செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு.

375. நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.

மு.வ உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும் உண்டு.

376. பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.

மு.வ உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.

377. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.

மு.வ உரை:
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர முடியாது.

378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.

மு.வ உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர்.

379. நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?

மு.வ உரை:
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர், தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?

380. ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.

மு.வ உரை:
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும் தானே முன் வந்து நிற்கும்.

------


Back to Top