மூலம்:
371 . ஆகுஊழால் தோன்றும் அசைவின்மை: கைப்பொருள்
போகுஊழால் தோன்றும் மடி.
பரிமேழலகர் உரை:
கைப்பொருள் ஆகுஊழால் அசைவு இன்மை தோன்றும் -
ஒருவற்குக் கைப்பொருளாதற்குக் காரணமாகிய ஊழான்
முயற்சி உண்டாம்; போகு ஊழால் மடி தோன்றும் - அஃது
அழிதற்குக் காரணமாகிய ஊழான் மடி உண்டாம். (ஆகூழ்,
போகூழ் என்னும் வினைத்தொகைகள் எதிர்காலத்தான்
விரிக்கப்பட்டுக் காரணப்பொருளவாய் நின்றன. அசைவு -மடி.
பொருளின் ஆக்க அழிவுகட்குத் துணைக்காரணமாகிய முயற்சி
மடிகளையும் தானே தோற்றுவிக்கும் என்பது கருத்து.).
மு.வ உரை:
கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழால் சோர்வில்லாத
முயற்சி உண்டாகும்; கைப்பொருள் போவதற்குக் காரணமான
ஊழால் சோம்பல் ஏற்படும்.
G.U.Pope:
Wealth-giving fate power of unflinching effort brings;
From fate that takes away idle remissness springs.
Explanation
Perseverance comes from a prosperous fate, and idleness from an adverse fate.
மூலம்:
372 . பேதைப் படுக்கும் இழவுஊழ்: அறிவகற்றும்
ஆகல்ஊழ் உற்றக் கடை.
பரிமேழலகர் உரை:
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் -
ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள்
இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப்
பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி
அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு
ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும்.
(கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,'
'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை.
'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது.
இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).
மு.வ உரை:
பொருள் இழத்தற்குக் காரணமான ஊழ், பேதை யாக்கும்; பொருள்
ஆவதற்குக் காரணமான ஊழ், அறிவைப் பெருக்கும்.
G.U.Pope:
The fate that loss ordains makes wise men's wisdom foolishness;
The fate that gain bestows with ampler powers will wisdom bless.
Explanation
An adverse fate produces folly, and a prosperous fate produces enlarged knowledge.
மூலம்:
373 . நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றும்தன்
உண்மை அறிவே மிகும்.
பரிமேழலகர் உரை:
நுண்ணிய நூல் பல கற்பினும் - பேதைப்படுக்கும்
ஊழுடையான் ஒருவன் நுண்ணிய பொருள்களை உணர்த்தும்
நூல் பலவற்றையும் கற்றானாயினும், மற்றும் தன் உண்மை
அறிவே மிகும் - அவனுக்குப் பின்னும் தன் ஊழான் ஆகிய
பேதைமை உணர்வே மேற்படும். (பொருளின் உண்மை
நூலின்மேல் ஏற்றப்பட்டது. மேற்படுதல் - கல்வியறிவைப் பின்
இரங்குவதற்கு ஆக்கிச் செயலுக்குத் தான் முற்படுதல். 'காதன்
மிக்குழிக் கற்றவும் கைகொடா, ஆதல் கண்ணகத்தஞ்சனம்
போலுமால்' (சீவக.கனக. 76) என்பதும் அது.
செயற்கையானாய அறிவையும் கீழ்ப்படுத்தும் என்பதாம்.).
மு.வ உரை:
ஒருவன் நுட்பமான நூல் பலவற்றைக் கற்றாலும், ஊழிற்கு
ஏற்றவாறு அவனுக்கு உள்ளதாகும் அறிவே மேற்பட்டுத் தோன்றும்.
G.U.Pope:
In subtle learning manifold though versed man be,
'The wisdom, truly his, will gain supremacy.
Explanation
Although (a man) may study the most polished treatises, the knowledge which fate has decreed to him will still prevail.
மூலம்:
374 . இருவேறு உலகத்து இயற்கை: திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு.
பரிமேழலகர் உரை:
உலகத்து இயற்கை இரு வேறு - உலகத்து ஊழினான் ஆய
இயற்கை இரண்டு கூறு, திரு வேறு தெள்ளியராதலும் வேறு -
ஆதலால் செல்வமுடையராதலும் வேறு, அறிவுடையராதலும்
வேறு. (செல்வத்தினைப் படைத்தலும் காத்தலும்
பயன்கோடலும் அறிவுடையார்க்கல்லது இயலாவன்றே?
அவ்வாறன்றி, அறிவுடையார் வறியராகவும் ஏனையார்
செல்வராகவும் காண்டலான், அறிவுடையராதற்கு ஆகும் ஊழ்
செல்வமுடையராதற்கு ஆகாது, செல்வமுடையராதற்கு ஆகும்
ஊழ் அறிவுடையராதற்கு ஆகாது என்றதாயிற்று. ஆகவே,
செல்வம் செய்யுங்கால் அறிவாகிய துணைக்காரணமும்
வேண்டா என்பது பெற்றாம்.).
மு.வ உரை:
உலகத்தின் இயற்கை, ஊழின் காரணமாக இருவேறு வகைப்படும்;
செல்வம் உடையவராதலும் வேறு, அறிவு உடையவராதலும் வேறு.
G.U.Pope:
Two fold the fashion of the world: some live in fortune's light;
While other some have souls in wisdom's radiance bright.
Explanation
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge.
மூலம்:
375 . நல்லவை எல்லாஅம் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு.
பரிமேழலகர் உரை:
செல்வம் செயற்கு - செல்வத்தை ஆக்குதற்கு,
நல்லவைஎல்லாம் தீயவாம் - நல்லவை எல்லாம் தீயவாய்
அழிக்கும்; தீயவும் நல்லவாம்-அதுவே யன்றித் தீயவை
தாமும் நல்லவாய் ஆக்கும், (ஊழ் வயத்தான். 'நல்லவை'
'தீயவை' யென்பன காலமும், இடனும், கருவியும்,
தொழிலும் முதலியவற்றை. 'ஊழா' னென்பது அதிகாரத்தாற்
பெற்றாம். அழிக்குமூழுற்றவழிக் கால முதலிய
நல்லவாயினும் அழியும்; அழிக்குமூ ழுற்றவழி அவை
தீயவாயினும் ஆகுமென்ப தாயிற்று. ஆகவே, கால முதலிய
துணைக்காரணங்களையும் வேறுபடுக்குமென்பது பெற்றாம்.
மு.வ உரை:
செல்வத்தை ஈட்டும் முயற்சிக்கு, ஊழ்வகையால் நல்லவை
எல்லாம் தீயவை ஆதலும் உண்டு; தீயவை நல்லவை ஆதலும்
உண்டு.
G.U.Pope:
All things that good appear will oft have ill success;
All evil things prove good for gain of happiness.
Explanation
In the acquisition of property, every thing favourable becomes unfavourable, and (on the other hand) everything unfavourable becomes favourable, (through the power of fate).
மூலம்:
376 . பரியினும் ஆகாவாம் பால்அல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம.
பரிமேழலகர் உரை:
பால் அல்ல பரியினும் ஆகாவாம் - தமக்கு ஊழல்லாத
பொருள்கள் வருந்திக்காப்பினும் தம்மிடத்து நில்லாவாம், தம
உய்த்துச் சொரியினும் போகா - ஊழால் தமவாய பொருள்கள்
புறத்தே கொண்டுபோய்ச் சொரிந்தாலும் தம்மை விட்டுப்
போகா. (பொருள்களின் நிலையும் போக்கும் ஊழினான்
ஆவதல்லது. காப்பு இகழ்ச்சிகளான் ஆகா என்பதாம். இவை
ஆறு பாட்டானும் பொருட்குக் காரணமாய ஊழின் வலி
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருள்கள் வருந்திக்
காப்பாற்றினாலும் நில்லாமல் போகும்; தமக்கு உரியவை
கொண்டுபோய்ச் சொரிந்தாலும் போகா.
G.U.Pope:
Things not your own will yield no good, howe'er you guard with pain;
Your own, howe'er you scatter them abroad, will yours remain.
Explanation
Whatever is not conferred by fate cannot be preserved although it be guarded with most painful care; and that, which fate has made his, cannot be lost, although one should even take it and throw it away.
மூலம்:
377 . வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது.
பரிமேழலகர் உரை:
கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும்
பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான்
வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த
வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது. (ஓர் உயிர் செய்த
வினையின் பயன் பிறிதோர் உயிரின்கண் செல்லாமல்
அவ்வுயிர்க்கே வகுத்தலின், வகுத்தான் என்றார். 'இசைத்தலும்
உரிய வேறிடத்தான' (தொல்.சொல் 59) என்பதனான்
உயர்திணையாயிற்று. படையா தார்க்கேயன்றிப்
படைத்தார்க்கும் என்றமையால், உம்மை எச்ச உம்மை.
வெறும்முயற்சிகளாற் பொருள்களைப் படைத்தல் அல்லது
நுகர்தல் ஆகாது, அதற்கு ஊழ் வேண்டும் என்பதாயிற்று.).
மு.வ உரை:
ஊழ் ஏற்படுத்திய வகையால் அல்லாமல் முயன்று
கோடிக்கணக்கான பொருள்களைச் சேர்த்தவர்க்கும் அவற்றை நுகர
முடியாது.
G.U.Pope:
Save as the 'sharer' shares to each in due degree,
To those who millions store enjoyment scarce can be.
Explanation
Even those who gather together millions will only enjoy them, as it has been determined by the disposer (of all things).
மூலம்:
378 . துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
பரிமேழலகர் உரை:
துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார்
துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின்
- ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது
ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால
முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று
வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின்
வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண்
வந்தது.).
மு.வ உரை:
வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால், நுகரும்
பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்கொள்வர்.
G.U.Pope:
The destitute with ascetics merit share,
If fate to visit with predestined ills would spare.
Explanation
The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away.
மூலம்:
379 . நன்றுஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்றுஆம்கால்
அல்லற் படுவது எவன்?
பரிமேழலகர் உரை:
நன்று ஆங்கால் நல்லவாக் காண்பவர் - நல்வினை
விளையுங்கால், அதன் விளைவாய இன்பங்களைத் துடைக்கும்
திறன் நாடாது, இவை நல்ல என்று இயைந்து அனுபவிப்பார்,
அன்று ஆங்கால் அல்லற்படுவது எவன் - ஏனைத் தீவினை
விளையுங்கால் அதன் விளைவாய துன்பங்களையும் அவ்வாறு
அனுபவியாது, துடைக்கும் திறன் நாடி அல்லல் உழப்பது என்
கருதி? (தாமே முன் செய்து கொண்டமையானும், ஊட்டாது
கழியாமையானும், இரண்டும் இயைந்து அனுபவிக்கற்பால,
அவற்றுள் ஒன்றிற்கு இயைந்து அனுபவித்து, ஏனையதற்கு
அது செய்யாது வருந்துதல் அறிவன்று என்பதாம். இவை
மூன்று பாட்டானும் இன்பத்துன்பங்கட்குக் காரணமாய ஊழின்
வலி கூறப்பட்டது.).
மு.வ உரை:
நல்வினை விளையும்போது நல்லவை எனக் கருதி மகிழ்கின்றவர்,
தீவினை விளையும்போது துன்பப்பட்டுக் கலங்குவது ஏனோ?
G.U.Pope:
When good things come, men view them all as gain;
When evils come, why then should they complain?
Explanation
How is it that those, who are pleased with good fortune, trouble themselves when evil comes, (since both are equally the decree of fa te) ?
மூலம்:
380 . ஊழின் பெருவலி யாவுள? மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
பரிமேழலகர் உரை:
மற்ற ஒன்று சூழினும் தான் முந்துறும் - தன்னை விலக்குதற்
பொருட்டுத் தனக்கு மறுதலையாவதோர் உபாயத்தைச் சூழினும்
, தான் அவ்வுபாயமேயானும் பிறிதொன்றானும் வழியாக வந்து
அச்சூழ்ச்சியின் முற்பட்டு நிற்கும், ஊழின் பெருவழி யா உள -
அதனால் ஊழ்போல மிக்க வலியுடையன யாஉள - அதனால்
ஊழ்போல மிக்க வலியுடையன யாவை உள? ('பெருவலி'
ஆகுபெயர். சூழ்தல். பலருடனும் பழுதற எண்ணுதல்.
செய்தற்கே அன்றிச் சூழ்தற்கும் அவதி கொடாது என்றமையின்,
உம்மை எச்ச உம்மை. எல்லாம் வழியாக
வருதலுடைமையின், ஊழே வலியது என்பதாம். இதனான்
அவ்விருவகை ஊழின் வலியும் பொதுவாகக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஊழைவிட மிக்க வலிமையுள்ளவை வேறு எவை உள்ளன? ஊழை
விலக்கும் பொருட்டு மற்றொரு வழியை ஆராய்ந்தாலும் அங்கும்
தானே முன் வந்து நிற்கும்.
G.U.Pope:
What powers so great as those of Destiny? Man's skill
Some other thing contrives; but fate's beforehand still.
Explanation
What is stronger than fate ? If we think of an expedient (to avert it), it will itself be with us before (the thought).