திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 37                   அவாவறுத்தல்
361. அவாஎன்ப எல்லா உயிர்க்கும்எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்புஈனும் வித்து.

மு.வ உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித் துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்று கூறுவர்.

362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை: மற்றுஅது
வேண்டாமை வேண்ட வரும்.

மு.வ உரை:
ஒருவன் ஒன்றை விரும்புவதானால், பிறவா நிலைமையை விரும்பவேண்டும்; அது, அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

363. வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை:
யாண்டும் அஃதுஒப்பது இல்.

மு.வ உரை:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை; வேறு எங்கும் அதற்கு நிகரான ஒன்று இல்லை.

364. தூஉய்மை என்பது அவாவின்மை: மற்றுஅது
வாஅய்மை வேண்ட வரும்.

மு.வ உரை:
தூயநிலை என்று கூறப்படுவது அவா இல்லாதிருத்தலே யாகும்; அவா அற்ற அத்தன்மை, மெய்ப் பொருளை விரும்புவதால் உண்டாகும்.

365. அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்.

மு.வ உரை:
பற்றற்றவர் என்று கூறப்படுவோர் அவா அற்றவரே; அவா அறாத மற்றவர், அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

366. அஞ்சுவது ஓரும் அறனே: ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா.

மு.வ உரை:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம்; ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டு கெடுத்து வஞ்சிப்பது அவாவே.

367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டும் ஆற்றான் வரும்.

மு.வ உரை:
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

368. அவாஇல்லார்க்கு இல்லாகும் துன்பம்அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்.

மு.வ உரை:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும்; அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும்மேலும் ஒழியாமல் வரும்.

369. இன்பம் இடையறாது ஈண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்.

மு.வ உரை:
அவா என்றுசொல்லப் படுகின்ற துன்பங்களுள் பொல்லாத துன்பம் கெடுமானால் இவ்வுலகிலும் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்.

மு.வ உரை:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

------


Back to Top