திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 35                   துறவு
341. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.

மு.வ உரை:
ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை.

342. வேண்டின்உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல.

மு.வ உரை:
துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால், எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயே துறக்க வேண்டும. துறந்தபின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல.

343. அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை: விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு.

மு.வ உரை:
ஐம்பொறிகளுக்கு உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும். அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விடல் வேண்டும்.

344. இயல்பாகும் நோன்பிற்குஒன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து.

மு.வ உரை:
தவம் செய்வதற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும்; பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குதற்கு வழியாகும்.

345. மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்புஅறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை?

மு.வ உரை:
பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள்; ஆகையால் அதற்குமேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ?

346. யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்.

மு.வ உரை:
உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக் கருதலுமாகிய மயக்கத்தைப் போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான்.

347. பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு.

மு.வ உரை:
யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டு விடாதவரை, துன்பங்களும் விடாமல் பற்றிக் கொள்கின்றன.

348. தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்.

மு.வ உரை:
முற்றத் துறந்தவரே உயர்ந்த நிலையினர் ஆவர். அவ்வாறு துறக்காத மற்றவர், அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர்.

349. பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும்.

மு.வ உரை:
இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும்; இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமை காணப்படும்.

350. பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

மு.வ உரை:
பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும்; உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப்பற்றைப் பற்ற வேண்டும்.

------


Back to Top