திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 34                   நிலையாமை
331. நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.

மு.வ உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும் புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த நிலையாகும்.

332. கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.

மு.வ உரை:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம் சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும் கூட்டம் கலைவதைப் போன்றது.

333. அற்கா இயல்பிற்றுச் செல்வம்: அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.

மு.வ உரை:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான அறங்களைச் செய்ய வேண்டும்.

334. நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.

மு.வ உரை:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து அறுக்கும் வாளாக உள்ளது.

335. நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.

மு.வ உரை:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு நெருங்குவதற்குமுன்) நல்ல அறச்செயல் விரைந்து செய்யத்தக்கதாகும்.

336. நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.

மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இவ்வுலகம்.

337. ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.

மு.வ உரை:
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.

338. குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

மு.வ உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.

339. உறங்கு வதுபோலும் சாக்காடு: உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.

மு.வ உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.

340. புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?

மு.வ உரை:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில் அமையவில்லையோ?

------


Back to Top