மூலம்:
331 . நில்லாத வற்றை நிலையின என்றுஉணரும்
புல்லறி வாண்மை கடை.
பரிமேழலகர் உரை:
நில்லாதவற்றை நிலையின் என்று உணரும் புல்லறிவு ஆண்மை - நிலையுதல் இலவாகிய
பொருள்களை நிலையுதல் உடைய என்று கருதுகின்ற புல்லிய அறிவினை உடையராதல்; கடை
- துறந்தார்க்கு இழிபு.
(தோற்றம் உடையவற்றைக் கேடில என்று கருதும் புல்லறிவால் அவற்றின்மேல் பற்றுச் செய்தல்
பிறவித்துன்பத்திற்கு ஏதுவாகலின், அது வீடு எய்துவார்க்கு இழுக்கு என்பது இதனால்
கூறப்பட்டது. இனி, புல்லறிவாளர் பெரும்பான்மையும் பற்றுச்செய்வது சிற்றின்பத்துக்கு
ஏதுவாகிய செல்வத்தின் கண்ணும்,அதனை அனுபவிக்கும் யாக்கையின் கண்ணும் ஆகலின்,
வருகின்ற பாட்டுகளான் அவற்றது நிலையாமையை விதந்து கூறுப.) ---
மு.வ உரை:
நிலையில்லாதவைகளை நிலையானவை என்று மயங்கி உணரும்
புல்லறிவு உடையவராக இருத்தல் வாழ்க்கையில் இழிந்த
நிலையாகும்.
G.U.Pope:
Lowest and meanest lore, that bids men trust secure,
In things that pass away, as things that shall endure!
Explanation
That ignorance which considers those things to be stable which are not so, is dishonourable (to the wise).
மூலம்:
332 . கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று.
பரிமேழலகர் உரை:
பெருஞ்செல்வம் கூத்தாட்டு அவைக்குழாத்தற்று - ஒருவன்
மாட்டுப் பெரிய செல்வம் வருதல் கூத்தாடுதல் செய்கின்ற
அரங்கின்கண் காண்போர் குழாம் வந்தாற்போலும், போக்கும்
அது விளிந்தற்று - அதனது போக்கும் அக்கூத்தாட்டு
முடிந்தவழி அக்குழாம் போயினாற்போலும். (பெருஞ்செல்வம்
எனவே, துறக்கச் செல்வமும் அடங்கிற்று. போக்கும் என்ற,
எச்ச உம்மையான், வருதல் பெற்றாம். அக்குழாம் கூத்தாட்டுக்
காரணமாக அரங்கின் கண் பலதிறத்தால் தானே வந்து,
அக்காரணம் போயவழித் தானும் போமாறுபோல, செல்வமும்
ஒருவன் நல்வினை காரணமாக அவன்மாட்டுப் பல் திறத்தால்
தானே வந்து அக்காரணம் போயவழித் தானும் போம்
என்றதாயிற்று.).
மு.வ உரை:
பெரிய செல்வம் வந்து சேர்தல், கூத்தாடுமிடத்தில் கூட்டம்
சேர்வதைப் போன்றது; அது நீங்கிப் போதலும் கூத்து முடிந்ததும்
கூட்டம் கலைவதைப் போன்றது.
G.U.Pope:
As crowds round dancers fill the hall, is wealth's increase;
Its loss, as throngs dispersing, when the dances cease.
Explanation
The acquisition of wealth is like the gathering together of an assembly for a theatre; its expenditure is like the breaking up of that assembly.
மூலம்:
333 . அற்கா இயல்பிற்றுச் செல்வம்: அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல்.
பரிமேழலகர் உரை:
அற்கா இயல்பிற்றுச் செல்வம் - நில்லாத
இயல்பினையுடைத்துச் செல்வம், அது பெற்றால் அற்குப
ஆங்கே செயல் - அதனைப் பெற்றால் அதனால் செய்யப்படும்
அறங்களை அப்பெற்ற பொழுதே செய்க. ('அல்கா' என்பது
திரிந்து நின்றது. ஊழுள்ளவழியல்லது துறந்தாரால்
பெறப்படாமையின், அது பெற்றால் என்றும் அஃது இல்வழி
நில்லாமையின் 'ஆங்கே' என்றும் கூறினார். அதனால்
செய்யப்படும் அறங்களாவன: பயன் நோக்காது செய்யப்படும்
கடவுட் பூசையும், தானமும் முதலாயின. அவை ஞான
ஏதுவாய் வீடு பயத்தலின் அவற்றை 'அல்குப' என்றும்
'செயல்' என்றும் கூறினார். இவை இரண்டு பாட்டானும்
செல்வம் நிலையாமை கூறப்பட்டது.).
மு.வ உரை:
செல்வம் நிலைக்காத இயல்பை உடையது; அத்தகைய
செல்வத்தைப் பெற்றால், பெற்ற அப்பொழுதே நிலையான
அறங்களைச் செய்ய வேண்டும்.
G.U.Pope:
Unenduring is all wealth; if you wealth enjoy,
Enduring works in working wealth straightway employ.
Explanation
Wealth is perishable; let those who obtain it immediately practise those (virtues) which are imperishable.
மூலம்:
334 . நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாள்அது உணர்வார்ப் பெறின்.
பரிமேழலகர் உரை:
நாள் என ஒன்றுபோல் காட்டி ஈரும் வாளது உயிர் - நாள்
என்று அறுக்கப்படுவதொருகாலவரையறைபோலத் தன்னைக்
காட்டி ஈர்ந்து செல்கின்ற வாளினது வாயது உயிர், உணர்வார்ப்
பெறின் - அஃது உணர்வாரைப் பெறின். (காலம் என்னும்
அருவப்பொருள் உலகியல் நடத்தற் பொருட்டு ஆதித்தன்
முதலிய அளவைகளால் கூறுபட்டதாக வழங்கப்படுவதல்லது,
தானாகக் கூறுபடாமையின், நாள் என ஒன்றுபோல் என்றும்
அது தன்னை வாள் என்று உணரமாட்டாதார் தமக்குப் பொழுது
போகாநின்றது என்று இன்புறுமாறு நாளாய் மயக்கலின்
'காட்டி' என்றும் இடைவிடாது ஈர்தலான் 'வாளின் வாயது'
என்றும், அஃது ஈர்கின்றமையை உணர்வார் அரியர் ஆகலின்
உணர்வார்ப் பெறின் என்றும் கூறினார். உயிர் என்னும்
சாதியொருமைப் பெயர் ஈண்டு உடம்பின்மேல் நின்றது.
ஈரப்படுவது அதுவேயாகலின். வாள் என்பது ஆகுபெயர். இனி
இதனை நாள் என்பதொரு பொருள்போலத் தோன்றி உயிரை
ஈர்வதொருவாளாம் என்று உரைப்பாரும் உளர் :'என' என்பது
பெயரன்றி இடைச் சொல்லாகலானும், 'ஒன்றுபோல் காட்டி'
என்பதற்கு ஒரு பொருள் சிறப்பு இன்மையானும், 'அது'
என்பது குற்றியலுகரம் அன்மையானும், அஃது உரையன்மை
அறிக.).
மு.வ உரை:
வாழ்க்கையை ஆராய்ந்து உணர்வாரைப் பெற்றால், நாள் என்பது
ஒரு கால அளவுபோல் காட்டி, உயிரை உடம்பிலிருந்து பிரித்து
அறுக்கும் வாளாக உள்ளது.
G.U.Pope:
As 'day' it vaunts itself; well understood, 'tis knife',
That daily cuts away a portion from thy life.
Explanation
Time, which shows itself (to the ignorant) as if it were something (real) is in the estimation of the wise (only) a saw which cuts down life.
மூலம்:
335 . நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
பரிமேழலகர் உரை:
நாச் செற்று விக்குள் மேல் வாராமுன் - உரையாடா வண்ணம்
நாவை அடக்கி விக்குள் எழுவதற்கு முன்னே; நல்வினை
மேற்சென்று செய்யப்படும் - வீட்டிற்கு ஏதுவாகிய அறம்
விரைந்து செய்யப்படும். (மேல் நோக்கி வருதல் ஒரு
தலையாகலானும், வந்துழிச் செய்தலே அன்றிச் சொல்லும்
ஆகாமையானும் 'வாராமுன்' என்றும், அதுதான்
இன்னபொழுது வரும் என்பது இன்மையின் 'மேற்சென்று'
என்றும் கூறினார். மேற்சேறல் மண்டுதல். நல்வினை செய்யும்
ஆற்றின்மேல் வைத்து நிலையாமை கூறியவாறு.).
மு.வ உரை:
நாவை அடக்கி விக்கல் மேலெழுவதற்கு முன்னே (இறப்பு
நெருங்குவதற்குமுன்) நல்ல அறச்செயல் விரைந்து
செய்யத்தக்கதாகும்.
G.U.Pope:
Before the tongue lie powerless, 'mid the gasp of gur gling breath,
Arouse thyself, and do good deeds beyond the power of death.
Explanation
Let virtuous deeds be done quickly, before the biccup comes making the tongue silent.
மூலம்:
336 . நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
பரிமேழலகர் உரை:
ஒருவன் நெருதல் உளன் இன்று இல்லை என்னும் பெருமை
உடைத்து; - ஒருவன் நெருநல் உளனாயினான் , அவனே
இன்று இல்லையாயினான் என்று சொல்லும் நிலையாமை
மிகுதி உடைத்து, இவ்வுலகு - இவ்வுலகம். '(ஈண்டு உண்மை
பிறத்தலையும், இன்மை இறத்தலையும் உணர்த்தி நின்றன.
அவை பெண்பாற்கும் உளவாயினும், சிறப்புப்பற்றி ஆண்பாற்கே
கூறினார். இந் நிலையாமையே உலகின் மிக்கது என்பதாம்.).
மு.வ உரை:
நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான்
என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது
இவ்வுலகம்.
G.U.Pope:
Existing yesterday, today to nothing hurled!-
Such greatness owns this transitory world.
Explanation
This world possesses the greatness that one who yesterday was is not today.
மூலம்:
337 . ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல.
பரிமேழலகர் உரை:
ஒரு பொழுதும் வாழ்வது அறியார் - ஒரு பொழுதளவும் தம்
உடம்பும் உயிரும் இயைந்திருத்தலைத் தெளியமாட்டார்,
கோடியும் அல்ல பல கருதுப - மாட்டாது வைத்தும்,
கோடியளவும் அன்றி அதனினும் பலவாய நினைவுகளை
நினையா நிற்பர் அறிவிலாதார். (இழிவு சிறப்பு உம்மையால்
பொழுது என்பது ஈண்டுக் கணத்தின்மேல் நின்றது.
காரணமாகிய வினையின் அளவே வாழ்தற்கும் அளவாகலின்,
அஃது அறியப்படாதாயிற்று.பலவாய நினைவுகளாவன:
பொறிகளான் நுகரப்படும் இன்பங்கள் தமக்கு உரியவாமாறும்
அதற்குப் பொருள் துணைக்காரணம் ஆமாறும், அது தம்
முயற்சிகளான் வருமாறும், அவற்றைத் தாம் முயலுமாறும்,
அவற்றிற்கு வரும் இடையூறுகளும் அவற்றை நீக்குமாறும்
நீக்கி அப்பொருள் கடைக் கூட்டுமாறும், அதனைப் பிறர்
கொள்ளாமல் காக்குமாறும், அதனால் நட்டாரை ஆக்குமாறும்,
நள்ளாரை அழிக்குமாறும் தாம் அவ்வின்பங்கள் நுகருமாறும்
முதலாயின. அறிவிலாரது இயல்பின் மேல் வைத்து
நிலையாமை கூறியவாறு. இனிக் 'கருதுப' என்பதனை
அஃறிணைப் பன்மைப் பெயராக்கி உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
அறிவில்லாதவர் ஒருவேளையாவது வாழ்க்கையின் தன்மையை
ஆராய்ந்து அறிவதில்லை; ஆனால் வீணில் எண்ணுவனவோ ஒரு
கோடியும் அல்ல; மிகப் பல எண்ணங்கள்.
G.U.Pope:
Who know not if their happy lives shall last the day,
In fancies infinite beguile the hours away!
Explanation
Innumerable are the thoughts which occupy the mind of (the unwise), who know not that they shall live another moment.
மூலம்:
338 . குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.
பரிமேழலகர் உரை:
குடம்பை தனித்து ஒழியப் புள்பறந்தற்று - முன் தனியாத
முட்டை தனித்துக் கிடப்ப அதனுள் இருந்த புள்ளுப் பருவம்
வந்துழிப் பறந்து போன தன்மைத்து; உடம்பொடு உயிரிடை
நட்பு - உடம்பிற்கும் உயிர்க்கும் உளதாய நட்பு.
('தனித்துஒழிய' என்றதனான் முன் தனியாமை பெற்றாம்.
அஃதாவது, கருவும் தானும்ஒன்றாய்ப் பிறந்து வேறாம்
துணையும் அதற்கு ஆதாரமாய்நிற்றல் அதனால் அஃது
உடம்பிற்கு உவமையாயிற்று; அதனுள் வேற்றுமையின்றி
நின்றே பின் புகாமல் போகலின், புள்உயிர்க்கு
உவமையாயிற்று. முட்டையுள் பிறப்பன பிறவும்உளவேனும்,
புள்ளையே கூறினார், பறந்து போதல் தொழிலான் உயிரோடு
ஒப்புமை எய்துவது அதுவே யாகலின். 'நட்பு'என்பது ஈண்டுக்
குறிப்பு மொழியாய் நட்பின்றிப்போதல் உணர்த்தி நின்றது.
சேதனமாய் அருவாய்நித்தமாய உடம்பும் தம்முள் மாறாகலின்
, வினைவயத்தால்கூடியதல்லது நட்பில என்பது அறிக. இனி,
'குடம்பை' என்பதற்குக்கூடு என்று உரைப்பாரும் உளர்; அது
புள்ளுடன்தோன்றாமையானும், அதன் கண் அது மீண்டு
புகுதல்உடைமையானும், உடம்பிற்கு உவமையாகாமை
அறிக.).
மு.வ உரை:
உடம்போடு உயிர்க்கு உள்ள உறவு, தான் இருந்த கூடு தனியே
இருக்க அதைவிட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது.
G.U.Pope:
Birds fly away, and leave the nest deserted bare;
Such is the short-lived friendship soul and body share.
Explanation
The love of the soul to the body is like (the love of) a bird to its egg which it flies away from and leaves empty.
மூலம்:
339 . உறங்கு வதுபோலும் சாக்காடு: உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
பரிமேழலகர் உரை:
சாக்காடு உறங்குவது போலும் - ஒருவனுக்குச் சாக்காடு
வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி
விழிப்பது போலும் - அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி
விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும்
உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற்
போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி
வரும் என்பது கருத்து. நிலையாமையே நிலைபெற்றவாறு
அறிவித்தற்குப் பிறப்பும் உடன் கூறப்பட்டது.).
மு.வ உரை:
இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது;
பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப்
போன்றது.
G.U.Pope:
Death is sinking into slumbers deep;
Birth again is waking out of sleep.
Explanation
Death is like sleep; birth is like awaking from it.
மூலம்:
340 . புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு?
பரிமேழலகர் உரை:
உடம்பினுள் துச்சில் இருந்த உயிர்க்கு - வாதம்
முதலியவற்றின் இல்லாய உடம்புகளுள் ஒதுக்கிருந்தே போந்த
உயிர்க்கு , புக்கில் அமைந்தின்று கொல் - எஞ்ஞான்றும்
இருப்பதோர் இல் இதுகாறும் அமைந்ததில்லை போலும்!
(அந்நோய்கள் இருக்க அமைந்த ஞான்று இருந்தும், வெகுண்ட
ஞான்று போயும் ஓர் உடம்பினுள் நிலைபெறாது வருதலால்,
'துச்சில் இருந்த' என்றார். பின் புறப்படாது புக்கேவிடும் இல்
அமைந்ததாயின்,பிறர் இல்களுள் துச்சிலிராது என்பதாம்,
ஆகவே உயிரோடுகூடி நிற்பதோர் உடம்பும் இல்லை என்பது
பெறப்பட்டது. இவைஏழு பாட்டானும் , முறையே
யாக்கைகட்கு வரைந்த நாள்கழிகின்றவாறும், கழிந்தால்
உளதாய நிலையாமையும், அவைஒரோவழிப் பிறந்த
அளவிலே இறத்தலும், ஒரு கணமாயினும் நிற்கும்என்பது
தெளியப்படாமையும், உயிர் நீங்கிய வழிக்கிடக்குமாறும்,
அவற்றிற்கு இறப்பும் பிறப்பும் மாறி மாறிவருமாறும்
அவைதாம் உயிர்க்குரிய அன்மையும் என்று,இவ்வாற்றால்
யாக்கை நிலையாமை கூறியவாறு கண்டுகொள்க.).
மு.வ உரை:
(நோய்களுக்கு இடமாகிய) உடம்பில் ஒரு மூலையில் குடியிருந்த
உயிர்க்கு, நிலையாகப் புகுந்திருக்கும் வீடு இதுவரையில்
அமையவில்லையோ?
G.U.Pope:
The soul in fragile shed as lodger courts repose:-
Is it because no home's conclusive rest it knows?
Explanation
It seems as if the soul, which takes a temporary shelter in a body, had not attained a home.