மூலம்:
321 . அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்.
பரிமேழலகர் உரை:
(அறவினை யாது எனின் கொல்லாமை - அறங்களெல்லாம்
ஆகிய செய்கை யாது என்று வினவின், அஃது ஓர் உயிரையும்
கொல்லாமையாம், கோறல் பிற வினை எல்லாம் தரும் -
அவற்றைக் கொல்லுதல் பாவச்செய்கைகள் எல்லாவற்றையும்
தானே தரும் ஆதலான். (அறம் - சாதியொருமை. விலக்கியது
ஒழிதலும் அறஞ்செய்தலாம் ஆகலின், கொல்லாமையை
அறவினை என்றார். ஈண்டுப் பிறவினை என்றது அவற்றின்
விளைவை. கொலைப்பாவம் விளைக்கும் துன்பம் ஏனைப்
பாவங்களெல்லாம் கூடியும் விளைக்க மாட்டா என்பதாம்.
கொல்லாமை தானே பிற அறங்கள் எல்லாவற்றின் பயனையும்
தரும் என்று மேற்கோள் கூறி, அதற்கு ஏது எதிர்மறை
முகத்தால் கூறியவாறாயிற்று.).
மு.வ உரை:
அறமாகிய செயல் எது என்றால் ஓர் உயிரையும்
கொல்லாமையாகும்; கொல்லுதல் அறமல்லாத செயல்கள்
எல்லாவற்றையும் விளைக்கும்.
G.U.Pope:
What is the work of virtue? 'Not to kill';
For 'killing' leads to every work of ill.
Explanation
Never to destroy life is the sum of all virtuous conduct. The destruction of life leads to every evil.
மூலம்:
322 . பகுத்துஉண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
பரிமேழலகர் உரை:
பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் - உண்பதனைப் பசித்த
உயிர்கட்குப் பகுத்துக் கொடுத்து உண்டு ஐவகை உயிர்களையும்
ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை -
அறநூலை உடையார் துறந்தார்க்குத் தொகுத்த அறங்கள்
எல்லாவற்றினும் தலையாய அறம். ('பல்லுயிரும்' என்னும்
முற்று உம்மை விகாரத்தால் தொக்கது. ஓம்புதல்: சோர்ந்தும்
கொலை வாராமல் குறிக்கொண்டு காத்தல். அதற்குப் பகுத்து
உண்டல் இன்றியமையா உறுப்பு ஆகலின் அச்சிறப்புத் தோன்ற
அதனை இறந்தகால வினையெச்சத்தால் கூறினார். எல்லா
நூல்களிலும் நல்லன எடுத்து எல்லார்க்கும் பொதுபடக் கூறுதல்
இவர்க்கு இயல்பு ஆகலின், ஈண்டும் பொதுப்பட 'நூலோர்'
என்றும் அவர் எல்லார்க்கும் ஒப்ப முடிதலான் 'இது தலையாய
அறம்' என்றும் கூறினார்.).
மு.வ உரை:
கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துத் தானும் உண்டு பல
உயிர்களையும் காப்பாற்றுதல், அறநூலார் தொகுத்த அறங்கள்
எல்லாவற்றிலும் தலையான அறமாகும்.
G.U.Pope:
Let those that need partake your meal; guard every-thing that lives;
This the chief and sum of lore that hoarded wisdom gives.
Explanation
The chief of all (the virtues) which authors have summed up, is the partaking of food that has been shared with others, and the preservation of the mainfold life of other creatures.
மூலம்:
323 . ஒன்றாக நல்லது கொல்லாமை: மற்றுஅதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
பரிமேழலகர் உரை:
ஒன்றாக நல்லது கொல்லாமை - நூலோர் தொகுத்த
அறங்களுள் தன்னோடு இணையொப்பதின்றித் தானேயாக
நல்லது கொல்லாமை; பொய்யாமை அதன் பின்சார நன்று -
அஃது ஒழிந்தால் பொய்யாமை அதன் பின்னே நிற்க நன்று.
'('நூலோர் தொகுத்த அறங்களுள்' என்பது அதிகாரத்தான்
வந்தது. அதிகாரம் கொல்லாமையாயினும் , மேல்
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் எனவும், யாம் மெய்யாக்
கண்டவற்றுள் இல்லை எனவும் கூறினார் ஆகலின் இரண்டு
அறத்துள்ளும் யாது சிறந்தது என்று ஐயம் நிகழுமன்றே; அது
நிகழாமையாற்பொருட்டு, ஈண்டு அதன் பின்சாரப் பொய்யாமை
நன்று என்றார். முன் கூறியதில் பின் கூறியது வலியுடைத்து
ஆகலின், அதனைப் பின்சார நன்று என்றது, நன்மை
பயக்கும்வழிப் பொய்யும் மெய்யாயும், தீமை பயக்கும்வழி
மெய்யும் பொய்யாயும் இதனைப் பற்ற அது திரிந்துவருதலான்
என உணர்க. இவை மூன்று பாட்டானும், இவ்வறத்தினது
சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது; அதற்கு
அடுத்த நிலையில் வைத்துக் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
G.U.Pope:
Alone, first of goods things, is 'not to slay';
The second is, no untrue word to say.
Explanation
Not to destroy life is an incomparably (great) good next to it in goodness ranks freedom from falsehood.
மூலம்:
324 . நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி.
பரிமேழலகர் உரை:
நல் ஆறு எனப்படுவது யாது எனின் - மேற்கதி வீடு பேறுகட்கு
நல்ல நெறி என்று சொல்லப்படுவது யாது என்று வினவின்,
யாது ஒன்றும் கொல்லாமை சூழும் நெறி - அஃது யாதோர்
உயிரையும் கொல்லாமை ஆகிய அறத்தினைக் காக்கக் கருதும்
நெறி. ('யாது ஒன்றும்' என்றது, ஓரறிவுயிரையும்
அகப்படுத்தற்கு. காத்தல்: வழுவாமல் காத்தல். இதனான்
இவ்வறத்தினை உடையதே நல்நெறி என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
நல்ல வழி என்று அறநூல்களால் சொல்லப்படுவது எது என்றால்,
எந்த உயிரையும் கொல்லாத அறத்தைப் போற்றும் நெறியாகும்.
G.U.Pope:
You ask, What is the good and perfect way?
'Tis path of him who studies nought to slay.
Explanation
Good path is that which considers how it may avoid killing any creature.
மூலம்:
325 . நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.
பரிமேழலகர் உரை:
நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் - பிறப்பு நின்ற நிலையை
அஞ்சிப் பிறவாமைப் பொருட்டு மனை வாழ்க்கையைத்
துறந்தார் எல்லாருள்ளும், கொலை அஞ்சிக் கொல்லாமை
சூழ்வான் தலை - கொலைப் பாவத்தை அஞ்சிக் கொல்லாமை
ஆகிய அறத்தை மறவாதவன் உயர்ந்தவன். (பிறப்பு நின்ற
நிலையாவது, இயங்குவ நிற்ப என்னும் இருவகைப்
பிறப்பினும் இன்பம் என்பது ஒன்று இன்றி உள்ளன எல்லாம்
துன்பமேயாய நிலைமை. துறவு ஒன்றே ஆயினும், சமய
வேறுபாட்டால்பலவாம் ஆகலின், 'நீத்தாருள் எல்லாம்'
என்றார்.இதனான் இவ்வறம் மறவாதவன் உயர்ச்சி
கூறப்பட்டது.).
மு.வ உரை:
வாழ்க்கையின் தன்மையைக் கண்டு அஞ்சித் துறந்தவர்கள்
எல்லாரிலும், கொலை செய்வதற்கு அஞ்சிக் கொல்லாத அறத்தைப்
போற்றுகின்றவன் உயர்ந்தவன்.
G.U.Pope:
Of those who 'being' dread, and all renounce, the chief are they,
Who dreading crime of slaughter, study nought to slay.
Explanation
Of all those who, fearing the permanence of earthly births, have abandoned desire, he is the chief who, fearing (the guilt of) murder, considers how he may avoid the destruction of life.
மூலம்:
326 . கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணும் கூற்று.
பரிமேழலகர் உரை:
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல் -
கொல்லாமையை விரதமாக மேற்கொண்டு ஒழுகுவானது
வாழ்நாளின்மேல், உயிர் உண்ணும் கூற்றுச் செல்லாது - உயிர்
உண்ணும் கூற்றுச் செல்லாது. (மிகப்பெரிய அறம் செய்தாரும்
மிகப்பெரிய பாவம் செய்தாரும் முறையான் அன்றி
இம்மைதன்னுள்ளே அவற்றின் பயன் அனுபவிப்பர் என்னும்
அறநூல் துணிபு பற்றி, இப் பேரறம் செய்தான் தானும்
கொல்லப்படான்: படானாகவே, அடியிற்கட்டிய வாழ்நாள்
இடையூறின்றி எய்தும் என்பார் வாழ்நாள்மேல் கூற்றுச்
செல்லாது, என்றார். செல்லாதாகவே, காலம் நீட்டிக்கும்;
நீட்டித்தால் ஞானம் பிறந்து உயிர் வீடு பெறும் என்பது கருத்து.
இதனான் அவர்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).
மு.வ உரை:
கொல்லாத அறத்தை மேற்கொண்டு நடக்கின்றவனுடைய
வாழ்நாளின்மேல், உயிரைக் கொண்டு செல்லும் கூற்றுவனும்
செல்லமாட்டான்.
G.U.Pope:
Ev'n death that life devours, their happy days shall spare,
Who law, 'Thou shall not kill', uphold with reverent care.
Explanation
Yama, the destroyer of life, will not attack the life of him, who acts under the determination of never destroying life.
மூலம்:
327 . தன்உயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை.
பரிமேழலகர் உரை:
தன் உயிர் நீப்பினும் - அது செய்யாவழித் தன்னுயிர் உடம்பின்
நீங்கிப் போமாயினும்: தான் பிறிது இன் உயிர் நீக்கும் வினை
செய்யற்க - தான் பிறிதோர் இன்னுயிரை அதன் உடம்பின்
நீக்கும் தொழிலைச் செய்யற்க. ('தன்னை அது கொல்லினும்
தான் அதனைக் கொல்லற்க' என்றது, பாவம்
கொலையுண்டவழித் தேய்தலும், கொன்ற வழி வளர்தலும்
நோக்கி. இனி 'தன் உயிர் நீப்பினும்' என்றதற்குச் 'சாந்தியாகச்
செய்யாதவழித் தன்னுயிர் போமாயினும்' என்று உரைப்பாரும்
உளர். பிறர் செய்தலும் ஆகாமையின் அஃது உரையன்மை
அறிக.).
மு.வ உரை:
தன் உயிர் உடம்பிலிருந்து நீங்கிப் போவதாக நேர்ந்தாலும், அதைத்
தடுப்பதற்காகத் தான் வேறோர் உயிரை நீக்கும் செயலைச்
செய்யக்கூடாது.
G.U.Pope:
Though thine own life for that spared life the price must pay,
Take not from aught that lives gift of sweet life away.
Explanation
Let no one do that which would destroy the life of another, although he should by so doing, lose his own life.
மூலம்:
328 . நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை.
பரிமேழலகர் உரை:
நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் - தேவர்பொருட்டு
வேள்விக்கண் கொன்றால் இன்பம் மிகும் செல்வம் பெரிதாம்
என்று இல்வாழ்வார்க்குக் கூறப்பட்டதாயினும், சான்றோர்க்கு
கொன்று ஆகும் ஆக்கம் கடை - துறவான் அமைந்தார்க்கு ஓர்
உயிரைக் கொல்ல வரும் செல்வம் கடை. (இன்பம் மிகும்
செல்வமாவது, தாமும் தேவராய்த் துறக்கத்துச் சென்று எய்தும்
செல்வம். அது சிறிதாகலானும். பின்னும் பிறத்தற்கு
ஏதுவாகலானும், வீடாகிய ஈறு இல் இன்பம் எய்துவார்க்குக்
'கடை' எனப்பட்டது. துறக்கம் எய்துவார்க்கு ஆம் ஆயினும்,
வீடு எய்துவார்க்குக் ஆகாது என்றமையின், விதிவிலக்குகள்
தம்முள் மலையாமை விளக்கியவாறாயிற்று. இஃது இல்லறம்
அன்மைக்குக் காரணம். இவை இரண்டு பாட்டானும்
கொலையது குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக
இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக
இழிவானதாகும்.
G.U.Pope:
Though great the gain of good should seem, the wise
Will any gain by staughter won despise.
Explanation
The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good.
மூலம்:
329 . கொலைவினையர் ஆகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.
பரிமேழலகர் உரை:
கொலை வினையர் ஆகிய மாக்கள் - கொலைத்
தொழிலையுடையராகிய மாந்தர், புன்மை தெரிவார் அகத்துப்
புலைவினையர் - அத்தொழிலின் கீழ்மையை அறியாத
நெஞ்சத்தராயினும், அறிவார் நெஞ்சத்துப் புலைத் தொழிலினர்.
(கொலை வினையர் என்றதனான், வேள்விக் கண்
கொலையன்மை அறிக. 'புலை வினையர்' என்றது
தொழிலால் புலையர் என்றவாறு. இம்மைக்கண் கீழ்மை
எய்துவர் என்பதாம்.).
மு.வ உரை:
கொலைத்தொழிலினராகிய மக்கள் அதன் இழிவை
ஆராய்ந்தவரிடத்தில் புலைத்தொழிலுடையவராய்த் தாழ்ந்து
தோன்றுவர்.
G.U.Pope:
Whose trade is 'killing', always vile they show,
To minds of them who what is vileness know.
Explanation
Men who destroy life are base men, in the estimation of those who know the nature of meanness.
மூலம்:
330 . உயிர்உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.
பரிமேழலகர் உரை:
செயிர் உடம்பின் செல்லாத் தீ வாழ்க்கையவர் - நோக்கலாகா
நோய் உடம்புடனே வறுமை கூர்ந்த இழிதொழில்
வாழ்க்கையினை உடையாரை, உயிர் உடம்பின் நீக்கியார் என்ப
- இவர் முற்பிறப்பின் கண் உயிர்களை அவை நின்ற
உடம்பினின்றும் நீக்கினவர் என்று சொல்லுவர் வினை
விளைவுகளை அறிந்தோர். (செல்லா வாழ்க்கை தீ வாழ்க்கை
எனக் கூட்டுக. செயிர் உடம்பினராதல், அக்கே போல் அங்கை
யொழிய விரல் அழுகித் - துக்கத் தொழுநோய் எழுபவே
(நாலடி 123) என்பதனாலும் அறிக. மறுமைக் கண் இவையும்
எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் கொல்வார்க்கு
வரும் தீங்கு கூறப்பட்டது. அருள் உடைமை முதல்
கொல்லாமை ஈறாகச் சொல்லப்பட்ட இவற்றுள்ளே
சொல்லப்படாத விரதங்களும் அடங்கும்; அஃது அறிந்து
அடக்கிக்கொள்க. ஈண்டு உரைப்பின் பெருகும்.).
மு.வ உரை:
நோய் மிகுந்த உடம்புடன் வறுமையான தீய வாழ்க்கை உடையவர்,
முன்பு கொலை பல செய்து உயிர்களை உடம்புகளிலிருந்து
நீக்கினவர் என்று அறிஞர் கூறுவர்.
G.U.Pope:
Who lead a loathed life in bodies sorely pained,
Are men, the wise declare, by guilt of slaughter stained.
Explanation
(The wise) will say that men of diseased bodies, who live in degradation and in poverty, are those who separated the life from the body of animals (in a former birth).