மூலம்:
301 . செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?
பரிமேழலகர் உரை:
சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம்
பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால்
தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என்
- ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது
ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது,
தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும்.
வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர்
தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார்,
'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான்
வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்;
பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
G.U.Pope:
Where thou hast power thy angry will to work, thy wrath restrain;
Where power is none, what matter if thou check or give it rein?
Explanation
He restrains his anger who restrains it when it can injure; when it cannot injure, what does it matter whether he restrain it, or not ?
மூலம்:
302 . செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.
பரிமேழலகர் உரை:
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின்
வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும்
அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும்
அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம்
பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது
'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின்
அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது
என்பதாம்.).
மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னைவிட வறியவரிடத்தில்) சினம்
கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்)
சினத்தைவிடத் தீயவை வேறில்லை.
G.U.Pope:
Where power is none to wreak thy wrath, wrath importent is ill;
Where thou hast power thy will to work, 'tis greater, evil still.
Explanation
Anger is bad, even when it cannot injure; when it can injure; there is no greater evil.
மூலம்:
303 . மறத்தல் வெகுளியை யார்மாட்டும்: தீய
பிறத்தல் அதனான் வரும்.
பரிமேழலகர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும்
வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' -
ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும்
ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர்
மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால்
துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும்
பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும்
கூறினார்.).
மு.வ உரை:
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்;
தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.
G.U.Pope:
If any rouse thy wrath, the trespass straight forget;
For wrath an endless train of evils will beget.
Explanation
Forget anger towards every one, as fountains of evil spring from it.
மூலம்:
304 . நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?
பரிமேழலகர் உரை:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு
அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின்
கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே
அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய
பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை
இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய
நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான்,
அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை
மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).
மு.வ உரை:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட
ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
G.U.Pope:
Wrath robs the face of smiles, the heart of joy,
What other foe to man works such annoy?
Explanation
Is there a greater enemy than anger, which kills both laughter and joy ?
மூலம்:
305 . தன்னைத்தான் காக்கின் சினம்காக்க: காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.
பரிமேழலகர் உரை:
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம்
எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம்
வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் -
காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும்
கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு
எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம்
விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய
பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே
கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279)
என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி
உணர்த்தி நின்றது.).
மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல்
காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே
அழித்துவிடும்.
G.U.Pope:
If thou would'st guard thyself, guard against wrath alway;
'Gainst wrath who guards not, him his wrath shall sla y.
Explanation
If a man would guard himself, let him guard against anger; if he do not guard it, anger will kill him.
மூலம்:
306 . சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.
பரிமேழலகர் உரை:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும்
நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு
இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய
ஏமப்புணையையும் சுடும். ('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது
ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது'
என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல்
வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய
பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது
துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு'
என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த
இடத்தையே , இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்
என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்'
என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க்
கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச்
சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில்
கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க.
ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும்
ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள்
அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து
உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும்
வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.).
மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம்
என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
G.U.Pope:
Wrath, the fire that slayeth whose draweth near,
Will burn the helpful 'raft' of kindred dear.
Explanation
The fire of anger will burn up even the pleasant raft of friendship.
மூலம்:
307 . சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.
பரிமேழலகர் உரை:
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத்
தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண்
கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை
பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை
அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது.
(வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம்,
இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல,
ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று'
என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும்
வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).
மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று
கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை
தப்பாததுபோல் ஆகும்.
G.U.Pope:
The hand that smites the earth unfailing feels the sting;
So perish they who nurse their wrath as noble thing.
Explanation
Destruction will come upon him who ragards anger as a good thing, as surely as the hand of him who strikes the ground will not fail.
மூலம்:
308 . இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.
பரிமேழலகர் உரை:
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை
உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை
ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று -
அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று.
(இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும்,
அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும்,
அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப்
'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது
நன்மை கூறப்பட்டது.).
மு.வ உரை:
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற
துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல்
சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
G.U.Pope:
Though men should work thee woe, like touch of tongues of fire.
'Tis well if thou canst save thy soul from burning ire.
Explanation
Though one commit things against you as painful (to bear) as if a bundle of fire had been thrust upon you, it will be well, to refrain, if possible, from anger.
மூலம்:
309 . உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.
பரிமேழலகர் உரை:
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும்
அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும்
நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான்
கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என
வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது
முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை
வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு
என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம்
இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன்
எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால்,
நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
G.U.Pope:
If man his soul preserve from wrathful fires,
He gains with that whate'er his soul desires.
Explanation
If a man never indulges anger in his heart, he will at once obtain whatever he has thought of.
மூலம்:
310 . இறந்தார் இறந்தார் அனையர்: சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.
பரிமேழலகர் உரை:
இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார்
உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல்
தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க
சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர்
நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை
ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும்
கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு
கூறப்பட்டது.).
மு.வ உரை:
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்;
சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.
G.U.Pope:
Men of surpassing wrath are like the men who've passed away;
Who wrath renounce, equals of all-renouncing sages they.
Explanation
Those, who give way to excessive anger, are no better than dead men; but those, who are freed from it, are equal to those who are freed (from death).