திருவள்ளுவர்


விரும்பிய அதிகாரத்திற்கு செல்ல
அதிகார எண்:


உரை நூல் தேர்வு
பரிமேழலகர்
மு.வரதராசனார்
Gu.Pope
Explanation

தேடல்
Starts with | Contains

Show Thamizh keyboard




       அறத்துப்பால்                       துறவறவியல்

              அதிகாரம்: 31                   வெகுளாமை
301. செல்இடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்இடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்?

மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?

302. செல்லா இடத்துச் சினம்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.

மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னைவிட வறியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறில்லை.

303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும்: தீய
பிறத்தல் அதனான் வரும்.

மு.வ உரை:
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.

304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற?

மு.வ உரை:
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?

305. தன்னைத்தான் காக்கின் சினம்காக்க: காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்.

மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.

306. சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம்என்னும்
ஏமப் புணையைச் சுடும்.

மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

307. சினத்தைப் பொருள்என்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.

308. இணர்எரி தோய்வுஅன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.

மு.வ உரை:
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

309. உள்ளியது எல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.

மு.வ உரை:
ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

310. இறந்தார் இறந்தார் அனையர்: சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.

மு.வ உரை:
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.

------


Back to Top