மூலம்:
271 . வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்.
பரிமேழலகர் உரை:
வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் - வஞ்சம் பொருந்திய
மனத்தை உடையவனது மறைந்த ஒழுக்கத்தை; பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும் - உடம்பாய் அவனோடு கலந்து
நிற்கின்ற பூதங்கள் ஐந்தும் கண்டு தம்முள்ளே நகும். (காமம்
தன் கண்ணே தோன்றி நலியா நிற்கவும், அதனது இன்மை
கூறிப் புறத்தாரை வஞ்சித்தலின் வஞ்சமனம் என்றும்,
அந்நலிவு பொறுக்கமாட்டாது ஒழுகும் களவு ஒழுக்கத்தைப்
'படிற்று ஒழுக்கம்' என்றும் உலகத்துக் களவு உடையார் பிறர்
அறியாமல் செய்வனவற்றிற்கு ஐம்பெரும் பூதங்கள்
சான்றாகலின், அவ்வொழுக்கத்தையும் அவன் மறைக்கின்ற
ஆற்றையும் அறிந்து, அவனறியாமல் தம்முள்ளே நகுதலின்,
'அகத்தே நகும்' என்றும் கூறினார். செய்த குற்றம் மறையாது
ஆகலின், அவ்வொழுக்கம் ஆகாது என்பது கருத்து.).
மு.வ உரை:
வஞ்சமனம் உடையவனது பொய்யொழுக்கத்தை அவனுடைய
உடம்பில் கலந்து நிற்கும் ஐந்து பூதங்களும் கண்டு தம்முள்
சிரிக்கும்.
G.U.Pope:
Who with deceitful mind in false way walks of covert sin,
The five-fold elements his frame compose, decide within.
Explanation
The five elements (of his body) will laugh within him at the feigned conduct of the deceitful minded man.
மூலம்:
272 . வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்நெஞ்சம்
தான்அறி குற்றப் படின்.
பரிமேழலகர் உரை:
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் - ஒருவனுக்கு வான்
போல உயர்ந்த தவவேடம் என்ன பயனைச் செய்யும்; தான்
அறி குற்றம் தன் நெஞ்சம் படின் - தான் குற்றம் என்று அறிந்த
அதன் கண்ணே தன் நெஞ்சு தாழும் ஆயின். ( 'வான் உயர்
தோற்றம்' என்பது 'வான் தோய்குடி' (நாலடி 142)
என்றாற்போல இலக்கணை வழக்கு. அறியாது செய்த
குற்றமல்லது அறிந்து வைத்துச் செய்த குற்றம்
கழுவப்படாமையின், நெஞ்சு குற்றத்ததாயேவிடும்; விடவே
நின்ற வேடமாத்திரத்துக்குப் புறத்தாரை வெருட்டுதலே அல்லது
வேறு பயன் இல்லை என்பதாம்.).
மு.வ உரை:
தன் மனம் தான் அறிந்த குற்றத்தில் தங்குமானால்
வானத்தைப்போல் உயர்ந்துள்ள தவக்கோலம், ஒருவனுக்கு என்ன
பயன் செய்யும்?
G.U.Pope:
What gain, though virtue's semblance high as heaven his fame exalt,
If heart dies down through sense of self-detected fault?
Explanation
What avails an appearance (of sanctity) high as heaven, if his mind suffers (the indulgence) of conscious sin.
மூலம்:
273 . வலிஇல் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று.
பரிமேழலகர் உரை:
வலி இல் நிலைமையான் வல் உருவம்- மனத்தைத் தன்
வழிப்படுத்தும் வலி இல்லாத இயல்பினை உடையான்
வலியுடையார் வேடத்தைக் கொண்டு தான் அதன்வழிப்படுதல்;
பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று - பசு 'காவலர்
கடியாமல்' புலியின் தோலைப் போர்த்துப் பைங்கூழை
மேய்ந்தாற் போலும். (இல்பொருள் உவமை. 'வலிஇல்
நிலைமையான்' என்ற அடையானும், மேய்ந்தற்று என்னும்
தொழில் உவமையானும் வல் உருவத்தோடு மனவழிப்படுதல்
என்பது பெற்றாம். காவலர் கடியாமை 'புலி புல் தின்னாது'
என்பதனாலும் அச்சத்தானும் ஆம். ஆகவே, வல்உருவங்
கோடற்குப் பயன் அன்ன காரணங்களான் உலகத்தார்
அயிராமை ஆயிற்று. இவ்வாறு தனக்குரிய இல்லாளையும்
துறந்து வலியும் இன்றிப் பிறர் அயிராத வல்உருவமுங்
கொண்டு நின்றவன் மனவழிப்படுதலாவது, தன் மனம் ஓடிய
வழியே ஓடிமறைந்து பிறர்க்கு உரிய மகளிரை விழைதலாம்.
அவ்வாறாதல், பெற்றம் தனக்கு உரிய புல்லைவிட்டுப்
பிறர்க்குரிய பைங்கூழை மேய்ந்தாற்போலும் என்ற
உவமையான் அறிக.).
மு.வ உரை:
மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவன் மேற்கொண்ட வலிய
தவக்கோலம், பசு புலியின் தோலைப் போர்த்திக் கொண்டு பயிரை
மேய்ந்தாற் போன்றது.
G.U.Pope:
As if a steer should graze wrapped round with tiger's skin,
Is show of virtuous might when weakness lurks within.
Explanation
The assumed appearance of power, by a man who has no power (to restrain his senses and perform austerity), is like a cow feeding on grass covered with a tiger's skin.
மூலம்:
274 . தவம்மறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
பரிமேழலகர் உரை:
தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல்
நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று
தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள்
சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று
புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம்
அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத்
தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான்
அறிக.).
மு.வ உரை:
தவக்கோலத்தில் மறைந்துகொண்டு தவம் அல்லாத தீய
செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து வேடன் பறவைகளை
வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
G.U.Pope:
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurks.
When, clad in stern ascetic garb, one secret evil works.
Explanation
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds.
மூலம்:
275 . பற்றுஅற்றேம் என்பார் படிற்றுறொழுக்கம் எற்றுஎற்றுஎன்று
ஏதம் பலவுந் தரும்.
பரிமேழலகர் உரை:
பற்று அற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் - தம்மைப் பிறர்
நன்கு மதித்தற்பொருட்டு யாம் பற்று அற்றேம் என்று
சொல்வாரது மறைந்த ஒழுக்கம், எற்று எற்று என்று ஏதம்
பலவும் தரும் - அப்பொழுது இனிதுபோலத் தோன்றும்
ஆயினும், பின் என் செய்தோம் என்று தாமே இரங்கும்வகை,
அவர்க்குப் பல துன்பங்களையும் கொடுக்கும். (சொல்
அளவல்லது பற்று அறாமையின் 'பற்று அற்றேம் என்பார்'
என்றும், சிறிதாய்க் கணத்துள்ளே அழிவதாய் இன்பத்தின்
பொருட்டுப் பெரிதாய் நெடுங்காலம் நிற்பதாய பாவத்தைச்
செய்தார், அதன் விளைவின் கண் 'அந்தோ வினையே
என்றழுவர்' (சீவக.முத்தி,27) ஆகலின் 'எற்று எற்று' என்னும்
கூறினார். இவை ஐந்து பாட்டானும் கூடா ஒழுக்கத்தின்
இழுக்கம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
G.U.Pope:
'Our souls are free,' who say, yet practise evil secretly,
'What folly have we wrought!' by many shames o'er-whelmed, shall cry.
Explanation
The false conduct of those who say they have renounced all desire will one day bring them sorrows that will make them cry out, "Oh! what have we done, what have we done."
மூலம்:
276 . நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்.
பரிமேழலகர் உரை:
நெஞ்சின் துறவார் - நெஞ்சால் பற்று அறாது வைத்து,
துறந்தார் போல் வஞ்சித்து வாழ்வாரின் - பற்று அற்றார்
போன்று தானம் செய்வாரை வஞ்சித்து வாழுபவர் போல்,
வன்கணார் இல் - வன்கண்மையையுடையார் உலகத்து
இல்லை. (தானம் செய்வாரை வஞ்சித்தலாவது, 'யாம்
மறுமைக்கண் தேவராற்பொருட்டு இவ்வருந்தவர்க்கு இன்னது
ஈதும்' என்று அறியாது ஈந்தாரை, அதுகொண்டு
இழிபிறப்பினராக்குதல். 'அடங்கலர்க்கு ஈந்த தானப்
பயத்தினால் அலறும் முந்நீர்த் - தடங்கடல் நடுவுள் தீவு பல
உள அவற்றுள் தோன்றி உடம்போடு முகங்கள் ஒவ்வார்
ஊழ்கனி மாந்தி வாழ்வர் - மடங்கலஞ் சீற்றத்துப் பின்
மானவேல் மன்னர் ஏறே' (சீவக. முத்தி - 244) என்பதனால்
அறிக. தமக்கு ஆவன செய்தார்க்கு ஆகாதன விளைத்தலின்
'வன்கணார் இல்' என்றார்.).
மு.வ உரை:
மனத்தில் பற்றுக்களைத் துறக்காமல், துறந்தவரைப் போல்
வஞ்சனை செய்து வாழ்கின்றவர் போல் இரக்கமற்றவர் வேறு
எவரும் இல்லை.
G.U.Pope:
In mind renouncing nought, in speech renouncing every tie,
Who guileful live,- no men are found than these of 'harder eye'.
Explanation
Amongst living men there are none so hard-hearted as those who without to saking (desire) in their heart, falsely take the appearance of those who have forsaken (it).
மூலம்:
277 . புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து.
பரிமேழலகர் உரை:
குன்றிப் புறம் கண்டு அனையரேனும் - குன்றியின் புறம் போல
வேடத்தாற் செம்மையுடையராயினும், குன்றி மூக்கின் அகம்
கரியார் உடைத்து - அதன் மூக்குப் போல மனம் இருண்டு
இருப்பாரை உடைத்து உலகம் ('குன்றி' ஆகுபெயர். செம்மை
கருமை என்பன பொருள்களின் நிறத்தை விட்டுச் செப்பத்தினும்
அறியாமையினும் சென்றன. ஆயினும், பண்பால் ஒத்தலின்
இவை பண்பு உவமை. ஊழின் மலிமனம் போன்று
இருளாநின்ற கோகிலமே. (திருக்கோவை 322) என்பதும்
அது.).
மு.வ உரை:
புறத்தில் குன்றிமணிபோல் செம்மையானவராய்க்
காணப்பட்டாராயினும், அகத்தில் குன்றிமணியின் மூக்குப்போல்
கருத்திருப்பவர் உலகில் உண்டு.
G.U.Pope:
Outward, they shine as 'kunri' berry's scarlet bright;
Inward, like tip of 'kunri' bead, as black as night.
Explanation
(The world) contains persons whose outside appears (as fair) as the (red) berry of the Abrus, but whose inside is as black as the nose of that berry.
மூலம்:
278 . மனத்தது மாசுஆக மாண்டார்நீ் ராடி
மறைந்துஒழுகு மாந்தர் பலர்.
பரிமேழலகர் உரை:
மாசு மனத்தது ஆக - மாசு தம் மனத்தின் கண்ணதாக,
மாண்டார் நீர் ஆடி - பிறர்க்குத் தவத்தான் மாட்சிமையுயராய்
நீரின் மூழ்கிக் காட்டி, மறைந்து செல்லும் மாந்தர் உலகத்துப்
பலர். (மாசு: காம வெகுளி மயக்கங்கள். அவை போதற்கு
அன்றி மாண்டார் என்று பிறர் கருதுதற்கு நீராடுதலான்,
அத்தொழிலை அவர் மறைதற்கு இடனாக்கினார். இனி
'மாண்டார் நீராடி' என்பதற்கு 'மாட்சிமைப்பட்டாரது நீர்மையை
உடையராய்' என உரைப்பாரும் உளர். இவை மூன்று
பாட்டானும் அவ்வொழுக்கமுடையாரது குற்றமும், அவரை
அறிந்து நீக்கல் வேண்டும் என்பதும் கூறப்பட்டன.).
மு.வ உரை:
மனத்தில் மாசு இருக்கத் தவத்தால் மாண்பு பெற்றவரைப் போல
நீரில் மூழ்கி மறைந்து நடக்கும் வஞ்சனை உடைய மாந்தர் உலகில்
பலர் உள்ளனர்.
G.U.Pope:
Many wash in hollowed waters, living lives of hidden shame;
Foul in heart, yet high upraised of men in virtuous fame.
Explanation
There are many men of masked conduct, who perform their ablutions, and (make a show) of greatness, while their mind is defiled (with guilt).
மூலம்:
279 . கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல்.
பரிமேழலகர் உரை:
கணை கொடிது யாழ் கோடு செவ்விது - அம்பு வடிவால்
செவ்விதாயினும், செயலால் கொடிது, யாழ் கோட்டால்
வளைந்ததாயினும் செயலால் செவ்விது. ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல் - அவ்வகையே தவம்
செய்வோரையும் கொடியர் செவ்வியர் என்பது வடிவால்
கொள்ளாது அவர்செயல்பட்ட கூற்றானே அறிந்து கொள்க.
(கணைக்குச்செயல் கொலை, யாழுக்குச் செயல் இசையால்
இன்பம் பயத்தல். அவ்வகையே செயல் பாவமாயின் கொடியர்
எனவும், அறமாயின் செவ்வியர் எனவுங் கொள்க என்பதாம்.
இதனால் அவரை அறியும் ஆறு கூறப்பட்டது.).
மு.வ உரை:
நேராகத் தோன்றினும் அம்பு கொடியது; வளைவுடன்
தோன்றினாலும் யாழின் கொம்பு நன்மையானது; மக்களின்
பண்புகளையும் செயல் வகையால் உணர்ந்து கொள்ள வேண்டும்.
G.U.Pope:
Cruel is the arrow straight, the crooked lute is sweet,
Judge by their deeds the many forms of men you meet.
Explanation
As, in its use, the arrow is crooked, and the curved lute is straight, so by their deeds, (and not by their appearance) let (the uprightness or crookedness of) men be estimated.
மூலம்:
280 . மழித்தலும் நீட்டலும் வேண்டா: உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
பரிமேழலகர் உரை:
மழித்தலும் நீட்டலும் வேண்டா - தவம் செய்வோர்க்கு தலை
மயிரை மழித்தலும் சடையாக்கலும் ஆகிய வேடமும்
வேண்டா. உலகம் பழித்தது ஒழித்து விடின் - உயர்ந்தோர்
தவத்திற்கு ஆகாது என்று குற்றம் கூறிய ஒழுக்கத்தைக் கடிந்து
விடின். (பறித்தலும் மழித்தலுள் அடங்கும், மழித்தல் என்பதே
தலைமயிரை உணர்த்தலின் அது கூறார் ஆயினார். இதனால்
கூடா ஒழுக்கம் இல்லாதார்க்கு வேடமும் வேண்டா என
அவரது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
உலகம் பழிக்கும் தீயொழுக்கத்தை விட்டுவிட்டால், மொட்டை
அடித்தலும் சடைவளர்த்தலுமாகிய புறக் கோலங்களும் வேண்டா.
G.U.Pope:
What's the worth of shaven head or tresses long,
If you shun what all the world condemns as wrong?
Explanation
There is no need of a shaven crown, nor of tangled hair, if a man abstain from those deeds which the wise have condemned.