மூலம்:
261 . உற்றநோய் நோன்றல் உயிர்க்குஉறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு.
பரிமேழலகர் உரை:
தவத்திற்கு உரு-தவத்தின் வடிவு; உற்ற நோய் நோன்றல்
உயிர்க்கு உறுகண் செய்யாமை அற்றே - உண்டி சுருக்கல்
முதலியவற்றால் தம் உயிர்க்கு வரும் துன்பங்களைப்
பொறுத்தலும், தாம் பிற உயிர்கட்குத் துன்பம் செய்யாமையும்
ஆகிய அவ்வளவிற்று (மற்றுள்ளன எல்லாம் இவற்றுள்ளே
அடங்குதலின், 'அற்றே,' எனத் தேற்றேகாரம் கொடுத்தார்.
'தவத்திற்கு உரு அற்று' என்பது, 'யானையது கோடு கூரிது'
'என்பதனை,' யானைக்குக் கோடு கூரிது, என்றாற்போல
ஆறாவதன் பொருட்கண் நான்காவது வந்த மயக்கம் இதனால்
தவத்தினது இலக்கணம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத்
துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு
வடிவமாகும்.
G.U.Pope:
To bear due penitential pains, while no offence
He causes others, is the type of 'penitence'.
Explanation
The nature of religious discipline consists, in the endurance (by the ascetic) of the sufferings which it brings on himself, and in abstaining from giving pain to others.
மூலம்:
262 . தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலார் மேற்கொள் வது.
பரிமேழலகர் உரை:
தவமும் தவம் உடையார்க்கு ஆகும் - பயனே அன்றித்
தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை
அஃது இலார் மேற்கொள்வது அவம் - ஆகலான், அத்தவத்தை
அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம்.
(பரிசயத்தால் அறிவும் ஆற்றலும் உடையராய் முடிவு
போக்கலின், 'தவம் உடையார்க்கு ஆகும்' என்றும், அஃது
இல்லாதார்க்கு அவை இன்மையான் முடிவு போகாமையின்,
'அவம் ஆம்' என்றும் கூறினார்.).
மு.வ உரை:
தவக்கோலமும் தவஒழுக்கம் உடையவர்க்கே பொருத்தமாகும்;
அக்கோலத்தைத் தவஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது
வீண்முயற்சியாகும்.
G.U.Pope:
To 'penitents' sincere avails their 'penitence';
Where that is not, 'tis but a vain pretence.
Explanation
Austerities can only be borne, and their benefits enjoyed, by those who have practised them (in a former birth); it will be useless for those who have not done so, to attempt to practise them (now).
மூலம்:
263 . துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம்?
பரிமேழலகர் உரை:
மற்றையவர்கள் - இல்லறத்தையே பற்றி நிற்பார்,
துறந்தார்க்குத் துப்புரவு வேண்டித் தவம் மறந்தார்கொல் -
துறந்தார்க்கு உண்டியும் மருந்தும் உறையுளும் உதவலை
விரும்பித் தாம் தவம் செய்தலை மறந்தார் போலும். ( துப்புரவு
- அனுபவிக்கப்படுவன. 'வேண்டியாங்கு எய்தற்' பயத்தது
ஆகலின் (குறள்265) யாவராலும் செய்யப்படுவதாய தவத்தைத்
தாம் செய்யும் தானத்தின்மேல் விருப்பம் மிகுதியால் மறந்தார்
போலும். எனவே, தானத்தினும் தவம் மிக்கது என்பது
பெற்றாம்.).
மு.வ உரை:
துறந்தவர்க்கு உணவு முதலியவை கொடுத்து உதவ வேண்டும் என
விரும்பி மற்றவர்கள் (இல்லறத்தினர்) தவம் செய்வதை
மறந்தார்களோ?
G.U.Pope:
Have other men forgotten 'penitence' who strive
To earn for penitents the things by which they live?
Explanation
It is to provide food etc, for the ascetics who have abandoned (the desire of earthly possessions) that other persons have forgotten (to practise) austerity ?
மூலம்:
264 . ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்.
பரிமேழலகர் உரை:
ஒன்னார்த் தெறலும் - அறத்திற்குப் பகையாய் அழிவு
செய்தாரைக் கெடுத்தலும், உவந்தாரை ஆக்கலும் - அதனை
உவந்தாரை உயர்த்தலும் ஆகிய இவ்விரண்டையும் எண்ணின்
தவத்தான் வரும் - தவம் செய்வார் நினைப்பராயின், அவர் தவ
வலியான் அவை அவர்க்கு உளவாம். (முற்றத் துறந்தார்க்கு
ஒன்னாரும் உவந்தாரும் உண்மை கூடாமையின், தவத்திற்கு
ஏற்றி உரைக்கப்பட்டது. 'எண்ணின்' என்றதனால், அவர்க்கு
அவை எண்ணாமை இயல்பு என்பது பெற்றாம். ஒன்னார்
பெரியராயினும், உவந்தார் சிறியராயினும், கேடும் ஆக்கமும்
நினைந்த துணையானே வந்து நிற்கும் எனத் தவம் செய்வார்
மேலிட்டுத் தவத்தினது ஆற்றல் கூறியவாறு.).
மு.வ உரை:
தீமை செய்யும் பகைவரை அடக்குதலும், நன்மை செய்யும்
நண்பரை உயர்த்துதலும் நினைத்த அளவில் தவத்தின் வலிமையால்
உண்டாகும்.
G.U.Pope:
Destruction to his foes, to friends increase of joy.
The 'penitent' can cause, if this his thoughts employ.
Explanation
If (the ascetic) desire the destruction of his enemies, or the aggrandizement of his friends, it will be effected by (the power of) his austerities.
மூலம்:
265 . வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்.
பரிமேழலகர் உரை:
வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் - முயன்றால்
மறுமைக்கண் தாம் வேண்டிய பயன்கள் வேண்டியவாறே
பெறலாம் ஆதலால்; செய்தவம் ஈண்டு முயலப்படும் -
செய்யப்படுவதாய தவம் இம்மைக்கண் அறிவுடையோரான்
முயலப்படும். ('ஈண்டு' என்பதனான் 'மறுமைக்கண்' என்பது
பெற்றாம். மேற்கதி, வீடு பேறுகள் தவத்தானன்றி எய்தப்படா
என்பதாம். இவை நான்கு பாட்டானும் தவத்தது சிறப்புக்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
விரும்பிய பயன்களை விரும்பியவாறே அடைய முடியுமாகையால்
செய்யத்தக்க தவம் இந்நிலையிலும் (இல்லற வாழ்க்கையிலும்)
முயன்று செய்யப்படும்.
G.U.Pope:
That what they wish may, as they wish, be won,
By men on earth are works of painful 'penance' done.
Explanation
Religious dislipline is practised in this world, because it secures the attainment of whatever one may wish to enjoy (in the world to come).
மூலம்:
266 . தவஞ்செய்வார் தம்கருமம் செய்வார்மற்று அல்லார்
அவஞ்செய்வார் ஆசையுள் பட்டு.
பரிமேழலகர் உரை:
தம் கருமம் செய்வார் தவம் செய்வார் - தம் கருமம்
செய்வாராவார் துறந்து தவத்தைச் செய்வார், மற்று அல்லார்
ஆசையுள் பட்டு அவம் செய்வார் - ஒழிந்த பொருள்
இன்பங்களைச் செய்வார், அவற்றின்கண் ஆசையாகிய
வலையுள்பட்டுத் தமக்குக் கேடு செய்வார். (அநித்தமாய்
மூவகைத் துன்பத்ததாய் உயிரின் வேறாய உடற்கு வருத்தம்
வரும் என்று ஒழியாது தவத்தினைச் செய்ய, பிறப்புப்
பிணிமூப்பு இறப்புக்களான் அநாதியாகத் துன்பம் எய்தி
வருகின்ற உயிர் ஞானம் பிறந்து வீடு பெறும் ஆகலின், தவம்
செய்வாரைத் 'தம் கருமம் செய்வார்' என்றும், கணத்துள்
அழிவதான சிற்றின்பத்தின் பொருட்டுப் பலபிறவியும்
துன்புறத்தக்க பாவஞ்செய்து கோடலின், அல்லாதாரை 'அவம்
செய்வார்' என்றும் கூறினார். 'மற்று' வினைமாற்றின்கண்
வந்தது.).
மு.வ உரை:
தவம் செய்கின்றவரே தமக்குரிய கடமைகளைச் செய்கின்றவர்
ஆவர்; அவர் அல்லாத மற்றவர் ஆசை வலையில் அகப்பட்டு
வீண்முயற்சி செய்கின்றவரே.
G.U.Pope:
Who works of 'penance' do, their end attain,
Others in passion's net enshared, toil but in vain.
Explanation
Those discharge their duty who perform austerities; all others accomplish their own destruction, through the entanglement of the desire (of riches and sensual pleasure).
மூலம்:
267 . சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடக்சுட நோற்கிற் பவர்க்கு.
பரிமேழலகர் உரை:
சுடச்சுடரும் பொன் போல் - தீயின்கண் ஓடும் பொன்னுக்கு
அது சுடச்சுடத் தன்னோடு கலந்த குற்றம் நீங்கி ஒளி மிகுமாறு
போல, நோற்கிற்பவர்க்குத் துன்பம் சுடச்சுட ஒளி விடும். தவம்
செய்ய வல்லார்க்கு அதனான் வரும் துன்பம் வருத்த வருத்தத்
தம்மொடு கலந்த பாவம் நீங்கி ஞானம் மிகும். ( 'சுடச்சுடரும்
பொன் போல்' என்றார் ஆயினும், கருத்து நோக்கி இவ்வாறு
உரைக்கப்பட்டது. ஒளி போலப் பொருள்களை விளக்கலின்.
'ஒளி' என்றார்.).
மு.வ உரை:
புடமிட்டுச் சுடச்சுட ஒளிவிடுகின்ற பொன்னைப் போல், தவம்
செய்கின்றவரைத் துன்பம் வருத்த வருத்த மெய்யுணர்வு மிகும்.
G.U.Pope:
The hotter glows the fining fire, the gold the brighter shines;
The pain of penitence, like fire, the soul of man refines.
Explanation
Just as gold is purified as heated in the fire, will those shine, who have endured the burning of pain (in frequent austerities).
மூலம்:
268 . தன்உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.
பரிமேழலகர் உரை:
தன் உயிர் தான் அறப்பெற்றானை - தன் உயிரைத் தான்
தனக்கு உரித்தாகப் பெற்றவனை, ஏனைய மன் உயிர் எல்லாம்
தொழும் - பெறாதனவாகிய மன் உயிர்கள் எல்லாம் தொழும்.
(தனக்கு உரித்தாதல் - தவம் ஆகிய தன் கருமம் செய்தல்.
அதனின் ஊங்குப் பெறுதற்கு அரியது இன்மையின்,
'பெற்றானை' என்றார். 'அது பெறாதன' என்றது ஆசையுட்
பட்டு அவம் செய்யும் உயிர்களை. சாபமும் அருளும் ஆகிய
இரண்டு ஆற்றலும் உடைமையின் 'தொழும்' என்றார்.).
மு.வ உரை:
தவவலிமையால் தன்னுடைய உயிர் தான் என்னும் பற்று
நீங்கப்பெற்றவனை மற்ற உயிர்கள் எல்லாம் (அவனுடைய
பெருமையை உணர்ந்து) தொழும்.
G.U.Pope:
Who gains himself in utter self-control,
Him worships every other living soul.
Explanation
All other creatures will worship him who has attained the control of his own soul.
மூலம்:
269 . கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு.
பரிமேழலகர் உரை:
கூற்றம் குதித்தலும் கைகூடும் - கூற்றத்தைக் கடத்தலும்
உண்டாவதாம், நோற்றலின் ஆற்றல் தலைப்பட்டவர்க்கு -
தவத்தான் வரும் ஆற்றலைத் தலைப்பட்டார்க்கு. ( சிறப்பு
உம்மை கூடாமை விளக்கிற்று. மன் உயிர் எல்லாம்
தொழுதலேயன்றி இதுவும் கைகூடும் என எச்ச உம்மையாக
உரைப்பினும் அமையும். ஆற்றல் - சாப அருள்கள். இவை
நான்கு பாட்டானும் தவம் செய்வாரது உயர்ச்சி கூறப்பட்டது.).
மு.வ உரை:
தவம் செய்வதால் பெறத்தக்க ஆற்றலைப் பெற்றவர்க்கு (ஓர்
இடையூறும் இல்லையாகையால்) யமனை வெல்லுதலும்
கைகூடும்.
G.U.Pope:
E'en over death the victory he may gain,
If power by penance won his soul obtain.
Explanation
Those who have attained the power which religious discipline confers, will be able also to pass the limit of Yama, (the God of death).
மூலம்:
270 . இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.
பரிமேழலகர் உரை:
இலர் பலர் ஆகிய காரணம் - உலகத்துச் செல்வர்கள் சிலராக
நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின், நோற்பார்
சிலர் நோலாதார் பலர் - தவம் செய்வார் சிலராக, அது
செய்யார் பலராதல். (செல்வம் நல்குரவு என்பன ஈண்டு
அறிவினது உண்மை இன்மைகளையும் குறித்து நின்றன,
என்னை? நுண்ணுணர்வு இன்மை வறுமை, அஃதுடைமை
பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் (நாலடி.251) என்றார்
ஆகலின். 'நோற்பார் சிலர்' எனக்காரணம் கூறினமையான்,
காரியம் வருவித்து உரைக்கப்பட்டது. தவம் செய்யாதார்க்கு
இம்மை இன்பமும் இல்லை என இதனால் அவரது தாழ்வு
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஆற்றல் இல்லாதவர் பலராக உலகில் இருப்பதற்குக் காரணம், தவம்
செய்கின்றவர் சிலராகவும் செய்யாதவர் பலராகவும் இருப்பதே
ஆகும்.
G.U.Pope:
The many all things lack! The cause is plain,
The 'penitents' are few. The many shun such pain.
Explanation
Because there are few who practise austerity and many who do not, there are many destitute and few rich in this world.