மூலம்:
251 . தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
பரிமேழலகர் உரை:
தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான் - தன் உடம்பை வீக்குதற் பொருட்டுத் தான் பிறிதோர் உயிரின்
உடம்பைத் தின்பவன், எங்ஙனம் ஆளும் அருள் - எவ்வகையான் நடத்தும் அருளினை? (பயன் இலாத ஊன்
பெருக்கலைப் பயன் எனக்கருதி இக்கொடுமை செய்வானே அறிவிலாத கொடியோன் என்றவாறு ஆயிற்று. 'எங்ஙனம்
ஆளும் அருள்' என்பது, ஆளான் என்பது பயப்ப நின்ற இகழ்ச்சிக் குறிப்பு.).
மு.வ உரை:
தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின்
உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க
முடியும்?
G.U.Pope:
How can the wont of 'kindly grace' to him be known,
Who other creatures' flesh consumes to feed his own?
Explanation
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures.
மூலம்:
252 . பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை: அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு.
பரிமேழலகர் உரை:
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை - பொருளால் பயன் கோடல் அதனைப் பாதுகாவாதார்க்கு இல்லை, ஆங்கு அருள் ஆட்சி ஊன் தின்பவர்களுக்கு இல்லை - அது போல அருளால் பயன் கோடல் ஊன் தின்பவர்களுக்கு இல்லை. (பொருட்பயன் இழத்தற்குக் காரணம் காவாமை போல, அருட்பயன் இழத்தற்கு ஊன் தின்னல் காரணம் என்பதாயிற்று. ஊன் தின்றாராயினும் உயிர்கட்கு ஒரு தீங்கும் நினையாதார்க்கு அருள் ஆள்தற்கு இழுக்கு இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு என்பது இவை இரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பொருளுடையவராக இருக்கும் சிறப்பு, அப்பொருளை வைத்துக்
காப்பாற்றாதவர்க்கு இல்லை; அருளுடையவராக இருக்கும் சிறப்பு,
புலால் தின்பவர்க்கு இல்லை.
G.U.Pope:
No use of wealth have they who guard not their estate;
No use of grace have they with flesh who hunger sate.
Explanation
As those possess no property who do not take care of it, so those possess no kindness who feed on flesh.
மூலம்:
253 . படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றுஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
பரிமேழலகர் உரை:
படை கொண்டார் நெஞ்சம் போல் - கொலைக் கருவியை தம்
கையில் கொண்டவர் மனம் அதனால் செய்யும் கொலையையே
நோக்குவதல்லது அருளை நோக்காதவாறு போல, ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம் நன்று ஊக்காது - பிறி்தோர்
உயிரின் உடலைச் சுவைபட உண்டவர் மனம் அவ்வூனையே
நோக்குவது அல்லது அருளை நோக்காது. (சுவைபட உண்டல்,
காயங்களான் இனிய சுவைத்து ஆக்கி உண்டல். இதனான் ஊன்
தின்றார் மனம் தீங்கு நினைத்தல் உவம அளவையால்
சாதித்து, மேலது வலியுறுத்தப்பட்டது.).
மு.வ உரை:
ஓர் உயிரின் உடம்பைச் சுவையாக உண்டவரின் மனம்
கொலைக்கருவியைக் கையில் கொண்டவரின் நெஞ்சம் போல்
நன்மையாகிய அருளைப் போற்றாது.
G.U.Pope:
Like heart of them that murderous weapons bear, his mind,
Who eats of savoury meat, no joy in good can find.
Explanation
Like the (murderous) mind of him who carries a weapon (in his hand), the mind of him who feasts with pleasure on the body of another (creature), has no regard for goodness.
மூலம்:
254 . அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல்.
பரிமேழலகர் உரை:
அருள் யாது எனின் கொல்லாமை - அருள் யாது எனின்,
கொல்லாமை : அல்லது (யாதெனின்) கோறல் - அருள்
அல்லது யாது எனின் கோறல்: அவ்வூன் தினல் பொருள்
அல்லது - ஆகலான் அக்கோறலான் வந்த ஊனைத் தின்கை
பாவம். (உபசாரவழக்கால் 'கொல்லாமை, கோறல்' ஆகிய
காரியங்களை 'அருள் அல்லது' எனக் காரணங்கள் ஆக்கியும்
'ஊன் தின்கை' ஆகிய காரணத்தைப் 'பாவம்' எனக் காரிய
மாக்கியும் கூறினார். அருளல்லது - கொடுமை. சிறப்புப்பற்றி
அறமும் பொருள் எனப்படுதலின், பாவம் பொருள் அல்லது
எனப்பட்டது. 'கோறல்' என முன் நின்றமையின் 'அவ்வூன்'
என்றார். இனி இதனை இவ்வாறன்றி 'அருளல்லது'
என்பதனை ஒன்றாக்கிக், 'கொல்லாமை கோறல்' என்பதற்குக்
'கொல்லாமை என்னும் விரதத்தை அழித்தல்' என்று
உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல்;
அருளல்லாதது எது என்றால் உயிரைக் கொல்லுதல்; அதன்
உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.
G.U.Pope:
'What's grace, or lack of grace'? 'To kill' is this, that 'not to kill';
To eat dead flesh can never worthy end fulfil.
Explanation
If it be asked what is kindness and what its opposite, the answer would be preservation and destruction of life; and therefore it is not right to feed on the flesh (obtained by taking away life).
மூலம்:
255 . உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
பரிமேழலகர் உரை:
உயிர் நிலை உண்ணாமை உள்ளது - ஒருசார் உயிர் உடம்பின்
கண்ணே நிற்றல் ஊன் உண்ணாமை என்கின்ற அறத்தின்
கண்ணது; உண்ண அளறு அண்ணாத்தல் செய்யாது -
ஆகலான், அந்நிலை குலைய ஒருவன் அதனை
உண்ணுமாயின், அவனை விழுங்கிய நிரயம் பின்
உமிழ்வதற்கு அங்காவாது. (உண்ணப்படும் விலங்குகள்
அதனால் தேய்ந்து சிலவாக, ஏனைய பலவாய் வருதலின்,
'உண்ணாமை உள்ளது உயிர்நிலை' என்றார். 'உண்ணின்
என்பது உண்ண' எனத்திரிந்து நின்றது. ஊன் உண்டவன்
அப்பாவத்தான் நெடுங்காலம் நிரயத்துள் அழுந்தும் என்பதாம்.
கொலைப் பாவம் கொன்றார்்மேல் நிற்றலின், பின் ஊன்
உண்பார்க்குப் பாவம் இல்லை என்பாரை மறுத்து, அஃது உண்டு
என்பது இவ்விரண்டு பாட்டானும் கூறப்பட்டது.).
மு.வ உரை:
உயிர்கள் உடம்புபெற்று வாழும் நிலைமை, ஊன்
உண்ணாதிருத்தலை அடிப்படையாகக் கொண்டது; ஊன் உண்டால்
நரகம் அவனை வெளிவிடாது.
G.U.Pope:
If flesh you eat not, life's abodes unharmed remain;
Who eats, hell swallows him, and renders not again.
Explanation
Not to eat flesh contributes to the continuance of life; therefore if a man eat flesh, hell will not open its mouth (to let him escape out, after he has once fallen in).
மூலம்:
256 . தினல்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
பரிமேழலகர் உரை:
தினற்பொருட்டால் உலகு கொல்லாது எனின் - பேதைமை
காரணமாக அல்லது, ஊன் தின்கை காரணமாக உலகம்
கொல்லாதாயின், விலைப்பொருட்டு ஊன் தருவார் யாரும்
இல் - பொருள் காரணமாக ஊன் விற்பார் யாவரும் இல்லை.
('உலகு' என்பது ஈண்டு உயிர்ப்பன்மை மேல் நின்றது. பின்
நிகழும் தின்கை முன் நிகழும் கொலைக்குக் காரணம்
ஆகாமையின், 'தின்பார்க்குக் காரணத்தான் வரும் பாவம்
இல்லை' என்ற வாதியை நோக்கி அருத்தாபத்தி அளவையால்
காரணமாதல் சாதித்தலின், இதனான் மேலது
வலியுறுத்தப்பட்டது.).
மு.வ உரை:
புலால் தின்னும்பொருட்டு உலகத்தார் உயிர்களைக்
கொல்லாதிருப்பாரானால், விலையின் பொருட்டு ஊன் விற்பவர்
இல்லாமல் போவர்.
G.U.Pope:
'We eat the slain,' you say, by us no living creatures die;
Who'd kill and sell, I pray, if none came there the flesh to buy?
Explanation
If the world does not destroy life for the purpose of eating, then no one would sell flesh for the sake of money.
மூலம்:
257 . உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதுஒன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
பரிமேழலகர் உரை:
புலால் பிறிதொன்றன் புண் - புலாலாவது பிறிதோர் உடம்பின்
புண், அது உணர்வார்ப் பெறின் உண்ணாமை வேண்டும் - அது
தூய்து அன்மை அறிவாரைப் பெறின் அதனை
உண்ணாதொழியல் வேண்டும். ('அஃது' என்னல் வேண்டும்
ஆய்தம் விகாரத்தால்தொக்கது. அம்மெய்ம்மை
உணராமையின், அதனை உண்கின்றார் என்பதாம். பொருந்தும்
ஆற்றானும் புலால் உண்டல் இழிந்தது என்பது இதனான்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
புலால் உண்ணாமலிருக்க வேண்டும்; ஆராய்ந்து அறிவாரைப்
பெற்றால், அப்புலால் வேறோர் உயிரின் புண் என்பதை உணரலாம்.
G.U.Pope:
With other beings' ulcerous wounds their hunger they appease;
If this they felt, desire to eat must surely cease.
Explanation
If men should come to know that flesh is nothing but the unclean ulcer of a body, let them abstain from eating it.
மூலம்:
258 . செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊண்.
பரிமேழலகர் உரை:
செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் - மயக்கம் ஆகிய
குற்றத்தின் நீங்கிய அறிவினையுடையார், உயிரின்
தலைப்பிரிந்த ஊன் உண்ணார் - ஓர் உயிரின் நீங்கி வந்த
ஊனை உண்ணார். ( 'தலைப்பிரிவு' என்பது ஒரு சொல்.
பிணம் என ஊனின் மெய்ம்மை தாமே உணர்தலின்,
'உண்ணார்' என்றார்.).
மு.வ உரை:
குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர், ஓர்
உயிரினடத்திலிருந்து பிரிந்துவந்த உடம்பாகிய ஊனை
உண்ணமாட்டார்.
G.U.Pope:
Whose souls the vision pure and passionless perceive,
Eat not the bodies men of life bereave.
Explanation
The wise, who have freed themselves from mental delusion, will not eat the flesh which has been severed from an animal.
மூலம்:
259 . அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
பரிமேழலகர் உரை:
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் - தீயின்கண் நெய்
முதலிய அவிகளைச் சொரிந்து ஆயிரம் வேள்வி
வேட்டலினும், ஒன்றன்உயிர் செகுத்து உண்ணாமை நன்று -
ஒரு விலங்கின் உயிரைப் போக்கி அது நின்ற ஊனை
உண்ணாமை நன்று. (அவ்வேள்விகளான் வரும் பயனினும்
இவ்விரதத்தான் வரும் பயனே பெரிது என்பதாம்.).
மு.வ உரை:
நெய் முதலிய பொருள்களைத் தீயில் சொரிந்து ஆயிரம் வேள்விகள்
செய்தலைவிட, ஒன்றன் உயிரைக் கொன்று உடம்பைத்
தின்னாதிருத்தல் நல்லது.
G.U.Pope:
Than thousand rich oblations, with libations rare,
Better the flesh of slaughtered beings not to share.
Explanation
Not to kill and eat (the flesh of) an animal, is better than the pouring forth of ghee etc., in a thousand sacrifices.
மூலம்:
260 . கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
பரிமேழலகர் உரை:
கொல்லான் புலாலை மறுத்தானை - ஓர் உயிரையும்
கொல்லாதவனுமாய்ப் புலாலையும் உண்ணாதவனை, எல்லா
உயிரும் கைகூப்பித் தொழும் - எல்லா உயிரும் கை குவித்துத்
தொழும். (இவ்விரண்டு அறமும் ஒருங்கு உடையார்க்கு
அல்லது ஒன்றே உடையார்க்கு அதனால் பயன் இல்லை
ஆகலின், கொல்லாமையும் உடன் கூறினார். இப்பேரருள்
உடையான் மறுமைக்கண் தேவரின் மிக்கான் ஆம் என அப்
பயனது பெருமை கூறியவாறு. இவை மூன்று பாட்டானும்
ஊன் உண்ணாமையது உயர்ச்சி கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஓருயிரையும் கொல்லாமல் புலால் உண்ணாமல் வாழ்கின்றவனை
உலகத்தில் உள்ள எல்லா உயிர்களும் கைகூப்பி வணங்கும்.
G.U.Pope:
Who slays nought,- flesh rejects- his feet before
All living things with clasped hands adore.
Explanation
All creatures will join their hands together, and worship him who has never taken away life, nor eaten flesh.