மூலம்:
221 . வறியார்க்குஒன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து.
பரிமேழலகர் உரை:
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை - ஒரு பொருளும்
இல்லாதார்க்கு அவர் வேண்டியது ஒன்றைக்
கொடுப்பதே பிறர்க்குக் கொடுத்தலாவது, மற்று
எல்லாம் குறியெதிர்ப்பை நீரது உடைத்து - அஃதொழிந்த
எல்லாக் கொடையும் குறியெதிர்ப்பைக் கொடுக்கும்
நீர்மையை உடைத்து. (ஒழிந்த கொடைகளாவன:
வறியவர் அல்லாதார்க்கு ஒரு பயன் நோக்கிக்
கொடுப்பன. குறியெதிர்ப்பாவது அளவு குறித்து வாங்கி
அவ்வாங்கியவாறே எதிர் கொடுப்பது. 'நீரது' என்புழி,
'அது' என்பது பகுதிப்பொருள் விகுதி. பின்னும்
தன்பால் வருதலின், 'குறியெதிர்ப்பை நீரது உடைத்து'
என்றார். இதனால் ஈகையது இலக்கணம்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படுவது.
மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும்
தன்மை உடையது.
G.U.Pope:
Call that a gift to needy men thou dost dispense,
All else is void of good, seeking for recompense.
Explanation
To give to the destitute is true charity. All other gifts have the nature of (what is done for) a measured return.
மூலம்:
222 . நல்ஆறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்எனினும் ஈதலே நன்று.
பரிமேழலகர் உரை:
கொளல் நல் ஆறு எனினும் தீது - ஏற்றல் வீட்டுலகிற்கு
நல்ல நெறி என்பார் உளராயினும் அது தீது, மேல்
உலகம் இல் எனினும் ஈதலே நன்று - ஈந்தார்க்கு
அவ்வுலகு எய்துதல் இல்லை என்பார் உளராயினும் ,
ஈதலே நன்று. ('எனினும்' என்பது இரு வழியும்
அங்ஙனம் கூறுவார் இன்மை விளக்கி நின்றது.
பிரிநிலை ஏகாரத்தால் பிற அறங்களின் ஈதல் சிறந்தது
என்பது பெற்றாம். நல்லது கூறுவார் தீயதும் உடன்
கூறினார்.).
மு.வ உரை:
பிறரிடமிருந்து பொருள் பெற்றுக் கொள்ளுதல் நல்ல நெறி
என்றாலும் கொள்ளல் தீமையானது. மேலுலகம்
இல்லையென்றாலும் பிறர்க்குக் கொடுப்பதே நல்லது.
G.U.Pope:
Though men declare it heavenward path, yet to receive is ill;
Though upper heaven were not, to give is virtue still.
Explanation
To beg is evil, even though it were said that it is a good path (to heaven). To give is good, even though it were said that those who do so cannot obtain heaven.
மூலம்:
223 . இலன்என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலன்உடையான் கண்ணே உள.
பரிமேழலகர் உரை:
'இலன் என்னும் எவ்வம் உரையாமை - யான் வறியன்
என்று இரப்பான் சொல்லும் இளிவரவைத் தான்
பிறர்கண் சொல்லாமையும், ஈதல் - அதனைத் தன்கண்
சொன்னார்க்கு மாற்றாது ஈதலும், உள குலன்
உடையான் கண்ணே- இவை இரண்டும் உளவாவன
குடிப் பிறந்தான் கண்ணே. (மேல் தீது என்றது
ஒழிதற்கும் நன்று என்றது செய்தற்கும் உரியவனை
உணர்த்தியவாறு. இனி இலன் என்னும் எவ்வம்
உரையாமை ஈதல் என்பதற்கு, அவ்விளிவரவை
ஒருவன் தனக்குச் சொல்வதற்கு முன்னே அவன்
குறிப்பறிந்து கொடுத்தல் எனவும், அதனைப் பின்னும்
பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால்
கொடுத்தல்' எனவும், அதனைப் பின்னும்
பிறனொருவன்பால் சென்று அவன் உரையா வகையால்
கொடுத்தல் எனவும், யான் இதுபொழுது
பொருளுடையேன் அல்லேன் 'எனக் கரப்பார்'
சொல்லும் இளிவரவைச் சொல்லாது கொடுத்தல்
எனவும் உரைப்பாரும் உளர். அவர் 'ஈதல்'
என்பதனைப் பொருட்பன்மை பற்றி வந்த பன்மையாக
உரைப்பர்.).
மு.வ உரை:
`யான் வறியவன்’ என்னும் துன்பச் சொல்லை ஒருவன்
உரைப்பதற்கு முன் அவனுக்கு கொடுக்கும் தன்மை, நல்ல
குடிப்பிறப்பு உடையவனிடம் உண்டு.
G.U.Pope:
'I've nought' is ne'er the high-born man's reply;
He gives to those who raise themselves that cry.
Explanation
(Even in a low state) not to adopt the mean expedient of saying "I have nothing," but to give, is the characteristic of the mad of noble birth.
மூலம்:
224 . இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு.
பரிமேழலகர் உரை:
இரக்கப்படுதல் இன்னாது - இரத்தலேயன்றி
இரக்கப்படுதலும் இனிது அன்று, இரந்தவர் இன்முகம்
காணும் அளவு - ஒரு பொருளை இரந்தவர் அது
பெற்றதனால் இனிதாகிய அவர் முகங் காணும்
அளவும்; (எச்ச உம்மையும் முற்று உம்மையும்
விகாரத்தால் தொக்கன. இரக்கப் படுதல் - 'இரப்பார்க்கு
ஈவல்' என்று இருத்தல். அதனை 'இன்னாது' என்றது.
'எல்லாம் இரப்பார்க்கு ஒன்று ஈயாமை' (நாலடி.145)
கூடுங்கொல்லோ என்னும் அச்சம் நோக்கி. எனவே
எல்லாப் பொருளும் ஈதல் வேண்டும் என்பது
பெறப்பட்டது.).
மு.வ உரை:
பொருள் வேண்டும் என்று இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும்
வரைக்கும் (இரத்தலைப் போலவே) இரந்து கேட்கப்படுதலும்
துன்பமானது.
G.U.Pope:
The suppliants' cry for aid yields scant delight,
Until you see his face with grateful gladness bright.
Explanation
To see men begging from us in disagreeable, until we see their pleasant countenance.
மூலம்:
225 . ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்.
பரிமேழலகர் உரை:
ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் - தவத்தான்
வலியார்க்கு வலியாவது தம்மையுற்ற பசியைப்
பொறுத்தல், அப்பசியை மாற்றுவார் ஆற்றலின் பின் -
அவ் வலிதான் அங்ஙனம் பொறுத்தற்கு அரிய பசியை
ஈகையான் ஒழிப்பாரது வலிக்குப்பின். (தாமும் பசித்துப்
பிறரையும் அது தீர்க்க மாட்டாதார் ஆற்றலின், தாமும்
பசியாது பிறரையும் அது தீர்ப்பார் ஆற்றல் நன்று
என்பதாம்.).
மு.வ உரை:
தவ வலிமை உடையவரின் வலிமை பசியைப் பொறுத்துக்
கொள்ளலாகும். அதுவும் அப்பசியை உணவு கொடுத்து
மாற்றுகின்றவரின் ஆற்றலுக்குப் பிற்பட்டதாகும்.
G.U.Pope:
'Mid devotees they're great who hunger's pangs sustain,
Who hunger's pangs relieve a higher merit gain.
Explanation
The power of those who perform penance is the power of enduring hunger. It is inferior to the power of those who remove the hunger (of others).
மூலம்:
226 . அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதுஒருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
பரிமேழலகர் உரை:
அற்றார் அழிபசி தீர்த்தல் - வறியாரது மிக்க பசியை
அறன் நோக்கித் தீர்க்க, பொருள் பெற்றான் ஒருவன்
வைப்புழி அஃது - பொருள் பெற்றான் ஒருவன்
அதனைத் தனக்கு உதவ வைக்கும் இடம் அவ்வறம்
ஆகலான். (எல்லா நன்மைகளும் அழிய வருதலின்,
'அழி பசி' என்றார். 'அறம் நோக்கி' என்பது எஞ்சி
நின்றது. 'அற்றார் அழிபசி தீர்த்த' பொருள் பின்
தனக்கே வந்து உதவும் என்பதாம்.).
மு.வ உரை:
வறியவரின் கடும்பசியைத் தீர்க்கவேண்டும்; அதுவே பொருள் பெற்ற
ஒருவன் அப்பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து
வைக்கும் இடமாகும்.
G.U.Pope:
Let man relieve the wasting hunger men endure;
For treasure gained thus finds he treasure-house secure.
Explanation
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth.
மூலம்:
227 . பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது.
பரிமேழலகர் உரை:
பாத்து ஊண் மரீஇயவனை - எஞ்ஞான்றும் பகுத்து
உண்டல் பயின்றவனை, பசி என்னும் தீப்பிணி தீண்டல்
அரிது - பசி என்று சொல்லப்படும் தீய நோய் தீண்டல்
இல்லை. (இவ்வுடம்பில் நின்று ஞான ஒழுக்கங்களை
அழித்து அதனால் வரும் உடம்புகட்கும்
துன்பஞ்செய்தலின், 'தீப்பிணி' எனப்பட்டது. தனக்கு
மருத்துவன் தான் ஆகலின், பசிப்பிணி நணுகாது
என்பதாம். இவை ஆறு பாட்டானும் ஈதலின் சிறப்புக்
கூறப்பட்டது.).
மு.வ உரை:
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம்
உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல்
இல்லை.
G.U.Pope:
Whose soul delights with hungry men to share his meal,
The hand of hunger's sickness sore shall never feel.
Explanation
The fiery disease of hunger shall never touch him who habitually distributes his food to others.
மூலம்:
228 . ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
வைத்துஇழக்கும் வன்க ணவர்?
பரிமேழலகர் உரை:
தாம் உடைமை வைத்து இழக்கும் வன்கணவர் - தாம்
உடைய பொருளை ஈயாது வைத்துப் பின் இழந்துபோம்
அருளிலாதார், ஈத்து உவக்கும் இன்பம் அறியார்கொல்
- வறியார்க்கு வேண்டியவற்றைக் கொடுத்து அவர்
உவத்தலான் அருளுடையார் எய்தும் இன்பத்தினைக்
கண்டறியார் கொல்லோ! (உவக்கும் என்பது
காரணத்தின்கண் வந்த பெயரெச்சம், அஃது இன்பம்
என்னும் காரியப் பெயர் கொண்டது. அறிந்தாராயின்,
தாமும் அவ்வின்பத்தை எய்துவது அல்லது வைத்து
இழவார் என்பது கருத்து.).
மு.வ உரை:
தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்குக் கொடுக்காமல் வைத்திருந்து
பின் இழந்துவிடும் வன்கண்மை உடையவர் பிறர்க்குக் கொடுத்து
மகிழும் மகிழ்ச்சியை அறியாரோ?
G.U.Pope:
Delight of glad'ning human hearts with gifts do they not know.
Men of unpitying eye, who hoard their wealth and lose it so?
Explanation
Do the hard-eyed who lay up and lose their possessions not know the happiness which springs from the pleasure of giving ?
மூலம்:
229 . இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்.
பரிமேழலகர் உரை:
நிரப்பிய தாமே தமியர் உணல் - பொருட்குறை
நிரப்பவேண்டி வறியார்க்கு ஈயாது தாமே தனித்து
உண்டல் இரத்தலின் இன்னாது மன்ற - ஒருவர்க்குப்
பிறர்பால் சென்று இரத்தலினும் இன்னாது
ஒருதலையாக. (பொருட்குறை நிரப்பலாவது: ஒரோ
எண்களைக் குறித்து இத்துணை ஈட்டுவதும் என
ஈட்டத்தையே மேற்கொண்டு இவறிக் கூட்டுதல்.
தனித்தல்: பிறரை ஒழித்தல். இரத்தற்கு உள்ளது
அப்பொழுதை இளிவரவே: பின் நல்குரவு இல்லை,
தமியர் உண்டற்கு அவை இரண்டும் உளவாம் ஆகலின்,
'இரத்தலின் இன்னாது' என்றார். 'நிரப்பிய'
என்பதற்குத் 'தேடிய உணவுகளை' என்று உரைப்பாரும்
உளர்.).
மு.வ உரை:
பொருளின் குறைபாட்டை நிரப்புவதற்காக உள்ளதைப் பிறர்க்கு
ஈயாமல் தாமே தமியராய் உண்பது வறுமையால் இரப்பதைவிடத்
துன்பமானது.
G.U.Pope:
They keep their garners full, for self alone the board they spread;-
'Tis greater pain, be sure, than begging daily bread!
Explanation
Solitary and unshared eating for the sake of filling up one's own riches is certainly much more unpleasant than begging.
மூலம்:
230 . சாதலின் இன்னாது இல்லை இனிதுஅதூஉம்
ஈதல் இயையாக் கடை.
பரிமேழலகர் உரை:
சாதலின் இன்னாதது இல்லை - ஒருவற்குச் சாதல்
போல இன்னாதது ஒன்று இல்லை, அதூஉம் ஈதல்
இயையாக் கடை இனிது - அத்தன்மைத்தாகிய
சாதலும், வறியார்க்கு ஒன்று ஈதல் முடியாதவழி
இனிது. (பிறர்க்குப் பயன்படாத உடற்பொறை
நீங்குதலான் 'இனிது' என்றார். இவை மூன்று
பாட்டானும் ஈயாமையின் குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
சாவதைவிடத் துன்பமானது வேறொன்றும் இல்லை. ஆனால்
வறியவர்க்கு ஒரு பொருள் கொடுக்க முடியாத நிலை வந்தபோது
அச்சாதலும் இனியதே ஆகும்.
G.U.Pope:
'Tis bitter pain to die, 'Tis worse to live.
For him who nothing finds to give!
Explanation
Nothing is more unpleasant than death: yet even that is pleasant where charity cannot be exercised.