மூலம்:
211 . கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ உலகு.
பரிமேழலகர் உரை:
மாரிமாட்டு உலகு என் ஆற்றும் - தமக்கு நீர்
உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன
கைம்மாறு செய்யா நின்றன, கடப்பாடு கைம்மாறு
வேண்டா - ஆகலான், அம்மேகங்கள் போல்வார்
செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல.
('என் ஆற்றும்?' என்ற வினா, 'யாதும் ஆற்றா'
என்பது தோன்ற நிற்றலின், அது
வருவித்துரைக்கப்படும். தவிரும் தன்மைய அல்ல
என்பது 'கடப்பாடு' என்னும் பெயரானே பெறப்பட்டது.
செய்வாராது வேண்டாமையைச் செய்யப்படுவனமேல்
ஏற்றினார்.).
மு.வ உரை:
இந்த உலகத்தார் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு
செய்கின்றனர்? மழை போன்றவர் செய்யும் உதவிகளும் கைம்மாறு
வேண்டாதவை.
G.U.Pope:
Duty demands no recompense; to clouds of heaven,
By men on earth, what answering gift is given?
Explanation
Benevolence seeks not a return. What does the world give back to the clouds ?
மூலம்:
212 . தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல் பொருட்டு.
பரிமேழலகர் உரை:
தக்கார்க்கு - தகுதி உடையார்க்கு ஆயின், தாள் ஆற்றித்
தந்த பொருள் எல்லாம் - முயல்தலைச் செய்து ஈட்டிய
பொருள் முழுவதும், வேளாண்மை செய்தற் பொருட்டு
- ஒப்புரவு செய்தற் பயத்தவாம். (பிறர்க்கு உதவாதார்
போலத் தாமே உண்டற்பொருட்டும் வைத்து
இழத்தற்பொருட்டும் அன்று என்பதாயிற்று.).
மு.வ உரை:
ஒப்புரவாளன் தன்னால் இயன்ற முயற்சி செய்து சேர்த்த பொருள்
எல்லாம் தக்கவர்க்கு உதவி செய்வதற்கே ஆகும்.
G.U.Pope:
The worthy say, when wealth rewards their toil-spent hours,
For uses of beneficence alone 'tis ours.
Explanation
All the wealth acquired with perseverance by the worthy is for the exercise of benevolence.
மூலம்:
213 . புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல்அரிதே
ஒப்புரவின் நல்ல பிற.
பரிமேழலகர் உரை:
புத்தேள் உலகத்தும் ஈண்டும் - தேவர் உலகத்தும்
இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது -
ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல்
அரிது. ( ஈவாரும் ஏற்பாரும் இன்றி எல்லோரும் ஒரு
தன்மையராகலின் புத்தேள் உலகத்து அரிதாயிற்று,
யாவர்க்கும் ஒப்பது இது போல் பிறிதொன்று
இன்மையின், இவ்வுலகத்து அரிதாயிற்று.
'பெறற்கரிது' என்று பாடம் ஓதி, 'பெறுதற்குக் காரணம்
அரிது' என்று உரைப்பாரும் உளர். இவை மூன்று
பாட்டானும் ஒப்புரவினது சிறப்புக் கூறப்பட்டது.).
மு.வ உரை:
பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப்போல நல்லனவாகிய
வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும்
பெறுதல் இயலாது.
G.U.Pope:
To 'due beneficence' no equal good we know,
Amid the happy gods, or in this world below.
Explanation
It is difficult to obtain another good equal to benevolence either in this world or in that of the gods.
மூலம்:
214 . ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
பரிமேழலகர் உரை:
உயிர் வாழ்வான் ஒத்தது அறிவான் - உயிரோடு கூடி
வாழ்வானாவான் உலக நடையினை அறிந்து
செய்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் -
அஃதறிந்து செய்யாதவன் உயிருடையானே யாயினும்
செத்தாருள் ஒருவனாகக் கருதப்படும்.(உயிரின் அறிவும்
செயலும் காணாமையின், 'செத்தாருள் வைக்கப்படும்'
என்றார். இதனான் உலகநடை வழு வேத நடை
வழுப்போலத் தீர்திறன் உடைத்து அன்று என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன்
உயிர்வாழ்கின்றவன் ஆவான்; மற்றவன் செத்தவருள் சேர்த்துக்
கருதப்படுவான்.
G.U.Pope:
Who knows what's human life's befitting grace,
He lives; the rest 'mongst dead men have their place.
Explanation
He truly lives who knows (and discharges) the proper duties (of benevolence). He who knows the m not will be reckoned among the dead.
மூலம்:
215 . ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
பரிமேழலகர் உரை:
உலகு அவாம் பேர் அறிவாளன் திரு - உலகநடையை
விரும்பிச் செய்யும்பெரிய அறிவினை யுடையவனது
செல்வம், ஊருணி நீர் நிறைந்தற்று - ஊரின் வாழ்வார்
தண்ணீர் உண்ணும் குளம் நீர் நிறைந்தாற் போலும்.
(நிறைதல் என்னும் இடத்து நிகழ் பொருளின் தொழில்
இடத்தின் மேல் ஏற்றப்பட்டது. பாழ் போகாது நெடிது
நின்று எல்லார்க்கும் வேண்டுவன தப்பாது உதவும்
என்பதாம்.).
மு.வ உரை:
ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின்
செல்வம், ஊரார் நீருண்ணும் குளம், நீரால் நிறைந்தாற் போன்றது.
G.U.Pope:
The wealth of men who love the 'fitting way,' the truly wise,
Is as when water fills the lake that village needs supplies.
Explanation
The wealth of that man of eminent knowledge who desires to exercise the benevolence approved of by the world, is like the full waters of a city-tank.
மூலம்:
216 . பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயன்உடை யான்கண் படின்.
பரிமேழலகர் உரை:
செல்வம் நயன் உடையான்கண் படின் - செல்வம்
ஒப்புரவு செய்வான் கண்ணே படுமாயின், பயன் மரம்
உள்ளூர்ப் பழுத்தற்று - அது பயன்படுமரம் ஊர் நடுவே
பழுத்தாற்போலும். (உலக நீதி பலவற்றுள்ளும் ஒப்புரவு
சிறந்தமையின் அதனையே 'நயன்'
என்றார்.எல்லார்க்கும் எளிதில் பயன் கொடுக்கும்
என்பதாம்.).
மு.வ உரை:
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவனிடம் செல்வம் சோந்தால், அஃது
ஊரின் நடுவே உள்ள பயன் மிகுந்த மரம் பழங்கள் பழுத்தாற்
போன்றது.
G.U.Pope:
A tree that fruits in th' hamlet's central mart,
Is wealth that falls to men of liberal heart.
Explanation
The wealth of a man (possessed of the virtue) of benevolence is like the ripening of a fruitful tree in the midst of a town.
மூலம்:
217 . மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
பரிமேழலகர் உரை:
செல்வம் பெருந்தகையான்கண் படின் - செல்வம்
ஒப்புரவு செய்யும் பெரிய தகைமையுடையான் கண்ணே
படுமாயின், மருந்து ஆகித் தப்பா மரத்தற்று - அஃது
எல்லா உறுப்பும் பிணிகட்கு மருந்தாய்த் தப்பாத
மரத்தை ஒக்கும். (தப்புதலாவது, கோடற்கு அரிய
இடங்களில் இன்றாதல், மறைந்து நின்றாதால் ,
காலத்தான் வேறுபட்டாதல், பயன்படாமை. தன் குறை
நோக்காது எல்லார் வருத்தமும் தீர்க்கும் என்பதாம்.
இவை மூன்று பாட்டானும் கடப்பாட்டாளனுடைய
பொருள் பயன்படுமாறு கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒப்புரவாகிய பெருந்தகைமை உடையவனிடம் செல்வம் சேர்ந்தால்,
அஃது எல்லா உறுப்புக்களும் மருந்தாகிப் பயன்படத் தவறாத மரம்
போன்றது.
G.U.Pope:
Unfailing tree that healing balm distils from every part,
Is ample wealth that falls to him of large and noble heart.
Explanation
If wealth be in the possession of a man who has the great excellence (of benevolence), it is like a tree which as a medicine is an infallible cure for disease.
மூலம்:
218 . இடன்இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன்அறி காட்சி யவர்.
பரிமேழலகர் உரை:
இடன் இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார் - செல்வம்
சுருங்கிய காலத்தும் ஒப்புரவு செய்தற்குத் தளரார்,
கடன்அறி காட்சியவர் - தாம் செய்யத் தகுந்தவற்றை
அறிந்த இயற்கை அறிவுடையார். (பிற எல்லாம்
ஒழியினும், இஃது ஒழியார் என்பதாம்.).
மு.வ உரை:
ஒப்புரவு அறிந்து ஒழுகுதலாகிய தம் கடமை அறிந்த அறிவை
உடையவர், சொல்வளம் இல்லாத காலத்திலும் ஒப்புரவுக்குத் தளர
மாட்டார்.
G.U.Pope:
E'en when resources fall, they weary not of 'kindness due,'-
They to whom Duty's self appears in vision true.
Explanation
The wise who know what is duty will not scant their benevolence even when they are without wealth.
மூலம்:
219 . நயன்உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு.
பரிமேழலகர் உரை:
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் - ஒப்புரவு
செய்தலை உடையான் நல்கூர்ந்தான் ஆதலாவது,
செயும் நீர செய்யாது அமைகலா ஆறு - தவிராது
செய்யும் நீர்மையையுடைய அவ்வொப்புரவுகளைச்
செய்யப்பெறாது வருந்துகின்ற இயல்பாம். (தான்
நுகர்வன நுகரப் பெறாமை அன்று என்பதாம்.
இவ்விரண்டு பாட்டானும் வறுமையான் ஒப்புரவு
ஒழிதற்பாற்று அன்று என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒப்புரவாகிய நற்பண்பு உடையவன் வறுமை உடையவனாதல்,
செய்யத்தக்க உதவிகளைச் செய்யாமல் வருந்துகின்ற
தன்மையாகும்.
G.U.Pope:
The kindly-hearted man is poor in this alone,
When power of doing deeds of goodness he finds none.
Explanation
The poverty of a benevolent man, is nothing but his inability to exercise the same.
மூலம்:
220 . ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்கது உடைத்து.
பரிமேழலகர் உரை:
ஒப்புரவினால் கேடு வரும் எனின் - ஒப்புரவு
செய்தலான் ஒருவனுக்குப் பொருட்கேடு வரும் என்பார்
உளராயின், அஃது ஒருவன் விற்றுக்கோள் தக்கது
உடைத்து - அக்கேடு தன்னை விற்றாயினும் கொள்ளும்
தகுதியை உடைத்து. (தன்னைவிற்றுக்
கொள்ளப்படுவதொரு பொருள் இல்லை அன்றே?
இஃதாயின் அதுவும் செய்யப்படும் என்றது, புகழ்
பயத்தல் நோக்கி. இதனான் ஒப்புரவினால் கெடுவது
கேடு அன்று என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒப்புரவால் கேடு வரும் என்றால், அக்கேடு ஒருவன் தன்னை
விற்றாவது வாங்கிக் கொள்ளும் தகுதி உடையதாகும்.
G.U.Pope:
Though by 'beneficence,' the loss of all should come,
'Twere meet man sold himself, and bought it with the sum.
Explanation
If it be said that loss will result from benevolence, such loss is worth being procured even by the sale of one's self.