மூலம்:
201 . தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு.
பரிமேழலகர் உரை:
தீவினை என்னும் செருக்கு - தீவினை என்று
சொல்லப்படும் மயக்கத்தை, தீவினையார் அஞ்சார் -
முன் செய்த தீவினையுடையார் அஞ்சார், விழுமியார்
அஞ்சுவர் - அஃது இலராகிய சீரியார் அஞ்சுவர்.
('தீவினை என்னும் செருக்கு' எனக் காரியம்
காரணமாக உபசரிக்கப்பட்டது. மேல் தொட்டுச் செய்து
கைவந்தமையான் 'அஞ்சார்' என்றும், செய்து
அறியாமையான் 'அஞ்சுவர்' என்றும் கூறினார்.).
மு.வ உரை:
தீயவை செய்தலாகிய செருக்கைத் தீவினை உடைய பாவிகள்
அஞ்சார்; தீவினை இல்லாத மேலோர் மட்டுமே அஞ்சுவர்.
G.U.Pope:
With sinful act men cease to feel the dread of ill within,
The excellent will dread the wanton pride of cherished sin.
Explanation
Those who have experience of evil deeds will not fear, but the excellent will fear the pride of sin.
மூலம்:
202 . தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்.
பரிமேழலகர் உரை:
தீயவை தீய பயத்தலான் - தனக்கு இன்பம் பயத்தலைக்
கருதிச் செய்யும் தீவினைகள், பின் அஃது ஒழித்துத்
துன்பமே பயத்தலான், தீயவை தீயினும் அஞ்சப்படும்-
அத்தன்மையாகிய தீவினைகள் ஒருவனால் தீயினும்
அஞ்சப்படும். (பிறிதொரு காலத்தும், பிறிதொரு
தேயத்தும், பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு
இன்மையின் , தீயினும் அஞ்சப்படுவதாயிற்று.).
மு.வ உரை:
தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக
இருத்தலால், அத் தீய செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக்
கருதி அஞ்சப்படும்.
G.U.Pope:
Since evils new from evils ever grow,
Evil than fire works out more dreaded woe.
Explanation
Because evil produces evil, therefore should evil be feared more than fire.
மூலம்:
203 . அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்.
பரிமேழலகர் உரை:
அறிவினுள் எல்லாம் தலை என்ப - தமக்கு உறுதி
நாடும் அறிவுரைகள் எல்லாவற்றுள்ளும் தலையாய
அறிவு என்று சொல்லுவார் நல்லோர், செறுவார்க்கும்
தீய செய்யா விடல் - தம்மைச் செறுவார் மாட்டும்
தீவினைகளைச் செய்யாது விடுதலை. (விடுதற்குக்
காரணம் ஆகிய அறிவை 'விடுதல்' என்றும் , செய்யத்
தக்குழியுஞ் 'செய்யாது' ஒழியவே தமக்குத் துன்பம்
வாராது என உய்த்துணர்தலின், அதனை 'அறிவினுள்
எல்லாம் தலை' என்றும் கூறினார். செய்யாது என்பது
கடைக்குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும்
தீவினைக்கு அஞ்சவேண்டும் என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
தம்மை வருத்துவோர்க்கும் தீய செயல்களைச்
செய்யாமலிருத்தலை, அறிவு எல்லாவற்றிலும் தலையான அறிவு
என்று கூறுவர்.
G.U.Pope:
Even to those that hate make no return of ill;
So shalt thou wisdom's highest law, 'tis said, fulfil.
Explanation
To do no evil to enemies will be called the chief of all virtues.
மூலம்:
204 . மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
பரிமேழலகர் உரை:
பிறன் கேடு மறந்தும் சூழற்க - ஒருவன் பிறனுக்குக்
கேடு பயக்கும் வினையை மறந்தும் எண்ணாதொழிக,
சூழின் சூழ்ந்தவன் கேடு அறம் சூழும் -
எண்ணுவானாயின், தனக்குக் கேடு பயக்கும்
வினையை அறக்கடவுள் எண்ணும். ('கேடு' என்பன
ஆகுபெயர். சூழ்கின்ற பொழுதேதானும் உடன்
சூழ்தலின், இவன் பிற்படினும் அறக்கடவுள் முற்படும்
என்பது பெறப்பட்டது. அறக்கடவுள் எண்ணுதலாவது,
அவன் கெடத் தான் நீங்க நினைத்தல். தீவினை
எண்ணலும் ஆகாது என்பதாம்.).
மு.வ உரை:
பிறனுக்குக் கேட்டைத் தரும் தீய செயல்களை ஒருவன் மறந்தும்
எண்ணக்கூடாது. எண்ணினால், எண்ணியவனுக்குக் கேடு
விளையுமாறு அறம் எண்ணும்.
G.U.Pope:
Though good thy soul forget, plot not thy neighbour's fall,
Thy plans shall 'virtue's Power' by ruin to thyself forestall.
Explanation
Even though forgetfulness meditate not the ruin of another. Virtue will meditate the ruin of him who thus meditates.
மூலம்:
205 . இலன்என்று தீயவை செய்யற்க: செய்யின்
இலன்ஆகும் மற்றும் பெயர்த்து.
பரிமேழலகர் உரை:
இலன் என்று தீயவை செய்யற்க -யான் வறியன் என்று
கருதி அது தீர்தற்பொருட்டுப் பிறர்க்குத் தீவினைகளை
ஒருவன் செய்யாது ஒழிக, செய்யின் பெயர்த்தும் இலன்
ஆகும் - செய்வானாயின் பெயர்த்தும் வறியன் ஆம்.
(அத் தீவினையால் பிறவிதோறும் இலன் ஆம்
என்பதாம். அன் விகுதி முன் தனித்தன்மையினும் பின்
படர்க்கை ஒருமையினும் வந்தது. தனித்தன்மை
'உளனா என் உயிரை உண்டு' (கலித்.குறிஞ்சி.22)
என்பதனாலும் அறிக. மற்று - அசை நிலை. 'இலம்'
என்று பாடம் ஓதுவாரும் உளர். பொருளான் வறியன்
எனக் கருதித் தீயவை செய்யற்க, செய்யின்,
அப்பொருளானேயன்றி, நற்குண நற்செய்கைகளாலும்
வறியனாம், என்று உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
`யான் வறியவன்’ என்று நினைத்துத் தீய செயல்களைச்
செய்யக்கூடாது; செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
G.U.Pope:
Make not thy poverty a plea for ill;
Thy evil deeds will make thee poorer still.
Explanation
Commit not evil, saying, "I am poor": if you do, you will become poorer still.
மூலம்:
206 . தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.
பரிமேழலகர் உரை:
நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான் - துன்பம்
செய்யும் கூற்றவாகிய பாவங்கள் தன்னைப் பின் வந்து
வருத்துதலை வேண்டாதவன், தீப்பால தான் பிறர்கண்
செய்யற்க - தீமைக்கூற்றவாகிய வினைகளைத் தான்
பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக. (செய்யின்
அப்பாவங்கள் அடுதல் ஒருதலை என்பதாம்.).
மு.வ உரை:
துன்பம் செய்யும் தீவினைகள் தன்னை வருத்துதலை
விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறர்க்குச்
செய்யாமலிருக்கவேண்டும்.
G.U.Pope:
What ranks as evil spare to do, if thou would'st shun
Affliction sore through ill to thee by others done.
Explanation
Let him not do evil to others who desires not that sorrows should pursue him.
மூலம்:
207 . எனைப்பகை உற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும்.
பரிமேழலகர் உரை:
எனைப்பகை உற்றாரும் உய்வர் - எத்துணைப் பெரிய
பகை உடையாரும் அதனை ஒருவாற்றால் தப்புவர்,
வினைப்பகை வீயாது பின் சென்று அடும் -
அவ்வாறன்றித் தீவினை ஆகிய பகை நீங்காது புக்குழிப்
புக்குக் கொல்லும் ('வீயாது உடம்பொடு நின்ற உயிரும்
இல்லை.' (புறநா.363) என்புழியும் வீயாமை
நீங்காமைக்கண் வந்தது.).
மு.வ உரை:
எவ்வளவு கொடிய பகை உடையவரும் தப்பி வாழ முடியும்;
ஆனால் தீயவை செய்தால் வரும் தீவினையாகிய பகை நீங்காமல்
பின்சென்று வருத்தும்.
G.U.Pope:
From every enmity incurred there is to 'scape, a way;
The wrath of evil deeds will dog men's steps, and slay.
Explanation
However great be the enmity men have incurred they may still live. The enmity of sin will incessantly pursue and kill.
மூலம்:
208 . தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.
பரிமேழலகர் உரை:
தீயவை செய்தார் கெடுதல் - பிறர்க்குத் தீவினை
செய்தார் தாம் கெடுதல் எத்தன்மைத்து எனின், நிழல்
தன்னை வீயாது அடி உறைந்தற்று - ஒருவன் நிழல்
நெடிதாகப் போயும், அவன்றன்னை விடாது வந்து
அடியின்கண் தங்கியதன்மைத்து. (இவ்வுவமையைத்
தன் காலம் வருந்துணையும் புலனாகாது உயிரைப்பற்றி
நின்று அது வந்துழி உருப்பதாய தீவினையைச்
செய்தார், பின் அதனால் கெடுதற்கு உவமையாக்கி
உரைப்பாரும் உளர். அஃது உரை அன்று என்பதற்கு அடி
உறைந்த நிழல் தன்னை வீந்தற்று என்னாது, வீயாது
அடி உறைந்தற்று என்ற பாடமே கரியாயிற்று. மேல்
'வீயாது பின் சென்று அடும்' என்றார்.ஈண்டு அதனை
உவமையான் விளக்கினார்.).
மு.வ உரை:
தீய செயல்களைச் செய்தவர் கேட்டை அடைதல், ஒருவனுடைய
நிழல் அவனை விடாமல் வந்து அடியில் தங்கியிருத்தலைப்
போன்றது.
G.U.Pope:
Man's shadow dogs his steps where'er he wends;
Destruction thus on sinful deeds attends.
Explanation
Destruction will dwell at the heels of those who commit evil even as their shadow that leaves them not.
மூலம்:
209 . தன்னைத்தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
பரிமேழலகர் உரை:
தன்னைத் தான் காதலன் ஆயின் - ஒருவன்
தன்னைத்தான் காதல் செய்தல் உடையனாயின்,
தீவினைப்பால் எனைத்து ஒன்றும் துன்னற்க -
தீவினையாகிய பகுதி எத்துணையும் சிறிது
ஒன்றாயினும் பிறர்மாட்டுச் செய்யாது ஒழிக.
(நல்வினை தீவினை என வினைப்பகுதி
இரண்டாகலின், தீவினைப் பால் என்றார். பிறர்மாட்டுச்
செய்த தீவினை தன் மாட்டுத் துன்பம் பயத்தல்
விளக்கினார் ஆகலின், 'தன்னைத்தான் காதலன்
ஆயின்' என்றார். இவை ஆறு பாட்டானும் பிறர்க்குத்
தீவினை செய்யின் தாம் கெடுவர் என்பது
கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவன் தன்னைத் தான் விரும்பி வாழ்பவனாயின், தீய
செயலாகிய பகுதியை எவ்வளவு சிறியதாயினும் பொருந்தாமல் நீங்க
வேண்டும்.
G.U.Pope:
Beware, if to thyself thyself is dear,
Lest thou to aught that ranks as ill draw near!
Explanation
If a man love himself, let him not commit any sin however small.
மூலம்:
210 . அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
பரிமேழலகர் உரை:
மருங்கு ஓடித் தீவினை செய்யான் எனின் - ஒருவன்
செந்நெறிக் கண் செல்லாது கொடுநெறிக்கண் சென்று
பிறர்மாட்டுத் தீவினைகளைச் செய்யானாயின்,
அருங்கேடன் என்பது அறிக - அவன் அரிதாகிய
கேட்டையுடையவன் என்பது அறிக. (அருமை:
இன்மை.. அருங்கேடன் என்பதனை, 'சென்று
சேக்கல்லாப் புள்ள உள்ளில் என்றூழ் வியன்குளம்'
(அகநா.42) என்பது போலக் கொள்க. 'ஓடி' என்னும்
வினையெச்சம் 'செய்யான்' என்னும் எதிர்மறை
வினையின் செய்தலோடு முடிந்தது. இதனால் தீவினை
செய்யாதவன் கேடிலன் என்பது கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவன் தவறான நெறியில் சென்று தீய செயல்
செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று
அறியலாம்.
G.U.Pope:
The man, to devious way of sin that never turned aside,
From ruin rests secure, whatever ills betide.
Explanation
Know ye that he is freed from destruction who commits no evil, going to neither side of the right path.