மூலம்:
181 . அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
பரிமேழலகர் உரை:
ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன்
அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச்
செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது -
பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால்
சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை
அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத்
தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது
நன்மை கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச்
செய்தாலும் மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று
சொல்லப்படுதல் நல்லது.
G.U.Pope:
Though virtuous words his lips speak not, and all his deeds are ill.
If neighbour he defame not, there's good wit hin him still.
Explanation
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
மூலம்:
182 . அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன்அழீஇப் பொய்த்து நகை.
பரிமேழலகர் உரை:
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறன்
என்பது ஒன்று இல்லை என அழித்துச் சொல்லி,
அதன்மேல் பாவங்களைச் செய்தலினும்
தீமையுடைத்து; புறன் அழீஇப்பொய்த்து நகை -
ஒருவனைக் காணாதவழி இகழ்ந்துரையால் அழித்துச்
சொல்லிக் கண்டவழி அவனோடு பொய்த்து நகுதல்.
(உறழ்ச்சி, நிரல்நிறை வகையான் கொள்க. அழித்தல் -
ஒளியைக் கோறல்.).
மு.வ உரை:
அறத்தை அழித்துப் பேசி அறமல்லாதவைகளைச் செய்தலைவிட,
ஒருவன் இல்லாதவிடத்தில் அவனைப் பழித்துப் பேசி நேரில்
பொய்யாக முகமலர்ந்து பேசுதல் தீமையாகும்.
G.U.Pope:
Than he who virtue scorns, and evil deeds performs, more vile,
Is he that slanders friend, then meets him with false smile.
Explanation
To smile deceitfully (in another's presence) after having reviled him to his destruction (behind his back) is a greater evil than the commission of (every other) sin and the destruction of (every) virtue.
மூலம்:
183 . புறங்கூறிப் பொய்த்துஉயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கம் தரும்.
பரிமேழலகர் உரை:
புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் - பிறனைக்
காணாத வழி இகழ்ந்துரைத்துக் கண்டவழி அவற்கு
இனியனாகப் பொய்த்து ஒருவன் உயிர்வாழ்தலின்;
சாதல் அறம் கூறும் ஆக்கம் தரும் - அது செய்யாது
சாதல் அவனுக்கு அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைக்
கொடுக்கும். (பின் புறங்கூறிப் பொய்த்தல் ஒழிதலின்,
'சாதல் ஆக்கம் தரும்' என்றார். 'ஆக்கம்' அஃது
ஒழிந்தார் மறுமைக்கண் எய்தும் பயன். 'அறம்'
ஆகுபெயர். 'தரும்' என்பது இடவழு அமைதி.).
மு.வ உரை:
புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர்வாழ்தலைவிட, அவ்வாறு
செய்யாமல் வறுமையுற்று இறந்துவிடுதல் அறநூல்கள் சொல்லும்
ஆக்கத்தைத் தரும்.
G.U.Pope:
'Tis greater gain of virtuous good for man to die,
Than live to slander absent friend, and falsely praise when nigh.
Explanation
Death rather than life will confer upon the deceitful backbiter the profit which (the treatises on) virtue point out.
மூலம்:
184 . கண்நின்று கண்அறச் சொல்லினும் சொல்லற்க
முன்இன்று பின்நோக்காச் சொல்.
பரிமேழலகர் உரை:
கண் நின்று கண் அறச் சொல்லினும் - ஒருவன் எதிரே
நின்று கண்ணோட்டம் அறச் சொன்னானாயினும்; முன்
இன்று பின் நோக்காச் சொல் சொல்லற்க - அவன்
எதிரின்றிப் பின்வரும் குற்றத்தை நோக்காத சொல்லைச்
சொல்லாதொழிக. ('பின்' ஆகுபெயர். சொல்வான்
தொழில் சொல்மேல் ஏற்றப்பட்டது. இவை மூன்று
பாட்டானும் புறங்கூற்றினது கொடுமை கூறப்பட்டது.).
மு.வ உரை:
எதிரே நின்று கணணோட்டம் இல்லாமல் கடுமையாகச்
சொன்னாலும் சொல்லலாம்; நேரில் இல்லாதபோது பின் விளைவை
ஆராயாத சொல்லைச் சொல்லக்கூடாது.
G.U.Pope:
In presence though unkindly words you speak, say not
In absence words whose ill result exceeds your thought.
Explanation
Though you speak without kindness before another's face speak not in his absence words which regard not the evil subsequently resulting from it.
மூலம்:
185 . அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையால் காணப் படும்.
பரிமேழலகர் உரை:
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை - புறம்
சொல்லுவான் ஒருவன் அறனை நன்றென்று
சொல்லினும் அது தன் மனத்தானாச்
சொல்லுகின்றானல்லன் என்பது; புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும் - அவன் புறஞ்
சொல்லுதற்குச் காரணமான மனப்புன்மையானே
அறியப்படும். (மனம் தீதாகலின், அச்சொல்
கொள்ளப்படாது என்பதாம்.).
மு.வ உரை:
அறத்தை நல்லதென்று போற்றும் நெஞ்சம் இல்லாத தன்மை,
ஒருவன் மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்ற சிறுமையால்
காணப்படும்.
G.U.Pope:
The slanderous meanness that an absent friend defames,
'This man in words owns virtue, not in heart,' proclaims.
Explanation
The emptiness of that man's mind who (merely) praises virtue will be seen from the meanness of reviling another behind his back.
மூலம்:
186 . பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும்.
பரிமேழலகர் உரை:
பிறன் பழி கூறுவான் - பிறனொருவன் பழியை அவன்
புறத்துக் கூறுபவன்; தன் பழியுள்ளும் திறன் தெரிந்து
கூறப்படும் - தன்பழி பலவற்றுள்ளும் உளையும்
திறமுடையவற்றைத் தெரிந்து அவனால் கூறப்படும்.
('புறத்து' என்பது அதிகாரத்தால் பெற்றாம். இது
வருகின்றவற்றிற்கும் ஒக்கும். 'திறன்' ஆகுபெயர்.
தன்னைப் புறங்கூறியவாறு கேட்டான், அக்கூறியார்க்கு
அவ்வளவன்றி அவன் இறந்துபட்டு உளையும்
திறத்தனவாகிய பழிகளை நாடி எதிரே கூறுமாகலின்,
'திறன் தெரிந்து கூறப்படும்' என்றார்.).
மு.வ உரை:
மற்றவனைப்பற்றிப் புறங்கூறுகின்றவன், அவனுடைய பழிகள்
பலவற்றிலும் நோகத்தக்கவை ஆராய்ந்து கூறிப் பிறரால்
பழிக்கப்படுவான்.
G.U.Pope:
Who on his neighbours' sins delights to dwell,
The story of his sins, culled out with care, the world will tell.
Explanation
The character of the faults of that man who publishes abroad the faults of others will be sought out and published.
மூலம்:
187 . பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
பரிமேழலகர் உரை:
பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் - தம்மை விட்டு
நீங்கும் ஆற்றால் புறங்கூறித் தம் கேளிரையும் பிரியப்
பண்ணுவர்; நகச்சொல்லி நட்பு ஆடல் தேற்றாதவர் -
கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி
அயலாரோடு நட்பு ஆடலை அறியாதார். (சிறப்பு
உம்மை விகாரத்தால் தொக்கது. கேளிரையும் பிரிப்பவர்
என்ற கருத்தான், 'அயலாரோடும்' என்பது
வருவித்துரைக்கப்பட்டது. 'அறிதல்' தமக்கு உறுதி
என்று அறிதல். "கடியுமிடந் தேற்றான் சோர்ந்தனன்
கை" (கலி. மருதம்.27) என்புழிப் போலத் 'தேற்றாமை'
தன்வினையாய் நின்றது. புறம் கூறுவார்க்கு யாவரும்
பகையாவர் என்பது கருத்து.).
மு.வ உரை:
மகிழும்படியாகப் பேசி நட்புக்கொள்ளுதல் நன்மை என்று
தெளியாதவர் தம்மைவிட்டு நீங்கும்படியாகப் புறங்கூறி நண்பரையும்
பிரித்துவிடுவர்.
G.U.Pope:
With friendly art who know not pleasant words to say,
Speak words that sever hearts, and drive choice friends away.
Explanation
Those who know not to live in friendship with amusing conversation will by back-biting estrange even their relatives.
மூலம்:
188 . துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு?
பரிமேழலகர் உரை:
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார் - தம்மொடு
செறிந்தாரது குற்றத்தையும் அவர் புறத்துத் தூற்றும்
இயல்பினை உடையார்; ஏதிலார் மாட்டு என்னை
கொல் - அயலார் மாட்டுச் செய்வது யாது கொல்லோ?
('தூற்றுதல்' பலரும் அறியப் பரப்புதல். அதனின்
கொடியது பிறிதொன்று காணாமையின்,
'என்னைகொல்' என்றார். 'செய்வது என்பது
சொல்லெச்சம்'. 'என்னர் கொல்' என்று பாடம் ஓதி,
'எவ்வியல்பினராவர்' என்று உரைப்பாரும் உளர்.).
மு.வ உரை:
நெருங்கிப் பழகியவரின் குற்றத்தையும் புறங்கூறித் தூற்றும்
இயல்புடையவர், பழகாத அயலாரிடத்து என்ன செய்வாரோ?
G.U.Pope:
Whose nature bids them faults of closest friends proclaim
What mercy will they show to other men's good name?
Explanation
What will those not do to strangers whose nature leads them to publish abroad the faults of their intimate friends ?
மூலம்:
189 . அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை?
பரிமேழலகர் உரை:
புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பான் பொறை - பிறர்
நீங்கின அளவு பார்த்து அவர் பழித்துரையை
உரைப்பானது உடற்பாரத்தை; வையம் அறன் நோக்கி
ஆற்றுங்கொல் - நிலம் இக் கொடியது பொறுத்தலே
எனக்கு அறமாவது எனக் கருதிப் பொறுக்கின்றது
போலும்! (எல்லாவற்றையும் பொறுத்தல்
இயல்பாயினும், இது பொறுத்தற்கு அரிது என்னும்
கருத்தால், 'அறன் நோக்கி ஆற்றுங்கொல்' என்றார்.'
இவை ஐந்து பாடடானும் புறம் கூறுவார்க்கு எய்தும்
குற்றம் கூறப்பட்டது.).
மு.வ உரை:
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய
உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று
கருதி நிலம் சுமக்கின்றதோ?
G.U.Pope:
'Tis charity, I ween, that makes the earth sustain their load.
Who, neighbours' absence watching, tales or slander tell abroad.
Explanation
The world through charity supports the weight of those who reproach others observing their absence.
மூலம்:
190 . ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுஉண்டோ மன்னும் உயிர்க்கு.
பரிமேழலகர் உரை:
ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின் -
ஏதிலாரைப் புறங்கூறுவார் அதற்கு அவர் குற்றம்
காணுமாறு போலப் புறங்கூறலாகிய தம் குற்றத்தையும்
காண வல்லராயின்; மன்னும் உயிர்க்குத் தீது
உண்டோ-அவர் நிலைபேறுடைய உயிர்க்கு
வருவதொரு துன்பம் உண்டோ?[நடுவு நின்று
ஒப்பக்காண்டல் அருமை நோக்கி, 'காண்கிற்பின்'
என்றும், கண்டவழி ஒழிதலின் பாவம் இன்றாம்,
ஆகவே வரும் பிறவிகளினும் துன்பம் இல்லை என்பது
நோக்கி, 'உயிர்க்குத் தீது உண்டோ' என்றும் கூறினார்.
இதனான் புறங்கூற்று ஒழிதற்கு உபாயம்
கூறப்பட்டது.].
மு.வ உரை:
அயலாருடைய குற்றத்தைக் காண்பதுபோல் தம் குற்றத்தையும்
காணவல்லவரானால், நிலைபெற்ற உயிர் வாழ்க்கைக்குத் துன்பம்
உண்டோ?
G.U.Pope:
If each his own, as neighbours' faults would scan,
Could any evil hap to living man?
Explanation
If they observed their own faults as they observe the faults of others, would any evil happen to men ?